மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 7 அக்டோபர், 2010

ரன்... எந்திரன்..!

அலுவலக வேலைப்பளூவின் காரணமாக உங்கள் வலைப்பூக்களை பார்க்க முடியவில்லை நண்பர்களே... இருந்தும் எனது பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்துக்களை வழங்கிவரும் உங்களுக்கு நன்றி. 


இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவு நான்கரை நாட்களில் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதிலும் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 55 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்து தவித்த இந்திய அணி ஐந்தாவது நாள் தாக்குப்பிடிக்குமா என்பதே சந்தேகமா இருந்தது. ஒரே ஆறுதல் சச்சின் களத்தில் இருந்ததும் லெட்சுமணன், தோனி ஆடுவார்கள் என்ற நம்பிக்கையும் தான்.

ஐந்தாம் நாள் சச்சின் 38 ரன்னிலும் இரவுக்க்காவலனாக வந்த ஜாகீர்கான் 10 ரன்னிலும் வெளியேற வெற்றி பெறுமா இந்தியா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குள்ளும் புயலாய் மையம் கொண்டது என்பதே உண்மை. முதுகுவலியால் தவித்த லெட்சுமணன் நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பது என்பது சாதாரண காரியமல்ல என்ற நிலையில் தோனியும் வந்த வேகத்தில் திரும்ப மொத்தப்பளுவும் லெட்சுமணன் தலையில் விழுந்தது.

சும்மா சொல்லக்கூடாது அவருக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த உயர்ந்த மனிதன் இஷாந்த் சர்மா ரசிகர்கள் மனதிலும் உயர்ந்து விட்டார். எந்தப் பந்தை அடிக்கலாம் எதை அடிக்கக்கூடாது என்று ஒரு கை தேர்ந்த பேட்ஸ்மேன் போல் நிதானமாகவும் அதே சமயத்தில் லட்சுமணனின் விருப்பத்திற்கிணங்கவும் விளையாடினார்.

இந்த வெற்றியில் இஷாந்தின் 31 ரன் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அந்த ரன்னை அவர் எடுக்காமல் வந்து சென்றிருந்தால் கடைசி விக்கெட்டுக்கு லட்சுமணனால் வெற்றி கோட்டை தொட்டிருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

லட்சுமணன்... எல்லாராலும் 'கட்டை மன்னன்' என்று விமர்சிக்கப்பட்டாலும் டெஸ்ட் அரங்கில் வெற்றி நாயகன் அவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியர்களுக்கு அவர் எப்பவும் சிம்ம சொப்பனம்தான். ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு டிராவிட், டெண்டுல்கரை வெளியேற்றினால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட லெட்சுமணனை வெளியேற்றினால் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்டீவ் வாக், பாண்டிங் என எல்லா ஆஸ்திரேலிய கேப்டன்களுக்கும் சிம்ம சொப்பனம் இவர்.

லெட்சுமணன் மிகவும் நிதானமான மனிதர். எல்லாரிடமும் அன்பாக பழகக் கூடியவர். பெரும்பாலும் இசையை ரசிப்பவர். கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் ஓய்வறையில் பாடல் கேட்டுக் கொண்டு ஜாலியாக அமர்ந்திருக்கும் லெட்சுமணனை பார்த்திருப்பீர்கள். இதுதான் அவரின் சுபாவம்... மற்றவர்களுடன் அதிகம் உரையாடுவதும் கிடையாது... தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபம் கொள்வதும் இல்லை.

நேற்றைய போட்டியின் போது அவருடன் கடைசி விக்கெட்டுக்கு விளையாட வந்த ஓஜாவை வைத்துக் கொண்டு வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழலில் பதட்டமில்லாமல் விளையாடினார்... வெற்றியின் விளிம்பில் இருக்கும் போது ஓஜா செய்த தவறுக்காக அவரை மிகவும் கோபமாக திட்டிவிட்டார். ஆனால் உடனே அவரிடம் சென்று பேசியதுடன் தனது கோபத்துக்கான மன்னிப்பும் கேட்டுக் கொண்டாராம். அவரின் இந்த செயல் ஓஜாவுக்கு கண்டிப்பாக பதட்டமில்லாத தருணங்களைக் கொடுத்திருக்கும். வெற்றி பெற்றதும் தனது சக நண்பர்களைப் பார்த்து கைகளை உயர்த்தி சந்தோஷப்பட்ட லெட்சுமணனுக்கு முதுகுவலியின் வேதனை முகத்தில் மறைந்து சந்தோஷ ரேகைகள் சம்மணமிட்டிருந்தன... அன்றைய போட்டியில் சச்சின் இஷாந்த் விளையாடியிருந்தாலும் வலியை வெற்றியாக்கிய எந்திரன் ஒருவரே... அவர் தி கிரேட் லெட்சுமணன்.


எந்திரன் சுரம் இப்போது ஓயாது என்பது எல்லாரும் அறிந்ததே...எந்திரன் குறித்து பதிவுகள் தினம் தினம் வருகின்றன, நான் பதிவு எழுதும் எண்ணத்தில் இல்லை இருந்தும் சன் டிவியின் அட்டூழியமே எந்திரன் குறித்து எழுதத் தூண்டியது.

எங்கும் எந்திரன்... எதிலும் எந்திரன்... அதிலும் குறிப்பாக சன் டிவியைப் பொருத்தவரை எந்திரன் என்பது ஒரு சாதாரண சினிமா அல்ல தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெறும் முக்கிய சம்பவம் என்ற எண்ணத்தை அவர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் ஆல விருட்சமாய் வளரச் செய்ய வேண்டும். அதற்காக அவர்கள் பண்ணும் அலும்பு தாங்கவில்லை. செய்திகளில் எந்திரனுக்கு என சில நிமிடங்கள் ஒதுக்குவது கேவலத்தின் உச்சம் என்றே சொல்லலாம். நாட்டில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன.

அயோத்தி தீர்ப்பு, காமன்வெல்த் போட்டிகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி எங்கும் ஆக்கிரமித்திருக்கிறது எந்திரன் புயல். சன் பிக்ஸர்ஸின் படம்தான்... அதற்காக அவர்கள் தனியாக நேரம் ஒதுக்கி என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் யாரும் கேட்க மாட்டார்கள். தினமும் செய்தியில் போடுவதென்பது மீடியா அவர்களது என்ற எகத்தாளமும் எக்காளமும்தான்.... என்னத்தை சொல்வது?

ரஜினி என்ற மனித நேயத்தின் படம்தான் எந்திரன்... ரஜினி என்ற இந்த மந்திரச்சொல்லுக்கு மயங்கிக் கிடக்கும் ரசிகர்கள் ஏராளம் என்பதில் சந்தேகம் இல்லை. ரஜினிக்காக படம் பார்க்கும் நண்பர்கள் கூட இந்த விளம்பரங்களையும் படத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் காசாக்கும் சன் டிவியின் செயல்களை விரும்பவில்லை. ஆஹா... ஒஹோவென்று புகழ்வோர் மத்தியில் தினமணியின் 'எந்திரனும் ஏகாதிபத்தியமும்' என்ற கட்டுரை சாட்டையடி... தைரியமான கட்டுரை. தினமணிக்கும் இந்த கட்டுரையை எழுதியவருக்கும் அதை தைரியமாக பிரசுரிக்க வைத்த ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்களுக்கும் பூங்கொத்தே கொடுக்கலாம். இந்த கட்டுரைக்கு கண்டிப்பாக பல வடிவங்களில் எதிர்ப்பு வந்திருக்கும்... உண்மையை சொல்வதில் தவறு இல்லை... அதற்காக வருத்தப்படவும் தேவையில்லை.

தனது மகளின் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காத ரஜினி, 'எல்லாரும் சென்னைக்கு வந்தால் போக்குவரத்து சிக்கல் வரும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவேதான் ரசிகர்களாகிய உங்களை அழைக்கவில்லை' என்று கூறியிருந்ததை எல்லாரும் அறிவோம். அப்படிப்பட்டவர் தனது பட வெளியீட்டின் போது ரசிகர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பெண்கள் முளைப்பாரி தூக்கியும் வந்து பாலாபிஷேகம் செய்த போதோ, தமிழகத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் வருமுன்னர் பெயர் போட்டுவிட்டதால் அடித்து உதைத்து ரகளை செய்த போதோ, நிறைய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட போதோ எதுவும் சொல்லவில்லையே ஏன்? யாராவது யோசித்தார்களா?

கோடிகள் செலவில் பல் கோடிகளை சம்பாதிக்கத் துடிக்கும் கூட்டத்தில் அவரும் ஒருவர் அதுதான் காரணம். மேலும் சில நாட்களுக்கு முன்னர் சன் டிவி எந்திரன் விளம்பரத்தில் 'ஜஸ்வர்யாவை பார்த்ததும் பாடி ஸ்ட்ராங்க இருக்கு ஆனா மைன்ட் ஆப்பாயிடுச்சின்னு சொன்னாருல்ல...' இன்னும் அப்படித்தான் இருக்கோ... இல்லை சன் குரூப் அவரை ஆப் செய்து வச்சிருக்கோ?

இவர்களின் கோடிகள் ஆட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிறிய தயாரிப்பாளர்கள்தான். அவர்கள் எடுத்த படங்களை தற்போது வெளியிட முடியாத சூழல். அப்படியே வெளியிட்டாலும் எந்திரன் என்ற ராட்சஸ பலூனுக்கு முன்னால் கிராமத்து திருவிழாவில் விற்கும் ஐந்து ரூபாய் பலூன் போலாகிவிடும். மேலும் அவர்கள் போட்ட காசும் போகும்... அவர்களின் எதிர்கால கனவும் தகரும்... எத்தனையோ புதிய இயக்குநர்கள் கஷ்டப்பட்டு நல்ல கதையை படமாக்கி இருப்பார்கள்... நாளை நாமும் ஷங்கராவோம் என்ற கனவும் மாயையாகும்.

 இன்னும் எந்திரன் பாடல்கள் ஒளிபரப்பாகவில்லை என்பதைவிட ஒளிபரப்பப்படவில்லை என்பதே உண்மை.. 'உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக எந்திரன் பாடல்கள்...' என்ற வசனம் இன்னும் வரவில்லை... இந்த முறை ஒரு பாடலுக்கு ஒரு நாள் என திட்டமிட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ரஜினி நல்ல மனிதர்... நல்ல நடிகர்... அவரின் எந்திரன் வெற்றிப் படமாக அமைந்ததில் ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சந்தோஷமே... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படமாக அமைந்ததில் தமிழர்களுக்குப் பெருமைதான். நம்ம பெருமையை நாமே பேசாமல் அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று சன் குழுமம் பார்க்கட்டும்.

இதற்கு எதிர் விமர்சனங்கள் வந்தாலும் வருத்தப்படப் போவதில்லை. மனதில் பட்டதை சொல்வதில் 'மனசு'க்கு சந்தோஷமே...

-'பரிவை' சே.குமார்.

படங்கள் : நன்றி Google Images

21 எண்ணங்கள்:

Asiya Omar சொன்னது…

இந்திய ஆஸ்த்ரேலியா போட்டி,இந்தியாவின் வெற்றி விமர்சனம் அருமை.அதே சமயம் எந்திரன் பற்றிய உங்க ஆதங்கமும் நியாமானது.

vanathy சொன்னது…

குமார், தைரியமா எழுதியிருக்கிறீங்க. இதெல்லாம் மக்களுக்கு எங்கே விளங்கப் போவுது. படம் பார்த்தமா வீட்டுக்குப் போனமா என்று இல்லாமல் கட் அவுட் வைப்பது, பால் ஊத்துவது. உலகில் வேறு எங்கும் இப்படி நடப்பதாக கேள்விப்பட்டதில்லை.

இலா சொன்னது…

Awesome! As usual "manasu"said what it felt. Nice Posting

ம.தி.சுதா சொன்னது…

லக்ஸ்மனின் அந்த போட்டி மிகவும் அருமையானது... எந்திரனைப்பற்றிதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே...

மோகன்ஜி சொன்னது…

ரன் முதல் எந்திரன் வரை உங்கள் பார்வை வித்தியாசமானது...INTERESTING

எஸ்.கே சொன்னது…

அந்த மேட்ச் மறக்கவே முடியாது செம திரில்லிங்!

Sriakila சொன்னது…

//எங்கும் எந்திரன்... எதிலும் எந்திரன்... அதிலும் குறிப்பாக சன் டிவியைப் பொருத்தவரை எந்திரன் என்பது ஒரு சாதாரண சினிமா அல்ல தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெறும் முக்கிய சம்பவம் என்ற எண்ணத்தை அவர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் ஆல விருட்சமாய் வளரச் செய்ய வேண்டும். அதற்காக அவர்கள் பண்ணும் அலும்பு தாங்கவில்லை. செய்திகளில் எந்திரனுக்கு என சில நிமிடங்கள் ஒதுக்குவது கேவலத்தின் உச்சம் என்றே சொல்லலாம். நாட்டில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன//


கேவலத்தின் உச்சம் தான்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சன் டி வியை சாடியதில் உங்கள் சமுதாய அக்கறை புரிகிறது.

அம்பிகா சொன்னது…

நல்ல அலசல். அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க Asiya அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தினமும் சன் டிவி செய்திகளில் இன்னும் தொடர்கிறது எந்திரன் சம்பவம் குறித்த செய்திகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
உண்மையை சொல்ல என்ன பயம் இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
லஷ்மணன் ரன் எந்திரன் என்பதை மீண்டும் நிரூபித்தார். இந்த முறை பந்துகள் வீணாகவில்லை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மோகன்ஜி....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க எஸ்.கே....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீகலா...
உண்மைதான்... அந்தக் கேவலம் இன்னும் தொடரத்தான் செய்கிறது என்பதே இன்னும் வருத்தமளிக்கும் விஷயம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி.செந்தில்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அம்பிகா மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தமிழ்க்காதலன் சொன்னது…

தோழர் குமாருக்கு வணக்கம். எந்திரன் பண்ணும் "அலம்பல்கள்" அருமையாக கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். பணம் பார்க்க இவர்கள்.., படம் பார்க்க சில வெறியர்கள்... இருக்கும் வரை இது போல் கொடுமை தொடர்ந்தேரும். ரசிப்பு என்பதை தாண்டி ........ ஒரு மனிதன் அடிமை என்கிற நிலைக்கு தள்ளப்படுகிற அல்லது ஆட்படுகிற கொடுமையின் பரிதாபம் இது. அப்புறம்........ ரஜினிப் பற்றிய உங்கள் அலசல் மிக அருமை. அவர் இது போல் பல இடங்களில் தமிழகத்தை சுயநலத்துகாய் பயன்படுத்திக் கொண்டு "தனி வழியில்" போய்க் கொண்டிருக்கிறார் என்பது வெகு சிலருக்குதான் தெரியும். நன்றி.

மனோ சாமிநாதன் சொன்னது…

கிரிக்கெட் விமர்சனம் நன்றாக இருக்கிறது. லக்ஷ்மணனுக்குத்தான் man of the match தந்திருக்கவேண்டும்! பாவம்- அன்றைய ஹீரோ அவராக இருந்தும் இந்த விருது அவருக்குக் கிடைக்கவில்லை!
எந்திரன் பற்றி-திருச்சியில் ரஜனியின் ‘கட் அவுட்டிற்கு’ பாலாபிஷேகமெல்லாம் நடந்ததாக நேற்றைக்கு அங்கிருந்து வந்த என் உறவினர் கூறினார்கள்! மக்கள் எப்போதுதான் திருந்துவார்களோ தெரியவில்லை!!

அன்புடன் மலிக்கா சொன்னது…

//இப்பல்லாம் நம்ம வலைப்பக்கம் வருவதேயில்லையே...
வேலை அதிகமா...
//
நான் எத்தனைமுறை வந்து திறும்பியிருக்கேன் தெரியுமா. அனைத்தையும் மனசு க்கு மாற்றியிருக்கீங்க மனசு திறக்கவேமாட்டேங்கிறது. ஏன்னே தெரியலையே../

அப்பா இப்பதான் மனதுவந்திருக்கு மனசுக்கு.

குமார் சூப்பராக அடிதூள்கெளப்பியிருக்கீங்க..

//எங்கும் எந்திரன்... எதிலும் எந்திரன்... அதிலும் குறிப்பாக சன் டிவியைப் பொருத்தவரை எந்திரன் என்பது ஒரு சாதாரண சினிமா அல்ல தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெறும் முக்கிய சம்பவம் என்ற எண்ணத்தை அவர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் ஆல விருட்சமாய் வளரச் செய்ய வேண்டும். அதற்காக அவர்கள் பண்ணும் அலும்பு தாங்கவில்லை. செய்திகளில் எந்திரனுக்கு என சில நிமிடங்கள் ஒதுக்குவது கேவலத்தின் உச்சம் என்றே சொல்லலாம். நாட்டில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன//


கேவலத்தின் உச்சம் தான்.//

வேறேன்ன சொல்ல அதேதான்.

எதனையோ செய்திகளிருந்தும் ரிப்பீஈஈஈஈஈஈஈட்டக அதையே! அய்யோடா தாங்கலை..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்க்காதலன்...
உண்மைதான் நண்பரே... எதோ நாப்பது கோடியாம்... அதனால் அவர் வாய் திறக்க மாட்டார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அம்மா...
ஆம் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏனோ தெரியவில்லை கிரிக்கெட்டில் வித்தியாசமான அணுகுமுறை இருக்கின்றது.

திருச்சியில் மட்டுமல்ல... எல்லா இடத்திலும் தான். அபுதாபியில் எங்கள் அறைக்கு அருகில் இருக்கும் தியேட்டரில் வியாழக்கிழமை படம் காலை ஏழு மணிக்கு வெளியாகிறது என்றதும் வேலைக்குக் கூட செல்லாமல் காலையில் தியேட்டர் வாசலில் வந்து நின்ற நம்மவர்களைப் பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மலிக்காக்கா....
மனசு ஓபன் ஆவதில் பிரச்சினை இருக்கிறதா? இதுவரை யாரும் சொல்லவில்லை.... எவ்வளவு நாளாச்சு... நீங்க இங்க வந்து... மறந்துட்டீங்கன்னு நினைச்சேன். என்ன பிரச்சினைன்னு பார்க்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா