மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 15 ஆகஸ்ட், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 31)

முந்தைய பகுதிகள் :


30-வது பகுதியின் இறுதியில்...

"இதுல என்னத்தான் கேக்குறதுக்கு இருக்கு... நீங்க என்ன சொல்லுறீங்களோ அதுதான்... அப்பா ஆசை... எதுக்கு தடுக்கணும்... எட்டாம் நாள் வச்சிப்போம்... மூணாம் நாளு எண்ணெய் தேச்சுக்குளிச்சிட்டு நாங்க பொயிட்டு ரெண்டு நாள்சென்டு வாரோம்..." என்றான் மணி.

"சரிப்பா.... எல்லாருக்கும் சொல்லிவிட்டுரலாம்..." என்று முடித்தார்கள்.

அன்று இரவு யாருக்குமே தூக்கம் வரவில்லை. "நேத்து இங்க படுத்திருந்தா... இந்தா இங்கன... எங்கூட பேசிக்கிட்டு... இன்னைக்கு அநாதையா கெடக்கா... இப்படி பட்டுன்னு பொயிட்டாளே...." என்று புலம்பி அழுத கந்தசாமியை தேற்றிக் கொண்டிருந்தான் கண்ணதாசன்.

இனி...

காளியம்மாள் இறந்து மூன்று நாளாகிவிட்டது...

மூன்றாம் நாள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் கிளம்பிச் சென்றார்கள். கேதம் கேட்டு வந்து கொண்டிருந்த ஜனங்களும் சன்னமாகக் குறைய ஆரம்பித்து ஒன்றிரண்டாக வர ஆரம்பித்தார்கள். மணியும் குமரேசனும் நான்காம் நாள் வேலைக்கு கிளம்பிப் போய்விட்டார்கள். ரமேஷூம் பிஸினஸ் விசயமாக மீண்டும் கோயம்புத்தூர் போய்விட்டான். அழகப்பனும் கண்ணதாசனும்தான் அங்கிருந்து கேதம் கேட்டதுடன் கருமாதிக்கான வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கந்தசாமி முகத்தில் முளைத்த தாடியைக்கூட எடுக்காமல் ஒழுங்காக சாப்பிடாமல் ஆள் மிகவும் மெலிந்து காணப்பட்டார்.

வயல்களுக்கு ஊடே வரப்பில் மண்வெட்டியுடன் சுறுசுறுப்பாக வலம் வந்த கந்தசாமி இப்படி பாதி உடம்பாய் ஆகிவிட்டதை நினைத்து கண்ணதாசந்தான் ரொம்ப வருந்தினான். அப்பா இறக்கும் போது சின்னப் பையனாக இருந்தவன்... அம்மாவின் இறப்பின் போது மனைவி என்னும் தாயின் அரவணைப்புக்குள் இருந்ததால் கொஞ்சநாளில் இழப்பை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டான்... அவனுக்கு எல்லாமே சித்தப்பாதான் என்று இருந்தவன்... அப்படிப்பட்ட சித்தப்பா இழக்கக்கூடாததை இழந்த ஒரு மனிதனாக தன் கண்முன்னே உடைந்து கிடப்பது கண்டு அவனுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை... அவரை நினைத்து பல நேரங்களில் அழுது தீர்த்தான்.

"மச்சான்... இராமேஸ்வரம் போறதுக்கு வேனுக்கு சொல்லிடுங்க... அப்புறம் யார் யார் போறோங்கிறதை முடிவு பண்ணிக்கணும்... சும்மா எல்லாரையும் இழுத்துக்கிட்டுப் போக வேண்டாம்... ஊர் பெரிய மனுசங்க ரெண்டு மூணு பேரு... பங்காளி வீட்ல... அப்புறம் சம்பந்திங்க.. நாம... அம்புட்டுத்தான்... அவுகளைக் கூட்டணும் இவுகளைக் கூட்டணுமின்னு யாரையும் இழுக்க வேண்டாம்...." என்றார் அழகப்பன்.

"ஆமாத்தான்... அதெல்லாம் ரொம்ப இழுத்தம்ன்னா வண்டியியல உக்காந்து போகவும் முடியாது... அது போக இது என்ன சந்தோஷ பயணமா... எல்லாரையும் கூட்டிக்கிட்டுப் போயி கடல்ல ஆட்டம் போட்டுட்டு வர்றதுக்கு... வேனு... நம்ம கணேசனுக்கிட்ட சொல்லிட்டேன்... நல்ல பய... வாடகை பாத்து வாங்கிப்பான்... அனுசரிச்சு ஓட்டுற பய... காலையில சாப்பாட்டுக்கு இட்லி அவிச்சுக் கொண்டு போகணும்... மத்தியானம் இங்க வந்து விரதம் விட்டு சாப்பிட்டுக்கலாம்... சமையலுக்கு ஆள் சொல்லலாம்ன்னு பாத்தேன்... அதுக்கு கண்ணகி நாங்கள்லாம் இருக்கமுல்ல பாத்துக்கிறோம்ன்னு சொல்லுது..."

"இது நல்லாயிருக்கே... எல்லாரும் போகும் போது கண்ணகி வராமயா... அது வரணும் மச்சான்... நம்ம கனகுக்கிட்ட சொல்லி சமைக்கச் சொல்லலாம்... "

"இல்லத்தான் எல்லாரும் பொயிட்டாளும் இங்க வாங்கக் கொடுக்க... பாக்க ஆளு வேணுமில்ல... அவ இருந்தாத்தான் சரி வரும்..."

"ம்.... அப்புறம் நாம போறது கர்ம காரியம் பண்ண... நேத்து ராஜாத்தி அக்கா எங்கிட்ட வந்து கருமாதி செய்ய தேவிபட்டிணமா இல்லை ராமேசுவரமா போறீகன்னு கேட்டுச்சு.... நானும் தேவிபட்டிணத்துல சுத்தம் இல்ல... போறது போறோம் நல்லா வாழ்ந்து வாவரசியா செத்த மனுஷி இராமேஸ்வரத்துலதான் செய்யணுமின்னு சொன்னேன்..."

"ம்..."

"அதுக்கு அப்புறம் அது சொன்னுச்சு பாருங்க... எனக்கும் ஒரு சீட்டுப் போட்டுக்கங்க... எல்லாரும் கலாம் ஐயாவை செம்முன எடத்தை பாத்துட்டு வாராகளாம்... நீங்க போகாமய வருவீக... நானும் அதை பாத்துருவேனுல்லன்னு சொன்னுச்சு... எனக்கு சுர்ருன்னு வந்துச்சு...  ஏத்தா... ஒரு மனுஷியை சாகக் குடுத்துட்டு காரியம் பண்ணப் போறோம்... நீ அவரை செம்முன இடம் பாக்க வாறேன்னு சொல்லுறியே... தெரிஞ்சுதான் பேசுறியான்னு கத்திவிட்டுட்டேன்... பேசாம போயிருச்சு..."

"அவரை செம்முன இடத்தைப் பாக்கணுந்தான்... அதுக்கு ஒரு நேரங்காலம் வேண்டாம்... அவரோட இழப்பு மாதிரித்தானே... நமக்கு நம்ம வீட்டு இழப்பு... நல்ல மனுஷி... அது இப்பன்னு இல்லை எப்பவும் அப்படித்தான்... அதையெல்லாம் கூட்டிக்கிட்டே போகக்கூடாது... சரித்தான்... மளிகைச் சாமானுக்கு லிஸ்டைக் கொடுத்துட்டு இருக்கவுக சாப்பிடுறதுக்கு காய்கறியெல்லாம் எதுவுமில்லையாம்... வாங்கிட்டு வந்துருறேன்..." என்று சொன்னவன் கந்தசாமி அருகில் சென்று அமர்ந்தான்.

"சித்தப்பா..."

"ம்... என்னப்பா...?" கண்கள் கலங்கியிருக்க உலர்ந்த உதடுகளைப் பிரித்து மெதுவாகக் கேட்டார்.

" எப்பவும் போல இருங்க சித்தப்பா... இனி சின்னம்மா வரவா போகுது... எல்லாந்தான் முடிஞ்சிருச்சே...? நம்ம அம்பட்டையனை வரச் சொல்றேன்... சேவிங்க் பண்ணிக்கிறியளா? உங்களை இப்படிப் பாத்ததில்லையா... என்னால பாக்கச் சகிக்கலை சித்தப்பா..." கலங்கிய கண்களோடு சொன்னான்.

"வே... வேண்டாம்ப்பா கருமாதி வரைக்கும் இப்படியே இருக்கட்டும். அதான் மொட்டை போடுவோம்ல்ல... என்ன இந்த வீட்டுக்குள்ள நானும் அவளுமாத்தானே இருப்போம்... எங்கிட்டுப் பாத்தாலும் அவ நெனப்பாவே இருக்கு... படுத்தா உறக்கம் வரலை... பசிக்கலை... என்னமோப்பா அவ எங்கூடவே இருக்க மாதிரி இருக்கு..." கலங்கினார்.

"மனசை தேத்திக்கங்க சித்தப்பா... உள்ள வச்சி உக்கி உக்கி தவிச்சிங்கன்னா மறுபடியும் நெஞ்சுவலி வந்தாலும் வந்திரும்... எங்களுக்கு நீங்க வேணும் சித்தப்பா... போயிலைப் பொட்டலம் வாங்கிக்கிட்டு வரவா..."

"ம்... ஒண்ணு கெடக்கும்... சரி ஒரு நிஜாம் லேடி வாங்கிக்கிட்டு வா... உங்க சின்னத்தா போயில போட்டா கத்துவா... இனி அதை வாயில அதக்கும் போது யாரு கத்தப் போறா... அந்த எழவையும் விட்டுடலாம்ன்னு இருக்கேன்... வாயில வைக்கும் போதெல்லாம் அவ நெனப்பு வந்து தொலைக்குமே... ம்... என்னைய தவிக்க விட்டுட்டு அவ நிம்மதியா உறங்குறா..."

"சரி... பிள்ளைகளோட கலகலப்பா இருங்க... இனி உங்களுக்கு உங்க பேத்திகதான் சின்னம்மா மாதிரி..." என்றபடி கிளம்பினான்.

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் அழகப்பனும் கொஞ்சம் வேலையிருக்கு பாத்துக்கங்க.... சாப்பாட்டுக்கு வந்துடுறேன் என்று கிளம்ப, கந்தசாமி கட்டிலில் படுத்துக் கொண்டு துக்கத்தை ரொம்பச் சுமக்காமல் எப்பவும் போல் விளையாட்டுதனமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த பேரன்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். விட்டுக்கு உள்ளே மகள்களும் மருமக்களும் காளியம்மாளின் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருக்க, கண்ணகி சமைத்துக் கொண்டிருந்தாள்.

ருமாதிக்கு முதல் நாள் இரவு படையல் போட்டு சாமி கும்பிட்டார்கள்... சொந்த பந்தம் எல்லாம் தேங்காய் பழம் , சுவீட் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள். இரவு சாப்பிட்டு விட்டு மறுநாள் யார்யார் போறோம்... எத்தனை மணிக்கு என்பதை எல்லாம் விவரமாகப் பேசிக் கொண்டார்கள். அடுத்த நாள் அதிகாலை வேன் வர, இட்லி சாம்பார் சட்டிகளுடன் தண்ணீர் பாட்டில்களையும் ஏற்றிக் கொண்டு இராமேஸ்வரம் நோக்கி கிளம்பினார்கள்.

அங்கு காரியமெல்லாம் முடித்து மதியம் மூன்று மணிக்குத் திரும்பினார்கள். வீட்டில் சாப்பாடு தயாராக இருக்க, கந்தசாமியும் மகன்களும் விரதம்விட மற்றவர்கள் சாப்பிட்டதும் தங்கள் வீடுகளுக்கு கிளம்பினார்கள். ஆச்சு... காளியம்மாள் இறந்து இன்றோடு எட்டு நாள்... எங்கு பார்த்தாலும் காளியம்மாளின் இறப்புக் குறித்த பேச்சாகத்தான் இருந்தது. இன்று கருமாதியும் முடிந்து விட்டதால் இனி காளியம்மாளின் நினைவுகளை கந்தசாமியும் அவரின் வாரிசுகளுமே தூக்கிச் சுமப்பார்கள். அமாவாசை விரதத்தின் போதும்... அவளின் பிறந்தநாள்... இறந்தநாள்... என சில நாட்களில் மட்டுமே அவளை மனசுக்குள் நிறுத்துவார்கள். அப்புறம் நகர்ந்து போகும் வாழ்க்கையில் இது இயற்கைதானே... நாளை நமக்கும் இதுதானே... என்ற நினைப்போடு ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

றுநாள் குமரேசன் வாசலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தான். அப்போது சித்ரா அவனைக் கடந்து சென்றாள்.

"அண்ணி..." என்ற அவனது அழைப்புக்கு நின்றவள் "என்ன தம்பி?" என்றாள்.

"அண்ணி... நீங்க அன்னைக்கே மாமரக் கொல்லை முழுதும் வேணுமின்னு சொன்னீங்க... அதை எடுத்துக்கங்க... எனக்கு இடமெல்லாம் வேண்டாம்... ஆனா எனக்கு ஒரே ஒரு ஆசை அண்ணி.... அம்மா வாழ்ந்த இந்த வீட்டை நான் மட்டும் எடுத்துக்க விரும்பலை... நான் வீட்டை வேலை பாத்துடுறேன்... நீங்க மாமரத்துக் கொல்லையில என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கங்க... ஆனா நல்லது கெட்டதுக்கு நாம எல்லாரும் இந்த வீட்ல ஒண்ணு கூடணும் அண்ணி... நம்ம பிள்ளைகளும் இதுல ஒண்ணா இருக்கணும் அண்ணி... அது மட்டுந்தான் என்னோட ஆசை... கொல்லையை எடுத்துக்கிட்டு இதை ஏத்துக்கங்க..."

"தம்பி.... அது...."

"என்னண்ணி... தயங்காமச் சொல்லுங்க... தனியா வீடு கட்டணுமா?"

"ஐயோ... அதெல்லாம் இல்லப்பா... ஏதோ நான் விவரங்கெட்டதனமா பேசிப்புட்டேன்... அயித்தை என்னைய நல்லாத்தான் நெனச்சிச்சு... ஆனா நான் அதை அப்படி நினைக்கலையே... எங்க வீட்டுக்கு கூட்டிப்போயி ஒரு நா ஒரு பொழுது வாய்க்கு ருசியா அதுக்கு செஞ்சு போட்டிருப்பேனா... காசு... பணம்... சொத்துன்னு ஆவ்... ஆவ்வுன்னு திரிஞ்சு என்னத்தை கொண்டு போகப்போறேன்... நல்ல மனுசங்களோட அன்பு இல்லாம வாழ்ந்து என்னாகப் போகுது சொல்லுங்க... இந்தா அயித்தை செத்தப்போ வந்த ஜனமெல்லாம் அவங்களை எப்புடி கொண்டாடுனாங்க... அதுதான் தம்பி வேணும்... அதுதான் நிறைவான வாழ்க்கை... " கண் கலங்கினாள்.

"அண்ணி.... கொல்லையை நான் நல்ல மனசோடதான் தாறேன்னு சொல்றேன்... அபி ஒண்ணும் சொல்லமாட்டா... நீங்க எடுத்துக்கங்க..."

"வேண்டாந்தம்பி... எல்லாரும் ஒண்ணாவே இருப்போம்... இன்னைக்கு மாதிரி கடைசி வரைக்கும் சண்டை சச்சரவு இல்லாம... இதே பாசத்தோட இருப்போம்... அந்தக் கொல்லை கெடக்கட்டும்... ரெண்டு பேருக்கும் பிரிச்சபடியே இருக்கட்டும்... பாத்துக்கலாம்... பல நேரத்துல நா உங்ககிட்ட மோசமா நடந்துக்கிட்டு இருக்கேன்... எதையும் நெனச்சுக்காதீக..."

"என்னண்ணி நீங்க...? நா உங்க மேல கோபப்படுறதா...? நீங்க எனக்கு அம்மா மாதிரி... நல்லது கெட்டது எல்லாத்துலயும் இனி நீங்கதானே என்னை வழி நடத்தணும்... பழசைப் பேசாதீங்க அண்ணி... உங்க நல்ல மனசு எப்பவும் இப்படித்தான்... அது வெளியில தெரியலை... அம்புட்டுத்தான்... சரி கண்ணைத் தொடைங்க... போங்க...." என்றான்.

அவள் போகவும் வெளியே போய்விட்டு வந்த அழகப்பனும் மணியும் 'என்ன அத்தாச்சியும் கொழுந்தணும்... என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க... ' என்று அவனிடம் கேட்க, எல்லாத்தையும் சொன்னான்... 'அவளா... உண்மையாவா..? எங்கம்மா செத்து அவளைத் திருத்திருச்சா?' என்று நம்பாமல் கேட்க, 'எல்லாரையும் காலமும் நேரமும் ஒரு நாள் மாற்றும் மச்சான்... மாற்றம் வர்றது நல்லதுதானே விடு... ' என்று சொன்னார் அழகப்பன்.

ரண்டு நாளைக்குப் பிறகு,

அழகப்பனும் ரமேஷூம் கட்டிலில் அமர்ந்திருக்க, கந்தசாமி சேரில் அமர்ந்து முகஷை ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.... மணி வாசல் படிக்கட்டில் அமர்ந்து அன்றைய பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தான். குமரேசன் நிலைப்படியில் சாய்ந்து நின்றவாறு "அத்தான் நாளைக்கு கிளம்பணும்... எல்லாரும் அவுக அவுக வேலையை பாக்கணுமில்ல... இங்கயே முடங்கிக் கிடந்தா என்னாகுறது... " என மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான். 

"ம்... ஆமா மாப்ள... எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குதுல்ல... நாளும் பொழுதும் ஓடிருச்சு... இனி அவுக அவுக பொழப்புத் தழப்பைப் பாக்கணுமில்ல... " என்றார் அழகப்பன்.

"ஆமா... ஆமா... இங்கயே உக்காந்திருந்தாலும் அத்த நினைப்புல இருந்து யாரும் மீளாதுக... அங்கிட்டு அங்கிட்டு போனாத்தான் கொஞ்சம் மறந்து... தெளிவாகுங்க..." என்றான் ரமேஷ்.

"அத்தான்... அப்பாவை எங்க கூட கூட்டிப் போகலாம்ன்னு பாக்குறேன்... ஏன்னா அண்ணன் வீட்ல அவரை வச்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்... சின்ன வீடு வேற... எங்க வீடுன்னா கொஞ்சம் பிரியா இருப்பாருல்ல..." என்றான் குமரேசன்.

அதுவரை பேசாமல் இருந்த கந்தசாமி, "இல்ல... நா வரலைப்பா... எங்கயும் வரலை..." என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்ல எல்லோரும் அவரையே பார்த்தனர்.

(வேரும் விழுதுகளும் அடுத்த சனிக்கிழமை நிறைவு பெறும்)
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வேரும் விழுதுகளும் தொடர்ந்து வாசிக்கிறோம். நன்றி.

Menaga Sathia சொன்னது…


படிக்கும்போதே கண்கள் கலங்குது....காட்சிகள் அனைத்தும் கண்முன் நடப்பது போலவே இருக்கு..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையாகச்செல்கிறது! எதார்த்தமான உரையாடல் அமைப்பு! தொடர்கிறேன்! நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றோம்....துக்கவீடு மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் கந்த சாமியின் மன நிலையையும் மிக அழகாக யதார்த்தமாகக் கொண்டு செல்கின்றீர்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.

நல்ல கதை. கதையேயென்றாலும். அதனூடே நடமாடும் மனிதர்கள் மனதை நெகிழ வைத்துப் போகிறார்கள். படிக்கும் போது நம்முடனே அவர்கள் வாழ்வது போன்ற பிரமை ஏற்படுகின்றது. அவ்வளவு யதார்த்தமான சொல்லாடலுடன் கதையின் மாந்தர்களை நகர்த்திச் செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.! முடிவையும் தொடர்கிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.