மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 ஜூன், 2013

நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும். ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக்கும். இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பதில்லை. உதாரணமாக, பூசணிக்காய் இனிப்பாக தான் இருக்கும். ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீரிழிவு இருந்தால், அவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உருளைக்கிழங்கு 

 உருளைக்கிழங்கில் மாவுப்பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சேனைக்கிழங்கு 

 பொதுவாக கிழங்குகள் அனைத்திலுமே மாவுப்பொருளானது அதிகம் இருக்கும். அதிலும் சேனைக்கிழங்குகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் அதிகரிக்கும். எனவே இந்த கிழங்கை உணவில் சேர்க்கக்கூடாது.

பீன்ஸ் 

  பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகம் உள்ளது. அதற்காக பீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றை நீரில் வேக வைத்து, அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

பீட்ரூட் 

   பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பதால், இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புக்களையும் உறிஞ்சி, மிகவும் இனிப்பான சுவையில் உள்ளது. அதற்காக இதனை அறவே தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் இதில் மற்ற நன்மைகளும் அடங்கியிருப்பதால், இதனை 2-3 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

ஸ்குவாஷ் (Squash) 

  ஸ்குவாஷ் ஒரு இனிப்புச் சுவையுடைய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள், இநத் காய்கறியில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும், அறவே தவிர்க்க வேண்டும்.

பச்சை பட்டாணி 

    பச்சை பட்டாணியில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தக்காளி 

   தக்காளி சேர்க்காத உணவுகளை பார்க்கவே முடியாது. இருப்பினும் இது இனிப்புச் சுவையுடையதால், இதனை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.

சோளம் 

     சோளத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே, இது மிகவும் இனிப்பானது என்பது தெளிவாக தெரிவதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற அளவில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது.

வாழை வகைகள் 

       இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை அதிகம் சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த உணவுப் பொருட்களிலும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைவள்ளி  

உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும்.

*************

நீரிழிவு நோய் குறித்த விக்கிபீடியா தகவல் :

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.

நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது.

நன்றி : விக்கிபீடியா & தட்ஸ் தமிழ் இணைய இதழ்

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

பயன்மிக்க தகவல்கள். ஒரு சிறிய திருத்தம் நீரிழிவு நோய் பரவுவதில்லை, அது ஏற்படும் நோய். நன்றிகள்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Very Good Information...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இன்று நீரிழிவு நோய் பலருக்கும் உள்ளது. நமது உண்வு பழக்கஙளும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. பயனுள்ள குறிப்புகள்

Tamil News 24x7 சொன்னது…

அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பயனுள்ள தகவல்கள்..