மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 ஜூன், 2013

அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி

தமிழக அரசியலில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது வழக்கமானதாகவே இருந்து வருகிறது. இதன்படி தி.மு.க.,வில் இருந்து பரிதிஇளம்வழுதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமி ஆகியோர் இன்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த விலகல் மேற்கண்ட கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


அ.தி.மு.க, பொதுச்செயலர் ஜெ.,வை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். பரிதியை பொறுத்தவரை தி.மு.க.,வில் இருந்து ஸ்டாலினுடன் ஒத்து போகாததால் கட்சியில் இருந்து விலகி இருந்தார். 

இவர் தி.மு.க.,வில் துணை பொதுசெயலாளராகவும், ஒரு முறை செய்தி துறை அமைச்சராகவும், ஒரு முறை துணை சபாநாயகராகவும் இருந்தார். இவர் கடந்த 1981 ல் தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வானார். ராஜிவ்கொலைக்கு பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் (1991) கருணாநிதி, பரிதி ஆகிய இருவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. 

எவ்வித இழப்பும் இல்லைஜி.கே.,மணி ; இது குறித்து பா.ம.க., தலைவர் ஜி.கே.,மணி கூறுகையில்; கொள்கை ரீதியாக கட்சி நடத்துபவர் ராமதாஸ். தாழ்த்தப்பட்ட அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும், இவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. 

இவர் அ.தி.மு.க.,வில் இணைந்ததால் கட்சிக்கு எவ்வித இழப்பும் ஏற்பட போவதில்லை. இவர் கட்சியில் இருந்த போதே அவர் எந்தவொரு பலனும் இல்லாமல் தான் இருந்தார். இதனை பல தொண்டர்கள் சொல்லியிருக்கின்றனர். இவர்தான் தன்னை முன்னேற்றி கொண்டார். இவ்வாறு அவர் கூறினார். இது இவருடைய விருப்பம் இவரை கட்சியில் சேருங்கள் என எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

இது குறித்து பொன்னுச்சாமி இன்று கூறுகையில்; அரசியலுக்கு வர மாட்டேன் என்று இருந்த போது என்னை பா.ம.க.,தான் கட்சிக்கு அழைத்தது, மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றார். 

அ.தி.மு.க.வில் ரொம்ப நாளாக அழைப்பு இருப்பதாக எனக்கு எண்ணம் இருந்தது. மேடம் நன்றாக செயல்படுகிறார்கள் .காவிரி பிரச்னையிலும் நன்றாக செயல்பட்டார். நல்ல நிர்வாகம் இங்கு இருப்பதாகவும், மேலும் இந்த கட்சியில் இணைந்தால் நன்கு பணியாற்ற முடியும் என நம்புவதாகவும் பொன்னுச்சாமி தெரிவித்தார். 

இன்று முதல்வர் ஜெ., கொட நாடு செல்கிறார். அங்கும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.கவில் இணைவர் என கூறப்படுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்ட தி.மு.க.,நிர்வாகிகள் சேரவுள்ளதாக தெரிகிறது.

‘ கோபாலபுரத்து கொள்ளைக்காரர்கள் ’- பரிதி 

கட்சியில் இணைந்த பின்னர் பேட்டியளித்த பரிதி இளம்வழுதி ; என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டதற்கு அம்மாவுக்கு நன்றி. சட்டசபையில் ஜெ., இருக்கும்போது எதிர் வரிசையில் இருந்து நான் கடுமையா விமர்சித்தும், எதிர்த்தும் பேசியிருக்கிறேன். கோபாலபுரத்து கொள்ளைக்காரர்கள் பேச்சை கேட்டு பேசினேன். இருப்பினும இதனை மறந்து தாயுள்ளத்தோடு என்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

-நன்றி : தினமலர்

-'பரிவை' சே.குமார்

0 எண்ணங்கள்: