மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 9 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா

முந்தைய பகிர்வான 'ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப் பாணியில்தான் இருக்கும். எனது கதைகள் எல்லாமே அந்த வாழ்க்கையைத்தான் பேசும். எழுத்தாளர் / நடிகர் வேல. ராமமூர்த்தி ஒரு பேட்டியில் 'எனது சிறுகதைகள் எங்க ஊர் கண்மாயைத் தாண்டி வெளியில் செல்லவில்லை... எழுதிய சொற்பக் கதைகளும் (25 என்று சொன்னதாய் ஞாபகம்) எங்க ஊருக்குள்ளயே சுற்றி வந்தவைதான்' என்று சொல்லியிருந்தார். அப்படித்தான் என் எழுத்தும் எங்கள் ஊருக்குள் மட்டுமே சுற்றவில்லை என்றாலும் பெரும்பாலும் கிராமத்து வாழ்க்கையையே பேசும்.

அப்படிப் பேசிய எனது தொடர்கதைகளான 'கலையாத கனவுகள்', 'வேரும் விழுதுகளும்',' நெருஞ்சியும் குறிஞ்சியும்' பலரால் பாராட்டப்பட்டன. இதை பெருமைக்காக சொல்லவில்லை... என் எழுத்து எங்கிருந்து வந்ததோ அதே பாணியில்தான் பயணிக்கிறது... அதில் பழைய காலம் மாதிரி எழுதாதே என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை... எழுத்தில் என்ன பழமை... புதுமை... எனக்குப் புரியவில்லை. வார்த்தைகளில் நவீன யுகத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றம் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கதையோ...கட்டுரையோ... கவிதையோ... சினிமா விமர்சனமோ... அது எதுவாகினும் வாசிப்பவரை ஈர்க்க வேண்டும். அதை எனது எழுத்துச் செய்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

அப்படித்தான் 96 படத்திற்கான விமர்சனம் எழுதிய பின்னர் 'ஜானுவின் கடிதம்' எழுதப்பட்டது. முழுக்க முழுக்க நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசித்து எழுதப்பட்ட பகிர்வு அது. முதலில் முகநூலில்தான் பகிரப்பட்டது, பின்னரே இங்கு பகிர்ந்தேன். முகநூலில் நிறையக் கருத்துக்களும் விருப்பக்குறிகளும்... முத்தாய்ப்பாய் 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்காவின் கருத்து இருந்தது.

அக்காவைப் பொறுத்தவரை என் எழுத்தை மட்டுமல்ல என்னையும் தம்பியாய் எப்போதும் நேசிப்பவர். எனது தொடர்கதைகளை வாசித்து தனிப்பட்ட முறையில் முகநூல் உள்டப்பியில் வந்து விரிவாகப் பேசி, உற்சாகமும் உத்வேகமும் கொடுத்தவர்... இப்போதும் கொடுப்பவர். அவரின் இந்த முகநூல் கருத்தை பதிவின் கருத்துப் பகுதியில் போடுவதை விட, தனிப்பகிர்வாக போட்டால் நல்லாயிருக்கும் என்பதாலே இந்தப் பகிர்வு.

அவர் புகழ்ந்த அளவுக்கு எல்லாம் பெரிய எழுத்தாளன் இல்லை என்றாலும் அதில் பாதியேனும் எழுதுவேன். பெரிய எழுத்தாளனாகி எல்லாரும் புகழணும் என்ற ஆசையில் எழுத ஆரம்பிக்கவில்லை... என் பேராசான்... எங்க ஐயா எழுதச் சொல்லி வற்புறுத்தியே எழுத வந்தவன் நான். எனது முதல் கவிதை யாருக்குமே கிடைக்காத வாய்ப்பாய் 'தாமரை'யில் வெளிவந்தது... இரண்டு பக்கத்தில் 'கல்லூரி மாணவன் எழுதிய கவிதை' என்ற அடைமொழியுடன்... ஜெயலலிதாவின் கட்-அவுட் கலாச்சாரத்தை எதிர்த்து எழுதப்பட்ட அந்தக் கவிதையின் தலைப்பு 'ஒரு கட்-அவுட் நிழலுக்கு கீழே'.

நான் எழுதியதும் முதலில் வாசிக்கக் கொடுப்பது ஐயாவிடமும் இன்னொரு நட்பிடமும்... ஐயா 'நல்லாயிருக்கு..' என்றவர் எனக்குத் தெரியாமல் தாமரைக்கு அனுப்பி வைக்க, அது வெளியானதும் என்னிடம் புத்தகத்தைக் கொடுத்து கவிதை வந்திருக்கு என்று சொன்ன அந்தநாள் எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது... அன்று ஐந்தாவது செமஸ்டர் ரிசல்ட்... காலையில் சரஸ்வதி திரையரங்கில் ரொம்ப நாளாக பார்க்க விரும்பிய 'ரத்தக் கண்ணீர்' படம் நண்பர்கள் சூழ பார்த்த நாள். அதன் பின் கதைகள், கவிதைகள் என நிறைய பத்திரிக்கைகளில் எழுதியாச்சு... எல்லாம் அந்த 50 ரூபாய் ஆசையில்தான்.. :)

இப்ப அதெல்லாம் விட்டாச்சு... மின்னிதழ்கள் விரும்பிக் கேட்பதால் எழுதிக் கொடுப்பதுதான் அதிகம்.. இது முழுக்க முழுக்க பாசத்துக்காகவே... ஸ்ரீராம் அண்ணன் கூட 'நீயே அனுப்ப மாட்டாயா... ஒவ்வொரு முறையும் நான் கேட்கணுமா...?' எனச் செல்லமாக கடிந்து கொண்டார். அப்படியும் அவர் கேட்கும் போதுதான் அனுப்ப முடிகிறது. இப்ப 'தேன் சிட்டு' மின்னிதழ் சகோதரர் 'தளிர்' சுரேஷும் அண்ணனைப் போலவே 'நீ அனுப்புறியா.. இல்ல வலைப்பூவில் இருந்து எடுத்துக்கவா' என உரிமையோடு கேட்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த மாதம் 'மனிதர்கள்' அவர் மின்னிதழில் வந்தது.

இதேபோல் நெல்லை பரணி இதழ் ஆசிரியர் மே மாதம் மின்னஞ்சல் அனுப்பினார் கதை வேண்டுமென... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் மறந்துவிட்டேன். சென்ற வாரம் 'படைப்புக் கேட்டேன் அனுப்ப மாட்டேங்கிறீங்க... உடனே எனக்கு ஒரு கதை வேண்டும்...' என ஞாபக மின்னஞ்சல் அனுப்பினார். அந்த அன்பிற்கு அனுப்பிக் கொடுத்தாச்சு. இதுதான் வேண்டும்... என் கதைகள் ஆஹா... ஓஹோ... என்றெல்லாம் நான் ஆடவில்லை... ஆனாலும் அது  படிப்பவருக்குப் பிடிப்பதால்தானே உரிமையோடு கேட்கிறார்கள்.

என் எழுத்து இப்படித்தான்.. தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்... கிராமத்துப் பாணியில் எழுதாதே... வட்டார வழக்கில் இருந்து வெளியே வா... அழுகாச்சி கதை எழுதாதே... என்றெல்லாம் சொல்லாதீர்கள். எனக்குத் தெரிந்ததில் எழுதுவதே ஆத்ம திருப்தி எனக்கு... அதில் மாற்ற விருப்பமில்லை... கிராமத்து வாழ்க்கை மென் சோகம் நிரம்பியதுதான் என்பதை வாழ்வில் அறிந்தவன்... வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

அக்காவின் கருத்து ஜானுவின் போட்டோவுக்கு கீழே...


ரு கடிதம் என்பது கதை போலில்லை. அதில் கற்பனைகள் இருக்காது. 

ஒரு ஆண்,ஆணாய் தன் மன நிலையை எழுத முடிவது போல், ஒரு ஆண், பெண்ணின் நிலையில் அவள் உணர்வுகளை எழுத்தில் வடிப்பது இயல்பாக வரக்கூடியதல்ல. பெண், ஆணாய் தனை உணர்ந்து எழுத முடிவது போல் ஆண்களால் பெண் மன நிலையை உணர்ந்து எழுத முடிவதில்லை. ஆனால் இக்கடிதமெனும் உணர்வில் கொட்டும் வார்த்தைகள் பெண்ணின் உணர்வை சொல்லும் நொடியில் என் கண்களும் கலங்கியது. 

நானும் ஜானுவானேன். எனக்குள்ளும் கடந்தகால நினைவுகள் உருண்டோடியது. 

ஜானுவிற்கும் மனம் உண்டு, அதில் நினைவுகளும் நிஜங்களும் மறைந்திருக்கும் எனும் ஜானுக்களின் உணர்வை எழுத்தாக்கி இருப்பது அருமை. 

சினிமாவில் காட்டப்பட்ட சம்பவங்களை வைத்து ஜானகி எனும் பெண்ணின் மன உணர்வுகளை, அவள் கடந்த கால நினைவு பெட்டகத்திலிருந்து பதின்ம வயதுக் காதல், நிகழ் கால வாழ்க்கை நிஜங்களிலிருந்தும், அவள் தன்னிலை மறவாமையிலிருந்தும், சமூகத்துக்கான கட்டுப்பாடுகளை அவளால் மீற முடியாத நிலையையும் எத்தனை அழகாக எடுத்து வைத்திருக்கின்றீர்கள் குமார். 

22 வருடங்களுக்கு முன் கடந்து போன நினைவுகள். இன்றைய தன் வாழ்க்கை தரும் கட்டுப்பாடுகள். அத்தனையையும் ஒரே கடிதத்தில்...

அப்ப்பப்பா எதை சொல்ல எதை விட? 

நீ இறக்கி விட்ட தருணத்தில் நான் இறந்து விட்டதாய் நினைத்தேன் எனும் ஒரே வார்த்தை போதும் அத்தனையும் உணர...... 

வார்த்தைகளில் சொல்ல முடியாத காதலை ஒவ்வொரு பெண்ணும் தன் உள்ளத்தினுள் பொக்கிஷமாய் பொத்தி வைத்திருப்பாள். 

உங்கள் வரிகளில் நானும் ஜானுவாய் மாறினேன்... 

ஜானுவைப் போல் வாழ்ந்தேன்....

ஜானுவாக உணர்ந்தேன்... 

எழுத்தென்பது வாசிப்போர் புரியாத மொழியில், விளங்கா நடையில் எழுதுவதில்லை. மனசோடு கரைந்து நம்மை அதற்குள் மூழ்க வைத்து, அழச்செய்து, அங்கே நாமாய் இருந்தால் எனும் உணர்வை உருக வைக்க வேண்டும். 

கிராமத்து எளிய மக்களின் வாழ்க்கை, வாசனை சொல்லும் கதையாகட்டும், கட்டுரையாகட்டும், கடிதமாகட்டும், இயல்பான வாழ்க்கையை எந்த வித பூச்சூடலும் இல்லாமல் அப்படியோ ஒன்றி எழுதுவது உங்கள் சிறப்புப்பா. 

சூப்பர்ப் குமார். 

அடுத்து பட நாயகன் உணர்வை எப்படி எழுதுவான் எனவும் உங்கள் பார்வையில் எழுதி விடுங்கள்.

நன்றி அக்கா... ராமின் கடிதம் விரைவில் உங்களுக்காக...

**************

சொல்ல மறந்துட்டேன்... இங்கு வாசிப்பை நேசிப்போம் என்று சொல்லும் 'தமிழ் வாசிப்பாளர் குழு' என்ற வாட்ஸ் அப் குழுமத்தில் இருக்கிறேன். புதிதாக 'கானல்' என்ற யுடியூப் சேனல் தொடங்கி... ஒவ்வொருவரும் வாசித்த கதை பற்றி பேச வேண்டும் என பட்டியல் போட்டு விட்டார்கள். நானெல்லாம் குழும கூட்டத்தில் கூட பேச மாட்டேன். இது நழுவ முடியாத ஒரு வலை... சரி பேசுவோமே என என் பேராசானின் கதையையே பேசியிருக்கிறேன். பாருங்க இந்தக் குழந்தையின் பேச்சு எப்படியிருக்குன்னு...



என் எழுத்தில் குறைகள் இருப்பின் சொல்லுங்கள்... கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன்... அதேபோல் எப்படி எழுத வேண்டும் என்பது என் விருப்பம் என்பதையும் சொல்லி விடுகிறேன். 
-'பரிவை' சே.குமார். 

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ஜானுவின் கடிதம் நிஜமாக மனதை மிகவும் நெகிழ்த்தியது. அதுதான் நிஷா அவர்களும் மிகவும் சிலாகித்து எழுதி இருக்கிறார்கள். ஸ்ரீராம் கேட்டேன்தான். ஆனால் அப்பப்போ அனுப்பினால் பரவாயில்லையே! இந்த நிஷா கடிதம் முதல் முறை எங்கள் பிளாக்கில் வெளியாகியிருக்கக் கூடாதா என்கிற பொறாமை வருகிறது!!!!

நிஷா சொன்னது…

ஓஹோ> அப்படின்னால் நீங்கள் கேட்காமலும் அனுப்பலாமோ?

நிஷா சொன்னது…

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகை எழுத்து வசப்படும். இதில் என் எழுத்து உசத்தி, உன் எழுத்து சொத்தி என தங்களை தாங்களே பெரிய மேதாவிகளாக்கி எப்போதும் குற்றம், குறை மட்டும் சொல்பவர்களுக்காக நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தால் அங்கே குமாரும், குமாரின் எழுத்தின் லாவகமும் இருக்காது. கிராமத்து வாசனையும் இருக்காது.

நவீன நாகரீகத்தை எழுத எல்லாராலும் முடியும். கிராமத்து மண் வாசனையை, பேச்சு மணம் மாறாமல் கொண்டு வர கிராமத்து வாழ்க்கையை மனமார உணர்ந்தவனால் தான் முடியும்.

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாரம் முதல், இளையராஜாவின் இசையுடன் வெற்றிபெற்ற பாடல்கள் வரை கிராமத்து மண் வாசனையை சொல்லி சென்றதாகவே இருக்கும். ரஹ்மானின் சின்ன சின்ன ஆசை ப்பாடலிலும் கிராமத்தின் வாழ்க்கை தான் ஆசையாக்கப்பட்டிருக்கும். நகரத்து வாழ்க்கை சொன்ன சினிமாக்களை விட கிராமங்களை வைத்து சினிமா எடுத்த வர்களே புகழடைந்தார்கள். கிராமங்கள் எங்கள் ஆதாரங்கள். கிராமத்து வாழ்க்கையும், எழுத்தும் எங்கள் உயிர்ப்புக்கள். அவைகளை நாங்கள் ஆவணப்படுத்த உங்களை போன்றோரின் எழுத்துகள் களமாகட்டும்.

கண்ணதாசன் ஒரு கல்லூரி விழாவுக்கு போனாராம், தான் எழுதிய கவிதையை கல்லூரி மாணவனிடம் கொடுத்து மேடையில் வாசிக்க சொல்லி விட்டு, மாணவன் எழுதி இருந்ததை தான் வாசித்தாராம். மாணவன் கண்ணதாசனின் கவிதை வாசிக்கும் போது கப்சிப் என சபையில் சத்தமே இல்லையாம். கவிதை வாசித்து விட்டு மாணவன் மேடை விட்டு கீழிறங்கியதும் கண்ணதாசன் , மாணவனின் கவிதையை மேடை ஏறி கவிதை வாசித்தாராம்.

மேடை அதிரும் படி கரகோசம் கேட்டதாம், கண்ணதாசன் சொன்னாராம், எனக்கு தான் நீங்கள்கை தட்டினீர்கள் என் எழுத்துக்கல்ல . என் எழுத்து தோற்று விட்டது . இந்த நிகழ்வு உண்மையோ பொய்யோ,இன்றைய உலகில் படைப்புக்களுக்கு மதிப்பில்லை.

படைத்தவன் யாரென்பதை வைத்து தான் அவன் திறமைகளும் போற்றப்படுகின்றது. எழுதியவர் இன்னார் என்பதை வைத்தே எழுத்தில் என்ன இருக்கும் என வாசித்து புரிந்திடாமல் லைக் போட்டு செல்வோர் இங்கே அனேகர்.

இப்படியானவர்களை குறித்தும் கும்பலில் கோவிந்தா போடுவோரை ரசிகர்களாக வைத்திருப்போரின் விமர்சனங்கள் குறித்தும் கவலைப்பட்டு எங்களை நாங்கள் தாழ்த்தி கொள்ள கூடாது.

குமாருக்கென இருக்கும் தனித்தன்மையை, எழுத்து திறமையை உலகம் ஒரு நாள் புரிந்து கொள்ளும். அதுவரை உங்கள் இயல்பை தொலைக்காமல் எழுதுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அக்கா...

எங்கள் ப்ளோக் வலைப்போவில் செவ்வாய் கிழமை நமக்கான நாள்.. கேட்டு வாங்கி போடும் பகிர்வுகள்..

தலைப்பே அப்படி என்பதால் நானெல்லாம் கேட்டால்தான் கொடுப்பது... :)

கில்லர்ஜி, துரை. செல்வராஜூ ஐயா அப்படின்னு நிறைய ஜாம்பவான்கள் அடிச்சு ஆடுறாங்க.

நீங்களும் தட்டி விடுங்க சொல்லுறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

விரிவான கருத்துக்கு நன்றி அக்கா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பாணியை மாற்றவேண்டாம், பிறருக்காக மாறவேண்டாம். உங்கள் எழுத்தை ரசித்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். தொடருங்கள். வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றி அய்யா..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

நானும் முகநூலில் வாசித்தேன் குமார். பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். காதல் கைகூடாவிட்டால் எவ்வளவு வலி! விரிவாகக் கருத்திட அத்தருணத்தில் முடியாமல் போனால் விட்டுப்போகிறது, வருத்தம் தான் எனக்கு. நிஷா அருமையாக எழுதுவார், பாராட்டுவார்..அவரின் பதிவுகளைப் பார்த்து வியந்துதான் போவேன். அன்பானவர். இப்படி பதிவுலகம் கொடுத்த நட்புகள் ஒரு வரமே!
உங்கள் எழுத்துப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் குமார். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.