மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 26 டிசம்பர், 2019

எதிர்சேவை - கதைகள் ஒரு பார்வை


னது முதல் சிறுகதைத் தொகுப்பான எதிர்சேவையில் இருக்கும் 12 கதைகளும் நீங்க மனசு வலைத்தளத்தில் வாசித்ததாய்த்தான் இருக்கும். நான் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் அவர்களுக்கு அனுப்பிய 32 கதைகளில் நிறைய இங்கு பகிராத கதைகள் இருந்தன என்றாலும் முதல் தொகுப்பில் வரும் வாய்ப்பைப் பெற்ற 12 கதைகளும் இங்கு பகிரப்பட்டவைதான்.

பரிசு பெற்ற கதைகள், மின்னூலில் வந்த கதைகள் என எல்லாமாய் கலந்துதான் எடுத்திருக்கிறார் சகோதரர் தசரதன். கதைகளுக்கு ஒரு முன்னோட்டம் கொடுத்தால் என்ன எனத் தோன்றியதாலேயே இங்கு கதைகள் குறித்து எழுதுகிறேன்... என் கதைகளை பற்றிய சுய அறிமுகமே தவிர... அவை ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்வதற்காக அல்ல  என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.

என் கதைகளை 'மனசு' வலைப்பூவிலும் மின்னிதழ்களிலும் வாசித்தவர்களுக்கே அது தேறுமா தேறாதா என்பது தெரியும் என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும். 

கதைகளை வாசிக்கும் போது அவை உங்களை ஈர்த்தால் என் எழுத்திற்கான வெற்றி... என்னடா கதை இது..? இதெல்லாம் ஒரு கதையா..? என நினைக்க வைத்தால், அதன்பின் தோன்றும் உங்கள் கருத்தை என்னிடம் தயங்காமல் சொல்லுங்கள் அது என் எழுத்தை இன்னும் கூர் தீட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

முதல் சிறுகதைத் தொகுப்பு என்றாலும் அபுதாபி வந்த பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக  எழுதிய கதைகள்தான் இவை. அதற்கு முன் கல்லூரியில் படிக்கும் போதிருந்து எழுதி பத்திரிக்கைகளில் வந்தவை வீட்டில் இருக்கின்றன. அவற்றை இன்னும் கணிப்பொறியில் ஏற்றவில்லை. அக்கதைகளுக்கும் இங்கு வந்த பின் எழுதிய கதைகளுக்கும் இடையே நிறைய மாற்றம் இருக்கும்.

1. நினைவின் ஆணிவேர் - வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் அம்மாவும் பெண்ணும் சந்தித்தபின் நிகழ்வது ஒரு குறும்படம் போலிருக்கும் என்று சொல்லியிருந்தார். அந்தப் பகுதி உங்களையும் கவரலாம்.

2. தீபாவளிக் கனவு - தீபாவளி குறித்த ஒரு சிறுமியின் எண்ண ஓட்டமே கதையாய்... இறுதியில் அம்மாவுடன் பேசுவது மட்டுமே உரையாடலாய்... இது சில வருடம் முன்னர் தீபாவளிக்கு எழுதிய கதை... சென்ற தீபாவளிக்குத் தேன்சிட்டு மின்னிதழில் வெளியாகியது.

3. எதிர்சேவை - இரண்டு வருடம் முன்பு சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் அன்று எழுதியது... குடும்பக் கதைக்குள் சின்னதாய் ஒரு காதல்... அந்தக் காதல்தான் எல்லாராலும் பேசப்பட்டது. பலருக்குப் பிடித்தும் இருந்தது எனவே புத்தகத்தின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது.

4. வீராப்பு - ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று வாசித்தவர்கள் எல்லாருடைய பாராட்டையும் பெற்ற கதை... வெட்டி வீராப்பைத் தூக்கிச் சுமக்கும் ஒரு மனிதனின் கதை... முழுக்க முழுக்க வட்டார வழக்கில் எழுதிப் பார்த்த பல கதைகளில் இதுவும் ஒன்று. இதே ரகத்தில் எழுதிய கதைகளில் எனக்கு காற்றுவெளியில் இருமுறை வெளியிடப்பட்ட 'நெஞ்சக்கரை'யை சொல்வேன். ஏனோ அது இத்தொகுப்பில் தனக்கான இடத்தைப் பெறவில்லை. ஒருவேளை அடுத்த சிறுகதைத் தொகுப்பு வரும் பட்சத்தில் அதில் இடம் பிடிக்கலாம்.

5. என்னுயிர் நீதானே - முத்துக்கமலத்தில் வெளியான கதை இது. கிராமத்து மனிதர்களிடமிருந்து அவ்வப்போது விலகி கதை எழுதிப் பார்ப்பதும் உண்டு. அப்படி எழுதிய கதைதான் இது... போதையின் வேகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணின் மார்பில் கை வைத்துவிடுவான்... இதைப் படித்த சகோதரர் நௌஷாத்கான், அந்த ஒரு இடத்துக்காக 'என்னண்ணா நீங்களா இப்படி எழுதுனீங்க..?'ன்னு கேட்டார் என்றாலும் எல்லை மீறாத கதைதான் இது. எல்லை மீறிய சில கதைகள் உண்டு... 'செண்பா'வெல்லாம் அந்த வகைதான்... எழுதிச் சேமிப்பில் இருக்கிறது எங்கும் பகிராமல்... ஏதாவது புத்தகத்துக்கு அனுப்பலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. கறுப்பி நாவல் முழுக்க முழுக்க செண்பா வகைதான். கறுப்பியைப் பலரைப் படிக்கச் சொல்லிக் கொடுத்தேன்... எல்லாருக்கும் பிடித்திருந்தது. ஆர்.வி.சரவணன் அண்ணன் மட்டும் 'உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு நாவலா..? அந்தப் பெண் இவ்வளவு வல்கராப் பேசுறா..?' என்றார். கொஞ்சம் உண்மை கலந்த நாவல் அது... அப்படித்தான் எழுத முடியும் என்றேன்... ஏற்றுக் கொண்டார். 

6. மனத்தேடல் - இது காற்றுவெளியில் வந்த கதை. கல்லூரிக் காதல்... முறிந்த பின்னான வாழ்க்கையில் இருவரும் நாற்பதுக்கு மேல் மீண்டும் சந்தித்தால்... அதுதான் கதைக்களம். உதிராத நேசமென இதே கதையை வேறு கோணத்தில் எழுதிய போது பல நண்பர்கள் இருவரும் சந்திருந்தால் நன்றாக இருக்குமே... இதில் சந்தித்தார்களா இல்லையான்னு எங்களை யோசிக்க வச்சிட்டீங்களேன்னு சொன்னாங்க.. ஆர்.வி.சரவணன் அண்ணன் மட்டுமே அந்தக் கதை ரொம்பப் பிடித்ததாகச் சொன்னார். இந்த மனத்தேடல் எல்லாருடைய மனசுக்குள்ளும் இருக்கும் காதலை ஒரு நொடி வெளியே கொண்டு வந்து இப்போ அவர்/அவள் எப்படியிருப்பார் என்று யோசிக்க வைக்கும்... அப்படி வைத்தால் அதுதான் இக்கதையின் வெற்றி... ஒவ்வொரு முறை வாசிக்கும் போது என்னை ஏதோ செய்யும் கதை இது.

7. குலசாமி - தகப்பனைக் குலசாமியாக மனதுக்குள் வைத்திருக்கும் பெண்ணின் மனவோட்டத்தைச் சொல்லும் கதை. தன் தகப்பன் பற்றி, அவருக்கும் தனக்குமான இடைவெளி பற்றியெல்லாம் பேசும் கதை... வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.

8. வெள்ளாடும் செம்மறியாடும் - தினமணியில் வந்த கதை... ஊர் ஊராய் ஆட்டுக்கெடை போடுபவர்களின் கதை... ஊரில் ஆட்டுக்கெடை போட வர்றவங்க.... மைக்செட் கட்ட வர்றவங்க... என சில நாள் ஊரில் தங்குபவர்கள் அங்கிருக்கும் பெண்களுடன் காதலில் விழுவார்கள்... இங்கே ஆட்டுக்காரப் பெண்ணுடன் உள்ளூர்க்காரன் காதல் விழும் கதை... வேறு மாதிரி எழுத நினைத்து இப்படியாய் முடிந்தது.

9. நேசத்தின் ராகம் - ஒரு பேராசிரியருக்கும் அவரின் மாணவிக்குமான மானசீக நட்பைச் சொல்லும் கதை இது. அவர் அவளை எந்த இடத்தில் வைத்திருந்தார்... அவள் அவருக்கு என்ன உறவு முறை கொடுத்திருந்தாள் என்பதை மட்டுமே பேசும்... இப்படி ஒரு ஈர்ப்பை, அன்பை, நட்பை நாம் பார்க்கும் விதம் வேறுதானே... கொச்சையான இடத்தில்தானே இதை இறுத்திப் பார்ப்போம்... கதையின் முடிவில் அது தவறென்பது புரியும்.

10. விரிவோடிய வாழ்க்கை - அகலில் எம்.பிக்களுக்கு அரசு செய்யும் வெட்டிச் செலவு மற்றும் விவசாயத்தை மையப்படுத்தி வைக்கப்பட்ட போட்டிக்கு எழுதிய கதை. எப்பவுமே படத்துக்கோ அல்லது ஒரு தலைப்புக்கோ எழுதுதல் என்பது எனக்கு எப்பவும் சரிவராது என்றாலும் அவ்வப்போது இது மாதிரியான போட்டிகளுக்கு முயற்சிப்பதுண்டு. அப்படி முயற்சித்ததில் இரண்டு புத்தகங்களைப் பரிசாகப் பெற்றது. 

11. ஜீவநதி - இதுவும் தீபாவளிக்காக எழுதிய கதைதான்... அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்லும் கதை. இந்தக் கதையை ஆர்.வி.சரவணன் அண்ணன் திரைக்கதையாக எழுதி தன் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். நானும் பகிர்ந்து கொண்டேன். இந்த வருட தீபாவளிக்கு கைத்தடி மின்னிதழில் சிறப்புக்கதையாக வெளிவந்தது.

12. அப்பாவின் நாற்காலி - அப்பாவைச் சுமந்த நாற்காலி அவர் இறந்த பின் என்ன ஆனது என்பதைச் சொல்லும் கதையில் நாற்காலியோடு பிணைந்த அப்பா பற்றிய நினைவுகளே அதிகமிருக்கும். எழுதாளர் ஆபிதீன் ஐயா அவர்கள் தனது ஆபிதீன் பக்கங்களில் பகிர்ந்து கொண்டார். ரொம்பப் பிடித்த கதை என்றும் சொல்லியிருந்தார். 

இந்த 12 கதைகள்தான் புத்தகத்தில் இருக்கின்றன. கதைகளை உங்களிடம் கொடுத்து விட்டேன்... புத்தகத்தைப் படித்து உங்களின் கருத்துக்களை எனக்குத் தாருங்கள். என்னென்ன தவறு இருக்கு... இன்னும் எப்படி சிறப்பாக எழுதியிருக்கலாம் என்பதையெல்லாம் சொல்லுங்கள்... அதுதான் எனக்கு வேணும்... புகழாரம் வேண்டியதில்லை... அடித்து ஆடத் தயாராகுங்கள்... குனிந்து ஏற்றுக் கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்து எனது புத்தகத்தை வாசிக்கும் முதல் வாசகி என் அன்புச் சகோதரர் இராஜாராமின் மகள்தான் என்று நினைக்கிறேன். பேரன்பும் பெருமகிழ்வும் மகளே... இந்தப் படம் வருடங்கள் கடந்தாலும் என்னுடன் இருக்கும். சகோதரர் தசரதனுடன் பேசி, புத்தகத்தை உடனே வாங்கிய தங்கள் அன்புக்கு நன்றி இராஜாராம்.


புத்தகம் வாங்கிப் படிக்க நினைத்தால்.... 

திரு. தசரதன்.
கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
சென்னை.
00919840967484
kalakkaldreams@gmail.com
விலை : ரூ.100 (தபால் / கூரியர் செலவு தனி)

விலையில் 10% கழிவு வழங்கப்படும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
------------------------------

இனி....

அமேசானில் இன்று முதல் 31ம் தேதி வரை நம் ஜோதிஜி அண்ணாவின் '5 முதலாளிகளின் கதை' இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். முடிந்தவர்கள் தரவிறக்கி, வாசித்து உங்கள் கருத்தை அண்ணனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் அங்கு ஸ்டாரும் கருத்தும் கொடுங்க.


தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்.


நன்றி.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார். மேலும் பல புத்தகங்கள் வெளிவர வாழ்த்துகள்.