மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 24 ஜனவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 18)

முந்தைய பகுதிகள் : 


பதினேழாவது பகுதியின் இறுதியில்...

"அப்பா... எதுக்கு இப்ப இதெல்லாம்?" குமரேசன் கேட்டான்.

"இரு வாறேன்... பொங்க முடிஞ்சதும் நம்ம அங்காளி பங்காளிகளை வச்சி இடத்தை எல்லாம் ஒழுங்கு பண்ணிருவோம்... இனியும் போட்டு இழுக்க வேண்டாம்... சொத்தை பிரிச்சிக்கிட்டா அவனவனுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்குவீங்கதானே.... இனி என்னால வெவசாயம் பாக்க முடியாது.... கண்ணதாசனைப் போட்டு இழுக்க முடியாது... அவனுக்கு அவனோட வேலை பாக்கவே செரியா இருக்கும்... பாவம் புள்ள இந்தத்தடவை நெல்லை வீடு கொண்டாந்து சேக்க எம்புட்டுக் கஷ்டப்பட்டான்... இதுதான் இறுதி முடிவு... இதில் மாற்றமில்லை... மாட்டுப் பொங்க முடிஞ்ச மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம்... என்ன செரியா?" என்று கந்தசாமி கேட்க, அனைவரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.

இனி...

மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம் என அப்பா ஆணித்தரமாகச் சொன்னது மணிக்கும், குமரேசனுக்கும் வருத்தமாய் இருந்தது.

"இப்ப அதுக்கு என்னப்பா அவசரம்... அது பாட்டுக்கு கிடக்கட்டும்... நானும் தம்பியும் இங்க வந்து விவசாயம் பாத்துக்கிட்டு இருக்கப் போறோமா என்ன.. உங்க காலத்துக்கும் இப்படியே சந்தோஷமாப் போகட்டுமே..."

"ஆமாப்பா... அண்ணன் சொல்றதுதான் சரி... இப்ப அவசரமா பிரிச்சி என்ன பண்ணப் போறோம்... முதல்ல உங்களுக்கு சரியாகட்டும்..."

"நீங்க ரெண்டு பேரும் சங்கட்டப்படுறது எனக்குப் புரியிதுப்பா... வயக்காட்டையும் கொல்லக்காட்டையுந்தான் பிரிக்கணுங்கிறேன்... இந்த வீட்டையோ.. உங்க உறவையோ பிரிக்கணுமின்னு சொல்லலையே..."

"இல்லப்பா... பிரிவுங்கிறது இப்ப வேண்டாமே..."

"இங்க பாருங்கப்பா... என்னோட நிலமை நல்லாயில்லைங்கிறது உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ எனக்கு நல்லாத் தெரிய ஆரம்பிச்சிருச்சு... கண்ணோட சொத்தப் பிரிச்சிக் கொடுக்கிறதுதான் நல்லது. நாளைக்கி எதாவது ஆயிட்டா.... அப்புறம் கெழவன் இருக்கும் போதே இந்தப் பயலுகளுக்கு சொத்தைப் பிரிச்சிக் கொடுத்திருந்தா இன்னைக்கி இப்படி நடக்குமான்னு பேசுவானுங்க..."

"அப்ப நாங்க அடிச்சிக்கிட்டு நாறுவோமுன்னு சொல்றீங்களா மாமா?" படக்கென்று கேட்டாள் சித்தா.

"நீ ஏத்தா அப்புடி எடுத்துக்கிறே...? எப்படியிருந்தாலும் சொத்துன்னு பிரிக்கும் போது மனக்கசப்பு வரத்தான் செய்யும். என்னோட கண்ணு முன்னால பிரிச்சிக் கொடுத்தா எனக்கு ஒரு சந்தோஷம்... அது போக ஒரு கண்ணுல வெண்ணெய்யும் இன்னொரு கண்ணுல வெளக்கெண்ணெய்யும் வக்கிறவன் நானில்லை..."

"நீங்க சொல்றது சரிதாப்பா... ஆனா... "

"என்னப்பா நீயி... ஆனா... ஆவன்னான்னு... இதான் செரியான யோசனை... ஏலா... நீ ஒண்ணுமே பேசாம உக்காந்திருக்கே... இந்த முடிவு செரியா... இல்லையா சொல்லு..."

"ஆம்பளைக பேசும் போது நா என்னத்தைச் சொல்றதுக்கு இருக்கு... இம்புட்டு நாளு அவரு கெடந்து இழுத்துக்கிட்டு கெடந்தாருப்பா... இனி அவரால எல்லாத்தையும் போட்டு இழுக்க முடியாது. பிரிச்சிக்கிட்டு பங்கு பாவத்துக்கு விட்டு வெவசாயம் பண்ண வையிங்க... அம்புட்டுத்தான்...."

"அம்மா.... அவருதான் உடம்பு சரியில்லைங்கிற வருத்தத்துல பேசுறாருன்னா... நீயும் சேந்து பேசுறே...?" கோபமாய்க் கேட்டான் குமரேசன்.

"எதுக்கு இப்ப கோபப்படுறே... அவ சொன்னது செரிதானே... என்னால அலைய முடியாது... சும்மா போட்டாலும் வேலிக்கருவை மண்டிப் போயிரும்... பங்குக்கு விட்டுடலாம்..."

"மொத்த வயலையும் பங்குக்கு விட்டா போட ஆளில்லையா என்ன... பிரிச்சி விட்டாத்தான் போடுவானுங்களா... என்னப்பா நீங்க... இப்ப உங்களுக்கு சொத்தைப் பிரிக்கணும்... அம்புட்டுத்தானே... " குமரேசன் கோபமானான்.

"ஏங்க... எதுக்கு கோபப்படுறீக... நம்மதானே பேசிக்கிட்டு இருக்கோம்... மாமா சொல்றதுலயும் நியாயம் இருக்குல்ல... அவங்க பாத்த வரைக்கும் ஒண்ணா இருந்துச்சி... இப்ப பாக்க முடியலைன்னு பிரிச்சி விடுறேன்னு சொல்றாங்க... நாம முடிஞ்சா விவசாயம் பண்ணுவோம்... இல்லேன்னா கண்ணதாசன் மாமாக்கிட்ட சொல்லி பங்குக்கு போடச் சொல்லுவோம்..." குமரேசனின் கோபத்தை மாற்றும் விதமாக பேசினாள் அபி.

"நீ வேற... இதைப் பிரிச்சித்தான் நாம கோட்டை கட்டப் போறமாக்கும்... மாமனாருக்கு ஏத்த மருமக... கொஞ்ச நேரம் சும்மா இரு... வயசானவருக்குத்தான் என்ன பேசுறோம்ன்னு தெரியலை... உனக்குமா?" என்று மனைவியின் வாயை அடைத்தான்.

"இங்க பாரு கொமரேசா... உங்கண்ணன் இடம் வாங்க கடன வாங்கி வச்சிருக்கான். அது நமக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கான்... வாங்குற சம்பளத்துல எப்புடி கடனக் கட்டுவான்... இப்ப நம்ம கொல்லக்காட்டுப் பக்கம் முத்தையாத் தேவரு செட்டியாரு தோட்டத்துக்கு எடத்தை வித்துட்டாரு... அடுத்து நம்ம எடந்தான்  இருக்கு... செட்டியாரும் ரெண்டு தடவை கேட்டுட்டாரு... நல்ல வெலக்கி வாங்கிக்கிறேன்னு சொல்லி விட்டிருக்காரு.. அதை பிரிச்சிக்கிட்டு அவனோட பாகத்தை வித்தா அவனுக்கு கடனடையுமில்ல... இல்லேன்னா ரோட்டுக்கு வடபுறம் பிளாட்டுப் போட்டுக்கிட்டு வாறானுக... அந்த மாதிரி நம்ம கொல்லக்காட்டை பிளாட்டுப் போட்டுக்கூட விக்கலாமுல்ல.... இதைவிட நல்லாப் போகுமே...."

"அப்பா இடம் வாங்குனதை உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல... கடன வாங்கி வாங்கணுமாடான்னு திட்டுவீங்கன்னுதான்...." மணி மெதுவாக இழுத்தான்.

"எனக்கு அதுல வருத்தமில்லைப்பா... எம்புள்ளக நல்லாயிருந்தா எனக்குப் பெருமைதானே... இங்க சுத்துப்பட்டு ஊருல எல்லாரையும் எனக்குத் தெரியும்... எதுனா ஒரு வெசயமின்னாலும் எங்காதுக்கு வந்திரும்... அப்படித்தான் உன்னோட எட வெசயமும் எனக்கு வந்திச்சி.... நீங்க இருக்க எடத்துல வேணுமின்னா எனக்கு பழக்கமான மனுசங்க இல்லாம இருக்கலாம்... இந்த ஏரியாவுல எனக்கு தெரியாத ஆளுகளே இல்லைன்னு சொல்லலாம்.."

"பிரிக்காம அண்ணன் அதை செட்டியார்க்கிட்ட கொடுத்து காசு வாங்கி கடனை அடைக்கட்டும். நா என்ன வேணாமின்னா சொல்லப் போறேன்..."

"அப்படியில்லப்பா... இன்னைக்கு மாம்பூ வாசனையா பேசிருவோம்... நாளப்பின்ன பங்காளி சண்டையின்னு வரும்போது நரம்பில்லாத நாக்கு பட்டுன்னு பேசிப்புடும்... அது நல்லாயிருக்காதுல்ல..."

"மாமா... நா மாமாவுக்கு கொடுக்குறதுக்கு சண்டை போடுவேன்னு பாக்குறீகளா? வேணுமின்னா மாமா வித்துக்கட்டும்... எங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னு நாங்க கையெழுத்துப் போட்டுத் தர்றோம்..." என்றாள் அபி.

"ஏத்தா இப்புடி ஒரு வார்த்தை பேசிப்புட்டே... நா பெத்த புள்ளைகள தப்பா நெனச்சாலும் உன்னைய நெனப்பேனா... காலம் வரும்போது செய்ய வேண்டியதை செய்யனுமாத்தா..." என்று அவர் சொன்னதும் சித்ராவின் முகம் சுருங்கிப் போனது.

"என்ன தீவிரமா ஏதோ மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு போல.." என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டுக் கழுவிய கையை துண்டில் துடைத்தபடி வந்தமர்ந்தான் கண்ணதாசன்.

"வாப்பா... செரியான நேரத்துலதான் வந்திருக்கே...." என்றபடி விவரத்தைச் சொன்னார் கந்தசாமி.

"சித்தப்பா இது நல்ல முடிவாச்சே.... இதுக்கு எதுக்கு பிரச்சினை." என்றான் கண்ணதாசன்.

மணியும் குமரேசனும் தங்களது தரப்பு வாதங்களைச் சொல்ல, சிரித்த கண்ணதாசன் "இங்க பாருண்ணே... அப்பா கண்ணோட இது இது இன்னாருக்குன்னு எழுதிக்கிட்டு மொத்தமா அப்பா பாத்தாலுஞ்சேரி இல்ல குத்தகைக்கு விட்டாலுஞ்சேரி... ஒரு பிரச்சினை ஓயுமில்ல..."

"ஆமா நீயும் அவருக்கு சால்ரா போடு..."

"எதுக்குடா கோபமாகுறே...? அவருக்கு மொத அட்டாக்கு வந்தாச்சு... அவரு பயப்படுறதுலயும் ஞாயம் இருக்குல்ல... நாளைக்கி அங்காளி பங்காளி வந்து பேசினாலும் அவரு இருந்து பேசுற மாதிரி இருக்குமா சொல்லு.... ஏந்த்தா அபி இவனுக்கு சுறுக்குன்னு கொழம்பு வச்சி ஊத்துறியோ பொசுக்குன்னு கோவம் வருது..." என அபியிடம் கேட்டு எல்லாரையும் சிரிக்க வைத்தான்.

"கோமாளிப்பய வந்தான்னா சபையை சிரிக்க வைக்காம போகமாட்டான்..." என்றாள் காளியம்மா.

"சின்னம்மா நீ என்ன சொல்றே...? வேணுங்கிறியா வேணாங்கிறியா...?"

"அவரு கண்ணோட பண்ணிடுங்கன்னுதான் சொல்றேன்..."

"அப்பறம் என்ன ஜனாதிபதியே ஓகே பண்ணியாச்சு... இனி சித்தப்பாவை மாத்த முடியாது.... பொங்கலுக்கு அடுத்த நாள் சொத்து பிரிபடுது..."

"ஆமா கண்ணா... அங்காளி பங்காளிகளை வச்சிப் பிரிச்சிடலாம்.. அப்புறம் பொம்பளப்புள்ளங்க வீட்டுக்காரங்களும் இருக்கதுதான் நல்லது. இப்ப அதுகளுக்கும் சொத்துல விருப்பப்பட்டுக் கொடுக்கிறாங்க... இவனுக விரும்பினா கொடுக்கட்டும்..."

"அது அவங்க விருப்பம் சித்தப்பா... அப்புறம் பெரியத்தான் வந்துருவாரு... சின்னத்தானை பிகு பண்ணுவாருல்ல...."

"அன்னைக்கி இவனுக பேசாம இருந்திருந்தா... இப்ப அவரும் வரப்போக இருப்பாருல்ல..." என்றார் கந்தசாமி.

"அப்ப நாங்கதான் பிரச்சினைக்கு காரணமா...? அவரில்லையா..?" மணி கோபமாக் கேட்டான்.

"அவரு ஆத்தா பேச்சைக் கேட்டுக்கிட்டு அன்னைக்கி ஆடுனாரு... நம்ம புள்ளையப் போட்டு அடிச்சாரு... இவனுக கேட்டானுங்க... அதை எம்புள்ளைக கேக்கக்கூடாதுன்னு சொல்றிகளோ?"

"ஏய்... கேக்கக் கூடாதுன்னு சொல்லல... வாழ்க்கையில முன்னப்பின்ன இருக்கத்தான் செய்யும்... பொண்ணக் கொடுத்த நாமதான் அடங்கிப் போயிருக்கணும்..."

"என்னங்க பேசுறீங்க... பொட்டப்புள்ள கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கயில கூடப்பொறவனுகளுக்கு ரோசம் வரத்தானே செய்யும்..."

"நாந்தப்புன்னு சொல்லல.... இந்தா மூத்தவன் சண்டை போட்டான்... சின்னவன் சட்டையைப் புடிச்சான்... இன்னைக்கி நம்ம புள்ளைய நல்லாத்தானே வச்சிருக்காரு... எல்லாம் நாளாக நாளாக சரியாகும் அனுசரிச்சிப் போத்தான்னு நான் சொன்னேன்... எங்க கேட்டீக..."

"இப்ப என்னங்கிறீங்க... அவரு காலுல போயி விழுந்து கூட்டியாரணுங்கிறியளா...? அடிபட்டு கட்டுப் போட்டுக்கிட்டு வந்து நிக்கிறேன்... ஒரு வார்த்தை கேக்கலை..."

"கொமரேசா... நம்ம கோபந்தான் நிறைய விஷயத்துல நமக்கு எதிரி... அதைப் புரிஞ்சிக்க... அன்னைக்கி உங்கக்கா கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கிதுன்னு அவரோட சண்டை போட்டு சட்டைய புடிச்சே... உங்கக்கா அவரு கூடத்தானே வாழுது.... இல்ல அத்துக்கிட்டு வந்திருச்சா?"

"சித்தப்பா..."

"இரு கண்ணா... நம்ம பிள்ளைக்காக சண்டை போட்டீக... சரி... நல்லது கெட்டதுல அனுசரித்தானேப்பா போகணும்... இப்படியே முறுக்கிக்கிட்டு நின்னா ஒட்டாமலே போயிருமேப்பா..."

"சரி சித்தப்பா... இப்ப என்ன சின்னத்தானை கூட்டியாரணும் அம்புட்டுத்தானே... நாளைக்கி காலையில பொங்க வைக்கிறதுக்கு முன்னால நானும் குமரேசனும் ஒரு எட்டு பொயிட்டு ஓடியாறோம்... அவரு கையைக் காலைப் பிடிச்சி வீட்டுக்கு வரச்சொல்றோம் போதுமா..?"

"அட ஏண்ணே நீ வேற... அந்த ஆளைக் கூட்ட நானா... வேணுமின்னா அண்ணனைக் கூட்டிக்கிட்டு போ..."

"அவரு சட்டையைப் பிடிச்சி முத இடத்துல இருக்கது நீதானே... நீதான் வர்றே... சரி காலாகாலத்துல போய் படுங்கத்தா... விடியக் காலையில வீட்டுக்கு வந்திருக்க மருமகளுக எல்லாம் எட்டு வீடு விட்டெறியிற மாதிரி கோலம் வேற போடணும்... அதுவும் எம்பொண்டாட்டி கோலம் போட்டா எங்க வீட்டு வெள்ளக்கோழி குப்பையைக் கெளறுன மாதிரியே இருக்கும்... ஆத்தி... என்னைய்யா என்னைய பேசுறேன்னு வந்தாளும் வந்துருவா... சரி... குமரேசா... காலையில போவோம்..." என அந்த இடத்தைக் கலகலப்பாக்கிச் சென்றான். 

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

சென்னை பித்தன் சொன்னது…

தொடர்கதை எழுதுவது என்பது கடினம்;அது உங்களுக்கு எளிதாக வருகிறது

துரை செல்வராஜூ சொன்னது…

எல்லா தரப்புகளும் காலத்தால் - நியாயப்படுத்தப்படுகின்றன..

KILLERGEE Devakottai சொன்னது…

தொடர்கின்றேன் நண்பரே...
தமிழ் மணம் 2

Menaga Sathia சொன்னது…

இப்பொழுது தான் முந்தைய அனைத்து பகுதிகளும் படித்தேன்,விறுவிறுப்பாகவும்,கிராமிய எழுத்தோடும் அழகாக கதை செல்கிறது,வாழ்த்துக்கள் சகோ !!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொடர்ந்து படித்துவருகிறேன். வார, மாத இதழ்களில் தாங்கள் எழுத முயற்சிக்கலாமே.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எப்படி நண்பரே! இப்படி அழகாகத் திரைக்கதை எழுதலாம் என்ற அளவிற்கு தொடர்கின்றீர்கள்! இந்தைப் பதிவு கண்ணதாசனால் கொஞ்சம் கலகலக்க வைத்தது....பங்கு பிரிக்கப் போவதாக இருந்தாலும்....

தொடர்கின்றோம் நண்பரே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிதான் எழுத வைக்கிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
என்னடா சில வாரமாக ஆளைக் கணாமேன்னு பார்த்தேன்.
பழைய பகுதிகளையும் வாசித்தமைக்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
சிறுகதைகள், கவிதைகள் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறேன்.
மற்றபடி வெளிநாட்டுக்கு வந்த பின்னர் அதிகம் எழுதவில்லை.
உங்களைப் போன்ற பெரியவர்கள் வாசித்துத் சொல்லும் வார்த்தைகளே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் , கீதா மேடம்
உங்கள் கருத்துப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Menaga Sathia சொன்னது…

இப்பொழுதுதான் விட்டுப்போன பகுதிகளை படித்தேன்,கிராமிய மணத்துடன் கமக்கிழது.வாழ்த்துக்கள் சகோ !!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.