மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 25 ஜூலை, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 28)

முந்தைய பகுதிகள் :


காலையில் பேசலாம் என குமரேசனும்... இடப்பிரச்சினை பேசணும் என சித்ராவும்... நாளை அவர்களைப் பார்க்கப் போகலாமா என மகள்களும் நினைத்திருக்க, அந்த இரவோ அவர்களுக்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுக்கப் போகும் விடியலை நோக்கி நகர்ந்தது.

இனி...

திடீரென விழித்துக் கொண்ட கண்ணதாசனுக்கு நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. என்ன இது... ஏன் இந்தப் படபடப்பு என்று கொஞ்ச அமர்ந்திருந்தவன் எழுந்து வெளியே போய்விட்டு வரும்போது வாசலில் கிடந்த காளைமாடுகள் வைக்கோலை இழுத்துப் போட்டுக் கொண்டு படுத்திருக்க அதட்டி எழுப்பிவிட்டு அதை காலால் தள்ளி குவித்து வைத்துவிட்டு நகர, 'என்னப்பா இந்த நேரத்துல மாட்டுக்கு வக்கப் போடுறே?' என்று கேட்டபடி படியில் இறங்கி வந்தாள் காளியம்மாள்.

"தூக்கம் வரலை... எழுந்து வெளிய வந்தேன்.. வக்கலை இழுத்துப் போட்டுக்கிட்டு படுத்திருந்துச்சுக... அதான்... சின்னம்மா"

"எனக்குந்தான் என்னமோ உறக்கமே வரலை... உங்க சித்தப்பன் பேசிக்கிட்டே கிடந்தாரு... கொறட்டை விட்டுட்டாரு... பொரண்டு பொரண்டு படுக்கிறேன்... உறக்கமே வரலை... சரி போயி படு..."

"ம்..." என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவன் குடத்தின் மேல் இருந்த சொம்பில் தண்ணீர் மோந்து மடக் மடக்கென்று குடித்தான். இருந்தும் இன்னும் அந்த படபடப்பு அடங்கவில்லை. கட்டிலில் அமர்ந்து மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கீழே படுத்திருந்த கண்ணகி புரண்டு படுக்கும் போது மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும் தூக்கக் கலக்கத்தோடு "என்னங்க... தூங்கலையா?" என்று கேட்டாள்.

"இல்ல தூக்கம் வரலை?"

"ஏன்? என்னாச்சு? நடுஜாமத்துல தூக்கம் வரலையின்னு உக்காந்திருக்கீக?" என்று எழுந்து அவிழ்ந்து கிடந்த முடியை கொண்டை போட்டுக் கொண்டு முந்தானையை தோளில் போட்டுக் கொண்டாள்.

"படக்குன்னு முழிப்பு வந்திருச்சு... என்னமோ படபடன்னு வருது..."

"ஆத்தி... என்னாச்சு... உடம்புகிடம்பு சரியில்லையா? கண்ட நேரத்துலயும் சுடுகாட்டுப் பக்கமா இருக்க வயலுக்குப் போறது... திடல்ல போயி வெறகு வெட்டலாம்ன்னு சொன்னேன் கேட்டியலா... உச்சி உருமத்துல சுடுகாட்டு செய்யில வெறகு வெட்டுனிய காத்துக் கருப்பு பிடிச்சிருச்சி போல..." என்றபடி எழுந்து அவனருகில் வந்து கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள். சுடவில்லை என்றாலும் வேர்த்திருந்தது.

"அட ஒண்ணுமில்ல... சும்மா படபடப்பா வருது... நீ படு நா படுக்கிறேன்..."

"என்ன இப்புடி வேர்த்திருக்கு...?"

"ம்... வெக்கையா இருக்குல்ல... தண்ணி குடிச்சேன்... அதான்..."

"என்னாச்சுங்க.. முகமெல்லாம் வேர்த்திருக்கே..." என்றபடி முந்தானையால் துடைத்து விட்டபடி அருகில் அமர்ந்தாள்.

"ஒண்ணுமில்ல... ஏதோ ஒரு கெட்ட கனவு... படக்குன்னு முழிப்பு வந்துச்சா... அதான் படபடன்னு இருக்கு... யாராவது நெருக்கமானவங்களுக்கு ஏதாவது ஒண்ணு நடக்கப் போகுதுன்னா ஒரு சிலருக்கு படபடப்பா இருக்குமாம்... எங்கம்மா அடிக்கடி சொல்லும்... அம்மாவுக்கு படபடப்பு வந்தா ரெண்டு மூணு நாள்ல யாருக்காவது எதாவது நடந்திருமாம்... அப்பா சாகுறப்ப கூட அம்மாவுக்கு மொதநாள் ராத்திரியில யாரையோ திண்ணையில வெள்ளைத் துணி போட்டு படுக்க வச்சிருக்க மாதிரி காட்டுச்சாம்... எனக்கு அதான் ஒரு மாதிரி பயமா..."

அவன் முடிக்கும் முன்னே "இப்ப எதுக்கு சாவு கீவுன்னு பேசிக்கிட்டு... எனக்குந்தான் மாடு வெரட்டுற மாதிரி, பாம்பு கடிக்கிற மாதிரி கனவு வந்து படக்குன்னு எந்திரிச்சிருக்கேன்... படபடப்பு இருந்திருக்கு.... சரி... சரி... எதையும் நினைக்காம படுங்க..." என்றவள் எழுந்து வெளியே போனாள்.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவள் தண்ணீர் மோந்து குடித்துவிட்டு "என்ன இன்னும் படுக்கலையா?" என்று கேட்டபடி தனது பாயில் படுத்தாள். கண்ணதாசனும் இறங்கிப் படுத்தான். "என்ன ஐயாவுக்கு படபடப்பை போக்குற் மருந்து நாந்தானா?" என்று என்று சொல்லிச் சிரித்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனிடமிருந்த படபடப்பு அவளைத் தொற்றிக்கொண்டது.

திகாலையில் விழித்துக் கொண்ட கந்தசாமி கட்டிலில் அமர்ந்தபடி கைகளை தேய்த்து கண்ணில் வைத்துக் கொண்டு 'கருப்பா... எல்லாரையும் காப்பாத்துப்பா...' என்று சொல்லி அதன் பின்னே வந்த கொட்டாவியை 'ஆவ்வ்வ்...' என்று சத்தமாக வெளிப்படுத்தினார். தரையில் படுத்துக்கிடந்த காளியம்மாளைப் பார்த்தவர் 'இந்த வயசுலயும் எல்லா வேலையையும் இழுத்துப் பாக்குறா... அசந்து தூங்குறா... தூங்கட்டும்... தூங்கட்டும்... மெதுவா எந்திரிக்கட்டும்...' என்றபடி எழுந்து  தனது போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டு விட்டு வேட்டியை அவிழ்த்துக் கட்டினார்.

குடத்தில் தண்ணீர் மோந்து வாயைக் கொப்பளித்து முகம் கழுவியவர், மீண்டும் சென்று தனது இடைவாரை எடுத்து அதற்குள் இருந்த புகையிலையை கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்து உருண்டையாக்கி, வாய்க்குள் அதக்கிக் கொண்டு ரோட்டுக்கு அந்தப்பக்கமாக சிறுநீர் கழிக்க நடந்தார். அப்போது அவரைக் கடந்து சென்ற பால் விற்கும் பெண்களில் ஒருத்தி 'என்ன மாமா... சீக்கிரம் எந்திரிச்சிட்டீங்க?' என்று கேட்டபடி நடக்க, 'நீங்க பேசுற ஊர்க்கதையைக் கொஞ்சம் கேப்போமேன்னுதான்...' என்றதும் 'ஆமா எங்க கதையே நாறிக்கெடக்கு... இதுல ஊர்க்கதை வேறயா...? அட நீங்க வேற மாமா..' என்றதும் சிரித்தபடியே வேப்பமரத்துக்குப் பின்னே அமர்ந்தார்.

மாடுகளை கசாலைக்குள் இருந்து அவிழ்த்து வந்து வெளியில் கட்டலாம் என்று நினைத்தபடி கசாலைக்கு போனவர், கண்ணதாசனின் மாடுகள் வைக்கோல் மீது படுத்திருப்பதைக் கண்டு 'ஏய்... இம்பா... இம்பா...' என்று அதட்டி, அவற்றை எழுப்பிவிட்டு மூத்தரம் சாணியுமாக கலந்து கிடந்த வைக்கோலை ஒரு குச்சி எடுத்து தள்ளிக் குவித்துவிட்டுப் போனார். கசாலைக்குள் நுழைந்து மாடுகளை அவிழ்த்தவர், 'இன்னைக்கி மாடுகளை கழுவி விடணும்... கசாலையில மேடும் தாவுமாக் கெடக்கதாலதான் நசநசன்னு கெடக்கு... இதுல பொரண்டு அழுக்கு பிடிச்சிப் போயி நிக்குதுக' என்று முணங்கியபடி இழுத்துக் கொண்டு நடந்தார்.

மாடுகளைக் கட்டிவிட்டு, தொட்டியில் கிடந்த புண்ணாக்குத் தண்ணீரை கலக்கி வாளிகளில் மோந்து ஒவ்வொரு மாடாக குடிக்க வைத்தார். பால் மாடுகளுக்கு மட்டும் காளியம்மாள் பால் கறக்கும் போது தண்ணீர் வைப்பாள் என்பதால் அவர் வைக்கவில்லை. பக்கத்து ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலினின் பெரிய மணி அடிக்கும் சப்தம் கேட்கவும் 'மணி இப்பத்தான் அஞ்சாகுது போல... காலையில நல்லா கேக்குற மணிச்சத்தம் மத்த நேரம் கேக்குறதில்லை... கேக்கும்... இப்ப சத்தமில்லததால கேக்குது... மத்த நேரத்துல நாம உன்னிப்பாக் கவனிக்கிறதில்லைன்னுதான் சொல்லணும்' என்று நினைத்தபடி தொட்டிக்கல்லின் விளிம்பில் அமர்ந்தார். அப்போது தேவகோட்டையில் ஒலிக்கும் சங்கொலியும் கேட்க, 'மணி சரியா அஞ்சுதான்... சங்கடிச்சிட்டானுல்ல... இதெல்லாம் கேட்டு எம்புட்டு நாளாச்சு... தினமும் கிழவியோட சங்கொலிதானே எழுப்பும்' என்று நினைத்தவருக்கு அவரை அறியாமல் சிரிப்பு வர, வாயில் இருந்த புகையிலை ஒழுகியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு வெளிய போய் வரலாம் என ரோட்டில் நடந்தவர், ரோட்டோரத்தில் இருந்த அடிபம்பிற்கு அருகே எச்சிலோடு புகையிலையையும் துப்பிவிட்டு கோவிலுக்கு வாசல் தெளித்துக் கோலம் போட வந்த ரேணுகா மகள் புவனாவிடம் 'ஏலா... கொஞ்சம் தண்ணி அடிலா... வாயக் கொப்புளிச்சிக்கிறேன்' என்று சொல்லிக் கொப்பளித்து விட்டு, 'வர்றியாடி ரெண்டு பேரும் இப்புடியே ஓடிப்போயி கலியாணம் கட்டிக்கலாம்' என்றார். 'ஆமா இழுத்துக்கிட்டு ஓடிட்டாலும்... போங்கய்யா நீங்க... நானெல்லாம் உங்கள மாதிரி கோக்கணங் கட்டுற ஆளைக் கட்ட மாட்டேன்... கோட்டுச் சூட்டுப் போட்ட ஆளைத்தான் கட்டுவேனாக்கும்...' என்றாள் நையாண்டியாக. 'ஆமா வரிசையில நிக்கிறானுவ... கடைசியில நாந்தாண்டி உனக்கு மாப்பிள்ளை... பாப்போமா...?' என்றவாறு கண்மாயை நோக்கி நடந்தார்.

வேப்பங் குச்சியால் பல் விளக்கியபடி வந்து அடிபம்பில் ஒரு கையால் தண்ணீர் அடித்து மறுகையில் பிடித்து வாய் கொப்பளித்துவிட்டு தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் தொடைத்தபடி மாரியின் வாசலில் புவனா போட்டுச் சென்ற அழகான கோலத்தை மிதிக்காமல் ஒதுங்கி நின்று மாரியைக் கும்பிட்டுவிட்டு நகர, "என்ன சித்தப்பா... காலையிலேயே வெளிய பொயிட்டு வாறீக...?" என்றபடி கடந்தான் 

"தூக்கம் வரலைப்பா.... அதான்... ஏம்ப்பா காளை மாட்டைக் கழுவி விடலாம்ல்ல... சாணியிங்கீணியுமாக் கெடக்கு பாரு..." என்றார்.

"இன்னிக்கி கழுவணும்ப்பா... எங்க எதாச்சும் ஒரு வேலை வந்திருது... உங்க பேராண்டிகளை மாட்டைக் கழுவி விடுங்கடான்னு சொன்னா... எங்க கேக்குறானுக..." என்று பதில் சொல்லியபடி "இந்தா வாறேன்.." என்று நடந்தான்.

வீட்டுப் படியேறியவர் காளியம்மாள் இன்னும் தூங்குவதைப் பார்த்ததும் 'இவ இன்னும் எந்திரிக்கலை போலயே... உடம்புகிடம்பு சரியில்லையா?' என்ற நினைப்போடு அருகே சென்றார்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொடர்ந்து படிக்கிறேன். உடன் வருவதைப்போலுள்ளது. நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நண்பரே! தொடர் எழுதுவது என்பது எவ்வளவு பெரிய ஒரு விசயம்...அழகாகத் தொடர்கின்றீர்கள்...நாங்களும் தொடர்கின்றோம்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே
தம 2

”தளிர் சுரேஷ்” சொன்னது…

காளியம்மாள் ஏன் எழுந்திருக்க வில்லை! படபடப்புடன் காத்திருக்கிறேன் நண்பரே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தாங்கள் தொடர்ந்து வாசிப்பது குறித்து சந்தோஷம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

நன்றாக உள்ளது தொடருங்கள் காத்திருக்கேன் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு சொன்னது…

கண்ணதாசனின் பட படப்பு, காளியம்மா அவர்களின் தூக்கம் மனதை ஏதோ செய்கிறதே!

Yarlpavanan சொன்னது…

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஊமைக்கனவுகள் சொன்னது…

ஒரு தொடர்கதையை பின்னால் இருந்து படித்துப்போவது, படைப்பாளியின் நடையையும் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளத் துணை செய்யும் என்று நான் நினைத்திருக்கிறேன்.

கதையோடு ஒன்றாமல் வடிவத்தை மட்டும் ஆராய்ந்து செல்ல பயன்படும் உத்தி.

ஆனால் தங்கள் நடை கதையில் ஈர்ப்பினை ஏற்படுத்திவிட்டது.

தொடர்கிறேன்.

நன்றி.