மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 29 ஜனவரி, 2022

திருவிழா - குடும்பத்தில் ஒருவராய் வாழ்ந்த அனுபவம் - சிவசங்கரி வசந்த்

விமர்சனங்கள்தான் நம்முடைய எழுத்தை இன்னும் சிறப்பாக்கும், என்னென்ன தவறு செய்திருக்கிறோம் இனி அதை எப்படித் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் நமக்கு உணர்த்தும். நான் எங்கு எழுதினாலும் எனது கதைக்கான கருத்துக்களை வாசிக்கத் தவறமாட்டேன். அதில் இருக்கும் குறை, நிறைகளையெல்லாம் அடுத்து எழுதும்போது முடிந்தளவுக்குச் சரி செய்து கொள்வேன்.

என்னைப் பொறுத்தவரை கிராமத்து வாழ்வியலை, அங்கே தொலைந்து போன பல விஷயங்களையும் காட்சிப்படுத்திச் சொல்ல நினைப்பேன். எனது கதைகளின் களம் பெரும்பாலும் அப்படித்தான் அமையும். இந்த நாவலிலும் திருவிழாக்கள், நின்று போன திருவிழாக்கள் பற்றி எழுதியிருப்பேன்.

பாலையில் வெயில் தகிக்கும் ஒரு மதியவேளையில் ஒரு கட்டிடத்தின் முன் ஒருவருக்காக காத்திருந்த போது தலைப்பு என்ன வைக்கலாம் என்று நானும் இராஜாராமும் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன தலைப்புதான் இது. நாவலுக்குப் பொருத்தமாய் இருப்பதாய் சிவசங்கரி சொல்லியிருப்பது மகிழ்ச்சி... நன்றி Raja Rajaram

திருவிழா நாவலுக்கு முதல் விமர்சனம் சகோதரி. சிவசங்கரியிடம் இருந்து வந்திருக்கிறது. மகிழ்ச்சி.

நன்றி Sivasankari Vasanth

------

தி
ருவிழா-

இது இந்த நாவலுக்கு ஏற்ற சரியான தலைப்பு. கம்ப சேவை எனும் திருவிழாவில் இந்த கதை தொடங்குகிறது. கம்ப சேவை திருவிழா பற்றிய விவரணைகளை வாசித்தபோது நான் அந்த திருவிழாவில் கலந்து கொண்ட அனுபவத்தை கொடுத்தது. அதைப்போல மதுரை சித்திரை திருவிழாவில் அந்த அழகரை பார்க்க வந்த கூட்டத்தில் நானும் கரைந்து போய்விட்டேன்.

கதை எதை பேசுகிறது. இது ஒரு குடும்பத்தின் கதை. குடும்பத்தில் உள்ளவர்களின் கோபம், பாசம், காதல், பயம், வெறுப்பு எல்லா விதமான நிலைகளையும் கூறும் கதை.

சில நேரங்களில் குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாக வளர்ந்து தந்தையும் மகனும் பல வருடம் பேசாமல் இருப்பதற்கு வழி செய்துவிடுகிறது. அப்படி பிரிந்தவர்கள் ஒன்று சேர்கிறார்களா, இல்லையா என்பதுதான் கதை.

சண்டை போட்டவர்களுக்கு கோபம் இருக்கும். வாழ்வின் இறுதிவரை பேச கூடாது என்கின்ற வெறுப்பும் இருக்கும், ஆனால் மற்றவர்களுக்கு?

குடும்பத்தில் உள்ள மற்றவர்களை அந்த சண்டை எவ்விதம் பாதிக்கும்?

அதுவரை பாசமாக ஒன்றாகக்கூடி மகிழ்ந்தவர்கள் இந்த சண்டையால் பிரியும்போது எவ்வளவு வருத்தப்படுவார்கள். மறுபடியும் பேச மாட்டோமா என்று எவ்வளவு ஆசைப்படுவார்கள் என்பதை அழகாக எழுதி இருக்கிறார்.

அதுவரை தன் மூத்த மகளாக பாவித்த பெண்ணை வழியில் பார்த்தால் கூட புன்னகை செய்யாது, பேசாது செல்லவேண்டிய சங்கடம் சித்திக்கு உருவாகிறது.

தன் மகன் மீது பாசம் இருந்த போதும் தன் கணவருக்கு பிடிக்காது என்பதினால் மகனை பற்றிய பேச்சை வீட்டில் பேசமுடியாமல் வாழவேண்டிய கஷ்டம் ஒரு தாய்க்கு வருகிறது.

இதுபோல பல சம்பவங்கள்.அதற்கு நடுவில் ஒரு காதல். அந்த காதலினால் பிரிந்த குடும்பம் ஒன்றாக வேண்டும் என்று வாசிக்கும் நம்மையும் சிந்திக்க வைத்து விடுகிறார்.

காதல் நண்பர்களாக இருக்கும் குடும்பத்தைக் கூட எதிரிகளாக மாற்ற வல்லது. எதிரிகளாக இருக்கும் குடும்பத்தினர்..?

அடுத்த தலைமுறையினர் இடையே உருவாகும் காதல் என்ன செய்யும்?

அழகர்சாமியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழ்ந்த அனுபவத்தை கொடுத்தது இந்த திருவிழா.

வாழ்த்துகள் நித்யா குமார்.
****
நல்லதொரு விமர்சனத்தைத் தந்த தங்களுக்கு மீண்டும் நன்றி.

---------------------------
திருவிழா (நாவல்)
கலக்கல் ட்ரீம்ஸ்
பக்கம் : 576
விலை : 550
-----------------------------------------------------
புத்தகம் வாங்க விரும்பினால்...

Dhasarathan 9840967484 Kalakkal Dreams Enterprises Current . A/c no. : 156602000000979 IFSC code: IOBA0001566 Indian Overseas Bank Porur Branch. Gpay no. 9840967484
-----------------------------------------------------
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள் குமார்.

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மேலும் பல நூல்களை வெளியிட வாழ்த்துகள் குமார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்