மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : சினிமா என்னும் ஜிகினா

Related image

சினிமாங்கிறது எல்லாருக்குமே ஒரு குறிப்பிட்ட வயது வரை ரொம்பவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சிலர் அன்றும் இன்றும் என்றும் சினிமா மீது தீராத காதல் கொண்டிருப்பார்கள். இன்றைய டிக்கெட் விலையில் கூட அவர்களுக்கு தியேட்டரில் போய் படம் பார்த்தால்தான் பார்த்தது போலிருக்கும்.

சின்ன வயதில் சினிமா மீது தீராத காதல். தேவகோட்டையில் அப்போது மூன்று தியேட்டர்கள்... ரீலீஸான உடனேயெல்லாம் அங்கு படம் வராது... சில வாரங்களுக்குப் பின்தான் வரும். ரிலீசான படமென்றால் அது காரைக்குடியில்தான். பள்ளிப்பருவத்தில் காரைக்குடிக்கு படம் பார்க்கப் போவதெல்லாம் முடியாத காரியம் என்பதால் தேவகோட்டையில்தான் பார்க்க வேண்டும்... அதுவும் அம்மாவுடனோ அக்காக்களுடனோதான் போகமுடியும்.

அம்மாவுக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும்... பெரும்பாலும் காலைக்காட்சிக்கு அவரும் அவர் பிறந்த ஊரில் இருந்து எங்க ஊருக்கே திருமணம் முடித்து வந்த அவர் வயதொத்த பஞ்சம்மாவும் பேசி வைத்துக் கிளம்பி விடுவார்கள். விடுமுறை தினம் என்றால் நாங்களும் இருப்போம். சில சமயங்களில் ஆறு மணிக்குப் போடப்படும் முதல் காட்சிக்கு கூட்டிச் செல்வார்கள். அடிக்கடி சினிமாவுக்குப் போவோம். 

பள்ளியில் படிக்கும் போது தூறல் நின்னு போச்சு பார்த்துவிட்டு வந்த மறுநாள் பள்ளியில் தவட்டாங்கம்பு (மரக்குரங்கு) விளையாண்டவர்களை வேடிக்கை பார்க்கும் போது மேலிருந்து குதித்தவன் என் மீது விழ, நான் சுவரில் விழுந்து கை உடைந்து அம்மாவிடம் பட்ட அடிகள்... கைக்கு கட்டுப்போட குன்றக்குடி கிளம்பும் போது விவித பாரதியிலோ இலங்கை வானொலியிலோ சரியாக ஒலிக்க விடப்படும் ஏரிக்கரைப் பூங்காற்றோ அல்லது தங்கச் சங்கிலியோ 'நீ போம்மா.. நான் பாட்டைக் கேட்டுட்டு வாரேன்'னு சொல்ல வைக்கும்... அதுக்கு மானாவாரியாத் திட்டு வாங்கினதெல்லாம் பெரிய கதை.

அப்ப விஜயகாந்தை ஏனோ பிடிக்காது.... இப்ப ரொம்பப் பிடிக்கும்... இந்த இரண்டுக்கும் எனக்குக் காரணமெல்லாம் தெரியாது. நம்ம விருப்பம் அப்போது கமல், பாக்கியராஜ், இராமராஜன்தான். இவர்கள் படமென்றால் அம்மாவை நச்சரிப்பதுண்டு... அம்மா எப்படியும் சினிமாவுக்குக் கூட்டிச் சென்றுவிடுவார். தொன்னூறுகளில் டிக்கெட் விலையும் அதிகமில்லைதானே. 

முதலில் ஊருக்குள்... அப்புறம் வீட்டுக்குள் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி வந்தபின் ஞாயிறுகளில் ஒரு பழைய சினிமா...  சனிக்கிழமை ஹிந்திபடம் மொழி புரியாமல் பார்த்து ரசித்த நாட்கள் மறக்க முடியாதவை...  அதுவும் எல்லாரும் ஒன்றாகக் கூட்டமாக அமர்ந்து பார்ப்பது என்பது மகிழ்வின் உச்சமில்லையா..! இப்பவும் மொழி அவ்வளவாகப் புரியாதென்பதால் ஹிந்தியும் கன்னடமும் தவிர்த்து தெலுங்கு, மலையாளப் படங்கள் பார்ப்பதுண்டு என்றாலும் மலையாள சினிமா மீதே ஆர்வம் அதிகம்... ஷகிலா படத்தின் மீதல்ல.

கல்லூரியில் படிக்கும் போது வீட்டுக்கு நல்ல பிள்ளை... அது போக தேவகோட்டை தியேட்டருக்குப் படத்துக்குப் போனால் எப்படியும் யாராவது ஒரு உறவினர் வரக்கூடும்... அம்மாவிடம் சொன்னால் எது பிய்யும் என்பதெல்லாம் தெரியாது ஆனால் கண்டிப்பாக அடி விழும் என்பது நன்றாகத் தெரியும் என்பதால் விடுமுறை தினமே முதுகுக்கு நல்லது என முடிவெடுத்து முதலாம் ஆண்டு நகர்ந்தது. 

இரண்டாம் ஆண்டில் நண்பர் கூட்டம் அதிகமானதால் சில படங்களை தியேட்டரில் போய் பார்க்க ஆரம்பிச்சாச்சு. யாராவதுபார்த்துட்டுப் போய்ச் சொன்னால் சொல்லட்டும் என்ற எண்ணமும் மனசுக்குள் வந்தாச்சு. மூன்றாம் ஆண்டில் நிறையப் படங்கள்... மதியம் பெரும்பாலும் வகுப்பு இருக்காது என்பது ஒரு வாய்ப்பாக அமைந்தது. நண்பர்களுடன் அதுவும் கூட்டமாய் படம் பார்ப்பது என்பது மீண்டும் கிடைக்காத ஒன்று... நாங்கள் எங்கள் எல்லை யைத் தாண்டி படம் பார்க்கவில்லை...  ஆம் காரைக்குடிக்கு படம் பார்க்கச் சென்றதே இல்லை... அதேபோல் கட்டடித்துவிட்டுப் படத்துக்குப் போகவில்லை. 

காரைக்குடியில் கணிப்பொறி நிலையத்தில் வேலை பார்த்தபோதுதான் தினமும் இரவுக்காட்சி... ஆறு திரையரங்குகள்... பெரும்பாலும் ரிலீஸ் செய்யப்படும் படங்கள்... எப்படியும் போய் விடுவோம். படம் பார்க்கச் சலிப்பதேயில்லை... பாரதி கண்ணம்மாவெல்லாம் இருக்கை இல்லாமல் கடைகள் இருக்கும் வரண்டாவில் அமர்ந்து பார்த்தோம்.  

திருமணம் ஆகும் வரை சினிமாப் பார்ப்பதில் குறை வைத்ததேயில்லை... திருமணத்துக்குப் பின்னும் கூட சினிமா மீது ஆர்வம் அதிகம்தான்.  மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் சினிமாதான்... குடும்பத்தை விடுத்துச் சென்னையில் இருந்த ஆரம்ப காலத்தில் கிருஷ்ணவேணியும் ஸ்ரீனிவாசாவும் உதயமும் எங்கள் ஆஸ்தான் திரையரங்குகள்... உதயத்தில் முதல் 10 டிக்கெட்டுகள் 10 ரூபாய்க்கு கொடுப்பார்கள். சொர்ணாக்கா மாதிரி இருக்கும் ஒரு பெண்தான் அந்த டிக்கெட்டுக்களைக் கொடுப்பார்... உருட்டல் மிரட்டல் வேறு... பத்து ரூபாய் டிக்கெட்டில்தான் பாரிஜாதமெல்லாம் பார்த்தோம்... அறைக்குத் திரும்பியதும்தான் அண்ணாந்து பார்த்ததன் வலி தலையில் தெரியும்... இருந்தாலும் மறுமுறையும் பத்து ரூபாய் டிக்கெட்தான்.

ஸ்ரீனிவாசாவில் படம் பார்த்துவிட்டு வரும்போது அதே சொர்ணாக்கா போன்ற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாட்டியதும் அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னையும் நண்பனையும் விடாமால் பேசிக் கொண்டு நின்றதும், என்னை நிறுத்தி அவனைப் போய் பான்பராக் சரம் ஒன்று வாங்கி வரச் சொன்னதும்.... மறக்க முடியாத நினைவுகள்... அவரிடம் மாட்டிய அன்று இனி இரவுக்காட்சி என்றால் கூப்பிடு தூரத்தில் இருக்கும் கிருஷ்ணவேணிதான் என முடிவு செய்து அடுத்த இரண்டு நாளில் மீண்டும் ஸ்ரீநிவாசாவுக்குச் சென்றோம்.

அபுதாபி வந்த பின் சினிமாப் பார்க்க தியேட்டருக்குச் செல்வது குறைந்து விட்டது. எண்ணி ஐந்து படங்கள்தான் இந்தப் பத்தாண்டில் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். கணிப்பொறியில்தான் இப்போதெல்லாம் படம் பார்ப்பது என்றாகிப் போய்விட்டது. 

வேலை முடிந்து வந்ததும் சமையல், ஊருக்குப் பேசுதல் என்னும் அன்றாடப் பணிக்குப் பிறகான மணித்துளிகளை... அதாவது இரவு பதினொன்னறை வரை எழுத்தும் சினிமாவுமே காலம் கடத்தும் காரணிகளாய் இருக்கின்றன... இது நல்லதா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்... தொலையும் காலங்களைக் கடத்தும் படகுதான் இவை... ஆனால் இந்த தொலையும் காலத்தில் மனைவியின் பரிதவிப்பும் குழந்தைகளின் பாசமும்  சேர்ந்தே தொலைந்து கொண்டுதான் இருக்கின்றன... இவை திரும்பக் கிடைக்க இந்த வாழ்க்கை மீது வெறுப்புத்தான் வருகிறது. என்ன செய்ய... நம் தலையில் எழுதியது இப்படி என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

மொத்தத்தில் இந்த வாழ்க்கையில் எழுத்தில் என்ன சாதித்து விட்டோம் என யோசித்தாலும் சினிமாப் பார்ப்பதால் என்ன கிடைத்தது என யோசித்தாலும் விடை என்னவோ பூஜ்ஜியம்தான் எங்கள் வாழ்க்கையைப் போல. 

இங்கு அதிகம் பார்ப்பது மலையாளப் படங்கள் என்று சொன்னேன்... ஆம்... அவைதான் அழகிய கதைகளைக் கொண்டிருக்கின்றன... அடித்து நொறுக்கவோ... அபத்தமாகப் பேசவோ செய்யவில்லை... தமிழிலும் அவ்வப்போது நல்ல படங்கள் வருகின்றன என்றாலும் பெரும்பாலும் மாஸ், சாதீயம் பேசுதல் என ஒரு வட்டத்துக்குள்ளேயே நிற்கிறது தமிழ்ச்சினிமா... மலையாளம் இதையெல்லாம் தன் எல்லைக்குள் வரவிடாமல் அழகான சிறுகதைகளை அபரிதமான சினிமாவாக்கித் தருகிறது. எனக்கு இப்போது மலையாளப் படங்களே மனமகிழ்வைத் தருகிறது.

இப்போதெல்லாம் ஊருக்குப் போனாலும் தியேட்டருக்குப் போதல் என்பது குறைவு. பிள்ளைகளின் சந்தோஷத்துக்காகச் ஒன்றிரண்டு படங்களுச் செல்வதுண்டு. சொல்ல மறந்துட்டேனே தேவகோட்டையில் மூன்றில் ஒரு தியேட்டர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸாக மாறிவிட்டது.  மற்ற இரண்டில் ஒன்று இப்போதுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. இரண்டிலுமே ரிலீஸ் படங்கள்தான்  போடுகிறார்கள். என்ன டிக்கெட் விலைதான் எங்கள் ஊருக்கு அதிகம்... அதுவும் அஜித், விஜய்க்கெல்லாம் நானூறு ஐநூறு என்பதெல்லாம் ரொம்ப ஓவர். இவ்வளவு பணம் கொடுத்துப் பார்ப்பதெல்லாம் இருப்போருக்கே சாத்தியம். ஏசியை அமர்த்தி வைத்துவிட்டு இந்த விலை வாங்குவதெல்லாம் இறைவனுக்கே வெளிச்சம். 

என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது அப்போதும் இப்போதும் எப்போதும் நம்மை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. தொலைக்காட்சியில் ஒரே படத்தை எத்தனை முறை போட்டாலும் திரும்பத் திரும்ப பார்க்கத்தான் செய்கிறோம்.

சினிமா என்னும் ஜிகினா எப்போதும் மின்னிக்கொண்டேதான் இருக்கும்.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எழுத்தில் சாதனை பூஜ்ஜியம் இல்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா... ஹா.... ரொம்ப நன்றி அண்ணா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சினிமா...பல தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தியது.

Anuprem சொன்னது…

வியந்து படித்த அனுபவங்கள் ....

ஆனாலும் இடைஇடையே தங்களின் வலிகள் கடினமே ...


இதுவரை மொத்தமே 13 அல்லது 15 படங்கள் தான் சினிமா தியேட்டரில் பார்த்து இருப்பேன் அதனால் உங்கள் அனுபவங்கள் எனக்கு மிக வியப்பு ...

Yarlpavanan சொன்னது…

அருமையான எண்ணப் பதிவு