மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 ஆகஸ்ட், 2011

இந்திய கிரிக்கெட்: வீழ்ச்சியின் ஆரம்பமா?



கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் முதலிடத்தை தக்க வைத்திருந்த இந்திய அணி இங்கிலாந்துடனான நான் கு போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் முதல் இடத்தையும் இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்துள்ளது.

கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். ஆனால் நம்பர்-1 அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததுதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு மோசமான தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய அணியைப் பொறுத்தவரை திராவிட்,சச்சின்,லெட்சுமணன், தோனி, காம்பீர், ரெய்னா, ஜாகீர்கான்,ஹர்பஜன் சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் அணியின் வெற்றிக்கு உதவும் நட்சத்திரமாக ஒருவர் கூட ஜொலிக்க முடியாதது துரதிஷ்டமே. (இவர்களை ஜொலிக்கவிடாமல் செய்த பெருமை காயத்தையே சாரும்.)

இரண்டு போட்டியில் தோற்றவுடன் அணியில் அறிவிக்கப்பட்டிருந்தும் காயம் காரணமாக விளையாடாமல் இந்தியா திரும்பியிருந்த சேவாக் வேகவேகமாக அனுப்பப்பட்டார். அவரும் சாதிப்பார் 2-2 என்று தொடரை சமன் செய்து இந்தியா முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று முட்டாள் ரசிகன் மூடத்தனமாக நம்பினான். ஆனால் நடந்தது என்ன? இங்கிருந்து போனவர் பயிற்சிப் போட்டியில் 8 ரன் எடுத்து போதும் என்று போய் அமர்ந்து வேடிக்கை பார்த்தார்.

இரண்டு போட்டிகளிலும் எதோ கொஞ்சம் ரன் அடித்திருந்தாலும் சேவாக் வருகையால் தனது மூன்றாவது டெஸ்டில் இடம் கிடைக்காது என்பதை நன்கு அறிந்த முகுந்த், பயிற்சிப் போட்டியில் சதமடித்தார். இருந்தாலும் வாய்ப்பு சேவாக்கிற்கே கிடைத்தது. இங்கிருந்து இந்திய அணியை தூக்கி நிறுத்தப் போனவர் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டி அவரை அவசரம் அவசரமாக அனுப்பிய இந்திய கிரிக்கெட் சங்கத்தின் முகத்தில் கரியைப் பூசியதுடன் இந்தியாவின் மானத்தையும் காற்றில் பறக்க விட்டார்.

இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று வர்ணிக்கப்படும் திராவிட், அவர் பங்குக்கு இரண்டு சதம் அடித்து களத்தில் போராடினாலும் அவருக்கு உதவியாக களத்தில் யாரும் நிற்கவில்லை... நிற்கவில்லை என்பதைவிட நிற்க நினைக்கவில்லை என்பதே உண்மை.

லெட்சுமணன் இந்த முறை ஜோபிக்கவில்லை. யுவராஜ் காயத்தால் அணியில் நிரந்தர இடம் பிடித்த ரெய்னா டுவெண்டி 20 விளையாடுவது போல் விளையாடி தனக்கான இடத்தை தானே இழக்க தயாராகிவிட்டார். இதே போல் காம்பீர் அனுவவ வீரர் போலில்லாமல் அவசரத்துக்கு பொறந்தவன் மாதிரி விளையாண்டு விரைவாக வெளியேறியது கேவலமானது. முதல் விக்கெட்டுக்கான கூட்டணி விரைவாக வெளியேறியதால் அடுத்தடுத்த விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்தன.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கானின் காயம் அணிக்கு பின்னடைவை கொடுத்தது என்பதே உண்மை. பிரவீன் குமார், இஷாந்த், ஸ்ரீசாந்த் போன்ற வேகங்களின் கேவலமான பந்து வீச்சு மூன்றாவது போட்டியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களின் இந்த அணியா உலக அரங்கில் நம்பர் -1 அணியாக இருக்கிறது என்ற கேள்வியை பார்வையாளர்கள் மத்தியில் விதைத்துச் சென்றது.

ஆக்ரோஷமாக விக்கெட் எடுக்க வேண்டும்... ஸ்டம்பை தகர்க்க வேண்டும் என்று விளையாடும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் இந்தா நாலு எடு, ஆறு எடு என்று பந்து வீசினார்கள் இந்திய பவுலர்கள். பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடும் சிறுவர்கள் கூட இதைவிட அருமையாக பந்து வீசுகிறார்கள்.

சச்சினைப் பொறுத்தவரை, வினோத் காம்ளி சொன்னதுபோல் இதுதான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தொடராக இருக்கும். இந்தியர்கள் மட்டுமல்ல உலகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் அரை சதம் எடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டிலாவது சதத்தில் சதமடிப்பார் என்று ஒவ்வொரு இந்தியனும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

மோசமான தோல்வியால் துவளாமல் அடுத்த போட்டியில் வெற்றி வேண்டும் என்பதைவிட சதம் வேண்டும் என்று விளையாண்டால் சதமும் வெற்றியும் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் கேவலமாக பேசும் இங்கிலாந்து அணியினருக்கு எதிராக சதத்துடன் வெற்றியைபும் எட்டி அவர்களது கொட்டத்தை அடக்கலாம். அவரது சாதனை மைல்கல்லில் மீண்டும் ஒரு கிரீடம் சூட்டிக் கொள்ளலாம்.

இறுதியாக, கேப்டன் தோனி, இரண்டு போட்டிகளில் இவர் சோபிக்கவே இல்லை என்றால் மூன்றாவது போட்டியில் இவர் மட்டுமே விளையாண்டார். அவர் மீண்டும் விளையாட ஆரம்பித்திருப்பது ஆறுதலான விஷயம்தான் என்றாலும் எப்பவும் பீல்டிங்கில் அதிக சிரத்தை காட்டும் இவர் இந்த முறை பீல்டிங் வியூகம் வகுப்பதில் கோட்டைவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால் நேற்றைய தோல்விகளை நினைத்து வருந்தாமல் நாளைய வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். அப்படிப் பயணித்தால் மீண்டும் தமது வெற்றி நடையை இந்திய அணி தொடரலாம்.

இந்த தோல்வி குறித்து பிசிசிஐ ஆராய்ந்து என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. எவனுமே சரியாக விளையாடாத ஒரு போட்டியில் இவன் சரியில்லை ... அவன் சரியில்லை என்று எப்படி ஒதுக்க முடியும். அப்படி ஒதுக்க நினைத்தால் புதிய இந்திய அணியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டிகள் விரர்களின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. ஐபிஎல்தான் நிறைய வீரர்களை காயத்தால் அவதிப் பட வைத்தது. இது போன்ற போட்டிகளைக் குறைத்து நாட்டுக்கான போட்டிகளில் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றால் ஐபிஎல் குறித்து பிசிசிஐ முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

வெற்றி பெற்றால் ஆஹா... ஓஹோ என்று புகழ்வதும் ஒரு முறை தோற்றால் போச்சு... அம்புட்டுத்தான்... இந்திய அணி அதாள பாதாளத்தை நோக்கி போகிறது, மூத்த வீரர்களுக்கு கண் சரிவர தெரியாது, தோனியின் தலைமை சரியில்லை... அது இது என்று பேசுவதை விடுத்து அணியின் வெற்றிக்கான வழிகளைத் தேட வேண்டும்.

இதே தோனி தலைமையிலான அணிதான் உலக கோப்பையை வென்றது. இதே தோனி தலைமையிலான அணிதான் டெஸ்ட் தொடரை இதுவரை தோற்காமல் இருந்தது... அப்பல்லாம் நாம் எங்க தல தோனி போல வருமான்னு புகழ்ந்தோம். இனியும் புகழும் காலம் வரும் அதுவரை தூற்றாமல் இருப்போம்.

இது இந்திய அணியின் வீழ்ச்சிக்கான காலத்தின் ஆரம்பம் என்று பல ஜாம்பவான்கள் ஆருடம் சொல்கிறார்கள்... அப்படி ஏன் சிந்திக்க வேண்டும்... இதுதான் அடுத்த எழுச்சிக்கான ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாமே...

இந்த தோல்வி மறந்து வரும் போட்டியில் வெற்றிக்கனியை நமது அணி பறிக்கட்டும். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இழந்த பெருமையை மீண்டும் மீட்கட்டும்.

இந்தியா நமது நாடு... நாம் இந்தியர்கள்... வென்றால் புகழ்வதும் தோற்றால் இகழ்வதும் இனி வேண்டாம்.... எப்போதும் இந்தியா ஒளிரட்டும். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல... எல்லா விளையாட்டுக்கும், எல்லா விசயங்களுக்குமான வரிகள்தான்...

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி

11 எண்ணங்கள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

உலவில் இணைக்க முடியவில்லை... நண்பர்கள் யாராவது முடிந்தால் இணைத்துவிடுங்கள்... நன்றி.

vanathy சொன்னது…

வெற்றி தோல்வி சகஜம் தானே, குமார். நான் கிரிக்கெட் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே கருத்து சொல்ல முடியவில்லை. வீழ்ந்தவர்கள் திரும்ப எழும்புவார்கள்.

ஆமினா சொன்னது…

//இந்த தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால் நேற்றைய தோல்விகளை நினைத்து வருந்தாமல் நாளைய வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.//

ஆமினா சொன்னது…

உலவு திரட்டியில் இணைச்சாச்சு

vidivelli சொன்னது…

இந்த தோல்வி மறந்து வரும் போட்டியில் வெற்றிக்கனியை நமது அணி பறிக்கட்டும். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இழந்த பெருமையை மீண்டும் மீட்கட்டும்./

நிச்சயமாக........
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//வெற்றி பெற்றால் ஆஹா... ஓஹோ என்று புகழ்வதும் ஒரு முறை தோற்றால் போச்சு... அம்புட்டுத்தான்.//
சரியாக சொல்லியிருக்கீங்க. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வேறு விளையாட்டுகளுக்கு ஏன் கொடுப்பதில்லை என்றுதான் புரியவில்லை.

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஒரு தொடருக்கே நாம பயப்பட வேண்டியதில்லை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அலசல்...

சில வருடங்களாகவே நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை நண்பரே...

Thenammai Lakshmanan சொன்னது…

சும்மா நச்சுன்னு சொன்னீங்க குமார். இது அந்த க்ரிகெட் வீரர்களின் கண்ணிலும் படட்டும்:)

vidivelli சொன்னது…

????

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி வானதி...

வாங்க சகோதரி ஆமினா... (திரட்டியில் இணைத்ததற்கு ஸ்பெஷல் நன்றி

வாங்க விடிவெள்ளி...

வாங்க ரமா அக்கா...

வாங்க கருன்...

வாங்க நாகராஜ் அண்ணா...

வாங்க தேனம்மை அக்கா...


உங்கள் அனைவரின் பின்னூட்டக் கருத்துக்கு நன்றிகள் பல.
எனது பதிவுகளை மேம்படுத்த உதவும் உங்கள் பின்னூட்டங்கள் தொய்வில்லாமல் தொடரட்டும்.