மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)

முந்தைய பகுதிகள் :


     பகுதி-1     பகுதி-2     பகுதி-3     பகுதி-4      பகுதி-5      பகுதி-6     பகுதி-7           பகுதி-8      பகுதி-9     பகுதி-10  பகுதி-11    பகுதி-12    பகுதி-13    பகுதி-14   பகுதி-15   பகுதி-16   பகுதி-17   பகுதி-18   பகுதி-19    பகுதி-20     பகுதி-21 

பகுதி-22   பகுதி-23   பகுதி-24   பகுதி-25   பகுதி-26     பகுதி-27  பகுதி-28 

பகுதி-29   பகுதி-30   பகுதி-31   பகுதி-32

---------------------------------

32-வது பகுதியின் இறுதியில்...

"அண்ணே... உன்னைப் பத்தி தெரியும்... இதே கண்மணி வீட்டுக்காரர் ஒரு பிரச்சினைக்காக பேசப்போகும் போது நடந்துக்கிட்ட விதமும் அதுக்கு நீங்க நடந்துக்கிட்டதும் என்னால மறக்கவே முடியாதுண்ணே.... உலக நடப்புன்னு பேசும்போது உனக்கு வருத்தமாயிருமேன்னுதான் சொன்னேன்..."

ரமேஷின் முகம் மாறுதலாவதைக் கண்ட அழகப்பன் "மாப்ள எதுக்கு பழசெல்லாம் பேசிக்கிட்டு... இப்ப மாமா எங்க இருக்கணும் அதை மட்டும் பேசுங்க... சும்மா  தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதையா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு..." என்று அதட்டினார்.

"அத்தான்... நீங்க பேசுங்க.... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... முடிச்சிட்டு வாறேன்..." என்று எழுந்த கண்ணதாசன், கண்ணகியைப் பார்த்து "வா... போகலாம்..." என்றான்.

இனி...

'கண்ணதாசன் வேலை இருக்கு... நீங்க பேசுங்க...' என்று கிளம்பவும் மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

"என்ன கண்ண மச்சான்... என்னாச்சு திடீர்ன்னு கிளம்புறீங்க... இங்க யாரும் உங்க மனசு புண்படும்படியா பேசலையே... உலக நடப்பைத்தானே சொன்னோம்..." பதறினார் அழகப்பன்.

"ஏன்டா.... என்னடா... படக்குன்னு கிளம்புறே...? இந்தக் கிழவன் இங்க இருக்கது உனக்கும் பிடிக்கலையா?" கந்தசாமி தழுதழுக்க கேட்டார்.

"என்ன சித்தப்பா நீங்க... உண்மையாவே எனக்கு டவுன்ல சின்ன வேலை... கண்ணகியோட அக்கா மகளுக்கு நகை செய்யச் சொல்லியிருந்தோம். சின்னம்மா சம்பவத்தால அங்கிட்டு போகலை... அது காலையில இன்னைக்கி வாறீகளா சித்தப்பான்னு கேட்டுச்சு... வாறேன்னு சொல்லிட்டுத்தான் இங்க வந்தேன்... பேச்சு ஆரம்பிக்கும் போது கிளம்பியிருந்தா... இவனை நம்மள ஒருத்தனாப் பாத்தோம்ன்னு எங்கூடப் பொறந்ததுகளும், மச்சான் இப்படி படக்குன்னு கிளம்பிட்டாரேன்னு அத்தான்களும், இந்தபய எதுக்கு இப்ப இப்படி ஒடுறான்னு நீங்களும் நினைப்பீங்க... அதனாலதான் இருந்தேன்... நேரமாச்சு... அது வந்து காத்திருக்கும்... நா இருந்தா எல்லாருமே கண்ணாடிமேல நிக்கிற மாதிரி யோசிச்சுப் பேசுவாங்க... எங்க என்னோட மனசுல கல்லெறிஞ்சிடுவோமோன்னு யோசிப்பாங்க... நீங்க புடிச்ச புடியில நிப்பீங்க... " என்று கந்தசாமியிடம் சொன்னவன் "அத்தான்... உங்களுக்குத் தெரியாததில்லை... எத்தனையோ குடும்பத்தைப் பார்த்திருப்பீங்க... ஏன் நம்ம ராமசாமி ஐயா கடைசி காலத்துல மக வீட்டுலதான் இருந்தாரு... சிவசாமி சித்தப்பாவுக்கு அது புடிக்கலை... என்னாச்சு... அவரு செத்தப்போ காசு பணத்தை எல்லாம் மககிட்ட கொடுத்துட்டாருன்னு சண்டை போட்டு பொணத்தைக் கூட எடுத்துக்கிட்டுப் போக மாட்டேன்னு சொல்லிட்டாரு... அப்புறம் பஞ்சாயத்து... அது இதுன்னு... நம்ம குடும்பத்துல அதுக்கெல்லாம் வேலையில்லை... எல்லாரும் ஒண்ணுதான்... மனஸ்தாபம் வர வழியில்லை...எதாயிருந்தாலும்... எந்த முடிவா இருந்தாலும் எல்லாருமாக் கூடி எடுங்க... எனக்குச் சந்தோஷம்... சித்தப்பாக்கிட்ட மனம் விட்டுப் பேசுங்க... நான் பொயிட்டு சீக்கிரம் வந்துருவேன்..." என்றபடி கிளம்பினான்.

"நாம பேசினது அவனுக்கு மனசுக்குள்ள வருத்தம்... அதான் பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு பொயிட்டான்..." என்றான் மணி.

"அண்ணே... கண்ணண்ணன் அப்படியெல்லாம் நினைக்காது... வேலையாத்தான் போகுது... விடு... இப்ப அப்பா எங்க தங்குறாங்கன்னு கேட்டு முடிவு பண்ணலாம்... அதை விட்டுட்டு அது போனதை பெரிசாக்க வேண்டாம்."

"இங்க பாருங்கடா.... உங்களைவிட கண்ணதாசந்தன் எல்லாத்துலயும் ஒசந்தவன்... என்னடா கூடப்பொறந்தவங்களை விட்டுட்டு பெரியப்பா மகனை தூக்கிப் பேசுறேன்னு நினைக்காதீங்க.... எல்லா விஷயத்துலயும் அவந்தான் முன்னால நிப்பான்... அது நல்லதோ கெட்டதோ... அக்கா அத்தான்னு எல்லாத்துக்கும் ஓடியாருவான்... ஒரு சின்ன சந்தோஷமுன்னாலும் எனக்குப் போன் பண்ணி  சொன்னாத்தான் அவனுக்கு மனசு சந்தோஷப்படும்... அவன் எதையும் பெரிசா எடுத்துக்கமாட்டான்... சும்மா சுத்தமாக் கெடக்க தண்ணியில கல்லெறிஞ்சு கலக்கி விடாம இருங்க... நீங்க நாளைக்கே ஓடிருவீங்க... இங்க அவந்தான் எல்லாத்துக்கும் ஓடியாரணும்... சும்மா வளவளன்னு பேசாம அப்பா இங்க இருக்கமுன்னு சொன்னா விட்டுட்டு வேலையைப் பாருங்க... நானும் தங்கச்சியும் பக்கத்துலதானே இருக்கோம்... அடிக்கடி வந்து பாத்துக்கிறோம்... இன்னொன்னு நம்மளைவிட கண்ணகி அப்பாவை ரொம்ப நல்லாப் பாத்துப்பா... அம்மா இருக்கும்போது கூட நம்மமேல இருக்க பாசத்தைவிட அவமேல கொஞ்சம் கூடுதலாத்தான் பாசம் வச்சிருக்கும் தெரியுமா?" படபடவென பொரிந்து தள்ளினாள் சுந்தரி.

"இல்லக்கா... அப்பா எங்க கூட இருந்தா எங்களுக்கும் சந்தோஷமா இருக்குமுல்ல... படிச்சி முடிச்சிட்டு வேலை... வேலையின்னு குடும்பம் குழந்தைகளோட அங்கிட்டே கிடந்துட்டோம். அவங்களை எங்க கூட வச்சி பாத்துக்கவேயில்லை... அம்மா இருக்கும் போது எங்கிட்டும் வராது... அதுக்கு இந்த வீடு, ஆடு மாடுகதான் உலகம்... அப்பாவாச்சும் இந்த உலகத்தைவிட்டு எங்க கூட பேரன் பேத்தியின்னு சந்தோஷமா இருக்கட்டுமே..." என்றான் குமரேசன்.

"அவருக்கு இங்க இருக்கதுதான் சந்தோஷம்ன்னா அந்த சந்தோஷத்துக்கு நாம ஏன் தடை போடணும்... கொஞ்ச நாள் இருக்கட்டும்... அப்புறம் நீங்க கூட்டிப் போகலாம்..." என்றாள் கண்மணி.

"இங்க பாருங்கப்பா... எனக்கு உங்க கூட வரக்கூடாதுன்னு எல்லாம் இல்லை.... என்னோட பிள்ளைகளைப் பத்தி தெரியும்... எனக்கு வாச்ச மருமகன்களும் மருமக்களும் எனக்கு பிள்ளைங்க மாதிரித்தான்... கடவுள் எனக்கு எல்லா விதத்துலயும் சந்தோஷத்தைத்தான் கொடுத்தான். எல்லாரும் விரும்பிக் கூப்பிடுறீங்க... வந்து இருக்கலாம்தான்... ஆனா இந்த ஊரு... இந்த வீடு... இந்த ஆடு மாடுக... இந்த வயலுக... இங்க இருக்க மக்க... இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு டவுன்ல வந்து வீட்டுக்குள்ள உக்காந்து டிவி பாத்துக்கிட்டு கெடக்க என்னால முடியாது... இருக்கப்போறது எம்புட்டு நாளுன்னு தெரியாது... இங்கயே இருந்து காலத்தை ஓட்டுனேன்... இந்த ஊரோட காத்தை சுவாசிச்சிக்கிட்டு இங்கயே கடைசி மூச்சை விடணும்... இது என்னோட ஆசை மட்டுமில்ல... பேராசையும் கூட.... கண்ணனும் எனக்கு மகந்தான்... ராத்திரியில கொஞ்சம் சத்தமா இருமினாக்கூட 'என்ன சித்தப்பா... இப்புடி இருமுறீங்கன்னு வந்து நிப்பான்... அப்படிப்பட்டவந்தான் அவன்... எங்க அண்ணன் மாதிரி.... அவரு நிழல்ல வளந்தவனுங்க நாங்க... இப்ப இவனுக்கிட்ட இருக்கேனே... அங்க போயி இருக்கலை... நம்ம வீட்டுல உங்க அம்மா நடந்து... சிரிச்சு... படுத்து வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ள அவ நினைவோட இருக்கேன்... என்ன சாப்பாடு, காபிக்கு மட்டுந்தானே கண்ணகிகிட்ட கேக்கப் போறேன்... கண்ணகி எனக்கு சுந்தரியும் கண்மணியும் எப்படியோ அப்படித்தான்... இந்தா சித்ரா அப்ப அப்ப கோபப்பட்டாலும் மாமான்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கிது... அதுதான் பாசம்... அபி சொல்ல வேண்டாம்.... கட்டகூடாதுன்னு நின்னவன் நான்... ஆனா என்னைய அதோட அப்பனாத்தான் பாக்குது... இதுக்கு மேல என்ன வேணும்... என்னை நீங்க கூட்டிக்கிட்டுப் போயிட்டா.... அவன் ரொம்ப வெறுமையா உணருவான்... நீங்க அப்படி இருந்து பழகிட்டீங்க.... ஆனா அவன் விடிஞ்சி எந்திரிச்சா சித்தப்பா, சின்னத்தான்னு எங்க மடியிலயே கிடந்தவன்... அதையும் யோசிங்க... ஊரு கெடக்கு ஊரு... நரம்பில்லாத நாக்கு என்ன வேணுமின்னாலும் பேசும்... கோளாறாப் பாத்தா பாக்கட்டும்... நம்மக்கிட்ட கோளாறு இல்லை... பாக்குறவன் கண்ணுலதான் கோளாறு... இதுக்கெல்லாம் பாத்தா நம்ம உறவுகளை இழந்துக்கிட்டுத்தான் நிக்கணும்... எனக்கு இனி எல்லாமே எம் பேரம்பேத்திகதான்... அதுகளை விட்டுட்டு எங்க போகப்போறேன்... அடிக்கடி வாறேன் பாக்குறேன்... நீங்களும் வாங்க பாருங்க... நாஞ் சொல்றது தப்பாத் தெரிஞ்சா மேக்கொண்டு நீங்க என்ன முடிவு பண்ணுறீங்களோ... அதுக்கு நா கட்டுப்படுறேன்..." என்று நீளமாகப் பேசியவர் அருகிலிருந்த செம்பிலிருந்த தண்ணீரை எடுத்து மடக்.... மடக்கெனக் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"மாமா... தெளிவாச் சொல்லிட்டாங்க... அப்புறம் மேக்கொண்டு இதுல சொல்றதுக்கு என்ன இருக்கும் மாப்ள...." என்று மணியைப் பார்த்து அழகப்பன் கேட்க, "எங்க இருந்தா என்ன அப்பா சந்தோஷமா இருந்தாப் போதும்... இனி இதுல பேசுறதுக்கு என்ன இருக்கு" என்றாள் சுந்தரி.

"அதான் அப்பா தீர்மானமாச் சொல்றாங்களே... அப்புறம் என்ன.... இங்கயே இருக்கட்டும்... கொஞ்ச நாள் போகட்டும் ஆடுமாடுகளை வித்துட்டு வயலை கண்ணதாசனுக்கிட்ட சொல்லி போடச் சொல்லலாம்... இல்லைன்னா வேற யாருக்கிட்டயாச்சும் பங்குக்கு விடலாம்... அப்பா இங்கயே இருக்கட்டும்... அதுதான் சரியின்னு படுது.... அவரை வற்புறுத்திக் கொண்டு போயி வச்சிருந்தாலும் அவருக்கு இங்க கிடைக்கிற சந்தோஷம் கிடைக்காதுல்ல... " மணி சொல்ல, குமரேசன் அதை ஆமோதித்தான்.

"சரி... மாமா... நீங்க இங்கயே இருங்க... கண்ண மச்சான் பாத்துக்கட்டும்... எல்லாரும் பக்கத்துலதானே இருக்கோம்... வந்து பாத்துக்கிறோம்... இடையில ஒருநா... ரெண்டு நா எங்க வீடுகளுக்கு வாங்க... தங்குங்க... உங்களுக்கும் மனசுக்கு ஒரு மாற்றம் இருக்கும்.... சரித்தானுங்களா?"

"ரொம்பச் சந்தோசம் மாப்ள.... என்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட பாக்கியம்... எல்லாரும் நல்லா இருக்கணும்.... அந்தக் கருப்பந்தான் பிள்ளைங்க தலமாடு காத்து கஷ்ட நஷ்டமில்லாம வாழ வைக்கணும்.... இங்கிட்டு எங்கிட்டாச்சும் காத்தா வந்து நின்னு நாம பேசினதைக் கேட்டுக்கிட்டு நிப்பா அவ.... கண்டிப்பா இந்த மாதிரி பிள்ளைகளை பெத்ததுக்கும் மருமக்களை அடைஞ்சதுக்கும் அவ ரொம்ப சந்தோஷப்படுவா... எல்லாருக்கும் அவ தெய்வமா நின்னு வழி நடத்துவா...." என்றார் கண்கள் கலங்க.

"சரி... சரி... மத்தியான சாப்பாட்டுக்கு ரெடி பண்ணுங்கத்தா... நாளைக்கு அவுக அவுக பொழப்புத் தழப்பைப் பாக்க கிளம்புற வேலையைப் பாருங்க...." என்றபடி எழுந்தார் அழகப்பன்.

தேநேரம்...

"இன்னுங் கொஞ்ச நேரம் நின்னுருக்கலாமுல்ல... எதுக்கு அவசரமா ஓடியாந்தீக..." வண்டியின் பின்னால் இருந்து கண்ணதாசனின் இடுப்பில் குத்தினாள் கண்ணகி.

"இருக்கலாமுன்னுதான் நெனச்சேன்.... சித்தப்பா இங்கதான் இருப்பேன்னு நிக்கிறாரு... அண்ணனுக்கும் குமரேசனுக்கும் அவரை இங்க விட மனசில்லை.... என்னதான் இருந்தாலும் பெத்த அப்பனை அநாதையாட்டம் விட மனசு வருமா என்ன... அதே எண்ணம்தான் சித்ராவுக்கும் அபிக்கும்.... பெரியத்தானோ பல இடங்கள்ல இது மாதிரி பாத்து பஞ்சாயத்துப் பண்ணியிருக்காரு... விவரம் தெரிஞ்சவரு... நாளைக்கு நமக்குல்ல பிணக்கு வந்துடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்காரு... சின்னவரு எதுலயும் படக்குன்னு பேச முடியாம அண்ணஞ் சொல்றது சரியின்னு சொல்றாரு.... அக்காவுக்கும் கண்மணிக்கும் இதுல என்ன பேசுறதுன்னு தெரியலை... நா இருக்கதால சில விஷயங்களை நேரடியாப் பேச யோசிக்கிறாங்க.... அதான் அவங்களே முடிவெடுக்கட்டும்ன்னு வந்துட்டேன்... ஆனா உண்மையாப் போற காரணத்தைத்தானே சொல்லிட்டு வந்தேன்... பொய் சொல்லலையே..." என்று கண்ணகியைப் பார்த்து சிரித்தான்.

"மாமா பாவங்க... டவுனுல போயி கஷ்டமுங்க... வெளிய தெருவ போறதுக்கு கூட சிரமப்படுவாரு.... எதையும் யாருக்கிட்டயும் பேசவும் முடியாது... மனசு தளர்ந்து போயிருவாரு... இங்க இருந்தா அவருக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்... இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லாயிருப்பாரு... என்ன அவருக்குன்னு தனியாவா சமைக்கப் போறோம்... போடுற ஒலையில ரெண்டரிசி சேத்துப் போடப்போறோம்.... அம்புட்டுதானே... ஆமா மாமா குமரேசன் கூட போக ஒத்துக்கிட்டா நீங்க வருத்தப்படுவீங்களா மாட்டீங்களா?" என்று பின்னாலிருந்து கேட்டாள்.

"இங்கயே இருந்தவரு... அவரு கைக்குள்ளயே கிடந்துட்டேன்... கை ஒடிஞ்ச மாதிரி ஆயிரும்.... என்ன பண்ண... இந்தா சின்னம்மா செத்துச்சு அழுது புலம்பிட்டு அவுக அவுக வேலையைப் பாக்கப் போகலையா... அப்படித்தான்... கொஞ்ச நாள் சித்தப்பா நெனப்பா இருக்கும்.... அப்புறம் தம்பி வீட்டுலதானே இருக்காரு... நெனச்சா போயி பாத்துட்டு வரலாம்ன்னு மனசை தேத்திக்கிட்டு இருக்கப் பழகிக்க வேண்டியதுதானே..." என்றவனின் கலங்கிய கண்களை அவள் பார்க்கவில்லை என்றாலும் கைகளை மேலே தூக்குவது போல் துடைத்துக் கொண்டு 'ம்ம்ம்ம்ம்....' என்று பெருமூச்சை விட்டுவிட்டு 'முனீஸ்வரா.... எங்க சித்தப்பா இங்கயே இருக்கணும்... எல்லாரும் ஒத்துக்கணும்...' என்று வாய்விட்டு சொல்லிவிட்டு வண்டியைச் ஓட்டுவதில் கவனம் செலுத்த, பின்னாலிருந்த கண்ணகி அவனை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

சுபம்.

வேரும் விழுதுகளும் நிறைவுற்றது.

--------------------


[ வேரும் விழுதுகளும் தாங்கி வந்த உறவுகளின் வசந்தத்தை தொடர்ந்து வாசித்து எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த ஐயாக்கள், அம்மாக்கள், அண்ணன்கள், அக்காள்கள், தம்பிகள், தங்களைகள், தோழர்கள், தோழிகள் என அனைத்து வலை நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.... விரைவில் மீண்டும் ஒரு வாழ்க்கைக் கதையுடன் தொடர்ந்து பயணிப்போம் ] 

என்றும் பாசங்களுடன்...
-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான கதை
நிறைவான முடிவு
வாழ்த்துக்கள் நண்பரே
தம +1

Kasthuri Rengan சொன்னது…

தொடருங்கள் காத்திருக்கிறேன்
தம +

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கதையின் முடிவு ரசிக்கவைத்தது.பாராட்டுக்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுபமான முடிவு! ஓர் நல்ல கிராமத்து மனிதர்களோடு உறவுகளோடு வாழ்ந்த உணர்வை கொடுத்தது தொடர்! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…

வாழ்த்துகள் அடுத்த தொடர் எப்போது....

Menaga Sathia சொன்னது…

கதையின் முடிவு பிடித்திருக்கு சகோ..கதை மிக விறுவிறுப்பாக இருந்தது.உங்களின் தொடர்கதை மற்றும் பல பதிவுகளும் பிடிக்கும்..கருத்து தெரிவித்திருக்கமாட்டேன் பதிவுகளை படித்திருந்தாலும் மன்னிக்கவும்.

மீண்டும் ஒரு புதிய தொடர்கதைக்கு காத்திருக்கிறேன்...க்ரைம் த்ரில்லரா இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏற்கனவே காதல்,குடும்பம் வைத்து தொடர்கதை எழுதிட்டீங்க.இப்போ க்ரைம் கதையாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்பது என் கருத்து.

இன்னும் தங்கள் எழுத்து நடை சிறக்க வாழ்த்துக்கள் !!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சுபம்! கந்தசாமி அங்குதான் இருப்பார் என்பதோடு முடித்தீர்களே...பிரிவினை என்றில்லாமல்....ஹப்பா...நல்லதொரு கிராமத்து ம்ணம் கமழ் தொடரில் பயணித்தது நன்றாக இருந்தது நண்பரே! ...வாழ்த்துகள்!

கோமதி அரசு சொன்னது…

என்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட பாக்கியம்... எல்லாரும் நல்லா இருக்கணும்.... அந்தக் கருப்பந்தான் பிள்ளைங்க தலமாடு காத்து கஷ்ட நஷ்டமில்லாம வாழ வைக்கணும்.... இங்கிட்டு எங்கிட்டாச்சும் காத்தா வந்து நின்னு நாம பேசினதைக் கேட்டுக்கிட்டு நிப்பா அவ.... கண்டிப்பா இந்த மாதிரி பிள்ளைகளை பெத்ததுக்கும் மருமக்களை அடைஞ்சதுக்கும் அவ ரொம்ப சந்தோஷப்படுவா... எல்லாருக்கும் அவ தெய்வமா நின்னு வழி நடத்துவா...." என்றார் கண்கள் கலங்க.//

கண்ணீர் திரையிட்டு மேலே படிக்க முடியவில்லை.
கண்ணதாசன் மனது அன்புமயமானது.
இந்த முடிவு தான் நான் எதிர்பார்த்தேன், அருமை.
வாழ்த்துக்கள் குமார்.

நிஷா சொன்னது…

வேரும் விழுதுகளும்......

"இங்க பாருங்கடா.... உங்களைவிட கண்ணதாசந்தன் எல்லாத்துலயும் ஒசந்தவன்... என்னடா கூடப்பொறந்தவங்களை விட்டுட்டு பெரியப்பா மகனை தூக்கிப் பேசுறேன்னு நினைக்காதீங்க.... எல்லா விஷயத்துலயும் அவந்தான் முன்னால நிப்பான்... அது நல்லதோ கெட்டதோ... அக்கா அத்தான்னு எல்லாத்துக்கும் ஓடியாருவான்... ஒரு சின்ன சந்தோஷமுன்னாலும் எனக்குப் போன் பண்ணி சொன்னாத்தான் அவனுக்கு மனசு சந்தோஷப்படும்... அவன் எதையும் பெரிசா எடுத்துக்கமாட்டான்... சும்மா சுத்தமாக் கெடக்க தண்ணியில கல்லெறிஞ்சு கலக்கி விடாம இருங்க... நீங்க நாளைக்கே ஓடிருவீங்க... இங்க அவந்தான் எல்லாத்துக்கும் ஓடியாரணும்... சும்மா வளவளன்னு பேசாம அப்பா இங்க இருக்கமுன்னு சொன்னா விட்டுட்டு வேலையைப் பாருங்க... நானும் தங்கச்சியும் பக்கத்துலதானே இருக்கோம்... அடிக்கடி வந்து பாத்துக்கிறோம்... இன்னொன்னு நம்மளைவிட கண்ணகி அப்பாவை ரொம்ப நல்லாப் பாத்துப்பா... அம்மா இருக்கும்போது கூட நம்மமேல இருக்க பாசத்தைவிட அவமேல கொஞ்சம் கூடுதலாத்தான் பாசம் வச்சிருக்கும் தெரியுமா?" படபடவென பொரிந்து தள்ளினாள் சுந்தரி.<<<<

அட! கரெக்டாய் தான் சொல்லி இருக்கா சுந்தரி! இது தான் சரியான புரிதல்!

தன் துணை மரித்தபின் மீதமாய் இருப்பவரின் மனக்குமுறலை இத்தனை தெளிவாய் சுந்தரி எனும் கதாபாத்திரம் மூலமாய் சொன்னது தான் ஹை லைட். வயதானால் அதுவரை வாழ்ந்து விட்ட சூழலை தம் வேரை பிடுங்கி இன்னொரு புதிய சூழலில் நடுவது போல் நட்டால் இருக்கும் கவலையோடு இன்னும் கவலை தான் சேரும் என புரிந்திட்டால் அப்பா, அம்மாவை அங்கே வா. இங்கே வா என எந்த பிள்ளையும் அலைக்கழிக்காது!

வேரும் விழுதுகளில் கிராமத்து வாழ்க்கையை அவரவர் இயல்பான பேச்சிலேயே எல்லோரும் இயல்பிலே நல்லவர்கள் தான் என எவரையுமே குறைசொல்லாததாய் அசத்தலாய் ஆரம்பித்து அருமையாய் முடித்திருக்கின்றீர்கள் குமார்.

சித்ரா போன்றவர்களுக்கு என்ன தான் சப்பைகட்டு கட்டினாலும் அப்படிப்பட்டவர்கள் தான் இவ்வுலகில் அனேகம் என தோன்றுகின்றது. பெத்த பிள்ளைகள் இருக்க வளர்த்த பிள்ளை கண்ணதாசன் கந்த சாமி ஐயா மனசில் மட்டும் ஆல்ல எங்க மனசிலும் நீங்காஇடம் பிடித்து விட்டார். எதையும் சமாளித்து செல்லும் குணம், உறவினரை அரவணைத்து செல்லும் பாங்கு என கண்ணதாசனும் அவன் மனைவியும் போல் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

கிராமத்து மக்களின் வெகுளித்தனமான பேச்சு,ம், வெளிப்படையும், மனதில் வைத்திருக்காமல் சடசடவென சண்டையிடுவதும், அவசியம் என வரும்போது சேர்ந்திணைவதுமாய் ஊரோடும் வயலோடும், ஆடு, மாடோடும் இயல்பாய் இணைந்து எழுதிய தொடர் . நாவலாக்குவத்ற்கு தகுதியானதுதான்.

உங்கள் கிராமத்து கதைகள் கிராமிய நினைவுகள் அனைத்துமே என்னை அந்த இடத்துக்கே கொண்டு செல்ல வைக்கும், இன்னும் எழுதுங்கள் குமார்.

அடுத்த தொடருக்காய் காத்திருக்கின்றேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
கல்கிக்கான குறுநாவல் எழுதிய பின்னர் அடுத்த தொடர் ஆரம்பிக்கப்படும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
எனது பதிவுகளை தாங்கள் தொடர்ந்து வாசிப்பீர்கள் என்பதை அறிவேன்.
எல்லாருக்குமே வேலைப்பளு அதிகம்தானே.... நானும் பல பதிவுகளை வாசித்து கருத்து இடுவதில்லை...

க்ரைம்... ம்... தங்கள் அன்பிற்காக ஒரு குறுநாவல் போல் 5,6 அத்தியாயங்கள் எழுதலாம் என்று யோசனை...

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
வாழ்ந்த இடத்தை விட்டு வருதல் நலமாகாதே... அதுதான்... அங்கயே இருக்க விட்டாச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா....
ஒவ்வொரு பகுதிக்கும் தங்கள் கருத்துக்கள் மிக அழகாக இருக்கும்.
இங்கும் அப்படியே...
எனது கதை தங்களைக் கவர்ந்தது என்று சொல்லும் போது மிகுந்த சந்தோஷம் எனக்கு...
உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களை என்னை இன்னும் எழுதச் சொல்லும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...

எனது பதிவுகளுக்கு கிடைத்திருக்கும் மிக நீண்ட கருத்து இது.
கைவலியோடு தட்டச்சினாலும் மிக அருமையாக அலசி... அழகான கருத்தைச் சொல்லியிருக்கீங்க அக்கா...

சித்ராவை வில்லியாக்கிப் பாக்க் வேண்டும் என்று நினைத்தேன்... ஆனால் கதை கந்தாசாமியைப் பேசுவதாலும் ரொம்ப இழுக்க வேண்டாம் என்பதாலும் இப்படி ஒரு வசனத்தையும் கொழுந்தனுடன் பேசுவது போலும் வைத்து முடித்துவிட்டேன். இன்னும் நிறைய சித்ராக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

கிராமத்து மக்களையும் அந்த பேச்சு வழக்கையும் என் கதைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே என் எண்ணம்... பெரும்பாலும் கதைகள் எல்லாமே கிராமம் சூழ்ந்தே எழுத எண்ணம்...

எனது பதிவுகளைப் படித்து வாழ்த்திய தங்களுக்கு நன்றி.

அடுத்த தொடரும் கிராமத்தை வைத்தே எழுத எண்ணம்... அது வாழ்க்கையா / க்ரைமா / காதாலா என்பது இன்னும் முடிவாகலை...

கல்கி குறுநாவல் போட்டிக்கு எழுதணும் அக்கா... அதன் பின்னரே மற்றதெல்லாம்...

மூன்று நாள் படிக்க எழுத நேரம் கிடைத்தது. இனி நாளை முதல் வேலை வியாழன்தான் எழுத முடியும்... இடையில் முடியுமா தெரியலை....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.