மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 17 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...3

வெள்ளிக்கிழமை மதியம் பிரியாணி செய்து சாப்பிடும் போது அவன்தான் ஆரம்பித்தான்.

"விஜயகாந்த் அவ்வளவு ஒர்த்தா என்ன... தனியா நிக்கிறேன்னு சொன்னா விடவேண்டியதுதானே... எதுக்கு கட்டுமரமும் நடைவண்டியும் மாறி மாறி கூப்பிடுதுங்க..." சிரிக்காமல் கேட்டான்.

'ஆஹா... இவன் எப்பவும் விஜயகாந்துக்கு சப்போர்ட் பண்ணுறவனுல்ல... என்ன இன்னைக்கு பிளேட்டை மாத்திப் போடுறான்... கஷ்டப்பட்டு செஞ்ச பிரியாணியை சாப்பிட விடுவானுங்களா... இல்ல ஏதாவது கலவரத்தை ஆரம்பிச்சிடுவானுங்களா... இருக்கவனுங்க கூட வந்தவனுங்களும் பாட்டிலை எல்லாம் கழுவிக் கவித்துட்டுல்ல உக்காந்திருக்கானுங்க... இவன் எதுக்கு இப்ப ஆரம்பிக்கிறான்னு தெரியலையே...' மனசுக்குள் யோசித்தபடியே தான் சமைத்த பிரியாணியையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தான் அந்த அறையின் பிரதான சமையல்.


சமையலைப் பார்த்து கண்ணடித்து விட்டு "இந்த விஜயகாந்துக்கு அறிவே இல்லைங்க... அரசியல்வாதிகளுக்கு வாக்கு சுத்தம் இல்லைங்கிறது மக்களுக்கு நல்லாவே தெரியும்... ஆனா இந்தாளுக்கு வார்த்தை சுத்தம் இல்லையே..." சத்தமாகச் சொன்னான் அவன்.

"என்ன இன்னைக்கு விஜயகாந்தைப் பற்றி பேசுறீங்க... நாங்க எதாச்சும் சொன்னாலும் எதுப்பீங்க..." சிக்கன் லெக்பீசைக் கடித்தபடியே கேட்டார் அவர்.

"அப்படியில்லைங்க... நானெல்லாம் ஒரு கட்சி சார்ந்தவன் இல்லைங்க... எல்லாரையும்தான் பேசுவேன்.." சிரித்தான் அவன்.

'இந்தாளு லெக்பீசைக் கடிச்சமா... போயி தூங்குனோமான்னு இல்லாம... தேவையில்லாம வாயை விடுறாரு... இன்னைக்கு வச்சிச் செய்யப்போறான் இவன்' என்று நினைத்தபடி தயிர் பச்சடியில் வெங்காயத்தை கிளறியபடி சிரித்தான் சமையல்.

"ஏன் சிலிக்கிழீங்க...? காலசாழ்மா  பேசினாத்டானே போழ்ட சலக்குக்கு ஊழுகாய் சாழ்ப்ட மாதிலி இழுக்கும்..." வந்திருந்தவர்களில் சுருட்டைமுடி  வாய்க்குள் சோற்றோடு சரக்கின் மகிமையால் குழறிப் பேசினார்.

"அது சரி... ஏறிடுச்சுல்ல... இனி என்ன... காவடி எடுத்துட வேண்டியதுதான்..." என்றான் சமையல்.

"இந்த விஜயகாந்த் அன்னைக்கு கூட்டணி இல்லைன்னாரு... இன்னைக்கு கூட்டணி வைப்போங்கிறாரு... அவரு நம்ம மச்சான் மாதிரி சரக்கடிச்சிட்டு உழறுவாரு போல..."


"யாழ் ஒழல்லா... நாங்கழ்லாம் எப்பயும் சடி மாப்ளே... ஆக்சுவலி ஐ... ஆம்... "

"சாமி பிரியாணியைச் சாப்பிடு..."

"அன்னைக்கு எல்லாரும் கூப்பிடும் போதாச்சும் இந்தாளுக்கு எதோ மதிப்பு இருந்துச்சு... இன்னைக்கு எல்லாரும் கதவடைச்சிட்டானுங்க... இனி இவரு ஜீரோதான்..." அவர் பேச ஆரம்பித்தார்.

'ஆடு சிக்கிருச்சு...' என்று நினைத்தவன் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

"ஆமாங்க... விவரமில்லாத ஆளு..."

"யாருக்குங்க விபரம் இல்லை... அவனுக்கா... அவன் அம்மாக்கிட்ட மொத்தமா பொட்டி வாங்கிட்டான்... இப்ப கட்சிக்காரனுங்கதான் பாவம்.." அவருக்கு விஜயகாந்தைப் பேசுவதென்றால் அல்வா சாப்பிட்டது போல.

"பொண்டாட்டி, மச்சினன்னு குடும்ப அரசியல்ங்க... அவனெல்லாம் மக்களைக் காக்க வந்த தலைவனாம்... மக்கள் தலைவன்னா அது எங்க தலைவர் கலைஞர்தாங்க... தொண்ணுறு வயசுலயும் மக்களுக்கு உழைக்க நினைக்கும் உத்தமனுங்க..." வந்தவர்களில் போலீஸ் தொந்தி பிரியாணியின் காரத்தை நெற்றியில் வியர்வையாய் சுமந்து பேசியது.

"எங்க எல்லா அரசியல் கட்சியும் குடும்ப அரசியல்தானுங்க... ஏன் கலைஞர், ராமதாஸ் இப்படி எல்லாமே குடும்ப அரசியல்தானேங்க... ஏன் ஜெயலலிதா கூட குடும்ப அரசியல்தாங்க...வைகோ மகனை சிகரெட் விக்க விட்டுட்டாரு.. திருமாவுக்கு கல்யாணம் ஆகலை... கம்யூனிஸ்ட்டுங்க குடும்பத்தை இழுக்கலை... அதனால மக்கள் நலக்கூட்டணி வேணுமின்னா குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டு நிக்கலாம்..." என்றான் அவன்.


"அட என்னங்க நீங்க... அரசியல் தெரியாம அரசியல் பேசுறீங்க... ஜெயலலிதாவுக்கு குடும்பமே இல்லை... ஷோபன் பாபு, எம்.ஜி.ஆரெல்லாம் இந்த அம்மாவுக்கு குடும்பம் எங்கங்க அமைச்சுக் கொடுத்தாங்க... அதான் அநாதையின்னு வாட்ஸ்அப்ல அழுது புலம்புச்சே... மக்கள் நலக் கூட்டணி குடும்ப அரசியல் இல்லைங்க... குழப்ப அரசியல்..." கலைஞரின் விசுவாசி தொந்தி சொல்லிவிட்டு கையிலிருந்த டம்ளரில் ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு சிக்கனைக் கடித்தது.

"நல்லாக் கேளுங்க... நான் கேட்டாத்தான் சண்டைக்கு வருவாரு... இப்படித்தான் சம்பந்த சம்பந்தமில்லாம சண்டைக்கு வருவாரு..." என்றார் அவர்.

"என்ன சண்டைக்கு வந்துட்டேன்... ஜெயலலிதாவுக்கு குடும்பம் இல்லையா... அப்ப சசிகலா யாரு... தோழியின்னு சொல்லிக்கிட்டு இன்னைங்க அந்த அம்மா குடும்பம்தானே ஆளுது... அந்த அம்மா தங்கச்சி, தம்பியின்னு மன்னார்குடியே ஜெயலலிதாவை வச்சி வாழலையா... விஜயகாந்தை மட்டும் பேசுறீங்க..."

"அழுசலி மாப்ள... நீழ்ங்க... பாலிண்டப் பிழிச்சிட்டிய... ஆக்சுவலி நா சொழ்ல நிலைச்சேன்..." என்றார் சுருட்டை முடி.

"சரிங்க... தனியா நிக்கிறேன்னு இன்னைக்கு கட்சி ஆபீசில தனியா நிக்கிறானாமே... இது எவ்வளவு பெரிய கேவலம்.." சிரித்தார் அவர்.

"மக்கழேயை விட்டுட்டீங்க... இது எவ்வளவு பெரிய கேவலம் மக்கழே... அப்படின்னு சொல்லணும்... அதுலதான் கிக்கு" சிரித்த போலீஸ் தொந்திக்கு உள்ளே போன சரக்கு வேலை செய்தது.

"இதுல என்னங்க கேவலம் இருக்கு... பாமக, நாம் தமிழர் எல்லாம் தனியா நிக்கும் போது தேமுதிக தனியா நின்னா என்ன..."

"தனியா நிக்க தில் வேணும்... தள்ளாடுற ஆளெல்லாம் தனியா நிக்கவே முடியாது..." சொல்லிச் சிரித்தார்.


"என்ன நக்கலா...? மாற்றம் முன்னேற்றம்ன்னு சொல்லி வாயில மைக்கை வச்சிக்கிட்டு அந்நியன் மாதிரி பேசினா மட்டும் போதுமா...? அந்த கட்சிக்காரங்க யாரும் குடிக்கலையா என்ன...? விஜயகாந்த் தண்ணி போட்டதை நீங்க பாத்தீங்களா...?" சற்றே குரலை உயர்த்தினான் அவன்.

"ஏப்பா... சாப்பிடுங்கப்பா... அரசியல் எல்லாம் நமக்கு வேண்டாம்... பிரியாணி அரிசி நல்லா வெந்திருக்கான்னு பாருங்க..." என்றான் சமையல்.

"ஏங்க நாங்க மாற்றத்தை கொண்டு வரமாட்டோமா... ஒரு தடவை எங்களுக்கு ஓட்டுப் போட்டுத்தான் பாருங்களேன்... சும்மா எப்பப்பாரு எங்களை சாதிக்கட்சியின்னு கட்டம் கட்டுறீங்க..." எடுத்த சிக்கனை கடிக்காமல் கையில் வைத்துக் கொண்டு காரமாகப் பேசினார் அவர்.

"ஆமாமா... அதான் ஆணவக் கொலை குறித்து கேட்டதுக்கு ஆணவமாச் சிரிச்சிட்டுப் போனாரு... அட போங்கங்க... சாதிக்கட்சிகள் எல்லாம் சாதிங்கிற குறுகிய வட்டத்துக்குள்ளதான் இருக்கும்... அதைத் தாண்டி வரவும் செய்யாது... அந்த சாதிக்காரனுகளை வளரவும் விடாது... பேசாம சாப்பிட்டுப் போயி படுங்க... இல்லேன்னா கலைஞர் மாதிரி மானாட மயிலாட பாருங்க... உங்களுக்கெல்லாம் அரசியல் சரிவராது..." என்றான் அவன்.

"இப்ப என்னங்க... பெத்தவனுக்குத்தாங்க தெரியும் தன்னோட பிள்ளை ஓடிப்போன வலி... அது அவனை அருவா எடுக்க வைக்கிது.. நீ வேற சாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டு வா... நம்ம அமைப்பு உனக்கு எல்லாம் செய்யும்ன்னு ஏங்க ஏத்திவிடுறீங்க... படிச்சு நல்ல வேலையில இருக்கணும்... உன்னை காடு, கழனியில வேலை பாத்து... ஆடு மாடு மேய்ச்சு படிக்க வைச்ச ஆத்தா அப்பனுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும்ன்னு ஏன் சொல்லிக் கொடுக்க மறுக்குது இந்த சாதி... சும்மா அவரு சிரிச்சாரு... இவரு சிரிச்சாருன்னு... வலியை சுமந்த இதயங்களுத்தாங்க தெரியும்... அரசியல் பண்றதுக்காக கேள்வி கேக்கக் கூடாது... ஏன் இதை ஜெயலலிதாகிட்ட கேக்க வேண்டியதுதானே..."


"அது சரி... உங்க வாதம் நல்லாயிருக்கு... ஆஊன்னா அம்மாவை கேளுன்னு சொல்லிடுவீங்க... இந்த விஜயகாந்த்..." அவனை பேசவிடாமல் இடைமறித்த சமையல், "ஏய் ஆளாளுக்கு தண்ணி போட்டிருக்கானுங்க... பேச்சு வேற மாதிரி போகுது... பேசாம சாப்பிட்டு இழுத்துப் போர்த்திக்கிட்டு படு.." என்று அவனிடம் சொல்லிவிட்டு அவரைப் பார்த்து "அண்ணே அவன் எதாவது பேசுவான்... நீங்க பேசாம சாப்பிடுங்க" என்றபடி சிக்கன் பிரியாணியை தட்டில் வைத்து தயிர் பச்சடி எடுத்தான்.

சுருட்டை முடி 'உவ்வே' என்றான். அவனது தட்டில் இருந்த பிரியாணிக்குள் கலவைச் சாதம் சிரித்தது. "போங்கடா... நீங்களும் உங்க அரசியலும்... கஷ்டப்பட்டு சமைச்சவன் நானு... சந்தோஷமா சாப்பிட விட்டிங்களா...? வாராவாரம் இதே பொழப்பாப் போச்சு... ஓவராகுதுன்னு சொன்னா கேக்கமாட்டானுங்க..." எனக் கத்தியபடி தட்டை எடுத்துக் கொண்டு கை கழுவப் போனான்.

(நன்றி : படங்கள் இணையத்திலிருந்து)
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்லாப் பொழுது போகும்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கலக்கல்.....

Unknown சொன்னது…

இந்த கொலைக் குறித்து ,கருத்து கந்தசாமி கூட கருத்து கூற மறுக்கிறாரே ..அதைப் பற்றியும் எழுதுங்க குமார் ஜி :)

துரை செல்வராஜூ சொன்னது…

எப்படியோ பொழுது போனால்.. சரி!..

நிஷா சொன்னது…

அரசியலா? நிஷா எஸ்கேப்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கார்ட்டூன்கள் கனக்கச்சிதமாக... டீக்கடை அரசியல் போல் சுவாரஸ்யமாக பிரியாணிக்கடைக்குள் ...ம்ம்ம் அலப்பறை பண்ணுங்க..மே 16 என்ன சொல்லப்போகுதோ..

KILLERGEE Devakottai சொன்னது…

எப்படியோ வெசயகாந்தூவை வைத்து டைம்பாஸ் ஆகுது
தமிழ் மணம் 6

Kasthuri Rengan சொன்னது…

வாந்தியை தவிர்த்திருக்கலாம்..
நல்ல பதிவு
தொடர்க

Kasthuri Rengan சொன்னது…

தம +