மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : நிறைவான சந்திப்பு



சி
ல சந்திப்புக்கள் எதிர்பாராதவை... கிட்டத்தட்ட் 8 ஆண்டுகள் இணைய வழி மட்டுமே தொடர்பில் இருந்தோம்...

யார்..? 

எப்படி..? 

கறுப்பா... சிகப்பா..? 

நெட்டையா... குட்டையா..? என்பதெல்லாம் இருபக்கமும் அறிந்திருக்கவில்லை... அறிந்து கொள்ளவும் விரும்பியதில்லை. பெரும்பாலும் நட்பு மரியாதையான பேச்சுக்கு வழி வகுக்காது என்பதால் சார்... மோரெல்லாம் இல்லாமல் என்ன தலைவரே என்பதாய்த்தான் இருந்தது. அன்று முதல் இன்று வரை நட்பு மட்டும் கூடுதல் அன்போடு பயணித்தது.

படித்த புத்தகங்கள் குறித்த கருத்துக்கள் இரண்டு பக்கமும் அடிக்கடி பயணிக்கும். நிறைய புத்தகங்கள் பிடிஎப்பாய் அனுப்புவார். அதை வாசிங்க... இதை வாசிங்க என்பார்... நிறைய ஆங்கிலப்படங்களின் பெயர்களைச் சொல்லி பார்க்கச் சொல்வார். தினமும் காலையில் குட்மார்னிங் என எதாவது ஒரு படம் இங்கிட்டும் அங்கிட்டுமாய் இணைய வழி பறக்கும்... அது போதும் அன்றைய நாளுக்கு... சில நாள் எதாவது பேசி அனுப்பிக் கொள்வோம்... இப்படித்தான் நகர்ந்தது.

சந்திக்கும் வாய்ப்பு வருமா.. வராதா தெரியாது... இவரைப் பற்றி நிஷாந்தி அக்கா பெருமையாகச் சொல்வார்கள்... அவரிடமும் இதே எட்டாண்டு கால இணைய நட்புத்தான்... இப்படி பலரிடம் தொடரும் நட்பு இணைய வழிதான்... நீ அவரைப் பார்க்கணும் என்று அக்கா சொல்லும் போதெல்லாம் இரு வேறு நாடுகளில் இருப்பவர்கள் சந்திப்பது எப்படி என்றே தோன்றும். சிங்கப்பூரில் இருக்கும் அண்ணனும் தம்பியும் கூட நான் ஊருக்குப் போகும் போது வருவதில்லை... நாங்களே எப்போதேனும் சந்திக்கும் வாய்ப்பு அரிதாக அமையும் போது இவரை சந்திப்பதென்பது நிகழுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

துபை வருகிறேன் என்று சொன்னதும் எப்படியும் பார்த்து விடலாம் என்ற எண்ணம் மனசுக்குள் எழ, சற்றே மகிழ்வும் எட்டிப் பார்த்தது. ஊரில் இருந்து கடலை மிட்டாயெல்லாம் வாங்கி கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு வாரமாக அடுத்த வாரம் சந்திப்போம் எனப் பேசும் போதும் என்ன செய்கிறோம் ஏது  செய்கிறோம் என இருவருக்கும் கேட்டுக் கொள்ளத் தோன்றவில்லை... ஏதோ பல முறை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பேசி மகிழ்ந்தது போல ஒரு நெருக்கம் மட்டும் மனசுக்குள் இருந்தது.

வியாழன் இரவு அபுதாபிக்கு அன்போடும் கடலை மிட்டாயோடும் வந்தார். டாக்ஸிக்குள் இருந்தே மகிழ்வோடு கையசைத்தார். இறங்கியதும் கட்டி அணைத்துக் கொண்டார்.

இரவு அதிகம் பேச முடியவில்லை... காலையில் கடற்கரை ஓரத்தில் போய் அமர்ந்து நீண்ட நேரம் நிறைய விஷயங்கள் பேசினோம்... நிறைவாய்.

ஒவ்வொருவரின் வேதனையும் வலியும் அவர்கள் சொல்லாத வரை தெரிவதில்லைதானே... புன்னகைக்கும் உதடுக்குப் பின்னே ஒரு பெரிய கதை இருக்கலாம்... அதை எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்று தோன்றாது அல்லவா..? அவர் சொன்னார்... நானும் சொன்னேன்... கடல் அமைதியாய் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.

என்னை எப்போது நட்புத்தான் நகர்த்திச் செல்லும்... அது அப்போதும் இப்போதும் அப்படியே... அப்படியானதொரு நட்பு இது... இன்றைய தினம் மகிழ்வான தினம்... பெரிதாய் ஒன்றும் செய்துவிடவில்லை... பெரிதாய் ஒன்று சமைத்து விடவில்லை... ஆனால் மன நிறைவாய் நிறையப் பேசினோம்...

நிறைய நண்பர்கள் இருந்தாலும் முதலில் பார்க்க நினைத்தது உன்னைத்தான் என்ற அன்புக்கு என்ன சொல்வது..?

இனித் தொடரும் சந்திப்புக்கு இது முன்னோடி...

ஆம் நண்பர்... சகோதரர் சுரேஷ் சக்தி என்னைத் தேடி வந்தார்... அன்பின் கரங்களோடு அணைத்துக் கொள்ள...

அன்பு ஒன்றுதான் எப்பவும் அணைத்துக் கொள்கிறது.

நன்றி நண்பா.

******************************
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை
எதிர்சேவை புத்தகம் வாங்க விரும்பினால்...
திரு. தசரதன்.
கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
சென்னை.
00919840967484
kalakkaldreams@gmail.com


விலை : ரூ.100 (தபால் / கூரியர் செலவு தனி)
புத்தக விலையில் 10% கழிவு சென்னை புத்தகக் கண்காட்சி முடியும் வரை கொடுக்கப்படும்.
-'பரிவை' சே.குமார் 

6 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நட்பு மகிழ்ச்சி தருவது குமார்... தொடரட்டும் நட்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள்...

ஸ்ரீராம். சொன்னது…

நட்பின் சந்திப்புகள் மகிழ்ச்சி அளிப்பவை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நட்பிற்கு ஈடு நட்பே. மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Yarlpavanan சொன்னது…

இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

Ashwani Singh சொன்னது…

Valuable Inforamtion I Like it and Visit Who has interested Make Money Online from Home