மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 8 ஆகஸ்ட், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 30)

முந்தைய பகுதிகள் :


29-வது பகுதியின் இறுதியில்...

"ம்... நீங்க மனசை திடமா வச்சிக்கங்க..." என்றபடி அவரிடம் இருந்து விலகிய அழகப்பன் கோவிந்தனிடம் வந்து "அந்த வாடிப்பட்டி மேளமாட்டம் இங்க காரைக்குடியில் ஒரு குரூப் இருக்கானுங்களே அவனுகளுக்குச் சொல்லச் சொல்லுங்க சித்தப்பா..." என்றபடி கண்ணதாசனிடம் அமர்ந்தார். 

நிமிடங்கள் யுகங்களாய் கடக்க, சொந்த பந்தம் வர ஆரம்பித்ததும் வீடெங்கும் அழுகுரல் நிரம்பி வழிந்தது. அப்போது ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து 'அம்மோவ்' என்று கதறிபடி ஓடி வந்து படியில் விழுந்தான் குமரேசன்.

இனி...

குமரேசன் கதறியபடி படியில் வந்து விழ, "ஏய்... அவனைப் பிடிங்கப்பா... " என்று கோவிந்தன் கத்த, அங்கு நின்றவர்கள் அவனைத் தூக்க, அவர்களிடமிருந்து திமிறி காளியம்மாள் மீது விழுந்தான். அவன் பின்னே ஓடிவந்த அபியும் கதறி அழ சுந்தரி, கண்ணகி என எல்லோரும் அவளைக் கட்டிக் கொண்டார்கள்.  திவ்யா அழுது கொண்டே அம்மா பின்னே நிற்க, முகேஷ் கலங்கிய கண்களுடன் அழகப்பனிடம் ஓட்டிக்கொண்டான்.

அம்மா முகம் பார்த்து அழுத குமரேசன் அங்கிருந்து எழுந்து 'அப்பா' எனக் கந்தசாமியைக் கட்டிக் கொள்ள, இருவரும் வெகுநேரம் அழுதனர். 'பார்றா... ஆம்பளப்புள்ள என்னமா அழுகுறான்னு... இப்புடி ஆம்பளப்புள்ளக அழுது நா பாத்ததில்லை... எப்பவுமே குமேரசன் பாசக்காரப்பய... ரொம்பநாள் அம்மாக்கிட்டயே வளர்ந்த பய, கல்யாண விஷயத்துலதான் கொஞ்சம் அப்படி இப்படி நடந்துக்கிட்டான்னாலும் கந்தசாமியும் சேரி, காளியம்மாளும் சேரி விட்டுக் கொடுக்கலையே... அந்தப்புள்ளயும் நம்ம சாதிதேன்... இவுக தேடிப் பாத்துக் கட்டியிருந்தாலும் இப்புடி ஒரு புள்ளைய பாத்திருக்க முடியுமா என்ன...' பெரியண்ணன் பக்கத்திலிருந்தவர்களிடம் மெதுவாகச் சொன்னார்.

"அத்தான்..." என குமரேசன் வர, எழுந்து அவனை அணைத்த அழகப்பன், அருகே உக்கார வைத்து தைரியம் சொல்ல, கண்ணதாசனும் அவனருகே வந்து உட்கார்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டான்.

"அண்ணன் வந்துக்கிட்டிருக்காம்... வரும்போது பேசினேன்... ஆமா என்ன இன்னும் கண்மணியக் காணோம்...?" என்றான்.

"இப்பத்தான் பேசினேன்... வந்துக்கிட்டு இருக்காம்...  அவன் கோயமுத்தூரில் இருந்து வந்துக்கிட்டு இருக்கான். நேர இங்க வந்துடுறேன்னு சொல்லி சாதி சனத்தைக் கூட்டிக்கிட்டு பச்சைக்கு வாங்கிக்கிட்டுப் போயிடுன்னு சொன்னானாம்.... அதான் சாமான் வாங்கிக்கிட்டு வருதாம்... அது மாமியா கூட முடியாததோட நானும் வாறேன்னு சொல்லிச்சாம்... சரி வேனுலதானே கூட்டிப் போறோம்ன்னு கூட்டிக்கிட்டு வருதாம்... வந்துரும்..." என்றார் அழகப்பன்.

"கண்மணி மாமியாவுமா..? பாவம் முடியாதவுக அவுக எதுக்கு வாறாங்க... வரலைன்னு கேக்கப் போறோமா என்ன..."

"மாப்ள... அதுக எல்லாம் பழைய காலத்து ஆளுங்க... பேச்சு வேணுமின்னா படக்குன்னு இருக்குமே தவிர, நல்லதுக்குப் போகாட்டியும் செத்த கேதத்தைத் தள்ளாதுக.. வந்துட்டுப் போகட்டுமே..."

"எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா?"

"எல்லாம் பண்ணியாச்சு...  சரி குமரேசா... ஆளுக வாறாக... உக்காந்திருக்கது நல்லதில்ல... எந்திரிச்சு கேதங் கேக்கணும்... அதுவும் இன்னைக்கு கட்டி அழுகணுமில்ல... நீ வா ஒரு அஞ்சு பேரு நிக்கலாம்..." என்றான் கண்ணதாசன்.

"ம்... சரிண்ணே..."

"தம்பி தப்புக்காரனுக வந்துட்டானுக... அவனுகளை அடிக்கச் சொல்லிட்டேன்... தண்ணி வேணுங்கிறானுங்க..." என்றபடி வந்தார் கோவிந்தன்.

"என்ன சித்தப்பா... அவனுக வரும்போதே வாங்கிக்கிட்டு வரவேண்டியதுதானே... இப்ப யாரை அனுப்புறது...?"

"அவனுக குடிச்சிக்கிட்டே இருப்பானுக... ரேவதி மகன் கேதஞ் சொல்லப் போயிருக்கானுல்ல... அவனுக்கு போன் பண்ணச் சொல்றேன்... வரும் போது வாங்கிக்கிட்டு வந்துருவான்.. அப்புறம் பூமி குழி வெட்ட வந்துட்டானாம்... நம்ம ஆளுக ரெண்டு பேரு போயி நல்ல இடமாப் பாத்து வெட்டச் சொல்லணும்... ஏன்னா நம்ம ஐய்யாவு செத்தப்போ ஒரு இடத்தைக் காட்டிட்டு வர, குடி போதையில வைராத்தாவை புதைச்ச இடத்தை நோண்டி எலும்புகிலும்பு எல்லாத்தையும் அள்ளி கள்ளிக்குள்ள போட்டுட்டுப் பொயிட்டானுங்க... அப்புறம் வைராத்தா மகன் கத்திக்கிட்டு இருந்தான்... அதையும் பாக்கணுமில்ல...".

"ஆமா...  கிராமத்துல சுடுகாடுன்னு இருக்கதே ஒரு சின்ன இடம்... அதுல புதுசு புதுசா எங்கிட்டு இடம் தேடுறது... இருந்தாலும் கொஞ்சம் பாத்து வெட்டச் சொல்லணும்... யாரையாச்சும் ரெண்டு பேரை அனுப்புங்க சித்தப்பா..." என்றதும் "டேய் செல்வம்..." என்று கூப்பிட்டபடி எழுந்து சென்றார் கோவிந்தன்.

'டண்டக்கு நக்கும்... டண்டக்கு நக்கும்...' என்று தப்புக்காரனுக அடிக்கவும் சிறுவர்கள் எல்லாம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க... அதுல ஒருத்தன் 'பார்றா... கஞ்சிக்கு செத்தியா... கஞ்சிக்கு செத்தியான்னு அடிக்கிறானுங்க... காளியாயா என்ன கஞ்சிக்கா செத்துச்சு...' என பக்கத்தில் நின்றவனின் காதைக் கடிக்க அவன் 'சும்மா இருடே' என இவனை முறைத்தான்.

சேதி அறிந்த உறவுகளும் பழகிய மனிதர்களும் வந்து சென்று கொண்டிருந்தார்கள். காளியம்மாவை அடக்கம் பண்ணுவதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அடக்கம் பண்ணி முடிந்ததும் அங்காளி பங்காளிகள் சாப்பிட சமையல் நடந்து கொண்டிருந்தது. ரேவது வீட்டில் இருந்து காபி கொண்டு வந்து கொடுக்க சிலர் மட்டும் குடித்தார்கள். 'வாயில பச்சத்தண்ணி படாம இருக்கீக மாமா... இந்தக் காபியவாவது குடிங்க' என கந்தசாமியிடம் கெஞ்சிப் பார்த்தும் 'அவ கட்டையாக் கெடக்கயில எனக்கென்ன காபி... வேண்டாந்த்தா...' என மறுத்துவிட்டார்.

கண்மணி உறவுகளோடு பச்சை கொண்டு வர, தப்புக்காரர்கள் பச்சையை அழைத்து வருவதற்கு அடித்து காசு பார்த்துக் கொண்டார்கள். அவளும் வந்து ஒரு பாடு அழுது முடித்தாள். பிள்ளைகள் இரண்டும் திவ்யா, முகேஷூடன் சேர்ந்து கொண்டார்கள்.

"அத்தான்... பிள்ளைங்க வர்றாங்களா...?" மெதுவாகக் கேட்டான் குமரேசன்.

"ம்... ஹாஸ்டல்ல இருந்து கிளம்பிட்டாங்க.... எப்புடியும் எடுக்குறதுக்கு முன்னாடி வந்திருங்க..."

"ம்... அம்மாவுக்கு மூத்த பேத்தி மேல ரொம்பப் பிரியம்... எப்பவும் அவளை ஆஸ்டல்ல போயி விட்டுருக்காக... பாவம் சாப்பாடு பிடிக்குதோ இல்லையோன்னு பொழம்பித் தீர்க்கும்... எம்மருமவளும் ஊருக்கு வந்த ஆயாக்கிட்டத்தானே ஓடியாரும்..."

"ஆமா... பயகிட்ட சொல்லிட்டேன்... அதுக்கிட்ட ரொம்ப முடியலை... ஆயாவுக்கு ரொம்ப சீரியஸ்... நீ கிளம்பி வான்னுதான் சொன்னேன்... அதுக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிருச்சு.... எப்புடி மாப்ள... திடீர்ன்னு இப்படின்னா.... நம்மனாளே தாங்க முடியலை... பிள்ளைங்க..." கண்ணைத் துடைத்துக் கொண்டார். 

அப்போது வந்து நின்ற காரின் முன்பக்கத்தில் இருந்து மணி இறங்க, பின்னால் இருந்து சித்ராவும் மகாவும் இறங்கினார்கள். மணி இறுக்கமான முகத்துடன் வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டவன், அப்படியே போய் அம்மா முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்க, அக்கா, தங்கை, கண்ணதாசன் மனைவி என எல்லாரும் அவன் காலைக் கட்டிக் கொண்டு அழுதார்கள். சித்ரா ஓவென ஒப்பாரி வைத்தவள், 'அயித்தே... என்ன வளத்த அயித்தே...' எனக் கத்திக்கொண்டே போய் எல்லோரையும் கட்டிக் கொண்டு அழுதாள்.

"சித்தப்பா... நம்ம அப்பத்தா..." என்று கத்தியபடி குமரேசனைக் கட்டிக் கொண்ட மகாவுக்கு 'சரிடா... நம்ம குடுத்து வச்சது அவ்வளவுதான்... அழுகாத... விடு...' எனக் கண்ணீரோடு ஆறுதல் சொல்ல, அருகே இருந்த அழகப்பனையும் கண்ணதாசனையும் பார்த்து 'மாமா...', 'கண்ண சித்தப்பா' என்று சொல்லி சிறிது நேரம் அவர்களிடம் நின்றவள் 'ஐயா...' என கந்தசாமியைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டு அப்பத்தாவிடம் போய் அமர்ந்தாள்.

கள்கள், அக்கா தங்கைகள், சம்பந்தப்புரங்கள், நெருங்கிய உறவுகள் என எல்லாரும் பச்சை கொண்டு வந்திருந்தார்கள். ஒரு வழியாக சொந்த பந்தம் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டது. வீட்டுக்குள் அழுகுரல் ஓயவில்லை... கந்தசாமி கண்ணீரோடு அமர்ந்திருந்தார்.

"என்னப்பா... எல்லாரும் வந்தாச்சு... இன்னம் கண்மணி புருஷனை மட்டும் காணோம்... நேரமாகுதுல்ல... மத்த வேலைகளைப் பாத்தாத்தானே நல்லது. அப்புறம் அடக்கம் பண்ணிட்டு இருட்டுக்குள்ள வரமுடியாதுல்ல..." என அழகப்பனிடம் கேட்டார் கோவிந்தன்.

"வந்துட்டாராம் சித்தப்பா... இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்னு சொன்னார்... உங்க பேரனும் பேத்தியும் வர்றாங்க... இங்க இருந்து யாரும் போயி கூட்டப் போகமுடியாது... ஆட்டோவுல வாறேன்னுதான் சொன்னுச்சுக... ரெண்டும் தனித்தனியா வருங்க... பய ஆட்டோவுல வந்துருவான்... பொம்பளப்புள்ளய தனியா ஆட்டோவுல... அதான் பஸ் ஸ்டாண்டுல நின்னு கூட்டிக்கிட்டு வரச்சொன்னேன். வந்துருவாக... மத்த வேலையைப் பாக்கலாம்..."

"ஆமா... ஆமா... பாடை கட்ட நல்ல கருவைக் கம்பா பாத்து வெட்டியாரச் சொல்லி செல்வத்தை அனுப்பியிருக்கேன். வந்ததும் கட்டிரலாம்... ஆமா பல்லக்கு மாதிரி ஜோடிக்கணுமா...?"

"ம்... கம்புகளைக் கட்டி பூக்களைப் போட்டு வைக்கலாம்... பூத்தான் நிறைய இருக்கே... அப்புறம் ரொம்ப வெயிட்டும் வேணாம்... அம்புட்டுத்தூரம் தூக்கிக்கிட்டுப் போகணுமில்ல..." என்றார் அழகப்பன்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பாடை தயாராக, நீர்மாலை எடுத்து வந்து இறுதி ஊர்வலத்துக்கு கிளம்புவதற்காக காளியம்மாளை குளியாட்டி, அவளின் கல்யாணப் பட்டைக் கட்டி, பொட்டுப் பூ வைத்து தயார் செய்தார்கள். அப்போது ரமேஷின் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய சுந்தரி மகள் "ஆஆஆயாயா....." எனக் கத்திக் கொண்டே வீட்டுக்குள் ஓடினாள். அவள் பின்னே வந்த ரமேஷ் எல்லாரையும் பார்த்துக் கொண்டே நேரே போய் மாமியாரின் காலடியில் மாலையைப் போட்டுவிட்டு வணங்கியவன் மாமனாரிடம் வந்து அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கினான்.

பின்னர் அழகப்பனிடம் வந்து "ஆக வேண்டியதைப் பாக்கலாமில்லண்ணே...?" என்றவன் மணி, குமரேசன், கண்ணதாசனிடமும் பேசினான்.

"ம்... எல்லாம் ரெடி... தூக்க வேண்டியதுதான்..."

"இன்னம் மாப்ள வரலையேத்தான்...?" என அழகப்பனைப் பார்த்துக் கேட்டான் மணி.

அவர் பதில் சொல்லும் முன்னரே "வந்துருவான்... காரைக்குடி வந்துட்டானாம்... என்ன ஒரு இருபது நிமிஷத்துல வந்து இறங்கிருவான்... பஸ் ஸ்டாண்டுல இருந்து ஆட்டோவுல பத்து நிமிசம்..." என்றான் கண்ணதாசன்.

அப்போது அவர்களின் சித்தப்பா மகனும் குடும்பத்துடன் வந்து சேர, காளியம்மாள் வீட்டில் இருந்து பாடைக்கு பயணப்பட்டாள். கந்தசாமியும் பெண்களும் கதறி அழ, "ஏய் மெதுவாத் தூக்குங்கப்பா... பாடையில அந்தப் பக்கமா தலையை வையுங்க... ஏம்பா ஒரு பழைய தலகாணிய கட்டிட்டிங்களா...? மேல காளியம்மா பொறந்த வீட்டுல இருந்து வந்த கச்சையைப் போடுங்கப்பா" எனக் கத்திக் கொண்டிருந்தார் கோவிந்தன்.

பாடையில் வைத்து ஆடாமல் எல்லாப் பக்கமும் கட்டி மாலைகளைப் போட்டு மகள் குடம், மருமகள் குடமெல்லாம் உடைத்து 'தூக்குங்கப்பா...' என்றபோது வந்து நின்ற ஆட்டோவில் இருந்து சுந்தரி மகன் இறங்க, 'இருங்கப்பா பேராண்டி கடைசியா ஆயா முகத்தைப் பார்க்கட்டும்' என்று ஒருவர் சொல்ல, அவனும் ஆயாவைப் போய் பார்த்துவிட்டு அப்பாவிடம் ஒட்டிக் கொண்டான்.

காளியம்மாளின் உடல் நாலு பேர் சுமக்க, கந்தசாமி கொள்ளிச் சட்டியை தூக்கிச் செல்ல, அவர் பின்னே மற்றவர்கள் நடக்க சுடுகாடு நோக்கி நகர்ந்தது. அங்கு வைத்துச் செய்ய வேண்டிய சடங்குகளை அம்பட்டையன் செய்ய, எல்லாம் முடிந்து அடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் எல்லாம் அழுகாத மணி அம்மா முகத்தில் மண்ணை அள்ளிப் போடும் போது கதறிவிட்டான். கந்தசாமியும் மகன்களும் மொட்டை அடித்து காரியம் செய்ய, அழகப்பன் மாப்பிள்ளை முறை செய்தார். அங்கு வைத்தே எல்லோருக்கும் பட்டுவாடா செய்துவிட்டு வீட்டுக்கு வந்து குளித்துச் சாப்பிட்டார்கள்.

"ஏம்ப்பா... நாளைக்கு காடாத்திட்டு... மூணா நாலு எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சிரலாமுல்ல... என்ன கந்தசாமி நீ என்ன சொல்றே..?" மெதுவாகக் கேட்டார் கோவிந்தன்.

"ம்... அப்படியே செய்வோம்..."

"கருமாதி...?"

"அஞ்சாம் நாளே வச்சிரலாம் சித்தப்பா..." என்றார் அழகப்பன்.

"ஏம்ப்பா... எட்டுலயோ பதினொன்னுலயோ வைக்கலாமுல்ல... எதுக்கு அவசரம்...?"

"இல்ல அவனுக வேலைக்கு லீவு போட்டுட்டு வந்திருக்கானுக... பிள்ளைங்க படிப்பு... இதெல்லாம் இருக்குல்ல... அஞ்சாம் நாளுன்னா எல்லாருக்கும் வசதியா இருக்கும்ல..."

"அதுவும் சரிதான்... என்ன கந்தசாமி..."

"சரித்தான்... ஆனா அவசரமா எதுக்குச் செய்யணும்... எட்டாம் நாளு வைக்கலாமே... அஞ்சுக்கும் எட்டுக்கும் எம்புட்டுத் தூரம் இருக்கு... என்னப்பா... நாஞ்சொல்றது" பதில் சொன்னபடியே மாப்பிள்ளையைப் பார்த்தார்.

"இல்ல மாமா... மணி, குமரேசனுக்காக சொன்னேன்... அவனுககிட்ட கேட்டுக்கலாம்..."

"இதுல என்னத்தான் கேக்குறதுக்கு இருக்கு... நீங்க என்ன சொல்லுறீங்களோ அதுதான்... அப்பா ஆசை... எதுக்கு தடுக்கணும்... எட்டாம் நாள் வச்சிப்போம்... மூணாம் நாளு எண்ணெய் தேச்சுக்குளிச்சிட்டு நாங்க பொயிட்டு ரெண்டு நாள்சென்டு வாரோம்..." என்றான் மணி.

"சரிப்பா.... எல்லாருக்கும் சொல்லிவிட்டுரலாம்..." என்று முடித்தார்கள்.

அன்று இரவு யாருக்குமே தூக்கம் வரவில்லை. "நேத்து இங்க படுத்திருந்தா... இந்தா இங்கன... எங்கூட பேசிக்கிட்டு... இன்னைக்கு அநாதையா கெடக்கா... இப்படி பட்டுன்னு பொயிட்டாளே...." என்று புலம்பி அழுத கந்தசாமியை தேற்றிக் கொண்டிருந்தான் கண்ணதாசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

"மாப்ள... அதுக எல்லாம் பழைய காலத்து ஆளுங்க... பேச்சு வேணுமின்னா படக்குன்னு இருக்குமே தவிர, நல்லதுக்குப் போகாட்டியும் செத்த கேதத்தைத் தள்ளாதுக.. வந்துட்டுப் போகட்டுமே..."//

உண்மை , அப்படித்தான் சொல்வார்கள்.

ஒவ்வொன்றும் அப்படியே கண் முன்னே காட்சியாக விரிந்தது.
துக்கத்தை அடக்க முடியவில்லை. கண் ஓரத்தில் கண்ணீர் துளிகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எழுத்துக்கள் காட்சிகளாய்விரிகின்றன
தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்
தம+1

ஊமைக்கனவுகள் சொன்னது…

நீண்ட காலத்திற்குப் பின்பான தொடர்கதை வாசிப்பு பின்னால் இருந்து செல்கிறேன்.
இதயம்தொடும் எழுத்து.

த ம 4

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தங்களின் பதிவுகளைப் படிக்கும்போது உடன் வரும் உணர்வு ஏற்படுகிறது. தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.
தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பது தொடர்பான எனது முதல் பதிவை http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html இணைப்பில் காண அழைக்கிறேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

துக்க வீட்டை கண் முன்னே நிறுத்தியது வர்ணிப்பு! அருமை!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அப்படியே கண் முன் காட்சிகள் விரிகின்றன....இயல்பான நடை....தொடர்கின்றோம்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களின் உணர்வுப்பூர்வமான கருத்து எனக்கு இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தாங்கள், ஜெயக்குமார் ஐயா, ஊமைக்கனவுகள் ஐயா என பெரியவர்கள் எல்லாம் கதை நல்லா இருக்கு என்று சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சென்னை பித்தன் சொன்னது…

ஒரு சாவு வீட்டின் நிகழ்வுகள் கண்முன்னே எழுத்துச் சித்திரமாக.
ந்ன்று