மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 ஜனவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 19)

முந்தைய பகுதிகள் : 


பதினெட்டாவது பகுதியின் இறுதியில்...

"அட ஏண்ணே நீ வேற... அந்த ஆளைக் கூட்ட நானா... வேணுமின்னா அண்ணனைக் கூட்டிக்கிட்டு போ..."

"அவரு சட்டையைப் பிடிச்சி முத இடத்துல இருக்கது நீதானே... நீதான் வர்றே... சரி காலாகாலத்துல போய் படுங்கத்தா... விடியக் காலையில வீட்டுக்கு வந்திருக்க மருமகளுக எல்லாம் எட்டு வீடு விட்டெறியிற மாதிரி கோலம் வேற போடணும்... அதுவும் எம்பொண்டாட்டி கோலம் போட்டா எங்க வீட்டு வெள்ளக்கோழி குப்பையைக் கெளறுன மாதிரியே இருக்கும்... ஆத்தி... என்னைய்யா என்னைய பேசுறேன்னு வந்தாளும் வந்துருவா... சரி... குமரேசா... காலையில போவோம்..." என அந்த இடத்தைக் கலகலப்பாக்கிச் சென்றான். 

இனி...

பொங்கல் அன்று காலை அனைத்து வீட்டு வாசலிலும் கலர்க்கலராய் பொங்கல்பானைக் கோலத்துடன் விடிந்தது. குளித்துவிட்டு ஈரத்துண்டால் தலையைச் துடைத்தபடி வந்த கண்ணதாசன், வாசலில் நின்று வேப்பங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டிருந்த குமரேசனைப் பார்த்து "நீ இன்னும் குளிக்கலையாடா... இப்படியே கம்மாய்ப் பக்கம் போயி வெளிய தெருவ பொயிட்டு நல்லா விழுந்து குளிச்சிட்டு வரலாமுல்ல... எப்பவும் பைப்புத் தண்ணியிலதானே குளிக்கிறே...?"

"இந்தாப் போகணும்... ஆமா நீ என்ன அதுக்குள்ளயும் குளிச்சிட்டு வந்துட்டே... அத்தாச்சி வேற வேலை எதுவும் சொல்லலையா...?"

"கிண்டலா... காலையில பொங்க வைக்கிறதுக்கு முன்னாடி சின்னத்தானைப் போயி பாக்கணுமின்னு பேசினோம்... தெரியுமில்ல... அதான் அவசரமா குளிச்சிட்டு வந்தேன்... பத்து மணிக்கு மேல பொங்க வைக்க நல்ல நேரமாம்... அதுக்குள்ள பொயிட்டு வந்திடலாம்... நீ வெரசா குளிச்சிட்டு வா..."

"ஆமா... அந்தாளைப் பாக்க நல்லநாள் அன்னைக்குப் போகணுமாக்கும்?"

"இங்க பாரு குமரேசா... எதையுமே தள்ளிப்போடாம முடிக்கணும்... போ குளிச்சிட்டு வந்து கிளம்பு..."

"ஏண்ணே... அப்பாதான் சொல்றாருன்னா நீயும் அவரு மாதிரியே பறக்குறே... பொங்க முடிஞ்சதும் போயி பாத்தா என்ன... அடுத்தநாளே பிரிச்சாத்தானா...?"

"அப்புறம் நீங்க வேலையின்னு ஓடிருவீங்க... மறுபடியும் எதாவது விசேசமுன்னாத்தான் வருவீங்க... அத்தோட சின்னத்தானை இன்னைக்குப் போனா பாக்குறது சுலபம்... நாளைக்கு மாட்டுப் பொங்க முடிஞ்சி போனா... அவரு எங்கயாச்சும் போயிருவாரு... நானும் சிராவயல் மஞ்சரட்டுக்குப் பொயிட்டு ராத்திரித்தான் வருவேன்... அதெல்லாம் சரியா வராது... இன்னைக்கே போவோம்... போ... வளவளன்னு பேசாமா..." என்றவன் அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் வீட்டுக்குச் சென்றான்.

'ஆமா... அப்பாவுக்கு வாச்ச நல்ல மகன் கண்ணதாசண்ணே... அவரு சொன்ன தட்டவே மாட்டாரு..' என்று முணங்கியவன் "அபி... சோப்பு டப்பாவை எடுத்துக் கொடு... குளிச்சிட்டு வாறேன்..." என்றான்.

"சாப்பிடு கண்ணா..." என்றாள் சித்ரா.

"இல்லத்தாச்சி... சாப்பிட்டேன்... எங்க குளிக்கப் போனவன் இன்னும் வரலையா?"

"வரலை... உக்காரு... இப்ப வந்துரும்..." 

"அவருக்கு அங்க போக இஷ்டமே இல்லை மாமா... எல்லாருக்கிட்டயும் கடுப்படிக்கிறாரு..." என்றபடி வந்தாள் அபி.

"என்ன பண்றது அபி...சின்னத்தான் பண்றது சரியில்லைதான்... இருந்தாலும் நாமதானே அனுசரிச்சிப் போக வேண்டியிருக்கு... மணி அண்ணன் வந்தா எதாவது பேசிரும்... இவன்னா கொஞ்சம் கோபமில்லாம பேசுவான்..."

"ஆமா... அவருக்கு முணுக்குன்னு கோவம் வந்துரும்... இதுன்னா கொஞ்சம் அனுசரிச்சிப் பேசும்..." என்றாள் சித்ரா.

"கண்ணா... அங்கன போயி சண்டகிண்ட போடப்படாது... இன்னக்கி நல்ல நாளு... அவரு எது சொன்னாலும் பேசாம இருந்து நாம போன காரியத்தை முடிச்சிட்டு வரணும்... உனக்குச் சொல்லத் தேவையில்லை... ஆனா குமரேசன் எதாவது சொல்லி பிரச்சினையை பெரிசாக்கிறாம..." என்றபடி கையில் பொங்கல் பானையில் கட்டுவதற்காக நெல் கதிருடன் வந்தார் கந்தசாமி.

"அது நா பாத்துக்கிறேன் சித்தப்பா..."

"ஆமா... எம்புள்ளக எல்லாத்தையும் விட்டுட்டுப் போயி நிக்கணும்... அவரு ஒண்ணு சொன்னா இவனுக ஒண்ணு சொல்லுறது மாதிரித்தான் இருக்கும்... அதுக்காக சொரணை கெட்டுப் போயா நின்னுட்டு வரமுடியும்... கண்ணா... உங்க சித்தப்பனைக் கூட்டிக்கிட்டுப் போ... மாப்ள கால்ல விழுந்து கூட்டியாருவாரு... அந்தாளு என்னவோ ரொம்ப நல்லவரு மாதிரி..." பொங்கப் பானைக்கு கோலமிட்டபடியே பேசினாள் காளியம்மாள்.

"இவோ ஒருத்தி... அவனுகளை கொம்பு சீவி விட்டுக்கிட்டு... நல்ல நாளு பெரிய நாளுல்ல போயி அடிச்சிக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும்... அங்க இருக்கது நம்மபுள்ள... அதுக்கு பிரச்சினை வரணுமாக்கும்..." என்றவர் "இந்தா கண்ணா... உனக்கும் சேத்துத்தான் பறிச்சிக்கிட்டு வந்தேன்... " என்று நெல்கதிரைக் கொடுத்தார்.

"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை வராது சித்தப்பா... சின்னம்மா நீ கொஞ்சம் சும்மா இரு... அடிச்சிக்கிட்டா அப்படியே இருக்க முடியுமா... எல்லாம் சரியாக வேணாமா... அபி அவன் வந்ததும் சீக்கிரம் கிளம்பச் சொல்லு... சாப்பிட்டு கூப்பிடச் சொல்லு..." என்றபடி வீட்டுக்குச் சென்றான்.

"வாண்ணே.... வாடா... ஆச்சர்யமா இருக்கு... குமரேசன் எங்க வீட்டுக்கு வந்திருக்கான்..." என்று வரவேற்ற கண்மணி, "உக்காருங்க..." என்று சேரெடுத்துப் போட்டாள்.

"இந்தா தண்ணி குடிங்க... பொங்கன்னக்கி வந்திருக்கீக...? ஏதாவது விசேசமா?" என்றாள்.

"என்ன விசேசம்? அதெல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா அப்படியே பாத்துட்டுப் போவோமுன்னு வந்தோம்... ஆமா எங்க அவரைக் காணோம்..."

"இன்னருதி இங்கதான் இருந்தாக... இப்பத்தான் குளிக்கப் போனாக... வந்துருவாக..." என்றவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நின்றவனிடம் "மாமாடா... யாரு வந்தாலும் பேசதுக... கொலு மாடுகளாட்டம்... ஏட்டி... அடி... சுவேதா.... டிவியைக் கட்டிக்கிட்டு அழு... இங்க வந்து பாரு... ஆரு வந்திருக்காகன்னு..." என்று உள்ளே பார்த்துக் கத்த, சுவேதா 'எதுக்கும்மா கத்துறீக...?" என்று வெளியே வந்தாள்.

இருவரையும் பார்த்தவள் லேசாக சிரித்தாள், "என்ன மருமவளே... எப்பவும் இந்தச் சிரிப்புத்தானா? மாமான்னு சொன்னா முத்து உதிந்திருமாக்கும்... நல்லபுள்ளக..." என்ற கண்ணதாசன், "இந்த மாமாவை பாத்து ரொம்ப நாளாச்சுல்ல... மாமான்னு சொன்னா என்ன...?" என்றான் குமரேசனைக் காட்டி.

"இங்க வாத்தா..." என்று குமரேசன் சுவேதாவை அழைக்க, வேகமாக வந்து அவன் மடியில் அமர்ந்தாள். 

"ஆமா... நாளைக்கே குத்த வைக்கிற மாதிரி இருக்கே... நல்லாத்தான் அவன் மடியில போயி உக்கார்றே...? இறங்கி உக்காரு..." மகளைக் கடிந்தாள் கண்மணி.

"வயசுக்கு வந்தாலும் அதுக நம்மவுட்டுப் புள்ளைகதானே... எதுக்கு திட்டுறே..?" என்றபடி அவளின் தலையை வருடினான்.

"எங்க மாமா... நா உக்கார்றேன்... உங்களுக்கு என்ன... வேணுமின்னா நீங்க உங்க மாமா மடியில போயி உக்காருங்க... என்ன மாமா..." என்றாள்.

"முத்து உதிந்திருமான்னு கேட்டது தப்புத்தான்... என்னமா பேசுது..." எனச் சிரித்தான் கண்ணதாசன்.

"ஆமா எம்மாமன் மடியில உக்காரணுமின்னா சுடுகாட்டுக்குப் போனாத்தான்..." என்றாள் கண்மணி.

"கழுத... நல்லநாளு அதுவுமா பேச்சைப் பாரு... சின்னப்புள்ள மாமனைப் பார்த்த சந்தோஷத்துல பேசுது... அதுக்குப் போயி... உங்களுக்கெல்லாம் பேசத் தெரியுதா..." உரிமையோடு திட்டினான் கண்ணதாசன்.

அதுவரை அவற்றை எல்லாம் அம்மாவின் சேலைத் தலைப்புக்குள் நின்று பார்த்துக் கொண்டிருந்த சங்கர் மெதுவாக குமரேசனிடம் வந்து மடியில் அமர சுவேதாவைத் தள்ளினான்..

"பாரு... என்ன இருந்தாலும் ரத்த பாசமுல்ல... தெரியாத மாதிரி நின்னுக்கிட்டிருந்தான்...." என்ற கண்ணதாசன் "ஆத்தா... நீ... இங்க வாடா... அவன் உக்காரட்டும்..." என சுவேதாவை தனது மடிக்கு மாற்றினான்.

"காயமெல்லாம் ஆறிடுச்சாடா... அபிக்கு எப்படியிருக்கு?"

"மாறிடுச்சு... அவளுக்கு கையில மட்டும் இன்னும் காயம் இருக்கு..." என்றான்.

"வாப்பா... நீ சின்னவந்தானே.... என்ன காலையில கிளம்பி வந்திருக்கிகளே... நீ இவ பெரியப்பன் மவன் கண்ணந்தானே... என்னப்பா ஒன்னையவும் இங்கிட்டு ஆளையே காணோம்..." என்றபடி அவளின் மாமியார் எங்கிருந்தோ வந்தாள்.

"வேல அயித்தை... எங்கிட்டும் போறதில்லை... நல்லாயிருக்கீகளா?" குமரேசன் எதுவும் பேசாமல் இருக்க, கண்ணதாசந்தான் பேசினான்.

"நல்லாத்தானிருக்கேன்.... எனக்கென்ன..? என்ன ஓல கொண்டாந்திருக்கீக..." என்றபடி வெத்தலையை அதக்கினாள்.

"சும்மாதான் வந்தோம்..."

"அதுக்கு வேற வேலையில்ல... நம்ம வீட்டுச் சனத்தைப் பார்த்தா பத்திக்கிட்டு வரும்... நீங்க பேசாம காபியைக் குடிங்க..." என்றாள் கண்மணி மெதுவாக.

"மாமா கூட வாரீகளா?" என்று குமரேசன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே... வீட்டுக்குள் நுழைந்த ரமேஷ், அவர்களைப் பார்த்தபடி கொடியில் துண்டைக் காயப்போட்டான்.

"அத்தான்..." சொன்னது கண்ணதாசன்.

"ம்..." என்றபடி வேட்டியை எடுத்துக் கட்டினான்.

"என்னங்க தம்பி வீட்டுக்கு வந்திருக்கான்... நம்ம வீட்டுக்கு வந்தவுகளை நாமதான் வாங்கன்னு சொல்லணும்... வாப்பான்னு ஒரு வார்த்தை சொல்லுங்க... குறைஞ்சிடமாட்டோம்..." என்று அவனருகில் போயி காதைக் கடித்தவள் அவனின் ஈரக்கைலியை வாங்கி கொடியில் போட்டாள்.

"என்ன விஷயமா வந்திருக்காங்களாம்..?" மனைவியிடன் கேட்டபடி தலையில் எண்ணெய் தேய்த்தான்.

"அதை நீங்களே கேளுங்க...?"

"அத்தான்...." குமரேசன் மெதுவாக அழைத்தான்.

"யாருக்கு யாருடி அத்தான்.... அத்தான் நொத்தானுன்னு... இங்க எதுக்குடி வந்தான்..?" கத்தியவன் கையிலிருந்த எண்ணெய்ப் பாட்டில் வாசலில் போய் விழுந்தது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

"எங்க மாமா... நா உக்கார்றேன்..//

குழந்தையின் அன்பு பேச்சு அருமை.

Unknown சொன்னது…

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Unknown சொன்னது…

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

துரை செல்வராஜூ சொன்னது…

வீட்டுக்குள் இருக்கிற மாதிரியே - இருக்கின்றது.. அருமை..

KILLERGEE Devakottai சொன்னது…

யதார்த்தம் அருமை நண்பரே...
தமிழ் மணம் 2

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே அருமை
தொடர்கிறேன்
தம +1

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கண்டிப்பாக இணைகிறேன் நண்பரே....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாவாணன் ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஏதோ நம்ம வீட்டில் நடப்பது போல யதார்த்தத்துடன் வேரும் விழுதுகளும் நன்றாக ஊன்றி விட்டன......தொடர்கின்றோம்....