மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 20 அக்டோபர், 2017

பேச்சிலர் ரூம்...

Related image

வெளிநாட்டு வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு இந்த பேச்சிலர் அறைக்கு உண்டு. ஊரில் திருமணம் ஆகவில்லை என்றால் பேச்சிலர் என்போம்... கல்யாணம் ஆனவன், ஆகாதவன், பேரன் பேத்தி எடுத்தவர் என  குடும்பம் ஊரில் இருக்க இங்கு  வேலைக்கு வருபவர்கள் எல்லாருமே பேச்சிலர்ஸ்தான்... அவர்கள் தங்கும் அறைகள் பேச்சிலர் ரூம்தான். ஒரு பெட் மட்டுமே இந்த அறைகளில் நமக்கான சொத்து... அதுவே போதுமானதாய்... அதற்கான மாத வாடகை சாதாரண அறை எனில் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 12000 முதல் ரூ. 15000.  அதுவே ரெண்டு பேர் மட்டும் தங்கும் நல்ல அறை எனில் ரூ.25000 முதல் ரூ.40000 வரை. எல்லா இடங்களிலும் பேச்சிலர் அறை வாடகைக்கு இருக்கு.. இன்ன வாடகை, இணைய வசதி உண்டு, வாசிங்மெஷின் இருக்கு, சமையல் செய்யலாம் என்ற விளம்பரம் ஒட்டப்பட்டிருக்கும். இப்போது ஒட்டினால் உடனே கிழித்து விடுகிறார்கள். தூய்மையான நகரம் என்ற  காரணத்தினால்... அமீரகத்தில் அதிக வாடகை அபுதாபியில் மட்டுமே... இப்போது எல்லா இடத்திலும் வாடகை குறைக்கப்பட்டாலும் அபுதாபியில் மட்டும் அப்படியே.

இந்த பேச்சிலர் அறைகள் ஆயிரத்தெட்டு கதைகள் சொல்லும்... சந்தோஷங்களையும் துக்கத்தையும் அழுகையையும் வேதனையையும் ஒரு சுமக்கும் அறைகள் இவை. ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து மனிதர்களைச் சுமக்கும் அறைகள் இவை. நான் இங்கு வந்தது முதல் எட்டு வருடங்கள் சொந்தங்களுடனும் சில பக்கத்து மாவட்ட நண்பர்களுடனுமே தங்கியிருந்தேன். உறவுகளுடன் இருப்பது பல வகையில் உதவியே என்றாலும் சில வகையில் நிறையச் சிக்கல்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது... என்னிடம் நல்லது பேசி, ஊரில் மலையென நம்மீது அவதூறுகளை பரப்பி வந்த போதும்... வேறு அறைக்குச் செல்லுங்கள் என குடும்பத்தில் சொன்ன போதும்... உறவுகளற்ற பாலையில் இருக்கும் சில உறவுகளோடு வாழ்தல்தான் நல்லது என்பதாலும்... ஏதாவது ஒன்று என்றால் உறவுகள் முன்னிற்குமே என்பதாலும்... பெருங்குடும்பத்தில் பிறந்து பெருங்குடும்பத்தில் பெண்ணெடுத்த நமக்கு இந்த ஊரில் உறவென்று சொல்லக் கிடைத்த மனிதர்கள் இந்த நாலைந்து பேர் மட்டுமே என்பதாலும்.... அவர்கள் புறம் பேசினால் அதனால் நமக்கென்ன வந்தது என்பதாலும் கிட்டத்தட்ட நாலு வருடத்துக்கு முன்பு ஆரம்பித்த பிரச்சினைகளை மேலும் நாலு வருடங்கள் பொறுமையாய்க் கடந்து பொறுக்க முடியாத ஒரு தினத்தில்... ஆறு மாதம் முன்னர் முற்றிலும் புதியவர்களின் அறைக்கு வந்தேன்... இந்தச் சிறிய அறையில் மனிதர்கள் மனிதர்களாய் இருப்பது சிறப்பு.

முதன் முதலில் தங்கியது ஒரு பெரிய வீட்டில்... ஆறாவது தளத்தில் 602ம் நம்பர் எண் கொண்ட அந்த வீடு ஒரு பெரிய ஹால், மூன்று பெட்ரூம்... இரண்டு டாய்லெட், கிச்சன், பால்கனி என அழகாக இருந்தது. அதில் முதல் அறையில் நாங்கள் ஒன்பது பேர்... மற்ற இரு அறைகளில் மலையாளிகள்... ஹாலில் ஒரு பெரிய டேபிளும் பத்துச் சேர்களும் இருக்கும். வார விடுமுறை தினத்தில் அங்குதான் மலையாளிகளும் எங்க ஆட்களும் காசுக்கு சீட் விளையாடுவார்கள்... தண்ணியும் சீட்டும் விறுவிறுப்பாக இறங்க, அது பெரும்பாலும் அடிதடியில் முடியும். கொஞ்ச நேரத்தில் 'மச்சான்' என மலையாளி வர, எங்க ஆட்களும் 'மச்சான்' போட மீண்டும் சிகரெட், தண்ணி, சீட்டாட்டம் என இரவு வரை தொடரும். தீபாவளி, பொங்கல் என்றால் நாங்களும் மலையாளிகள் பண்டிகைக்கும் ரம்ஜானுக்கும் அவர்களும் சமையல் செய்ய எல்லாரும் ஹாலில் அமர்ந்து சாப்பிடுவோம். எல்லோருக்குள்ளும் ஒரு நேசம் இருந்தது. மலையாளிகள் தண்ணி அடித்து விட்டு செய்யும் அலப்பறைகளை தினமும் ரசிக்கலாம். இரண்டு கிழவர்கள் தண்ணி அடிக்காத வரை பிரியமான நண்பர்கள்... அடித்த பின் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் சண்டையிட்டு கட்டி உருளுவார்கள். எங்க அறையில் தண்ணி அடிப்பவர்களால் அதிக அலம்பல் இருக்காது. வாரவிடுமுறையில் நண்பர்களும் உறவுகளும் வர, அந்த இரண்டு நாள் மட்டுமே அலப்பறைகளும் ஆட்டங்களும் அதிகமாக இருக்கும். அந்தக் கட்டிடத்தில் மூன்றாண்டுகள் இருந்தோம். பின்னர் அது இடிக்கப்பட இருந்ததால் வேறொரு கட்டிடத்துக்கு மாற வேண்டிய சூழல்... அறை தேடி அவசரத்துக்கு மிகவும் மோசமான ஒரு கட்டிடத்தில் மோசமான ஒரு அறையில் மூன்று மாதங்கள் ஓட்டினோம். கிச்சனும், வரண்டாவும் மழை பெய்த ஒட்டைக் கசாலைக்குள் நடப்பது போல் இருக்கும்.

மூன்றாவதாக மாறிய கட்டிடத்தில் ஹாலையும் அறையாக்கி வைத்திருந்தார்கள். இரண்டு அறைகளாக இருந்த ஹாலில் மிகச் சிறிய அறையில் நாங்க ஏழு பேர்... இரண்டு இரண்டாக மூன்று கட்டில்கள்..  நான் எப்பவுமே தரையில்தான் படுப்பேன் என்பதால் ஆறு பேருக்கு கட்டில்... இரண்ட இரட்டைக் கட்டிலில் கீழோ மேலோ படுக்கும் நபரைப் பொறுத்துத்தான் இருவரின் தூக்கமும் அமையும்... மேலே ஆட்டினால் கீழிருப்பவரின் தூக்கம் போகும்... கீழே ஆட்டினால் மேலிருப்பவரின் தூக்கம் போகும்... இதெல்லாம் சுக அனுபவம்தான் போங்க... இது இரண்டாவது தளத்தில் 203 என்ற எண் கொண்ட வீட்டின் ஹால் இரண்டு அறையாக மொத்தம் ஐந்து அறைகள்... இரண்டில் இங்கு இருக்கும் தமிழக சைவ ஹோட்டலில் வேலை செய்யும் நண்பர்கள்... ஒன்றில் மலையாளிகள்... மற்றொன்றில் எங்க உறவினரும் ஒரு ஏழெட்டுப் பேரும்... எங்க இரண்டு அறைக்கும் ஒரே சமையல்... ஒரு சமையல்காரர்... ஹோட்டல் நண்பர்களுக்கு ஒரு பாத்ரூம்... உறவினரின் அறை பெரியது... அதன் உள்ளேயே பாத்ரூம்... எங்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு பாத்ரூம்... மலையாளிகள் பாத்ரூமுக்குள் போனால் ஒரு மணி நேரமாகும்... தினமும் பிரச்சினைதான்... நாம் உள்ளிருக்கும் போது கதவைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் போது தட்டினால் சண்டைக்கு வருவார்கள். பெரிய சண்டைகள் எல்லாம் நடந்தது உண்டு. அடிக்கப் போனதும் உண்டு. உறவினர் தன் அறை நண்பர்களுடன் வேறொரு பக்கம் நகர, அவர்கள் இருந்த பெரிய அறைக்கு மாறினோம். அந்த அறையைப் பொறுத்தவரை எங்களால் ஒழிக்க முடியாமல் இருந்தது மூட்டை மட்டும்தான்... எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அது தன்னோட ஜாகையை மாத்திக்கவேயில்லை.  பெரிய அறை என்பதால்  வாடகையும் சின்ன அறையோடு ஒப்பிட்டால் அதிகம்... அதனைச் சரிக்கட்ட புதிதாய் மூவர் உள்ளே வர, எட்டுக் கட்டில் போக நானும் இன்னொரு நண்பரும் கீழே... ஸ்பிரே பாட்டிலில் டெட்டால் கலந்து வச்சிக்கிட்டு எங்களைச் சுற்றிலும் அடித்து வைத்து... இரவில் மூட்டைக் கடிக்கு வெளியே எந்திரித்து வந்து உக்காந்திருந்து... அடிக்கடி போர்வையை கொண்டு போய் உதறி... மீண்டும் டெட்டால் அடித்து.... உறங்கிய இரவுகள் கணக்கில் அடங்கா... மறக்க முடியாத இரவுகள் அவை.

பின்னர் அதிலிருந்து மாறி மற்றொரு கட்டிடம் போனோம்... புதுப்பிக்கப்பட்ட பழைய கட்டிடம்... நாலாவது தளத்தில் 404, இங்கும் ஹால்தான் அறையாகி இருந்தது... இங்கும் மலையாளியோடு பாத்ரூம் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் என்றாலும் பிரச்சினை இல்லாத மலையாளிகள்.... எட்டு மணிக்குள் நாங்கள் வேலைக்கு  கிளம்பி விடுவோம்.... பத்து மணிக்குத்தான் அவர்கள் குளிக்க ஆரம்பிப்பார்கள்... பிரச்சினை இல்லாமல் நகர்ந்தது... ஒரே ஒரு பிரச்சினைதான்... மலையாளிகள் எல்லாரும் சிகரெட் அடிப்பார்கள்... பாத்ரூமுக்குள் அடிக்கடி சிகரெட் பிடிக்கச் செல்வார்கள். அவர்கள் சென்று வந்தபின் நம்மால் நுழைய முடியாத அளவுக்கு நெடியிருக்கும்.. சொல்லிச் சொல்லிப் பார்த்து கோபமாகப் பேசினாலும் அவர்கள் அவர்களாகவே இருந்தார்கள்.  குறிப்பாக மூட்டைகள் இல்லா அறை என்பது இங்கு தமிழக அரசியலில் சுத்தமான அரசியல்வாதியை தேடுவது போல்தான்... இந்த அறையில் சுத்தமான அரசியல்வாதியைக் கண்டு கொண்டோம்... ஆம் மூட்டைகள் இல்லை... பெரிய அறை... மூலைக்கு ஒன்றாய் நாலு கட்டில் மட்டுமே... நான் மட்டும் தரையில்... கிச்சனும் பெரியதாய்....  கீழே இறங்கினால் சூப்பர் மார்க்கெட்... அருகே சினிமா தியேட்டர் என நல்லதொரு அறை...  நமக்குள் பரிமாற்றம் செய்ய வேண்டியவற்றை... சாதாரண பொட்டுவெடியின் மீது முடிந்தளவுக்கு நூல் சுற்றி அணுகுண்டாக்கி ஊருக்கு அனுப்பி பிரச்சினை மேகங்களை மழை பெய்யச் செய்ய... அதுவும் கடும் மழைக்கு வித்திட... போதும் சாமிகளா எனக் கிளம்பி சொந்தங்களற்ற அறைக்கு மாறினேன். அதுவும் 404தான்... அருகில் ஒரு பூங்காவும் உண்டு.

இதுவரை தமிழர்களுடன் மட்டுமே இருந்த நான், முதன் முதலாக தமிழர்களும் மலையாளிகளும் சம விகிதத்தில் இருந்த அறைக்குள் ஐந்தாவதாய் நுழைந்தேன். ஒன்பதாவது வருடத்தில்தான் கட்டிலில் படுக்கை... காரணம் சிறிய அறை... தரையில் ஆள் படுக்கும் அளவுக்கு இடமில்லை.... பத்துக்கு பத்து அறையில் மூன்று இரட்டைக் கட்டில்கள்... நம் கட்டில்தான் நம்மளோட பங்களா.... கட்டிலுக்கு கீழே என்னுடைய உடமைகளும் மேல் கட்டிலில் படுத்திருக்கும் நண்பரின் உடமைகளும்... பெரும்பாலான அறைகளில் சில காரணங்களால் வேற்று மதத்தினரை சேர்ப்பதில்லை... எங்கள் அறையில் நாங்கள் கலந்தே இருக்கிறோம்... அவர்களின் மத நம்பிக்கைகள் அவர்களுக்கு... நம் மத நம்பிக்கை நமக்கு. எங்கள் கட்டிலை ஒட்டி சிறிய அட்டைப் பெட்டியை சுவற்றில் அடித்து முருகனையும் லெட்சுமியைம் சிவனையும் தங்க வைத்திருக்கிறோம். பேச... சிரிக்க... சந்தோஷிக்க இந்த சிறிய அறைக்குள் இடமுண்டு. நல்லதொரு அறை... சிறிய அறை என்றாலும் மூட்டையில்லாத அறை என்பது சிறப்பு. எங்கள் வீட்டுக்குள் நாலு அறைகளில் பெங்காளிகள், மலையாளிகள், வடநாட்டுக்காரர்கள் என எல்லாரும் உண்டு.

அதிகாலை எழுந்து குளித்து சூரியன் வருமுன்னர் வேலைக்குச் செல்பவர்கள்... சூரியன் மறைந்த பின்னர்... பணி முடித்துத் திரும்பி குளித்து சமையல் செய்து ஊருக்குப் போன் பண்ணி... இப்போ ஸ்கைப், இமோ என நிறைய சாப்ட்வேர்கள் இருப்பதால் மணிக்கணக்கில் பேசி... தங்கள் மனபாரங்களை வெளியில் சொல்லாவிட்டாலும் கொஞ்சம் ஆசுவாசமாகி... சாப்பிட்டு... ஏதாவது ஒரு படத்தை... தமிழ் ராக்கர்ஸ்ன்னும் தமிழ்க்கன், தமிழ்யோகி ஆகியோரின் புண்ணியத்தில் வெளியான அன்றே பார்த்து... அதுவும் மெர்சல் ஊரில் வெளியாகும் முன்னரே மிகச் சிறப்பான தரத்தில் கொடுத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  எப்படியும் பதினோரு பனிரெண்டு மணிக்குப் படுத்து.... மறுநாள் எழுந்து... இப்படி இயந்திரத்தனமான வாழ்க்கையில் எல்லாருடைய வேதனைகள், வலிகள், வருத்தங்களையும் நாலு சுவற்றுக்குல் சுமந்து வருந்துபவை இந்த பேச்சிலர் அறைகளே.

இங்கு பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இல்லை... எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும்... ஊரில் இருந்து வரும் போன் சந்தோஷத்தை சுமந்து வந்தால் எல்லாரும் சிரித்து... சோகம் எனில் எல்லாரும் பங்கு கொண்டு... போன் பேசும்போது பேச்சு கோபமாய் திரும்பினால் ஆதரவு சொல்லி... ஏதோ சமைத்து... எல்லாருமாய்ச் சாப்பிட்டு... கேலி கிண்டல் என எல்லாமுமாய் நகரும் வாழ்க்கையைச் சுமக்கும் பேச்சிலர் அறைகளே இங்கு அதிகம்... ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஹாலைக்கூட அறையாக மாற்றி சம்பாதிப்பதில் மலையாளிகள் கில்லாடிகள்... அதேபோல் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒன்றோ அல்லது இரண்டோ வாட்ச்மேன்கள் (நாத்தூர் - அரபியில்) இருப்பார்கள்... இவர்கள் கூட பெரும்பாலும் மலையாளிகளாய் இருப்பார்கள். ஒரு அலுவலக மேலாளர் சம்பாதிப்பதைக் காட்டிலும் அதிகம் சம்பாதிப்பவர்கள் இவர்கள். இவர்கள் செய்யும் கெடுபிடிகள் பல நேரங்களில் கடுப்படைய வைக்கும். இப்போது இருக்கும் கட்டிடத்தில் பெங்காலி... எந்தப் பிரச்சினையும் இல்லாத நாத்தூர்...

தண்ணியடிக்காதவர்கள் இருக்கும் அறையில் தங்க இடம் கிடைப்பது அரிது. பெரும்பாலும் எவராவது ஒருவர் தண்ணி அடிப்பவராக இருப்பார். இங்கு வியாழன் மாலை கருப்புக் கவர்களில் ஆண்களும் பெண்களும் பாட்டில்களை அள்ளிச் செல்வார்கள். சிகரெட்டும் தண்ணியும் கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவையாகத்தான் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எங்க அலுவலக கட்டிடத்தின் கீழ்ப் பகுதிக்கு எப்போது வந்தாலும் ஒரு லெபனான் பெண் சிகரெட்டை ஊதிக் கொண்டுதான் நிற்கும். அது வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருப்பதை விட கீழ்த் தளத்தில் இருப்பதே அதிக நேரம் எனத் தோன்றும்... நாலு ஆண்களுடன் புகையில் கலை செய்து கொண்டிருப்பதை எப்போதும் பார்க்கலாம். எங்க அறையில் தண்ணி அடிப்பவர்கள் உண்டு. தினம் ஊற்றியவர் மூன்று மாதமாக தண்ணி அடிப்பதில்லை.... இருவர் எப்போதேனும் அடிப்பார்கள். அலம்பல் இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை பெரும்பாலும் கணிப்பொறியில் ஏதேனும் டைப் பண்ணிக் கொண்டே இருப்பதால் கட்டில்தான் வாழ்க்கை... இன்னைக்கு ஒருத்தர் இம்புட்டு எழுதுறியளே... எல்லாம் பத்திரிக்கைக்குத்தானே கொடுப்பீங்க.... மாசம் ஒரு பத்தாயிரம் கிடைக்குமா என காலையிலேயே கேட்டு என்னைச் சிரிக்க வைத்தார். கவலைகள், கஷ்டங்கள் இருந்தாலும் சின்னச் சின்ன சந்தோஷங்களைச் சுமக்கும் மனிதர்களுடன் இருப்பதும் ஒரு சுகமே.

நம்மவர்கள் ஆறு ஏழுபேர் ஒரு அறையில் என்றால் ஒரு பத்துக்குப் பத்து அறைக்குள் நாலு கட்டிலில் நாலு பிலிப்பைனி குடும்பம் வாழ்க்கை நடத்தும்... பாகிஸ்தானிகளோ பத்துக்கு பத்து அறையில் பதினைந்து பேர் தங்கிவிடுவார்கள். பாதிப் பேர் பகலில் வேலைக்குச் சென்றால் மீதிப்பேர் இரவு வேலைக்குச் செல்வார்கள். பிலிப்பைனிகளின் சமையல் முறைகள் கூட நம்மோடு ஒத்து வராது... நம் மசாலா வாசம் பிடிக்காத அரபிக்கு மசாலா இல்லாத  பச்சையாக வெந்து வேகாமலும் கொண்டு வரும் பிலிப்பைனி சாப்பாடு பிடிக்கும். அரபிப் பெண்களுக்கு பிலிப்பைனி பெண்களைக் கண்டாலே பிடிக்காது... இதன் பின் வேறோரு கதை இருக்கு... அது நமக்கெதுக்கு. எங்க அலுவலகத்தில் பிலிப்பைனி தோழிகள் சாப்பாட்டை திறந்தால் நான் வெளியாகிவிடுவேன். அந்த வாசம் நமக்கு ரொம்பத் தூரம்... இப்ப பிலிப்பைனிகள் கூட காரம் அதிகமிருக்கும் பிரியாணி ஆர்டர் பண்ணிச் சாப்பிட ஆரம்பிச்சிருச்சிங்க. அலுவலகத்தில் யாரேனும் பார்ட்டி கொடுத்தால் ஸ்பைசி பிரியாணி என கட்டுக்கட்டுபவர்கள் அவர்களாகத்தான் இருக்கும்.

மொத்தத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வரம் அல்ல... கிராமத்துக் கிழவிகள் சொல்வது போல் 'நாங்க வாங்கி வந்த வரம் இப்படி' என்று சொல்லிக் கொண்டு பேச்சிலர் அறைகள் பல கதைகளைப் பேசும்.... முடிந்தால் அந்த அறைகள் சொல்லும் கதைகளை அவ்வப்போது பார்க்கலாம் என்று சொல்லி பிரியாணி போடும் நண்பருக்கு உதவச் செல்கிறேன்... மத்தியானம் சாப்பிடணும்ல்ல...

குறிப்பு : போட்டோ எங்கள் அறையில் சுட்டதல்ல இணையத்தில் இருந்து சுட்டது.

-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

Avargal Unmaigal சொன்னது…

ஒர் இரவு இரயிலில் நாலு ஐந்து பேர்களுடன் சேர்ந்து பயணிக்கும் போதே அட்ஜட் பண்ண முடியாமல் பயணிக்கும் நமக்கு ஆண்டு முழுவதும் இப்படி பேச்சிலர் அறையில் வாழ்க்கை நடத்துபவர்களை கண்டால் வியப்பே ஏற்படுகீறது..பொறுமை மிகவும் அதிகம் வேண்டும் இப்படி தங்கி இருப்பதற்கு... மேலே உள்ள படத்தை பார்ந்து அதிர்ந்து போனது மட்டுமல்லாமல் மனது மிகவும் கனக்கிறது

ராஜி சொன்னது…

என்னாச்சு உங்களுக்கும், மனோ அண்ணாக்கும்... மனோ மூஞ்சி புக்குல பேச்சிலர் ரூம் பத்தி போட்டு கொல்லுதாரு. நீங்க இங்க புலம்புறீங்க

Angel சொன்னது…

மனம் கனத்தது அந்த புகைப்படத்தையும் பதிவையும் வாசித்து ...வெளி நாட்டு வாழ்க்கை குறிப்ப மிடில் ஈஸ்ட்டில் மிக கடினம்னு கேள்விப்பட்டிருக்கேன் :( ஆனா சில விஷயம் சிகரெட் புகை உற்சாகங் பான வாசம் இதெல்லாம் தாங்கவே முடியாதது இதையெல்லாம் இத்துனூண்டு ரூம்ல சகிச்சு பொறுத்து வாழுறதே பெரிய விஷயம் ..

KILLERGEE Devakottai சொன்னது…

எனது நினைவுகளை மீட்டி விட்டது நானும் இது குறித்து வெகுநாட்களாக எழுத நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
த.ம.+1

KILLERGEE Devakottai சொன்னது…

போட்டோவில் இருப்பது எல்லாம் பங்ஸ்சா ?

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார், மிக மிக வேதனையாக இருக்கிறது. பிரமிப்ப்பும் ஏற்படுகிறது இதை வாசித்த போது. எத்தனை துன்பங்கள். அதுவும் மூட்டையோடு வாழ்வதென்றால்...நினைக்கவே வேதனை.எத்தனை ரூம்கள் மாற்றங்கள்..உங்கள் எல்லோருக்குமே மிகவும் பொறுமை, பலவித மக்களோடு அட்ஜஸ்ட் செய்து வாழ்வது...என்று வாழ்க்கையின் அத்தனை சவால்களையும் கடக்கின்றீர்கள் பாடமும்கற்றுக் கொண்டுவிடுவீர்கள். எந்த ஒரு வாழ்க்கைக்கும், எந்த ஒரு சவால் துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும் சக்தியும், மனப்பக்குவமும் கிடைத்திடும் என்றே தோன்றுகிறது. உங்களுக்கும் நம் தள நண்பர்கள் துரை செல்வராஜு அவர்கள், இதற்கு முன் கில்லர்ஜி...என்று இன்னும் சிலர் இருப்பார்கள் என்று நினைக்கிறோம்...எல்லோருக்கும் வாழ்க்கைப்பாடங்களும்... வாழ்க்கையே சவாலாய்.மனது கனத்தாலும், போற்றுகிறோம் உங்களையும் நண்பர்களையும்..

vimalanperali சொன்னது…

ஒன்றைப்பெற ஒன்றை இழக்கிறோம்!

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

பதிவு சுவாரஸ்யமாக இருந்தாலும் மனது கனத்தது. வெளிநாட்டு வேலை என்றால் ஒவ்வொருவரும் ஒரு தனி ரூமில் வசதியாக இருப்பார்கள் என்றே இதுநாள் வரை நினைத்து இருந்தேன்.

ஸ்ரீராம். சொன்னது…

படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. என்னால் இந்த மாதிரி இடங்களில் சிலநாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. மதுரை சொல்லியிருப்பது போல ரயிலில் ஓரிரவு கழிக்கவே கஷ்டம் என்னும்போது இது எவ்வளவு சிரமம்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனம் கனத்துத்தான் போய்விட்டது நண்பரே
வெளிநாடுகளில் வசிப்பவர்களின் தங்குமிடங்கள் குறித்து தற்பொழுதுதான் அறிகிறேன்
தம+1

ஜோதிஜி சொன்னது…

எழுதிய உணர்வுகளை உள்வாங்குவது என்பது தனிக்கலை.

G.M Balasubramaniam சொன்னது…

சென்னையில் மான்ஷன் வாசமே கஷ்டம் என்று புலம்புவார்கள் இப்படியான வாழ்க்கை பற்றி ஊரில் இருக்கும் சொந்தங்களுக்குத் தெரியுமா அவர்களுக்கெல்லாம் கல்ஃபில் நிறைய சம்பாதிப்பது மட்டுமே தெரியும் கில்லர்ஜியிட ம் கேட்டது இங்கு கிடைத்து விட்டது நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

முதன்முதலாக 1980களில் சென்னைக்கு வேலைக்குச் சென்றபோது பேச்சிலர் ரூம் தேடி அலைந்து கிடைக்காமல் அவதிப்பட்டது நினைவிற்கு வந்தது. தங்களது இந்த பதிவு மனதில் அதிக தாக்கத்தை உண்டாக்கிவிட்டது.

யுவராணி தமிழரசன் சொன்னது…

படிக்கும்போதே போதும் போதும் என்றிருக்கிறது! மனது பாரமாகிறது!

நிஷா சொன்னது…

அக்கரைமாட்டுக்கு இக்கரை பச்சை என்பது போல் வெளி நாடு எனில் சொர்க்கம் என நினைத்துகொண்டு வாழும் பலருக்கு இந்த மாதிரி பதிவுகளை எழுதும் போதேனும் உண்மை புரியப்பட வேண்டும். இதுவும் இல்லாமல் இன்னும் பலர் இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். தனி ரூம் என்பது க்கும் முந்தைய காலத்தில் கேம்ப் போல் மொத்தமாய் அடைத்து வைத்து வாரமொருமுறை விடுமுறை கூட கொடுக்காமல் ஏழு நாட்களும் வேலை வாங்கி ஓய்வில்லாமல் உழைத்து தங்களை நிலைப்படுத்தும் பலரின் கண்ணீர் கதைகளை நான் கேட்டிருக்கின்றேன். ஐயோ என்றிருக்கும்.

மூட்டைப்பூச்சி அதீக வியர்வை, சுத்தமின்மையால் தானே உருவாகும்? எங்கள் ஊரில் இருக்கும் போது மரக்கதிரைகளுக்குள் குடி இஉர்க்கும் மூட்டைப்பூச்சிகளை குறித்து கேள்விப்பாட்டிருக்கின்றேன். நண்பகல் வெயிலில் காயப்போட்டால் செத்து விடும் என்பார்கள். அப்படி இல்லையோ குமார்?

தூரமாய் வந்தபின் சொந்தங்கள் தான் துணை எனும் மன நிலையிலிருந்தும் நாம் விடுபட வேண்டும் குமார். என் அனுபவத்திலும் சொந்தங்கள் என்பவர்கள் தூர தேசத்தில் தூரமாகவே தான் வாழ்வார்கள். மனதளவிலும் தூரத்தில் இருப்பதே நல்லது.

உண்மையை உரத்து எழுதவும் பேசவும் என்றும் தயங்கக்கூடாது குமார். இன்னும் எழுதுங்கள்.

நிஷா சொன்னது…

நேற்றெல்லாம் உங்கள் வலைப்பூ திறக்கவே முடியவில்லை.திரும்ப திரும்ப முயற்சித்தும் முடியவே இல்லை. இன்றுதான் பதிவு படிக்க கருத்திட முடிந்தது.

சேக்காளி சொன்னது…

செத்து விடும் தான். ஆனால் ஒரு அறையிலுள்ள அனைவரும் ஒரே சமயத்தில் தங்களது அனைத்து உடைமைகளையும் நண்பகல் வெயிலில் காயப் போடுவது என்பது சாத்தியமில்லை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அன்றே வாசித்துக் கருத்திட முயற்சித்தேன்..வரவில்லை போலிருக்கிறது. மனம் கனக்கிறது சகோ. நிலை முன்னேறப் பிரார்த்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய..

Menaga Sathia சொன்னது…

மனம் கனக்கிறது...வேறு என்ன சொல்வதுனு தெரியல‌

Geetha Sambasivam சொன்னது…

வேதனையான வாழ்க்கை! அதுவும் இங்கிருப்போர் அவனுக்கென்ன, அபுதாபியில் இருக்கான் எனப் பொறாமையுடன் பேசுவார்கள்! போய்ப் பார்த்தால் அல்லவா தெரியும்! உண்மை எப்போதுமே சுடும். சூடு தாங்கலை! :(