மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 28 ஜூலை, 2016

மனசு பேசுகிறது : ரோட்ரிகோ டுடேர்தே


பிலிப்பைன்ஸில் 71 வயசுக்காரரான ரோட்ரிகோ டுடேர்தேயை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்திருக்காங்க... இதுல என்ன அதிசயம்... நம்ம நாட்டுல இருக்க அரசியல்வாதிங்க பெரும்பாலும் எழுபதுக்கு மேலதானே இருக்காங்க அப்படின்னு நீங்க நினைக்கலாம். பிலிப்பைன்ல இது அதிசயமே... ஏனென்றால் உலகில் கொள்ளையும் கொலையும் மிகுந்த நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ்... உடமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லாத ஒரு நாடு. இங்கு பிலிப்பைனிகள் அதிகம் இருக்கிறார்கள். வாங்கும் சம்பளத்தை இங்கே செலவு செய்வார்கள்.  ஒரு சிறிய அறைக்குள் ஸ்கிரீன் போட்டு நாலைந்து குடும்பங்கள் வாழ்வார்கள் ஆனால் வெளியில் வரும்போதும்... பொருட்களை வாங்கும் போதும் மிகவும் ஆடம்பரமாக நடந்து கொள்வார்கள். தங்கள் நாட்டை போதைப் பொருள், கொலை, கொள்ளையில் இருந்து மீட்டெடுக்க இவர்தான் சரிவருவார் என மக்கள் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

டுடேர்தே, ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும் கஷ்டப்பட்டு வழக்கறிஞர் படிப்பை முடித்தார். அதன் பின்னர் பல்வேறு வேலைகளைப் பார்த்தவருக்கு அரசியல் மீது ஆசை வந்து அதில் இறங்கினார்.  தான் இருந்த மின்டனாவோவில் டாவோ (DAVAO)  என்ற ஊருக்கு மேயரானார். அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்க தொடர்ந்து 22 வருடங்கள் அந்த ஊரின் மேயராக பதவி வகித்தார்.  மக்களுக்கு அவர் மீது ஈர்ப்பு வரக்காரணம்... சூதாட்டக் கிடங்குகளையும் போதை வஸ்துக்களை விற்பவர்களையும் ரவுடிகளையும் குறிபார்த்து சுடக்கூடிய ஷூட்டர்களை தன்னோடு இணைத்துக் கொண்டு வேட்டை ஆட ஆரம்பித்தார். அந்த 22 வருட காலத்தில் 1400 பேரைக் களை எடுத்திருக்கிறார். இதில் இன்னொரு விஷேசம் என்னவென்றால் தானே மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் ரோந்து செல்வாராம்...  போதைப் பொருள் விற்பவர்களையும் கொள்ளையர்களையும் கொலைகாரர்களையும் சுட்டு வீழ்த்துவாராம். தப்பிக்க நினைத்தவர்கள் பிடிபட்டால் அனுபவிப்பது நரக வேதனையாம்... இதற்கு ஒரே சூட்டில் செத்திருக்கலாமே என்று நினைக்க வைத்துவிடுவாராம். இவரின் இந்த நடவடிக்கைகளால் டாவோவில் குற்றங்கள் குறைந்து ஊர் சுத்தமானதாம்... உலகிலேயே மக்கள் வசிக்க சிறந்த நகரங்களில் இது நாலவது இடத்தைப் பெற, அவரின் புகழ் பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் பரவியிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் மத்திய அரசில் அமைச்சராகச் சேரும்படி அவருக்கு பலமுறை அழைப்பு வந்தபோதும் ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக்கழித்து வந்திருக்கிறார். திடீரென 2015 ஆம் வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் களம் இறங்கப் போகிறேன் என அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மக்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நம்ம ஊரைப் போல ஊழல் அரசியல்வாதிகளும் அவர்களின் கைக்கூலிகளுமான போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சாமரம் வீசும் பத்திரிக்கைகள் டுடேர்தேயின் மறுபக்கத்தை மட்டுமே திரும்பத் திரும்ப மக்களிடம் கொண்டு செல்ல முயற்சித்திருக்கின்றன. அவர் சட்டத்தை மதிக்க மாட்டார் என்றும் சட்ட விரோத கொலைகள் நடத்துவார் என்றும் மனித உரிமையை நசுக்குவார் என்றும் பிரச்சாரங்கள் செய்தார்கள்.  நான் அப்படிப்பட்டவன் இல்லை... அதெல்லாம் செய்யமாட்டேன்... மக்களுக்காக மட்டுமே உழைப்பேன்... ரொம்ப நல்லவனாக்கும் என்றெல்லாம் சொல்லாமல் அவர்கள் சொல்வதை ஒத்துக் கொள்வது போல் நான் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்திற்குள் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வேன்... அவர்களின் உடல்களை கடலில் வீசுவேன் என்று மக்களிடம் பேசியிருக்கிறார். டுடேர்தேயால் மட்டுமே பிலிப்பைன் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்க முடியும் என ஒரு நாட்டு மக்கள் எல்லாரும் ஒரு மனதாக நினைத்ததன் விளைவு தற்போதைய ஜனாதிபதியை விட இரண்டு மடங்கு ஓட்டு கூடுதல் பெற்று வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார்.

ஆடம்பரமாக நடக்கும் பதவியேற்கும் விழாவை இந்த முறை மிக எளிமையாக நடத்தியிருக்கிறார். 600 பேருக்கு மட்டுமே விருந்து ஏற்பாடு செய்யப்படிருக்கிறது அதில் மது பரிமாறப்படவில்லை என்பது ஆச்சர்யமான நிகழ்வு. மிக எளிமையாக உடை அணியும் டுடேர்தே, ஜனாதிபதிக்கான பாரம்பரிய உடை தனக்கு வேண்டாம் என்றும்  புல்லட் புரூப் காரோ, பாதுகாப்போ தனக்கு தேவையில்லை என்று சொன்னதுடன்  சாதாரண பிக்கப் ஒன்று தனக்கு போதுமென்று சொல்லிவிட்டார்.  மேலும் தன் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தாலும் அந்த வளர்ச்சியை ஒரு சில செல்வந்தர்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை முறியடித்து நாட்டின் வளர்ச்சி மக்கள் அனைவரையும் சென்றடையச் செய்வேன் என்றும் பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய பத்திரமாட்டை உருவாக்குவேன் என்றும் சொன்னவரின் எதிர்காலக் கனவு  நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதுதானாம். அதற்காக தான் உழைக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பதவி ஏற்ற அவர், நாட்டு மக்களுக்கு தனது பரிசாக விலையில்லா மதுவையோ... ஆயிரம் ரூபாய் டிக்கெட்டையோ கொடுக்கவில்லை மாறாக 110 போதை மருந்து விற்பனையாளர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேலான ரவுடிகளும் முன்னால் குற்றவாளிகளும் போலீசில் சரணடைந்தார்கள்.  

'பொருளாதாரம் பற்றி எனக்குத் தெரியாது... அறிஞர்களும் பொருளாதார நிபுணர்களும் அடங்கிய குழுவின் கையில் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிடுகிறேன்... லஞ்சம். கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவற்றை அடியோடு ஒழித்து மக்களை சுதந்திரமாக நடமாட வைப்பதும் குற்றவாளிகள் அனைவருக்கும் எமனாக இருப்பதுமே எனது முக்கியமான பணி... எனது என்கவுண்டருக்கு சட்டமன்றங்களோ, மனித உரிமை அமைப்போ என்ன சொன்னாலும் அதை நான் கண்டு கொள்ளப் போவதில்லை... மக்கள் எனக்கு அளித்திருக்கும் ஆறு வருட காலத்தில் முதல் ஆறு மாதத்திலேயே பிலிப்பைன்ஸ் நாட்டை உலகின் அமைதியான... பத்திரமான நாடாக மாற்றுவேன்...' என்று டுடேர்தே தெரிவித்துள்ளார்.

டுடேர்தேயின் களை எடுப்பு 'நெருப்புடா... நெருங்குடா... பார்ப்போம்...' என அடித்து ஆட ஆரம்பிக்க, உலக நாடுகளின் பார்வை இப்போது அவர் மீது... நமக்கும் இப்படி ஒரு ஆட்சியாளர் கிடைத்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்தோமேயானால் அது முடியாத ஒன்று. நம் அரசியல்வாதிகள்தானே குற்றவாளிகள்... அதுமட்டுமில்லாமல் இவன் வந்தால் நாடு சுத்தமாகும் என்று நினைக்கும் மக்கள் அங்கே... காசை வாங்கிக் கொண்டு களவாணிகளையே அரியணை ஏற்றும் மக்கள் இங்கே... ம்...  நமக்கும் ஒரு டுடேர்தே கிடைத்தால்....

"மகிழ்ச்சி".
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

ஒரு பெருமூச்சு... அது மட்டுமே!..

நாம கொடுத்து வெச்சது அவ்வளவு தான்!..

KILLERGEE Devakottai சொன்னது…

நண்பர் 'ரோட்ரிகோ டுடேர்தே' மாதிரியான மனிதர் இந்தியாவில் ஜனிக்கவேண்டும் என்பதைத்தான் எனது 'தெட்சிணாமூர்த்தி விரதம்' பதிவில் சொல்லி இருந்தேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கொடுத்து வைத்த மக்கள்
தம +1

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...

ஆமாம் நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...

வாசித்திருப்பேன்... நாம் வர விட மாட்டோம் அல்லவா..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அப்படியே அவர் இந்தியாவிற்கு வந்தால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுவிடுவொம். ஃபிலிப்பைன்ஸ் செம ....லக்கி.

மகிழ்ச்சி!!!!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றாகத்தான் இருக்கும்... கொடுத்து வைக்கலையே...!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஆச்சர்யப்படத்தக்கவகையிலான ஓர் அரிய மனிதரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு. இப்படி ஒரு தலைவர் வேண்டும்.