மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 9 ஜனவரி, 2013

விதிவிலக்கா, எதற்காக? (தினமணி - தலையங்கம்)

 திரைப்படத் துறைக்கு சேவை வரி கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் அனைவரும் திங்கள்கிழமை (ஜனவரி 7) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இது வெறும் அடையாள உண்ணாவிரதம் மட்டுமே. மத்திய அரசு தங்கள் கோரிக்கையை ஏற்காவிடில் மேலும் சில போராட்ட உத்திகளில் திரையுலகம் ஈடுபடக்கூடும்.

 திரையுலகின் நூற்றாண்டு தொடக்க விழா ஆண்டாகிய 2012-இல் திரையுலகம் மீது வரிகளை விதிக்க மாட்டோம் என்று 2012 மார்ச் முதல் வாரத்தில், அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி கூறினார். பட்ஜெட்டில் சேவை வரி 12.36% ஆக உயர்த்தப்பட்டபோது, சேவை வரிப் பட்டியலில் திரையிடுவோர், விநியோகஸ்தர்களுக்கு விலக்கு அளித்ததற்காக அப்போது திரையுலகம் அவருக்கு நன்றியும் தெரிவித்தது.

  ஆனால், மத்திய அரசு ஜூன் மாதம் வெளியிட்ட சில சுற்றறிக்கைகள், சேவை என்றால் என்ன என்று வகைப்படுத்தியது. இதில் திரைத்துறை கலைஞர்கள் இடம்பெறும் கட்டாயம் ஏற்பட்டது. இப்போது இந்த சேவை வரியை எதிர்த்துத் திரையுலகினர், சின்னத்திரைக் கலைஞர்கள் அனைவரும் களம் இறங்கியுள்ளனர்.

  நடிகர்கள் மட்டுமின்றி கேமராமேன், எடிட்டிங் செய்பவர், ஒலிப்பதிவு செய்யும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் தங்கள் வருமானத்தில் 12.36% சேவை வரி செலுத்த வேண்டும். ஒரு தயாரிப்பாளர் பட விநியோகஸ்தர்களுக்கு படத்தைத் திரையிடும் உரிமையை வழங்குவதால் (காப்பிரைட்) கிடைக்கும் பணத்துக்கு மட்டும் சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  இத்தகைய சேவை வரி விதிப்பினால், ஒரு படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் பெறும்  நடிகர், ரூ. 12.36 லட்சம் சேவை வரி கட்ட வேண்டும். ஆனால், அந்த நடிகர் இந்த சேவை வரியை படத் தயாரிப்பாளரே செலுத்த நிர்பந்திப்பார் என்றும் இத்தகைய நடைமுறையால் கருப்புப் பணம்தான் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

  இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "இப்படி வரி போட்டால் கருப்புப் பணம்தான் அதிகமாகும். கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால்தான் அரசுக்கு அதிகப் பணம் கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.

  இத்தகைய வரிவிதிப்பை மத்திய அரசு கொண்டுவரக் காரணம், இன்று இந்தியத் திரையுலகம் மற்றும் சின்னத்திரையுலகம் அடைந்துள்ள மாற்றமும், இத்தொழிலில் உருவாகியுள்ள புதிய நடைமுறைகளும்தான்.

  இன்றைய திரையுலகம் வெறும் திரையரங்குடன் நிற்கவில்லை. திரையரங்குகள் மூலம் அரசுக்கு வரும் கேளிக்கை வரி மிகமிக சொற்பம். தற்போது 600 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் ஒவ்வொரு வீடும் ஹோம் தியேட்டராக மாறிவிட்டது. 3ஜி தொழில்நுட்பம் மேலும் பரவலாகும்போது, செல்போனில், டேப்லெட்டில் திரைப்படம் அல்லது சின்னத்திரை சீரியல்களைப் பார்க்க முடியும். ஆகவே சேவை என்பதன் பொருளை மத்திய அரசு விரித்துக்கொண்டே போகிறது.

  ஓராண்டில் சுமார் 1,000 திரைப்படங்களும் 9,000 சீரியல்களும் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒலிப்பதிவு, பாடல்பதிவு, ஸ்டுடியோ எல்லாமும் மிகச் சிறிய அளவில், ஒரு வீட்டுக்குள் இருந்தாலே போதும் என்ற அளவுக்கு கணினித் தொழில்நுட்பம் எல்லைகளைச் சுருக்கியுள்ளது.

  அதுமட்டுமல்ல, இந்தியாவில் செலவு குறைவு என்ற காரணத்தால், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் சில அனிமேஷன் படங்களும், எடிட்டிங் பணிகளும் இந்தியாவுக்கு அயல்பணி ஒப்பந்தமாக வருவது அதிகரித்துள்ளது.

  மேலும், திரைப்பட காட்சித் தொகுப்புகளை, பாடல்களை, அல்லது படம் முழுவதையும் தனியார் தொலைக்காட்சிகள் பயன்படுத்திக்கொள்ள, ஒளிபரப்பு உரிமைகளை வழங்குவதிலும் புதிய நடைமுறைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு படம் முடியும் முன்பாகவே இந்த உரிமைப் பரிமாற்றம் நடந்துவிடுகிறது. வெளிநாட்டுப் படங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு, நேரடியாக தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

  "விஸ்வரூபம்' போன்று, ஒரு படத்தை நேரடியாக, டி.டி.எச் மூலம் வெளியிடலாம் என்கின்ற அளவுக்கு தொழில்நுட்பம் விரிந்துள்ள நிலையில், திரை மற்றும் சின்னத்திரை சேவை வகைப்பாட்டில் தானே சிக்கிக்கொள்கிறது.

  இந்த வரி விதிப்பினால், தயாரிப்புச் செலவு கூடும், இந்தச் செலவு கடைசியாக மக்கள் மீதுதான் வந்து விழும் என்று சொல்கிறார்கள். இந்த வாதம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருக்கலாம். திரையரங்குகளைத் தேடி வந்து பார்க்கும் மக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட இந்த நாளில் இந்த வாதம் பொருந்தாது.

  பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு, அவர்களது சேவை வரியை அவர்களே கட்டினாலே போதும், தயாரிப்புச் செலவு பெரிதும் குறைந்துவிடும்.

  திரைப்படம் என்பது திரைத்துறையோடு நின்றுவிடும் நிலைமை இன்றில்லை. திரையரங்குகள் என்பதைத் தாண்டி, தனியார் தொலைக்காட்சிச் சேனல்களுடன் தொடர்புடைய தொழிலாக திரைத்துறை மாறிவிட்டது. திரைத்துறைக்கு சேவை வரி விலக்கு அளிப்பதன் பெரும்பயன் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத்தான் மறைமுகமாகப் போய்ச் சேரும்.

 நடிக, நடிகையரும், திரையுலக ஊழியர்களும் மாதச் சம்பளம் பெறுபவர்கள் அல்ல. ஒப்பந்தப் பணியாளர்கள். ஒப்பந்தம் என்றாலே அதற்கு சேவைவரி உண்டு. சிகையலங்காரம், அழகுக் கலை வல்லுநர்கள் போன்றவர்களுக்கே சேவை வரி உண்டு எனும்போது, லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் பெறும் திரைப்படத் துறையினருக்கு எதற்காக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று புரியவில்லை.

 வழக்கில் ஆஜராவதற்கு நாளொன்றுக்கு லட்சத்துக்கும் மேல் சம்பளம் பெறும் வழக்குரைஞர்களை மட்டும் வழக்குரைஞரான நிதியமைச்சர் ஏன் சேவை வரி வரம்பில் சேர்க்காமல் விட்டு வைத்திருக்கிறார்? அவர்களுக்கு ஏன் விதிவிலக்கு என்கிற கேள்வியையும் இந்த நேரத்தில் எழுப்பத் தோன்றுகிறதே...

08/01/2013
'பரிவை' சே.குமார் 

2 எண்ணங்கள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தகவல் பகிர்வுக்கு நன்றி, குமார்.

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)