மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 7 ஏப்ரல், 2018

ஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்

(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்)
லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்கள்ல சிலர் தானே பெரியவன் தனக்கு நிகர் யாருமில்லை என்பதாய்ப் பேசி பின்னர்தான் விழா நாயகனுக்கு வருவார்கள். இன்னும் சிலரோ எஸ்.ராவைப் பாருங்கள்.... ஜெயகாந்தைப் பாருங்கள்... கி.ராவைப் பாருங்கள் என முன்னத்தி ஏர்களை பெரிதாகப் பேசுவார்கள். பின்னத்தி ஏர் அதைவிட அருமையாக சால் போட்டு வருவதை சொல்வதில் அவர்களுக்கு தயக்கம் என்பதைவிட புகழக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள்... இன்னும் சிலரோ நீ எப்படி அவரைத் தாக்கிப் பேசப்போச்சு என ஒருமையில் குதிப்பார்கள். பெரும்பாலும் ஒலக எளக்கியம் பேசுவார்கள். அது நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் ஒதுங்கியே இருந்துவிடுவது என் வாடிக்கை.

நேற்று மாலை துபையில் ஒரு இலக்கிய நிகழ்வு... இங்கிருக்கும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான அய்யனார் அவர்களின் 'ஓரிதழ்ப்பூ' நூலறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம். மேடையை அலங்கரித்த மூன்று நாற்காலிகளிலும் ஏதோ முப்பெரும் தேவர்கள் அமருவார்கள் போலும் என்று நினைத்தால் ஓரிதழ்ப்பூவின் துர்க்காவும் அங்கயற்கன்னியும் அமுதாக்காவும் அமர்ந்து கொண்டார்கள். ஏதோ வித்தியாசமா யோசிக்கிறாய்ங்கய்யா (பாலாஜி கவனிக்க நாங்களும் மதுரக்காரய்ங்கதான்) எனத் தோன்றியதால் இது எளக்கியக் கூட்டமாக இல்லாமல் இலக்கிய கூட்டமாகத்தான் இருக்குமென நண்பர்களுடன் அமர, அரங்கு நிறைந்தது. அட பரவாயில்லையே புதுப்படம் போட்டாக்கூட தமிழ்ராக்கர்ஸ் இருக்க தைரியத்தில் அரங்கு நிறைவதில்லையே இங்கு நிறைஞ்சிருச்சிய்யா என்ற மகிழ்வும் ஏற்பட்டது.

விழாவின் ஆரம்பம் கடவுள் வாழ்த்துடன்... சப்தம் அதிகமாக இருந்தது. எல்லாரும் பாடுறானுங்கய்யா... இன்னும் மறக்கலை போல.

வரவேற்புரை வழங்கியவர் திருமதி. ரமா மலர் என்று சொன்னதாய் நினைவு. நல்லதொரு வரவேற்ப்பு உரை.

ஓரிதழ்ப்பூவை வச்சிச் செய்வார்கள் என்ற கனவைப் பொடிப்பொடியாக்கி(!?) ஆசிரியர் திரு.அய்யனாரை இதில் காரம் குறைவு இன்னும் காரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்களே அதிகம் என்றாலும் என்னதான் கருவாட்டுக் குழம்புடன் கஞ்சி குடித்தாலும் சின்னவெங்காயமோ, பச்சை மிளகாயோ லேசாக் கடிச்சிக்கும் போது கிடைக்கும் சுவை அலாதிதானே... அப்படி எல்லாரும் சிக்ஸர் அடித்தாலும் அபுதாபியில் இருந்து புயலெனக் கிளம்பி பந்துவீசிய இருவர் கிளீன் போல்ட் ஆக்கத்தான் செய்தார்கள். ஸ்... அப்பா.... சொல்ல வந்ததைச் சொல்லியாச்சு.

நிறையப் பேர் பேசினாங்க.. நிறைவாய்ப் பேசினார்கள். சிலரை சுமையாக் கூட்டத்தின் மூலம் தெரியும்.... பலரை நேற்றுத்தான் அறிய முடிந்தது. நிறைய இலக்கிய ஆளுமைகள் துபையில் இருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. பேசியவர்கள் பெயரைச் சொல்லி எழுதினால் பக்கம் பக்கமாக பள்ளி, கல்லூரியில் தேர்வு எழுதியது போல் ஆகிவிடும் அப்புறம் பிலால் சொன்னது போல் எனக்கும் ஒரு அயற்ச்சி ஏற்பட்டு, உடம்பில் பிசுபிசுப்பு ஏற்பட்டு குளிக்கச் சொன்னாலும் சொல்லும் என்பதால் சிலவற்றை மட்டும் சொல்லாம் என்று நினைக்கிறேன்.

முதலில் இறங்கிய துவக்க ஆட்டக்காரர் 'எழுத்தாளனும் எழுத்தும்' என்று பேசினார். நீலம், பச்சை, பாம்பு என இராமநாராயணன் படத்தைப் பற்றி பேசினார். இராஜேஷ்குமார், ஜெயகாந்தன், எஸ்.ரா. எனப் பேசி நீண்ட நேரம் களத்தில் நின்றார் என்றாலும் சதமடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார். அந்த வாய்ப்பை குறைவான நேரமே நின்றாலும் தினேஷ் கார்த்திக் போல அடித்து ஆடி எங்க மதுரைக்கார பாலாஜி தட்டிச் சென்றுவிட்டார் என்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.

பெண்ணியம் குறித்து... பெண்கள் எல்லாமே இப்படித்தான் என்ற ஆசிரியரின் பார்வை குறித்து மிகத் தெளிவான பார்வையுடன் பேசினார் ஜஸீலா, தன் மகளுக்கு பொய், உண்மை குறித்த சொன்ன கருத்தைப் பகிர்ந்து கொண்டார். ஓரிதழ்ப்பூ குறித்து அவர் சமரசம் செய்து கொண்டு பேசவில்லை. மனதில்பட்டதை மழுப்பாமல் மறைக்காமல் பேசினார்.

சுரேஷ் அவர்கள் பேசும் போது சில இடங்களில் மேலே பறந்து கொண்டிருப்பது போல் இருந்தது என்று சொன்னாலும் வசீகரிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அய்யனாரை வாழ்த்திச் சென்றார்.

கனவுப்பிரியன் அண்ணன் இன்னும் சிறப்பாக பேசுவார் என்றே நினைத்திருந்தேன். ஓரிதழ்ப்பூ புத்தகத்தை எனக்குத் தரமாட்டேன் என தன் தலையணைக்கு கீழே வைத்திருந்தவர், துர்காவைத் தேடுவதிலேயே நாட்களை வீணடித்திருக்கிறார் என்பது வருத்தமே என்றாலும் பாடல்களைச் சொல்லி அதனுடன் ஒப்பீடு செய்து பேசிய விதம் அருமை. இவரும் எழுத்தாளரை உயர்த்திப் பிடித்த கட்சிக்காரர்தான். ஆமா இவரு பேச எழும் போதும் பேசும் போதும் பயங்கர கைதட்டல்... மாஸ் ஆகிக்கிட்டு வர்றாரு... அண்ணே இனி நீ நம்ம தல பிரபு மாதிரி ஷேவ் எல்லாம் பண்ணி சும்மா நச்சின்னும் இலக்கிய கூட்டத்துக்குப் போன்னே... விசிலடிக்க நிறைய ஆளிருக்கு... காற்றடிக்கும் போதே தூத்திக்கணும்... அடுத்து கட்சி ஆரம்பிக்கிற வேலையைப் பார்ப்போம்.

இன்னொன்னு சொல்லணும்... கனவுப்பிரியன் அண்ணன் சரிதாதான் துர்காவான்னு யோசிச்சப்போ, ஆளாளுக்கு காந்திமதி, வடிவுக்கரசியின்னு அவங்க அவங்க காலத்துக்குப் பொயிட்டாங்க. அதுக்குத் தனியா ஒரு பட்டிமன்றம் நடந்துச்சு... நாங்கூட குஷ்புவா இருக்குமோன்னு நினைச்சிக்கிட்டேன்... :) இப்ப உள்ளவனுங்க கதையைப் படிச்சா யாரா இருக்கும்ன்னு நினைப்பாய்ங்க... கஷ்டம்தான். அதவிடுங்க... நமக்கெதுக்கு அந்தக் கவலை.

தமிழாசிரியர் ஷோபியா அவர்கள் சபைக்காக தன்னை சமரசம் பண்ணிக் கொண்டுதான் பேசினார். ஒரு தமிழாசிரியர், அதுவும் கணறும் கனலி கொடுத்தவர் அடிச்சி ஆட வேண்டாமா... பார்த்து வாசித்தல் என்பதே இதுவே கடைசியாக இருக்கட்டும். கனவுப்பிரியன் அண்ணனைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த கூட்டத்தில் சூறாவளியை எதிர்பார்க்கிறோம்.

காளியின் காதலன் பிரபு, ஆளு கட்டிங் போட்டு... இருங்க வேற மாதிரி யோசிக்காதீங்க... முடி வெட்டி, மீசைக்கு எல்லாம் கலர் அடிச்சி வந்து நின்னுக்கிட்டு நான் இன்னொரு நாளைக்குப் பேசுறேண்ணேன்னு சங்கோஜப்பட்டுட்டு இது பட்டசாராயம் மாதிரி தூக்கலா இல்லைன்னு சொன்னாரு. அடுத்த நாவல் இவருக்கு டாஸ்மார்க் மாதிரி இல்லாம பட்டசாராயம் மாதிரி இருக்கணுமாம். கடைசியா சொன்னபடி பேசிட்டேனாண்ணேன்னு கேட்டுவிட்டு வேறு வந்து அமர்ந்தார். சொன்ன பணம் வந்துருச்சா தல.. :)

நண்பரைச் சந்திக்க துபை வந்திருந்த காரைக்குடிக்கார ஆங்கிலக் கவிதை எழுத்தாளர் தனக்கு கொடுக்கப்பட்ட மரியாதைக்குப் பின் மகிழ்வாய்ப் பேசினார். திரு. காவிரி மைந்தன், ராம்கி என நிறையப் பேர் பேசினார்கள். எல்லாருமே ஓரிதழ்ப்பூவை தூக்கிப் பிடித்த விமர்சகர்கள்.

இடையில் புத்தக வெளியீடு... இவங்க அவங்களுக்கும் அவங்க இவங்களுக்கும் கொடுத்துக் கொண்டார்கள். பிரபு கங்காதரனுக்கு கனவுப்பிரியன் கொடுத்தார். இதுனாலயே இந்தாளு பட்டச்சாராயம் பத்திப் பேசியிருப்பாரோன்னு தோணுச்சு.

இதெல்லாம் முடிஞ்சதும் வேகப்பந்து வீச்சாளர்களான நெருடாவையும் பால்கரசுவையும் இறங்கிவிட்டார் ஆசீப் மீரான் அவர்கள். அபுதாபியில இருந்தே பால் போட்டுப் பார்த்துக் கொண்டே போன ஆளுங்க... எல்லாருக்குமே இவர்கள் எதிர்க்கட்சி ஆட்கள் என்பது தெரியும் என்றாலும் ஆசீப் மீரான் அவர்களும் சொல்லிவிட்டார். நாங்கள்தான் சரவணபவனை முதலில் அடைந்தோம். எங்களைப் பார்த்த அய்யனார் மூணு பேரும் முன்னாலயே வந்தாச்சான்னு கேட்டார். 'வந்துட்டாய்ங்கய்யா... வந்துட்டாய்ங்க' அப்படின்னு அவரு மைண்ட் வாய்ஸ் சொன்னது கேட்டுச்சு.

நெருடா முதல்பால்லயே போல்ட் ஆக்கிட்டாருன்னு பார்த்தா, கொக்காமக்கா மனுசன் தேடித் தேடி படிச்சிருக்காருய்யா... சும்மா எடுத்து வீசி 'யோவ் நீ அவனை அந்த திட்டு திட்டியிருக்கே... இப்ப நீ அவனை விட மோசமா எழுதியிருக்கே'ன்னு விட்டு விளாசிட்டாரு. அதுவரை சிக்ஸர் மழையில் நனைந்த அய்யனார் தடுப்பாட்டம் ஆடுவதுக்கே சிரமப்பட ஆரம்பித்தார். நல்லவேளை திருமதி. அய்யனாரும் பசங்களும் வந்ததால நெருடா பாதியோட விட்டுட்டாரு... இல்லேன்னா நெலம என்னாயிருக்கும்... ஆண்டவா... யோசிக்கவே பயமாயிருக்கே....ஹி..ஹி....

கனவுப்பிரியன் அண்ணன் சொன்ன எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு ஆதர்ஷ நாயகன் இருப்பான் என்பதற்கு அப்படியே ஆதர்ஷ நாயகன் இருந்தாலும் யாரும் அவனைப் பார்த்ததும் ஓடிப்போய் கட்டிக் கொள்வதில்லை. கலவி கொள்ள விரும்புவதில்லை என்று பதில் சொன்ன நெருடா அதேபோல் பிரபுவின் பட்டசாராயத்துக்கும் பதிலாய் பேட்டரி கூடிப்போனா சங்குதான்டி மாப்ளே என்றும் சொன்னார்.

அடுத்த பால் போட்டவரு தன் பேரிலேயே பாலை வைத்திருக்கும் பால்கரசு, இவரும் இப்படி எழுதலாமா..? அப்படி எழுதலாமா..? எனப் பேசி ஓரிதழ்ப்பூ காமத்துப்பூய்யான்னு சொல்லிட்டு வந்துட்டாரு. இவரு போனும் மக்கர் பண்ணிருச்சிய்யா... ஏதோ சாமி அய்யனாரு பக்கம் இருந்திருக்கும் போல.

பாலாஜிய இறக்கிவிட்டாங்க... இந்தாளு இருக்கிற இடத்துல இருக்கவனுக்கு பீபீ, சுகரு, அட்டாக் எதுவும் வராதுய்யா... மனுசன் சிரிக்கச் சிரிக்க பேசுவதில் கில்லாடி. என்ன ஒரு குறை என்றால் இவருக்கு யாருமே புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொல்ல மாட்டேங்கிறாங்க... படிக்கலைன்னாலும் மனுசன் சதமடிச்சிட்டாருய்யா... என்ன பேச்சு... இதுல ஏதோ இருக்கும் போல... நமக்கு ஒருத்தனும் புத்தகம் தரமாட்டேங்கிறானுங்க... அவனுங்களே மாத்தி மாத்தி கொடுத்துக்கிறானுங்கன்னு வருத்தப்பட்டார். புத்தகம் கிடைச்சிருச்சு... நேற்றிரவே வாசித்து மோட்சம் அடைந்திருப்பார் என்று நம்பலாம்.

அப்புறம் பிலால், எனக்கு பிலால்கிட்ட பிடிச்சது அவரோட அருமையான எழுத்து.... நேற்று பேச்சும். என்ன மேடையில மனுசன் ஏறிட்டா இந்தப்பக்கம் மூணு மீட்டர் அந்தப்பக்கம் மூணு மீட்டர் இடமிருக்கணும். பின்னே... டான்ஸ் ஆடிக்கிட்டேயில்ல பேசுறாரு. இவருக்கு திருவண்ணாமலைக்குப் போயி துர்க்காவைப் பார்க்கணுமாம். அதுக்காகவே ஊருக்குப் போவாருன்னு நினைக்கிறேன். சந்தடி சாக்குல 'செயல்' சொன்ன 'யானை வரும் முன்னே'யை புதுமொழியின்னு சொல்லிட்டாருய்யா... பின்னாலிருந்து பாலாஜி குரல் கொடுக்க 'யோவ் பாலாஜி நீ பேசும்போது நா எதுனாச்சும் பேசுனேன்னா'ன்னு பாவம்மா கேக்கும் போது 'டேய் நீ காப்பி அடிச்சத நான் டீச்சர்க்கிட்ட சொன்னேனா'ன்னு பள்ளிக்கூடத்துல பசங்க கேட்டமாதிரி இருந்தது. இவரு என்ன எளவுய்யா இது, பாதி படிச்சதும் ஒரு அயற்சி, பிசுபிசுப்பு... குளிக்கணுமின்னு தோணுச்சுன்னு சொன்னார். அதுக்கும் மேல மேட்டர் நாவல்ன்னும் சொன்னார். எல்லாம் சொல்லிட்டு ரொம்ப அருமை அய்யனாருன்னு போல்ட் ஆக்குவார்ன்னு பாத்துக்கிட்டு இருந்தா சிக்ஸ் அடிச்சிட்டு வந்துட்டார்.

அவரை ஓவியர் என்று சொன்னார்கள் பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும். 'யோனி குறித்து பேச நாம் பயப்படுகிறோம் வெட்கப்படுகிறோம்' என்றெல்லாம் பேசி... நரஉடல் குறித்தும் சொன்னார.  உண்மையிலேயே நிறையச் செய்திகளுடன் மிகச் சிறப்பாக பேசினார்.  ஓவியரய்யா எங்க பக்கம் கூத்து (நாடகம்) ரொம்பப் பிரபலம். தென் தமிழகத்தில் மட்டுமே இது இன்னும் கோலோச்சி இருக்கிறது. அதில் வள்ளி திருமணம் என்றொரு நாடகம்... முடிந்தால் நாரதரும், வள்ளியின் சகோதரரும் (பபூன்) பேசுவதை யூடிப்பில் கேளுங்கள். யோனி பற்றிய பேச்சு மிகச் சாதாரணம். கிராமங்களில் ரெண்டு பெண்களை சண்டை போட வைத்துப் பாருங்கள். இதெல்லாம் சரளமாய் வந்து விழும். யாருக்கும் பேச, எழுத பயமில்லை... அளவுக்கு மீறும் போது விமர்சனங்கள் வரவே செய்யும். உப்புக் கூடினால் உணவு சுவைக்காது.

இன்னும் நிறையப் பேர் பேசினார்கள்... என்ன பேசினார்கள் என்பதெல்லாம் ஞாபகத்தில் இருக்கு... ஆனாலும் பதிவின் நீளம் போதும்ன்னு நினைக்கச் சொல்லுது. இத்தோட நிப்பாட்டுன்னா பிரபலங்கள் பேசினதை மட்டுமே எழுதுறாய்ங்கய்யான்னு குறிஞ்சிநாதன் அவர்கள் கோபித்துக் கொள்வார். அவரே கேட்டு வாங்கி... அடித்து ஆடினார் கடைசி மணித்துளிகளை.

அருமையாகப் பேசினார்... மைக் தேவையில்லை எனச் சொல்லிய வெண்கலக் குரல். ஒவ்வொரு வரியையும் அலசி ஆராய்ந்து வாசித்திருக்கிறார் என்பது பேச்சில் தெரிந்தது. ஆனாலும் ஒவ்வொருவரின் பார்வையிலும் விமர்சனம் வைக்க உரிமை இருக்கிறது. நீ தூக்கித்தான் பேசியிருக்க வேண்டும் எப்படி தாக்கிப் பேசுவே என்று நாம் சொல்ல முடியாது இல்லைங்களாண்ணா... உங்க பார்வை... மற்றவர் பேசிய கருத்தில் தங்களுக்கு இருக்கும் மாற்றுக் கருத்து  என்ன என்பதாகப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் பேச்சு இன்னும் அருமையாக இருக்கும்.


விழாவினைத் தொகுத்து வழங்கியவர் திரு.ஆசீப் மீரான், மிகச் சிறப்பான தொகுப்பாளர் என்பது அவரின் தொகுப்பில் தெரிந்தது. அருமை வாழ்த்துக்கள். ஆசிப் மீரான் அவர்கள் இடையிடையே பேசும் போது ஜி.நாகராஜன் மற்றும் கோபி கிருஷ்ணா ஆகியோரின் எழுத்தில் இருந்து எடுத்துச் சொல்ல நினைத்து சொல்லாதவை என ஒரு பகிர்வு ஆபிதீன் அவர்களால் பகிரப்பட்டிருக்கிறது என்றாலும் அதில் சில விஷயங்களை ஆசீப் மீரான் அவர்கள் பேசினார்.  

'இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்' என்றும் 'பக்திப் பரவசத்துக்கும் விஸ்கிப் பரவசத்துக்கும் அதிக வித்தியாசமில்லை' என்றும் பேச்சின் இடையில் சொல்லிச் சென்றார். இவரது விழாத் தொகுப்பு... அந்தக் குரல் வளம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது அவர்களை ஞாபகத்தில் கொண்டு வந்தது. அருமை.

ஏற்புரை வழங்க வந்த அய்யனார் அவர்கள் பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கும் நேற்று சிலர் முன் வைத்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாது துர்க்காவை என்னுள் இருந்து இறக்கி உங்களிடம் உலாவ விட்டு விட்டேன். அவள் எப்படிப்பட்டவள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கணும். துர்க்கா இறங்கிச் சென்ற என் மனது வெற்றிடமாக இருக்கிறது. அங்கு வேறொரு முளை விடத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லி தப்பித்துக் கொண்டார். தானும் சாரு, ஜெமோ போல் எழுத வேண்டும் என்ற ஆசை என்றும் சொன்னார். மிக விரிவாக எதையும் பேசிவிடவில்லை என்பது வருத்தமே. இருப்பின் ஆள் நம்மளைப் போல கூச்ச சுபாபம் கொண்டவர் என்பதால் விட்டுவிடலாம்.

நன்றியுரை சொல்ல வந்த அமீரகத்தில் தமிழுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கும் (இதை நான் சொல்லல... சொன்னது இன்னொரு ஆள்) நந்தா அவர்கள் வேகவேகமாக நன்றியுரை சொன்னார். குலவை போடும் போது மட்டும் என்ன வேகம்... எங்கூருல வருசா வருசம் செவ்வாயின் போது குலவை போட ஒரு பொம்பளயில்லையான்னு எங்க சித்தப்பா கத்துவாரு... இந்த வருசம் நந்தாவை கூட்டிப் போயிற வேண்டியதுதான்... எட்டூருக்கு எங்கூரு குலவைச் சத்தத்தைக் கேட்க வைக்கலாமில்லையா. உண்மையிலேயே இந்த விழாவில் அய்யனாரின் உழைப்பை விட நந்தாவின் உழைப்பு அதிகம். வாழ்த்துவோம். தொடரட்டும் சகோதரரே தங்கள் பணி. அதுக்காக அலைனுக்கு கூட்டப் போறதெல்லாம் ரொம்ப அதிகம். குறைச்சிக்கங்க... முடிஞ்சா அடுத்த கூட்டத்துக்கு ஆள் கூட்ட அபுதாபி வாங்க.

விழா இனிதே நிறைவு  பெற இலக்கியம் பருகியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. உணவு ருசியாய்... டீ தான் பக்கத்து பாகிஸ்தானி ஹோட்டலில் அருமையாக இருந்தது என்று சொல்ல வைத்தது.

அய்யனார் அவர்கள் பதிவு வழியும் நேற்றைய நிகழ்வின் கேள்விகளுக்கு தனிப்பட்ட முறையில் பதில் சொல்வார் என்று நம்புகிறேன்.

பேசியவர்களில் பெரும்பாலானோர் கொஞ்சமே கொஞ்சம் சமரசம் செய்து கொண்டாலும் ஒரு இலக்கிய நிகழ்வாய் இல்லாமல் மிகவும் மகிழ்வாக, இனிமையாக மூன்றரை மணி நேரத்தைக் கடக்க வைத்தது. ஓரிதழ்ப்பூ மூலம் இதை நிகழ்த்திக் காட்டிய எழுத்தாளர் அய்யனாருக்கு வாழ்த்துக்கள்.  அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவர் இன்னும் சிறப்பான நாவல்களை எழுத வேண்டும்.  அவரைப் போல்... இவரைப் போல்... என்றெல்லாம் யோசிக்காமல் உங்கள் பாணியில் தொடருங்கள். அருமையான எழுத்து உங்கள் வசம் இருக்கிறது.

ஒரு படைப்பு தனக்கான இடத்தை அது தானாகவே எடுத்துக் கொள்ளும் என்பதை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு.

என்னை வாடா தம்பி... வாடா தம்பி என்று அழைத்துக் கொண்டே இருந்த என் தேவா அண்ணனுக்கும், பத்திரமாக கொண்டு வந்து அபுதாபியில் என் இருப்பிடம் சேர்த்துப் பின்னர் முஸபா சென்ற நெருடா மற்றும் பால்கரசுக்கும், உருட்டுக்கட்டைகளுடன் இருந்தானுகளே பத்திரமாப் பொயிட்டீங்களா என விடியுமுன்னரே முகநூல் மூலம் விசாரித்த பாலாஜிக்கும் நன்றி. 

போட்டோக்கள் இன்னும் எத்தனை மாதம் சென்று எடுத்துப் பார்த்தாலும் இலக்கியம் பேசும். கேமராக் கவிஞன் சுபஹான் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

பேசிய, கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மீண்டும் இது போன்றதொரு நிகழ்வு எப்போது அமையும்...? என்ற கேள்வியை மனசுக்குள் எழுப்பி நிறைவைக் கொடுத்த நிகழ்வு. வாழ்த்துக்கள் அய்யனார்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

அ.மு. நெருடா சொன்னது…

அசத்தல் பதிவு!

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமாய் பொழுது போயிருக்கும் என்று தெரிகிறது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
மறக்க இயலா நிகழ்வுதான் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நுட்பமான கவனிப்பு...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விழா போன்று தெரிகிறது.

அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்//, //உருட்டுக் கட்டைகளுடன் இருந்தானுங்களே பத்திரமா போயிட்டீங்களா?//

என்னாச்சு குமார்? புரியலையே உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனையா என்ன?

'பரிவை' சே.குமார் சொன்னது…

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. ஓரிதழ்ப்பூ பற்றிய நெகட்டிவ் பார்வை எங்களது விமர்சனம். மற்றவர்கள் எல்லாருமே கொண்டாடிய நாவல் இது. எழுத்தாளர் கொண்டாடப்பட வேண்டியவர். அருமையான எழுத்து.
விழாவில் பேசிய நம் முத்துநிலவன் ஐயாவின் மகன் நெருடாவும், அவரின் நண்பர் பால்கரசுவும் எதிர்த்தே பேசினார்கள். நேரமின்மையால் நான் பேசவில்லை (தப்பிச்சேன்...:) ). அதற்காக நண்பர் பாலாஜி 'பாத்துப் போங்கய்யா... மூணு பேரையும் அடிக்க உருட்டுக் கட்டையோட நிக்கிறானுங்கன்னு ஜாலியாகச் சொன்னதுடன் மறுநாள் காலை முகநூலில் 'சேதாரமில்லாம பொயிட்டீங்களா?'ன்னும் கேட்டிருந்தார். அதற்காக எழுதியதுதான்.

இது மனசு தளத்தில் பகிர எழுதவில்லை... முகநூலில் பகிர எழுதியது. மனசு தூசி பிடிச்சிக் கிடக்கேன்னு தூசி தட்டினேன்.

அன்புக்கு நன்றி அண்ணா.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. விழாவினை நேரில் கண்டது போல உணர்வு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விழா நிகழ்வுப் பகிர்வு மிகவும் அருமை. மிகவும் இயல்பாக, உடன் இருப்பதைப் போல இருந்தது. அதே சமயம் அழகான மதிப்பீடாகவும் அமைந்திருந்தது.

G.M Balasubramaniam சொன்னது…

பஞ்சம் பிழைக்கச் செல்லும் இடத்தில் இலக்கிய தாகம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது

ராஜி சொன்னது…

எழுத்தாளருக்கு வாழ்த்துகள்