மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மனசின் பக்கம் : சொக்கா முதல் பரிசு எனக்கே...!

எழுதுங்கள்...!வெல்லுங்கள்..! 

வெட்டி பிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது 'நினைவின் ஆணிவேர்' சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதாக வந்த மின்னஞ்சலே காதலர் தினத்தில் கிடைத்த முதல் சந்தோஷம். வலையில் எழுத ஆரம்பிக்கும் முன்னர் பத்திரிக்கைகள் நடத்தும் சிறுகதை போட்டிகளில் எல்லாம் கஜினி முகமதாய் படை எடுத்திருக்கிறேன். வெற்றிக் கனியை ருசித்ததில்லை. அபுதாபி வந்த பிறகு வலைத்தளங்கள் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு சில கசப்பான அனுபவங்களைப் பெற்ற போது இனி போட்டிகளுக்காக கதை எழுத வேண்டாம் என்று இருந்தேன். 

இந்த முறை வெட்டி பிளாக்கர்ஸ் போட்டிக்கான அறிவிப்பு வந்தபோதும் எழுதும் மனநிலையில் இல்லை. எனது அன்பின் அக்கா காயத்ரி அவர்கள்தான் தம்பி நீ எழுது... எழுது என்று தினமும் அரட்டையில் வந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். அப்புறம் எழுதி அனுப்பும் முன்னர் நண்பன் தமிழ்க்காதலனிடம் கதை அனுப்பவது பற்றி சொன்ன போது அவன் கதையை படித்துப் பார்த்துவிட்டு முடிவில் உனது டச் வரவேண்டும் அது கிடைக்கவில்லை என்று சொல்லிவிட எப்படி மாற்றுவது என யோசித்து பின்னர் ஒரு வழியாக முடிவை கொஞ்சமாக மாற்றி அனுப்பினேன். 

இன்று காலை கூட அக்கா என்னிடம் என்னப்பா சிறுகதைப் போட்டி முடிவு எப்போது சொல்வார்கள் என்று கேட்டார்கள். அவர்களும் ஒரு நல்ல சிறுகதையை எழுதி போட்டியில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது கூட விளையாட்டாக நமக்கெல்லாம் எங்க பரிசு கிடைக்கப் போகுது... நம்மளைவிட நல்லா நிறையப் பேர் எழுதியிருக்காங்க... 126 கதைகள் அக்கா... என்று சொன்னேன். கொஞ்ச நேரத்தில் வந்த மின்னஞ்சல் எனக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

எனது கதையை பரிசுக்குறிய கதையாக தேர்ந்தெடுத்த முதல் சுற்று, இரண்டாம் சுற்று மற்றும் மூன்றாம் சுற்று நடுவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியை சிறப்புற நடத்திய வெட்டி பிளாக்கர்ஸ் நண்பர்களுக்கு எனது நன்றி. போட்டியில் வென்ற மற்றும் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எனது கதைகளைப் படித்து என்னை எழுது... எழுது என்று தூண்டிக் கொண்டிருக்கும் வலையுலக சொந்தங்களுக்குன் நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்த எனது பேராசான். மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு நன்றி என்பதைவிட இந்த வெற்றியே அவருக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லிக் கொள்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது கதை எழுதச் சொல்லி ஒவ்வொன்றையும் படித்து திருத்தி எழுத்துலகத்துக்குள் கொண்டு வந்தார். இந்த முறை எனது கதைகளை எல்லாம் பிரிண்ட் எடுத்து அவரிடம் கொடுத்து படித்து நல்ல கதைகளை மட்டும் எடுத்துத் தாருங்கள் ஐயா என்றபோது சிலவற்றைப் படித்துவிட்டு தம்பியின் எழுத்தில் நிறைய மாற்றம் வந்தாச்சு... இதில் எதை எடுப்பது எதை விடுவது என்று சொன்னார். அந்த வார்த்தைகள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.

வலையுலகில் வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது 'கருத்தப் பசு' கதை தொகுப்பிற்கான கதையாக தேர்வானது. அதன் பிறகு வெட்டி பிளாக்கர்ஸில் முதல் பரிசு பெற்றிருக்கிறது எனது எழுத்து என்று நினைக்கும் போது 'டேய் குமாரு நீயும் நல்லாத்தான் எழுதுறியோ'ன்னு எனக்குள் சொல்லிக் கொள்ளத் தோணுகிறது.

முதலில் என் மனைவிக்குத்தான் போன் பண்ணிச் சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம்... குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்று விட்டார்கள். மாலை மகளுக்குத் தெரியும் போது மிகுந்த சந்தோஷம் கொள்வார். பத்திரிக்கையில் கதை வரும் போதே எங்கப்பா எழுதியது என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியில் சுற்றுவார். எனக்கு கிடைத்த வெற்றியை என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம்.

கதையை அடுத்த பதிவாக இங்கு பகிர்கிறேன். இப்போது வெட்டிபிளாக்கர்ஸ் தளத்தில் வாசிக்க


நேற்றிரவு 'பண்ணையாரும் பத்மினியும்' பார்த்தோம். குறும்படமாகப் பார்த்த போது பத்துப் பதினைந்து நிமிடத்தில் மிகச் சிறப்பாக எடுத்திருந்தார்கள். அதுவே திரைப்படமாகும் போது அந்தளவுக்கு சிறப்பாக இருக்குமா என்ற சந்தேகத்தோடு பார்த்தால் இன்னும் சிறப்பாக அருமையாக இருந்தது. இது குறித்து தனிப்பதிவு போட்டா நமக்கு ஒரு பதிவு தேறுமுல்ல.

லையாளத்தில் பேச்சு சரியில்லை என்றால் அவன் சம்சாரிக்கிறது சரியில்லை என்றோ சம்சாரம் சரியில்லை என்றோ சொல்வார்கள். அலுவலகத்தில் ஒருவர் அவனோட சம்சாரம் சரியில்லை என்று மற்றவனிடம் சொல்ல, அவனோட சம்சாரம் சரியில்லை என்றால் உனக்கு என்ன என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டதும் அண்ணா தமிழ்ல சம்சாரம் சரியில்லை என்று சொன்னால் வேறு மாதிரி அர்த்தம் வரும்ன்னு எனக்குத் தெரியும்... இது பேச்சு சரியில்லைன்ன் அர்த்தம் வரும்ன்னு உனக்கும் தெரியும் என்றான். ஒரே வார்த்தையின் அர்த்தம் வேறு வேறாய் தமிழிலும் மலையாளத்திலும் நிறைய உண்டு.

நேற்று காலை அலுவலகம் வந்ததும் அண்ணா சீமாக்கட்டன்னா தமிழ்ல என்ன அர்த்தம் என்று மலையாளி நண்பன் கேட்டான். எனக்கு ஒண்ணும் புரியலை... தமிழ்ல சீமாக்கட்டய அபடி ஒரு வார்த்தை இல்லையே என்று குழம்பிப் போனேன். அப்படி ஒரு வார்த்தை இல்லையே என்றதும் இல்ல எங்க அறைக்குப் பக்கத்து அறைக்கு வந்திருக்க ஆளு எப்பவும் சீமாக்கட்ட... சீமாக்கட்டன்னு சொல்றாரு... அதான் உங்ககிட்ட கேட்டேன்னு சொன்னான். அவன் எதுக்குடா அப்படி ஒரு வார்த்தையை சொல்றான்னு கேட்டதும் எதாவது ஒரு பொண்ணப் பார்த்தா சீமாக்கட்டன்னு சொல்றான்னு சொன்னான். அடப்பாவி அந்த நாதாரி செமக் கட்டைன்னு சொல்லியிருக்கும் போல அதை இவன் சீமாக்கட்டன்னு சொல்லிட்டான். அப்புறம் அது சீமாக்கட்ட இல்ல செமக்கட்டைன்னு சொல்லியும் அவன் சீமாக்கட்டையில்லன்னு சொன்னான் நல்லவேளை சீமான்னு யாரும் எங்க அலுவலகத்தில் இல்லை.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சி:). நல்வாழ்த்துகள் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முதலில் சகோதரி காயத்ரி அவர்களின் ஊக்கத்திற்கு, கதை மாற்றத்திற்கு நன்றி... பாராட்டுக்கள்...

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

ஹா... ஹா... செமக் கட்டை செம...!

அம்பாளடியாள் சொன்னது…

மென்மேலும் இது போன்ற சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற
என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

Menaga Sathia சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ!!

ஹா ஹா செமகட்டை சூப்பர்ர்ர்ர்

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்,குமார்!///இந்தக் கதையா?நான் கூட மிக,மிக நன்று என்று வாக்களித்தேன்!வெளியான அத்தனை கதைகளுக்கும் வாக்களித்தேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்துக்கள் தம்பி....

சீமாகட்டை மாதிரி, கந்து வட்டி"ன்னு சொல்லிட்டு ஒரு சேச்சிகிட்டே மாட்டிகிட்டேன், தமிழர்களை தவிர மலையாளிகளிடம் இந்த வார்த்தையை சொல்லிவிடாதே அடித்து விடுவார்கள் என்று சொன்னாள்.

அப்புறம் மலையாளம் கற்ற பிறகு அர்த்தம் புரிந்து நொந்து போனேன்.

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள். உங்களை ஊக்கப்படுத்தியவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்..

பால கணேஷ் சொன்னது…

கடும் போட்டிக்கிடையில் வென்றிருக்கிறாய்... இதுபோன்ற வெற்றிகள் என்றும் உன்னைத் தொடர்ந்துவர மகிழ்வு நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் அன்புத் தம்பி!

Sivakumar சொன்னது…

நினைவின் ஆணிவேராக இந்த வெற்றி நிலைத்திருக்க வாழ்த்துகள் குமார். தொடர்ந்து வெல்க!!

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

அன்புத்தம்பிக்கு மனமார்ந்த பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்... கதாசிரியர் பரிவை பாரதிராசா பரிசுபெற்றதில் மகிழ்ச்சியே... தொடரட்டும் எழுத்துகள்..:)
வாழ்க வளமுடன்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வெட்டி ப்ளாக்கர்ஸ் தளத்தில் நேற்றே கதையை படித்தேன்! அருமையான கதை! முதல் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

உங்கள் தளராத முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு பாராட்டுக்கள் !
த ம 5

ஜீவன் சுப்பு சொன்னது…

வாழ்த்துக்கள் குமார் ....! Way to go ...!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

உணர்வுப்பூர்ணமான கதை.... முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

கவிதை வானம் சொன்னது…

எனக்கு கவிதை கதை நாவல் ஏனோ பிடிப்பதில்லை....இப்படி பரிசு கிடைக்கும் என்றால்.....பிடிக்கின்றது வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் குமார்....

மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்.....