மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அனார்கலி (மலையாளம்)

னார்கலி...

ஒரு காதலை... அதுவும் வருடக் கணக்கில் காத்திருக்கும் காதலை... மதம் கடந்த காதலை... எந்த ஒரு வன்முறையும் இல்லாமல், மதத்தை அதிகம் தூக்கிச் சுமக்காமல்... வலிகளை மட்டுமே சுமந்து... கேமரா சிறை பிடித்த இலட்சத்தீவின் அழகோடு ரசிக்க வைக்கும் படம்.

அழகானதொரு காதலை இவ்வளவு நேர்த்தியாக, குறிப்பாக வெட்டுக் குத்து என எதுவும் இல்லாமல்... வில்லனை சாதி, மதம் குறித்தெல்லாம் பேச வைக்காமல் எடுக்க மலையாளிகளால் மட்டும் எப்படி முடிகிறது..?நம்மவர்களால் இப்படி ஒரு கதையை  ஏன் எடுக்க முடிவதில்லை என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை... மேலும் இதை தமிழில் எடுக்கிறேன் என கொல்லாமல் விட்டாலே போதும் எனத்தான் தோன்றுகிறது. இங்கு சாதி, மதம் வாழணும்... மதுரையைக் களமாகக் கொண்ட படங்கள் எல்லாமே வன்முறையைக் களமாக்கியவைதான்... ஏன் மதுரையில் வேறு நல்ல கதைகளே இல்லையா...? தமிழகத்தின் மற்ற இடங்களில் எல்லாம் வன்முறைகள் இல்லையா..? 'வந்தேன் வெட்டியேபுடுவேன்..' என்று மதுரைத் தமிழ் பேசினால்தானா...? வாஞ்சையாக 'நல்லாருக்கியா?'ன்னு பேசினால் படம் ஓடாதா...? இங்கே காதல் என்றாலும் மோதல் என்றாலும் சாதியும் மதமும் இருக்க வேண்டும். அங்கோ சாதியும் மதமும் இருந்தாலும் காதல் அவற்றைக் கடந்து ரத்தம் சிந்தாமல் வாழ வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் அனார்கலி.

மேஜரின் மகளைக் காதலிக்கும் ராணுவவீரன், நீச்சல் குளத்தின் உடைமாற்றும் இடத்தில் வைத்து முத்தம் கொடுக்க முனைய, அந்த நேரத்தில் அங்கு வரும் மேஜர், பதினைந்து வயதுப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றான் என இராணுவ விசாரணைக் கமிஷனுக்கு கொண்டு போகிறார். விசாரணையின் போது அவனைக் காதலிப்பதாக சாட்சி சொல்கிறாள் அந்தப் பெண். அதன்பின் அவளிடம் பேசும் அதிகாரி, பதினைந்து வயதில் வருவது காதல் அல்ல.. இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்தால் இவனை நீ மறப்பாய் என்று சொல்ல, இதே காதலுடன் ஐந்து வருடங்கள் கழித்து உங்களைச் சந்திக்கிறேன் அங்கிள் என உறுதியுடன் சொல்கிறாள். ராணுவ வீரனுக்கும் அவனுக்கு உதவினான் என அவனின் நண்பனுக்கும் பதவி இறக்கம் செய்யபடுகிறது. வேறு வேறு இடங்களுக்கு பயணிக்கிறார்கள்.

(பிரியல் கோர்)
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவளைத்தேடி வருகிறான்... அவனைப் பார்த்ததும் அவளுக்கு சந்தோஷம். இருவரின் சந்தோஷத்துக்கும் 'நீங்க இருவரும் சேர நான் சம்மதிக்கமாட்டேன்' என மீண்டும் செக் வைக்கிறார் மேஜர் அப்பா. 'உங்க அனுமதி இல்லாம அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்... நீங்க எங்களுக்கு ஓகே சொல்லாம செத்தாக்கூட அவரோடு நினைப்புலதான் வாழ்வேன்... அவரோட சேரமாட்டேன்...' என்று அப்பாவுக்கு பதிலடி கொடுத்துவிட்டு 'எனக்காக... நம் காதலுக்காக காத்திரு...' என அவனை அனுப்பி வைக்கிறாள். அதன் பின் அடிக்கடி சிடியில் பேசி அனுப்புகிறாள். அதுவே இவர்களின் காதலை வளர்க்கிறது... இன்னும் இறுக்கமான காதலாகிறது. அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக அவள் பேசுவதைக் கேட்டு அவளை மிரட்டி, அதை உடைக்க வைத்து  'அவள் இனி உன்னை நினைக்கமாட்டாள், மறந்துவிடு' என்று தானே பேசி, மகளை அனுப்பச் சொல்கிறார். பின்னர் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு கிளம்ப, அவருடன் வர மறுத்து டீச்சர் வேலை கிடைத்திருப்பதாகச் சொல்லி அஜ்மீருக்குப் பயணிக்கிறாள். அதன் பின்னர் அவனுடன் அவள் தொடர்பில் இல்லாமல் போகிறாள்.  அவளின் காதலுக்கு தம்பி ஆதரவாக இருக்கிறான்.

அவளைத் தேடி அலுத்துப் போய், நீச்சலில் கின்னஸ் சாதனை புரிந்து பத்திரிக்கைகளில் எல்லாம் போட்டோவுடன் செய்தி வர வைக்கிறான். அப்படியாவது அவள் தன்னைத் தொடர்பு கொள்வாள் என்று நினைக்கிறான். அதுவும் தோல்வியே... அதன் பின்னர்தான் அவன் தன் நண்பனையும் மற்றொருவனையும் தேடி லட்சத்தீவுக்கு நீச்சல் பயிற்சியாளராக வருகிறான். அங்கு அவர்கள் இருவரையும் சந்தித்தானா? இறுதியில் காதல் வெற்றி பெற்றதா இல்லையா...? என்பதை லட்சத்தீவின் அழகோடு அருமையான படமாகத் தந்திருகிறார்கள்.

லட்சத்தீவில் அவனுக்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கிளப் செகரெட்டரி தோமாவின் தங்கைக்கும் இது போல் ஒரு காதல், ஒவ்வொரு முறை அவள் காதலனைத் தேடி கொச்சிக்கு கிளம்பும் போது அண்ணனால் தடுக்கப்படுகிறாள். அவளின் காதலும் கைகூடியதா இல்லையா...? டாக்டராக வரும் மியாவிடம் எப்போதும் சீண்டி விளையாடும் ப்ரித்விராஜ் மீது அவர் காதல் கொண்டாரா? நண்பனை அவனால் சந்திக்க முடிந்ததா..? அவன் தேடி வந்த மற்றொரு நபர் யார்..? அந்த நபரால் இவனது காதலுக்கு உதவி கிட்டியதா..? இப்படி நிறைய கேள்விகளை லட்சத்தீவில் இருக்கும் கவரெட்டி என்ற அழகிய ஊரில் வைத்து மிக அழகாக நகர்த்தியிருக்கிறார்கள்.

(மியா ஜார்ஜ்)
ப்ரித்விராஜூக்கு இப்போ சுக்ர திசை போலும், சென்ற வருடத்தில் ஆரம்பித்து இப்போ வந்திருக்கும் 'பாவாட' வரை வந்த எல்லாப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இடையில் 'டபுள் பேரல்' மட்டுமே கொஞ்சம் சறுக்கியது ஆனாலும் ப்ளாப் ஆகவில்லை. தனக்கான கதைகளை மிக அழகாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ராணுவ வீரனாய் காதலியின் பின்னாலே திரியும் போது செம ஹுயூட்... காதலியை தேடி அலையும் போது காதலின் வலியை சுமந்து திரிந்தாலும்... லட்சத்தீவில் லேசான தாடியுடன் நாம் எப்பவும் பார்க்கும் ப்ரித்விராஜை பார்க்க முடிகிறது. மியாவிடம் குறும்பு செய்யும் கலகலப்பான மனிதராய்... நீச்சல் பயிற்சி அளிக்கும் மனிதராய்... பன்முகம் காட்டுகிறார். 40வயசுல காதலியை தேடுறே... என நண்பன் கிண்டல் அடிக்க, இருக்காளா... இல்லையான்னு தெரிஞ்சா ஷட்டரை மூடிடலாம்ல்ல... அதுக்காகத்தான் அவளைத் தேடுறேன் என்று சொல்லும் போது காதலின் வலி அவர் முகத்தில்... மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

பிரியல் கோர் ... குஜராத் இறக்குமதி, சிரிப்பால் கொள்ளை கொள்ளும் அழகி, இந்தியில் ஒன்று, தெலுங்கில் ஒன்றென இரண்டு படங்கள் முடித்த இந்த தொலைக்காட்சித் தொடர் நடிகைக்கு மலையாளத்தில் இது முதல் படம். தன் காதலைச் சுமந்து அப்பாவை எதிர்த்து நிற்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். என்ன டிரஸ்ஸிங்க் சென்ஸ்.... அவரது உடைகள் எல்லாமே அழகு.. நிச்சயம் ரொம்பப் பேரின் தூக்கத்தைக் கெடுத்திருப்பார்.

நண்பனாக வரும் பிஜூ மேனன், ராணுவ வீரராக வரும் போது கலகலக்க வைக்கிறார்... லட்சத்தீவில் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி, லேசான தாடியுடன் லைட் ஹவுஸில் பணியில் இருக்கும் போது தேடி வரும் நண்பனைக் கண்டு ஒளிந்து திரிவது, அவனின் கதையைக் கேட்டதும் அவனுக்கு உதவ நினைப்பது, இறுதிக் காட்சியில் சோகமும் சந்தோஷமுமாய் கலந்து கட்டி  நண்பனின் நிலை கண்டு கதறுவது என  ப்ரித்விராஜை தூக்கிச் சாப்பிடும் அலட்டலில்லாத நடிப்பு.

(சம்ஸ்க்ருதி)
இரண்டாவது கதாநாயகியாக, லட்சத்தீவு மிலிட்டரி மெடிக்கல் சூப்பரிண்டென்ட்டாக வரும் மியா... எல்லாருக்கும் உதவி செய்யும் பாஸிட்டிவ் மனிதராக வருகிறார். ப்ரித்விராஜ் அவரை கலாய்ப்பதும்... அவர் ப்ரித்விராஜை கலாய்ப்பதும் செம... கடைசிக் காட்சியில் ராணுவ அதிகாரியிடம் சண்டையிட்டு ப்ரித்விராஜைக் காப்பாற்ற முயற்சிக்கும் இடத்தில் கலக்கியிருக்கிறார். பிரியல் கோர் இடத்தில் இவர் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும் அழகி.

ப்ரித்விராஜின் லட்சத்தீவு நண்பர்களாக வரும் ஆத்திகோயா (சுரேஷ் கிருஷ்ணா),ராஜீவ் (அருண்), நாயகியின் அப்பா (கபீர் பேடி), தம்பி (சுதேவ் நாயர்) என எல்லாரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோமாவின் தங்கையாக வரும் சம்ஸ்க்ருதி  எல்லாரையும் கவர்வார் என்பதில் சந்தேகமில்லை. ஆ ஒருத்தி பாடலில் 'காக்கு நின்டோ நீ... காத்திருப்போம் யாம்...' என்ற வரிகளைப் பாடும்போது அண்ணனைப் பார்த்து யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரைத் துடைக்கும் போது அவளின் காதலும் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

திரைக்கதை ஆசிரியராய் நீண்ட காலம் பயணித்து இயக்குநராக களம் இறங்கை இருக்கும் சாச்சி,  நல்லதொரு காதல் கதையை, மிக நேர்த்தியான கதைக்களத்தில் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். வித்யாசாகர் அருமையான இசை விருந்து படைத்திருக்கிறார். பாடல்கள் அருமை... சுஜித் வாசுதேவ் தனது ஒளிப்பதிவில் லட்சத்தீவின் அழகை கண் முன்னே நிறுத்துகிறார்.


மொத்தத்தில் 'அனார்கலி' திகட்டத் திகட்ட காதலையும் அதன் வலியையும் ஒரு சேர கொடுத்தபடம்.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் நன்று நண்பரே
மலையாளத்தில் கதையை நம்பும் மக்கள்
தமிழில் நாயகியின் சதையை நம்பும் மக்கள்
இதுவே காரணம்
தமிழ் மணம் 2

J.Jeyaseelan சொன்னது…

விமர்சனம் அருமை சார்.. பாக்கணும்னு சொல்றீங்க, பாத்துருவோம்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடடா,,,! உடனே பார்க்கணும் போல் இருக்கே.,,,!

Unknown சொன்னது…

I have watched this movie 4 times... Very interesting and engaging

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான விமர்சனம். நல்ல படம். மலையாளத்தில் கதைக்குத்தான் முக்கியத்துவம். தமிழில் அது இல்லாமல் கதாநாயகர்களுக்குக் கதை என்பதால்தான் ஏமாற்றங்கள்..படம் தொய்வு, அனாவசியமான சண்டைக்காட்சிகள் இப்படி....

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
படம் பற்றி விமர்சனத்தை பார்த்தபோது பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் மொழி தெரியாது...த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். சொன்னது…

இயல்பான நடிப்புக்கும் மலையாள உலகம் கியாரண்டி. நிறைய மலையாளப் படங்கள் பார்த்து விமர்சனம் வைத்து ஆவலைத் தூண்டுகிறீர்கள். பார்க்கத்தான் முடியவில்லை!
தம +1