மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 23 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்

மிழ்மொழியின் அடையாளமாக இன்றும் தொடர்ந்து நிற்பது பண்பாட்டின் வெளிப்பாடு என்று மோகன சுந்தரம் பேசி முடித்ததும் மேடைக்கு அழைக்கப்பட்ட இசைக்கவி. திரு. ரமணன் அவர்கள் திரைக்கவிஞர்களின் ஆளுமை என்ற தலைப்பில் பேச கணீரென்ற தனது வெண்கலக் குரலில் பேச்சை ஆரம்பித்தார். 

ஆரம்பத்திலேயே 'இசைக்கவி ரமணன் அவர்களை அடுத்த முறையும் பாரதி நட்புக்காக விழாவில் பேச வரும்படி அன்புடன் அழைக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டார். வந்தவர்களையே திரும்பத் திரும்ப அழைக்கிறார்கள் எப்படியும் என்னையும் திரும்ப அழைப்பார்கள் என்றார். இதையே யுகபாரதி பேசும் போது சொன்னார்.


பதினைந்து நிமிடம் இருக்கு முதலில் ஒரு பாட்டுப் பாடுறேன்... அப்புறம் இரண்டாவதா ஒரு பாட்டுப் பாடுறேன்... அப்புறம் மூன்றாவதாக ஒரு பாட்டுப் பாடுறேன் என்று சொல்லி, தன் சக பேச்சாளர்கள் பற்றி சில வரிகள் சொல்லி பேச்சைச் தொடர்ந்தார். சினிமாப் பாடல்கள் எல்லாமே நல்ல பாடல்கள்தான் என்றவர் சில அப்படியிப்படியான பாடல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறேன் என்றார்.

முதலில் 'எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே...' என்ற வரிகள் வரும்படியான பாடலைப் பாடினார். பாடலின் வரிகளிலும் அவரின் கணீர்க்குரலிலும் லயித்துப் போன பார்வையாளர்கள் பக்கமிருந்து பாடலுக்கு ஏற்றபடி கைதட்டல் ஆரம்பமாக, அவருக்குள் ஒரு உற்சாகம்... அரங்கம் அவர் பாடல் வரிகளுடன் அழகிய கைதட்டல் இசையால் நிரம்பியது.

'அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்...' என்ற பாரிமகளிர் பாடல் குறித்துப் பேசி... அதை விவரித்து, சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்படும் வரிகளை கவிஞர்கள் கையாளும் போது அது சுலபமாக கேட்பவர் மனதுக்குள் இறங்கிவிடுகிறது என்றவர் இந்த அற்றைத் திங்களை வைரமுத்து தனது நறுமுகையே நறுமுகையே பாடலில் பயன்படுத்தியிருப்பது குறித்துப் பேசினார். திருநாவுக்கரசர் பாடிய தேவரப்பாடலான 'குனித்த புருவமும் கோவைச் செவ்வாயும்' பாடலை வாலி தளபதி படத்தில் ராக்கம்மா கையத்தட்டுக்குள் வைத்தபோது இந்த குனிந்த புருவம் எல்லாருடைய வாயிலும் சுலபமாய் விளையாடியதை நாம் அறிவோம் அல்லவா.

பின்னர் யுகபாரதி எழுதிய பாடல்கள் குறித்து பேசினார். ஒரு அருமையான பழைய பாடலைச் சொல்லி இதை எழுதியது வாலியா, கண்ணதாசனா என்று தெரியவில்லை என்று சொன்ன போது அது கண்ணதாசன்தான் என்றார் தமிழருவி. 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலை அழகாகப் பாடினார்.

பாரதி குறித்துப் பேசினார்... பாரதியின் பாடல்வரிகளைச் சொன்னார். மிக அழகாகப் பாடினார். என்ன குரல் வளம்... அப்பா... இசையோடு இசைக்கவி பாடியிருந்தால் எழுந்து வரவே மனமிருக்காது. நேரம் முடிந்து சில நிமிடங்களிலேயே அடுத்த முறை தொடரும் என முடித்துக் கொண்டார்.

அவர் பேசி முடித்ததும் டிஎம்எஸ்சும் எஸ்பிபியும் சேர்ந்து பாடியது போல் இருந்தது. என்ன அருமையான குரல் வளம், வாலி சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது என தோல்வியோடு திரும்ப நினைத்த போது அவரின் வாழ்வை மாற்றியது இந்த மயக்கமா கலக்கமா பாடல்தான் என்றும் நினைவு கூர்ந்த தமிழருவி, அடுத்ததாக பர்வீன் சுல்தானா அவர்களை பழஞ்சுவை இலக்கியம் என்ற தலைப்பில் பேச அழைத்தார். உங்கள் அன்பிற்குப் பாத்தியமான என்று தமிழருவி சொல்லும் போதே தெரிந்து விட்டது பர்வீன் அவர்களுக்கு பதினைந்து நிமிட வரைமுறை இல்லை என்பது. அன்னைத் தமிழை வணங்கி தன் பேச்சை ஆரம்பித்தார்.


தமிழருவியை என் அப்பா என்றும்... இசைக்கவியை தேவதச்சன் என்றும்.. மோகன சுந்தரத்தை என் சகோதரர் என்றும் அழைத்தவர் ஐந்தாவது முறையாவது தமிழை சரியாகப் பேசிவிடமாட்டாளா என்னை அழைத்திருக்கிறார்கள் என்று சீண்டிப் பார்த்திருக்கிற, மன்மத ராசா என்ற பாடல் மூலமாக என் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகி கண்ணம்மா என்ற பாடலை எழுதியதன் மூலமாக என் அனைத்து மன்னிப்பையும் பெற்றுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரர் யுகபாரதி அவர்களே என்று அவையைச் சிரிக்க வைத்து  மன்மதராசா அவருக்கு பெயரையும் பணத்தையும் கொடுத்தாலும் தன் மகளைப் பாடுபொருளாக்கி கண்ணம்மா என்ற பாரதியின் வரியையும் வைத்து எழுதிய பாடல் அவருக்கு புகழைத் தந்திருக்கிறது. அவர் நிரந்தரமான புகழுடன் இன்னும் நல்ல பாடல்கள் எழுத இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

அதன் பின் பழஞ்சுவை இலக்கியம் குறித்து கொஞ்ச நேரம் பேசுகிறேன் என தமிழுக்குள் அமிழ்ந்தார். அவை அமைதியை அந்தத் தமிழைப் பருகியது. எனக்கு ரெண்டு , மூணு, நாலு மொழிகள் தெரியும் என்ற போது தமிழருவி அவர்கள் ரெண்டா, மூணா, நாலா என இடையில் புக, அவையில் சிரிப்பொலி எழுந்தது. தமிழ் தவிர்த்து ஆங்கிலம், இந்தி, உருது, அரபி என நான்கு மொழிகள் எனக்குத் தெரியும் என்றார்.

தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் இருக்கும் சிறப்பு என்ன என்றால் தாய்மொழி எல்லாருக்கும் சுகமானதுதான் பேசினால் இனிமையாக இருக்கும் ஆனால் தமிழ்மொழி மட்டும்தான் மற்றவர் பேசக் கேட்க மிகவும் சுகமாக இருக்கும். தாய்மொழி உயிர்ப்பைத் தரும் உயிரைத் திருப்பித் தரும் என்றார்.

இங்கு பேசியவர்கள் எல்லாரும் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்துதான் தரவுகளை எடுத்துத் தந்தார்கள். ஏன் தலைவர் கூட சங்க இலக்கியத்தில் இருந்துதான் தனது பேச்சை ஆரம்பித்தார். எனவே நாம் அனைவரும் சென்று சேர வேண்டிய புள்ளி பழம்பெரும் இலக்கியங்கள்தான் என்றார்.

'செல்லாமை உண்டேல்...' என்னும் குறளைச் சொன்னவர் இது தமிழில் இருப்பதால் நமக்குப் புரியலை... கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொன்னால் புரியும் என்ற போது சிரிப்பலை எழ, நான் வெளியில் செல்கிறேன் விரைவில் திரும்பி வந்துருவேன் என மனைவியிடம் சொல்லும் போது அந்தம்மாவின் பதில்தான் குறள்... போகமாட்டேன்னா எங்கிட்டே சொல்லு நீ வருவேன்னு சொல்ற அந்த வள்வரவை எவ நீ திரும்பி வரும்போது இருப்பாளோ அவளிடம் சொல்லு என்றாளாம்.

சிம்மமாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் தமிழருவி மணியனைத்தான் உங்களுக்குத் தெரியும். சிறுவயதில் இருந்து அவரை அறிந்த எனக்குத் தெரியும் அவர் ரசனையான மனிதர் என்பது. கண்ணதாசனைப் பற்றி அவரைப் பேசச் சொல்லிக் கேளுங்கள்... அவரின் ரசனை புரியும் என்றார்.

அம்மா உன்னோட டேட் ஆப் பெர்த்தைக் காட்டு என அவரின் மகன் கேட்டதாகவும் ஏன்டா எனக் கேட்ட போது பழசை எல்லாம் ரசிக்கிறே என்றானாம். அவனிடம் பழந்தமிழ் இலக்கியமெல்லாம் இல்லாமப் போச்சு... அதை நாம் அப்படியே விட்டுவிட்டால் தமிழ் இல்லாது போகும் என்றார்.

அப்துல் ரஹ்மான் பற்றிப் பேசும் போது ஒரு சாடியில் இருந்த காதலன் தன் காதலியை அணைத்து முகத்துக்கு அருகே முகம் வைத்த ஓவியத்தைப் பார்த்து கீட்ஸ் என்னும் கவிஞன் எழுதியதை மொழிபெயர்த்த கவிக்கோ துணிச்சலான காதலனே என ஆரம்பித்து நீ உன் இலக்கை நெருங்கிவிட்டாய்... ம்ஹூம்... நீ ஒரு போதும் நெருங்கவே மாட்டாய்... வருத்தப் படாதே காதலனே... உன் காதலி ஒளி மங்கவே மாட்டாள் என்று எழுதியதைச் சொல்லிச் சிலாகித்தார்.

2004ம் ஆண்டில் நாற்பத்தி ஓரு இலக்கியங்கள் செம்மொழி இலக்கியமாக அறிவிக்கப்பட்டது அது எதுன்னு கேட்டா ரொம்பப் பேருக்குத் தெரியாது. பதிணென் கீழ்க்கணக்கு, பதிணென் மேல்கணக்கு மொத்தம் முப்பத்தியாறு அதுபோக மணிமேகலை, முத்தொள்ளாயிரம், தொல்காப்பியம், இறையனார் களவியல்,சிலப்பதிகாரம் என மொத்தம் நாற்பத்தி ஒன்று என்றார். மேலும் புறம் சார்ந்த 400 என்பது தொகுப்பாளர்கள் தொகுத்தது என்றாலும் ஒரே சமயத்தில் எழுதியது இல்லை. 600 ஆண்டு காலமாக எழுதியதை தொகுத்தவன் தமிழன்தான் என்றார்.

வீரம் என்றால் வன்முறை என்பதைத்தான் நாம் குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறோம் அதுவா வீரம் என்றார்.

யாரோ ஒருவர் காட்டும் காட்சியை விட நாமே ஒரு காட்சியைப் படைப்பதுதான் சுவை என்றார்.

Image may contain: one or more people and crowd

வீரம் பற்றிப் பேசும் போது யானையை வேலால் தாக்கிய வீரன், வேல் தாக்கிய போதும் தன்னை நோக்கி வரும் யானையை வீழ்த்த இன்னுமொரு வேல் வேண்டுமே என்று நினைத்தவன் ஆஹா வேல் கிடைச்சிருச்சி என சந்தோஷப்பட்டு அதைப் பிடுங்கி... எங்கிருந்து தன் மார்பில் இருந்து பிடுங்கி எறிந்தானாம் இதுதான் வீரம் என்றார்.

முத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் போரில் வெற்றி பெற்று உவகை சிந்த வந்த போது  தனது அரண்மனை வாசலில் யானை மேல் ஒரு வீரன் , நாக்கை மடக்கியபடி வேலெறிய முயன்ற நிலையில் செத்துப் போய் நின்ற வீரனைப் பார்த்து தோற்றான் போல் நின்றான் என எழுதினான் பாரு... அவன் ஜெயித்தான்... அதுதான் அறம் என்றார்.

அன்பு பற்றிச் சொல்லும் போது பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுங்கள். மனைவி என்பவள் ஒரு பெண் மட்டும் அல்ல... அவளின் சக்தி நிலையைப் பேசக் கூடிய இலக்கியங்கள்தான் தமிழ் இலக்கியங்கள் என்றார்.

சிலர் மனைவியை எங்கு போனாலும் மனைவியைக் கூட்டிப் போவார்கள் என்றதும் அரங்கில் சிரிப்பொலி.... காரணம் தமிழருவி அவர்கள் மனைவியுடன் வந்திருந்தார். பர்வீன் சுல்தானா அவர்கள் தொடர்ந்து பேச மணி ஒலித்தது போல் ஒரு சப்தம், உடனே நான் முடிச்சிடுறேன் என்றார். நான் இருமினேன் அம்மா என தமிழருவி அவர்கள் சொன்னதும் அரங்கில் மீண்டும் சிரிப்பொலி. 

பரணியிலக்கியம் சொல்லும் கதையைச் சொன்னார். ஒரு வீரன் போர்க்களத்துக்கு தன் மனைவியைக் கூட்டி வந்து பாசறையில் இருக்க வைத்திருக்கிறான் என்ற போது நான் சொல்லப் போற பெண்தான் உங்களுக்காக உங்கள் வீடுகளில் காத்துக்கொண்டிருக்கும் பெண் எனவே எத்தனை நேரமானாலும் இன்னைக்குப் போன் பண்ணிடுங்க என்றார்.

கதையைத் தொடர்ந்தவர் தன் கணவன் மீது எதிரி வீரன் எறிந்த வேல் பாய்ந்த போது என ஆரம்பித்து இப்படியெல்லாம் எப்படியய்யா ஜெயங்கொண்டான் எழுதினே... நான் வியந்து போனேன்யா... என்று சொன்ன போது குரல் கம்மியது. அத்தனை வியப்பு அவருக்குள். கதை கேட்கும் ஆவல் நமக்குள்.

தன் கணவன் மீது வேல் பாய்ந்ததும் ஓடிப் போயி அவனைத் தாங்கிப் பிடித்தவள் அவன் சாகும் முன் தன் உயிரைத் துறந்தாள். இது காட்சி... இதை ஜெயங்கொண்டாஎ எழுதியதை வியந்து மண் பெண்தானே... எங்கே அவள் தழுவி விடுவாளோ என அவள் தழுவி இறந்து அவனுக்கு முன்னே உயிரைக் கொடுத்தாள். மேலோகத்திற்குப் போனால் பெண்கள் தன் கணவனைத் தழுவி வரவேற்ப்பார்கள் என்பதால் அவர் விரைந்து விண்ணுலகம் சென்றதாகவும் எழுதியிருப்பதாகவும் சுவையுடன் சொன்னார்.

காதல் பாடல்களை எழுதுபவர்கள் பழம் பாடல்களில் இருந்து எடுத்து எழுதும் அதை மட்டுமில்லாது அதன் சுவையையும் அறத்தையும் சேர்த்தே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

குற்றாலக் குறவஞ்சி எனக்குப் பிடிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று சொன்னவர் 'வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு...' என்ற பாடலை விளக்கும் போது குரங்கு தனது தாயாக, காதலியாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் மந்திக்குப் பழங்களைக் கொடுத்துச் சாப்பிட்ட பாடலையும் குற்றாலச் சாரல் தென்காசியில் விழுவதையும் அவ்வளவு சுவையாகப் பேசினார்.

அன்பு செய்பவன் இருந்து விட்டால் பெண்களுக்கு ஒரு திமிர் இருக்கும். அந்த திமிரை ஏற்றுக் கொள்பவர்கள்தான் அன்பில் அறம் காண்கிறார்கள் என்ற போது கைதட்டல் அடங்க அதிக நேரமானது.

நாம சரியான சுவையைக் கொடுக்காததால் தான்  சுவையை இழந்து நிற்கிறோம் என்றார். தேனருவி, தமிழருவி, நீர்வீழ்ச்சி என எல்லாம் பேசினார்.

நேரமின்மை காரணமாக தன் பேச்சை விரைந்து முடித்ததால் தமிழ்சுவை அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த தமிழின் சுவை இன்னும் மனசுக்குள்.

மிகச் சிறப்பான ஒரு நிகழ்வு... பாரதி நட்புக்காக அமைப்புக்கு நன்றி. உங்களது தமிழ்ப்பணி தொடரட்டும். எப்போதும் சொன்ன நேரத்தில் ஆரம்பிக்கும் பாரதி நட்புக்காக அமைப்பு இந்த முறை ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பித்தார்கள். கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களைச் சொன்னதில் குழப்பம், அவர்களின் பெயரைக் கூட சரியாக அறிவிக்காதது போன்றவை கவிஞர்களுக்கு அதிருப்தி கொடுத்தது என கலந்து கொண்ட நண்பர் சொல்லியிருந்தார். அடுத்த முறை இவை எல்லாம் களையப்பட்டு பாரதி சிறப்பான விழாவை நடத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நன்றி.

படங்களுக்கு நன்றி : சுபஹான் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

அருமையான பதிவு! சிறப்பு!

ராஜி சொன்னது…

பொதிகையில் ரமணன் சார் பாடுவதை கேட்டிருக்கேன். அவர் குரல் கணீர். ஆனா பேசும்போது மட்டும் நெகிழ்ந்துடும்

Tamilus சொன்னது…

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விழ பற்றி சிறப்பாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குமார்.