மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தேசத் துரோகம்! (தினமணி தலையங்கம்)

திர்க்கட்சியை ஆளும் கட்சியும் ஆளும்கட்சியை எதிர்க்கட்சியும் குறைகூறுவது வழக்கமான ஒன்று. ஆனால், அத்தகைய குறைகாணும் வழக்கம் வரம்பு மீறுவதும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தரம் தாழ்வதும் ஏற்புடையதல்ல.

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாமில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ""பாரதிய ஜனதா கட்சியும், அதன் தாய் நிறுவனமாகிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பும் அவற்றின் பயிற்சி முகாம்களில் ஹிந்துத்  தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றன. இந்த இரு அமைப்புகளின்  தீவிரவாத நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது'' என்று கூறியிருக்கிறார்.

 அதுமட்டுமல்ல, "சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சில குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது' என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாதில் மெக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகான் நகரில் மசூதி ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்றும், அவர்கள் செய்த "இந்தக் குற்றத்துக்கு சிறுபான்மையினர் மீது பழி போடுகிறார்கள்' என்றும் கூறியிருக்கிறார்.

 நாட்டின் உள்துறை அமைச்சர் கூறும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால், இந்நேரம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு மோசமான தீவிரவாதம் இந்த தேசத்தில் வளர்க்கப்படுகிறது என்றால் செயல்பட வேண்டிய மத்திய அரசு,  ஏன் வெறுமனே சிந்தனை முகாமில் இதைப் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?

 மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் துறவி கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தீர்ப்பு வெளியாகாத நிலையில் இதுபற்றி நாம் யாராவது எழுதினாலோ, பேசினாலோகூட நீதிமன்ற அவமரியாதை எனும்போது,  ஒரு உள்துறை அமைச்சர், சாதாரண அரசியல் மேடைப் பேச்சாளர்போல, தொண்டர்களின் கரவொலிக்காக இவ்வாறெல்லாம் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

 கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்தியாவில் நிலவிய பதற்றமான நிலை ஒவ்வொரு இந்தியன் மனதிலும் அச்சத்தை விதைத்துக்கொண்டிருந்தது. இந்தியா- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டன. சண்டைநிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இந்திய எல்லையில் துப்பாக்கிக் குண்டுமாரி பொழிந்தது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் நுழைகிறார்கள், நடமாட்டம் இருக்கிறது என்று இந்தியா சொன்னதை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு கார்கில் போர் மூளுமோ என்ற அச்சம் நிலவியது. அந்த நிலைமை சற்று தணிந்திருக்கும் இவ்வேளையில், இந்தியாவில் ஹிந்துத்  தீவிரவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்றும், குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத் தீவிரவாதிகள்தான் என்றும் ஒரு உள்துறை அமைச்சரே பேசினால், பாகிஸ்தானுக்கு எத்தகைய கொண்டாட்டமான விஷயம் அது.

 பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்றுதான் இந்திய அரசு கூறி வருகிறதே தவிர, முஸ்லிம் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்று தவறிக்கூடக் கூறியதில்லை. இந்தியப் பத்திரிகைகளும்கூட தீவிரவாதிகள் கைது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் எழுதுகின்றனவே தவிர, அவர்களது பெயரைக்கொண்டு, அவர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று எழுதுவது இல்லை.

 தீவிரவாதிகள் மனிதகுலத்துக்குப் பேரழிவு நாடுபவர்கள் என்பதால்தான் அவர்களை நாம் எதனோடும் அடையாளப்படுத்துவதில்லை. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனம், மதம், மொழி, நாடு கடந்து வெறும் தீவிரவாதிகளாக மட்டுமே பார்ப்பதுதான் வழக்கம்.

 நாட்டின் உள்துறை அமைச்சரான ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு. பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஹிந்துத் தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் என்றால், தக்க ஆதாரங்களைக் காட்டி, அதனை முறைப்படி நிரூபித்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பேச்சாக மட்டுமே இருக்குமானால், ஷிண்டே இனியும் உள்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்.

 அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என். வேலு, உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்படக் காரணம்,  நீதியில் அரசியல் கூடாது என்பதற்காக!

 மனத்தீ வளர்க்கும் வார்த்தைகளைப் பேசிய ஆந்திர மாநில எம்எல்ஏ அக்பரூதீன் ஓவைஸியை, ஹைதராபாத் போலீஸ் கைது செய்யக் காரணம், மானுடநெறியில் அரசியல் கலக்கக்கூடாது என்பதற்காக!

 இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஹிந்துத் தீவிரவாதிகள் பற்றி கூறிவிட்ட பிறகு இனிமேல் நாம் பாகிஸ்தானின் துணையோடு இங்கே நடைபெறும் தீவிரவாதச் செயல்கள் பற்றிப் பேச முடியுமா? உங்கள் உள்துறை அமைச்சரே கூறுகிறார் ஹிந்துத் தீவிரவாதிகள் முகாம்களில் தயாரானதாக என்று பாகிஸ்தான் பதிலடி கொடுக்காதா? இவரெல்லாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர்...! இவர்களுக்கெல்லாம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர்கள்..!

 ஓட்டுக்காக நாட்டை பலி கொடுப்பவர்களை என்னவென்று அழைப்பது?

நன்றி : தினமணி (தலையங்கம் - 22/01/2013)
                                                                                                                                                                              -'பரிவை' சே.குமார்

1 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

That means you do not want to say the truth ?. Anywhere in india..no no no ...World, anything happening...oh..this is might be done by Islam terrorist. Dear brother is this correct ? If Hindus making problem, that means 'fighting' and If Cristian making problem that means 'fighting' but if islam brother are making truth fighting, that is Islam terrorist why ? can you explain it to me brother. ? (Dinamani always support Hindus religion. If you are wellwisher for Indian, say the truth and dont support hindus or Hindus support Newspaper brother)