மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 19 செப்டம்பர், 2012

சினிமா: சுந்தர பாண்டியன்




இயக்குநர் சசிகுமாரை அவரின் முந்தைய படங்களுக்காக ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. அதனால்தான் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் அவரே தயாரித்து கதாநாயகனாக நடித்து  இருக்கும் சுந்தர பாண்டியன் படம் வெளிவருவதற்கு முன்னரே ரொம்ப எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் சில குறைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் செய்தது என்றே சொல்லலாம்.

படம் ஆரம்பிக்கும் போது உசிலம்பட்டி மதுரை மாவட்டத்துல புறக்கணிக்க முடியாத ஊரு என்று ஆரம்பித்து உசிலம்பட்டி பற்றி சில விசயங்களைச் சொல்லி  காதலிக்கிறேன்னு பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனை கள்ளிக்காட்டுக்குள்ள கொல்றதைச் சொல்லி கதைக்குள் செல்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய தலக்கட்டு ரகுபதியோட மகன் சுந்தரபாண்டியனாக சசிக்குமார் இதுவரை நண்பர்களின் காதலுக்காக போராடியவர் இதில் நண்பனின் காதலியை தனதாக்கி கொள்கிறார். ஆரம்பத்தில் வரும் பாட்டில் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் நகரும் படத்தில் அலட்டல் இல்லாத நடிப்பால் மீண்டும் ஒருமுறை சபாஷ் போட வைத்திருக்கிறார். 

சசிகுமாருக்கு குரல் மிகவும் கவர்ச்சிகரமாக கணீர் என்று இருப்பது மிகப்பெரிய பலம். வசனங்களை அலட்டலில்லாமல் பேசும் அழகுக்காகவே அவரை எல்லாருக்கும் பிடித்துவிட்டது என்பதே உண்மை. என்ன ஒரே மாதிரி கதாபாத்திரங்களாகவே அவர் நடித்து வருவதை இத்துடன் நிறுத்தி விட்டு தாடிக்கு கொஞ்சம் விடுப்பு கொடுத்து கதாபாத்திரத்தில் மாற்றம் கொண்டு வந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

கல்லூரி முடித்து விட்டு வேலை வெட்டிக்குப் போகாமல் டீக்கடையில் அமர்ந்து பெண்களை கேலி பண்ணும் கதாபாத்திரத்தில் பெண்களைப் ஒரு விதமாக பார்ப்பதாகட்டும் கண்ணடிப்பதாகட்டும் நண்பனின் காதலுக்கு உதவப் போகிறேன் என்று பேருந்தில் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டியாகட்டும், சிறையில் இருந்து வரும் போது வீட்டில் என்ன நினைப்பார்களோ என்று வருந்துவதாகட்டும் லட்சுமி மேனனுடனான காதல் காட்சிகளாகட்டும்  கடைசிக் காட்சியில் நண்பர்களிடம் வசனம் பேசுவதாகட்டும் எல்லாவற்றிலும் ஜொலித்திருக்கிறார்.

அவருக்கு பக்கபலமாக வரும் நண்பர்களில் சூரி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். தேர்தல் புயலில் காணமல் போன வடிவேலுவின் இடம் எனக்குத்தான் என்று அப்பா காதாபாத்திரம் ஒன்றை வைத்து வாடா போடா என்று ஏக வசனத்தில் பேசும் சந்தானத்துக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அவரைப் பிடிக்காதவர்கள் எல்லாருக்கும் சூரியை கண்டிப்பாக பிடிக்கும். நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்கும் காலம் விரைவில் வரும்.

சூரி பேசும் வசனத்தை கேட்டு சிரித்து அடங்கும் போது அடுத்த வசனம் நம்மளை மீண்டும் சிரிக்க வைக்கிறது. ஆனால் வசனங்களை அள்ளியெறியாமல் நறுக்கென்று அவரை பேச வைத்திருக்கிறார் இயக்குநர். பாம்பிஞ்சுல இருந்து பல்லுப் போனதுவரை மாப்பிள்ளையாலதான் சந்தோசப்படுத்த முடியும்... மாப்ளே இங்க ஹீரோவெல்லாம் உருவாக்க முடியாது நாமளா ஆயிக்கணும்... ரன்னிங்க்ல செவப்பா இருக்கவன் ஏறினா ஹீரோம்பாளுங்க கருப்பா இருக்கிறவன் ஏறினா காமடியன்னும்பாளுங்க... சச்சினா இருந்தாலும் அடிச்சாத்தான் ரன்னு... எங்களாலதான் மரக்கடையே வச்சிருக்கான் இல்லேன்னா மைக்ரோசாப்ட் கம்பெனிய இவந்தான் நடத்திருப்பான் என படம் முழுக்க கலகலக்க வைக்கும் வசனங்களால் கலக்கியிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் அர்ச்சனாவாக லட்சுமி மேனன், இவருக்கு முதல்படம் பிரபு சாலமனின் கும்கி என்றாலும் சுந்தரபாண்டியன் முந்திக் கொண்டு விட்டது. ஆரம்பக்காட்சியில் அக்காவின் கொழுந்தனுக்கு கட்ட வேண்டும் என்று வீட்டில் பேசும் போது எதிர்த்து பேசி எவ்வளவோ பாத்துட்டோம் இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு என்று கண்ணாடி முன் பேசுவதில் ஆரம்பித்து பேருந்துக் காட்சிகளில் படத்தின் மொத்தக் கதையும் அவர் மேல் பயணித்தாலும் தனது தோழியிடம் பேசியபடி கண்களாலேயே நடித்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது சசிக்குமார் காதலை சொல்லும் போது மிரட்டுவதாகட்டும் அப்புறம் நண்பனின் காதலை சொல்ல வரும் சசிக்குமாரை காதலிப்பதாக சொல்லும்போது முகத்தில் காட்டும் உணர்ச்சியாகட்டும் அருமையாக செய்திருக்கிறார்.  கும்கியிலும் நல்ல கதாபாத்திரம்தான் என்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பார்.

இசைஞானியின் பொன்மானே... பாடலுடன் கண்டமனூருக்குள் வரும் தாமரை என்ற பேருந்தில் இடைவேளை வரையான படம் கலகலப்புடன் நகர ஆரம்பிக்குது. லட்சுமி மேனனை பேருந்தின் முன்பக்கம் இருந்து காதலிக்கும் நண்பன், அவருக்குப் போட்டியாக பேருந்தின் பின்னால் இருந்து லுக்கு விடும் அழகர்சாமி இவர்களுக்கு மத்தியில் நண்பனின் காதலுக்காக பேருந்தில் பயணிக்கும் சசிகுமார், சூரி , நாயகிக்கு துணையாக அவளின் தோழி, பேருந்துக்குள் சின்னச்சின்ன காதாபாத்திரங்கள் என படம் தொய்வில்லாமல் செல்கிறது.

அழகர்சாமி  பேருந்தில் பின்புறம் நின்றே நாயகி லட்சுமி மேனனை காதலிப்பதாக சசிகுமார் குழுவில் வந்து சொல்லி அவர் சொல்லும் டீலுக்கு ஒத்துக் கொண்டு  ஒரு மாதம் பேருந்துக்குள் அப்படியிப்படி முயற்சித்து முடியாமல் விலகிக் கொள்கிறார். சசிகுமார் நாயகியை காதலிப்பதை அறிந்து வில்லன் போல மாறி மீண்டும் பேருந்தில் ஏறி நாயகியை வம்புக்கு இழுக்கிறார். பேருந்துக்குள் நடக்கும் காதல் சண்டையில் பரிதாபமாக உயிரை விட்டாலும் அதன் பிறகு படத்தின் கதையை டுவண்டி 20 மேட்ச் மாதிரி வேகமெடுக்க வைத்துச் செல்கிறார்.

ஆரம்பக்காட்சிகள் லட்சுமி மேனனை காதலிக்கும் அறிவழகனாக வந்து நண்பன் காதலிப்பதை அறிந்து மனசு வருந்தி பின்பு நண்பனுடனே சுற்றி கிளைமாக்ஸ் காட்சியில் சுயரூபத்தைக் காட்டும் நண்பனாக இனிகோ பிரபாகரன் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

 முறைப்பொண்ணாக வந்து முந்திரி வாங்கும் போது யாரு பங்காளிக்கா என்று சசிகுமார் கேட்க, இல்ல பாயாசத்துக்கு என்று சொல்லும் அத்தை பொண்ணு, லட்சுமி மேனனின் அக்கா கொழுந்தனாக வந்து அவளை கட்டிக்கொள்ள நினைக்கும் விஜய் சேதுபதி, பரஞ்சோதி, சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், லட்சுமி மேனனின் அப்பாவாக வரும் தென்னவன், அப்பத்தா, அம்மாக்கள், அக்கா, சித்தி என அனைவரும் கொடுத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லாருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இசை என்.ஆர்.ரகுநந்தன் பாடல்களைவிட பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவு பல இடங்களில் நம்மையும் படத்தோடு பயணிக்க வைக்கிறது. 

கடைசி காட்சியில் மண்டையில் அடிபட்டும் கத்திக் குத்துப்பட்டும் விழுந்து கிடந்தாலும் பாரம்பரிய தமிழ் கதாநாயகனாக மாறி எல்லாரையும் அடித்து துவைத்து வீர வசனம் பேசியிருக்கிறார் நாயகன் சசிகுமார்.  இது அவரது எல்லாப் படத்திலும் வரத்தான் செய்கிறது. இருந்தும் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அருமை. படத்தின் கதை போகும் வேகத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் சசிகுமார் அன் கோவின் சுந்தர பாண்டியன் வெற்றிக் கோட்டையில் கொடியை நாட்டிவிட்டது, 


சுப்ரமணியபுரம், நாடோடிகள் வரிசையில் சசிக்குமாருக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம் இந்த சுந்தர பாண்டியன்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் வழங்கிய  இணையத்தளங்களுக்கு நன்றி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

மனசின் பக்கம்: 201வது பதிவை நோக்கி...



எல்லாருக்கும் வணக்கம்.
நான் வலைப்பூ ஆரம்பித்த போது ஆர்வக்கோளாறில் ஹைக்கூ, கவிதை, சிறுகதை, எல்லாம் எழுத என நான்கு வலைப்பூ அரம்பித்து எழுதி வந்தேன். ஒரு கட்டத்தில் எல்லா வலைப்பூவையும் நடத்துவது எளிதல்ல என்பதால் எல்லாத்தையும் மனசு வலைப்பூவில் மட்டும் எழுத ஆரம்பித்தேன். மனசில் இதுவரை 199 பதிவுகள் போட்டாச்சு இது 200-வது பதிவு. மொத்தத்தில் இது (நான்கிலும் சேர்த்து) 395வது பதிவு. எனது வலைப்பூவில் நான் கிறுக்குவதை படித்து கருத்துச் சொல்லும் நண்பர்களுக்கும்,  ஐயா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, தோழன், தோழி என என் மனசை பின்தொடரும் 209 பேருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லும் மனநிலையில் நான் இப்போது இல்லாத காரணத்தால் அனைவருக்கும் ஒட்டு மொத்த நன்றியை உரித்தாக்குகிறேன். உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் எனது எழுத்தை வளப்படுத்தி வருகின்றன என்பது 100% உண்மை. இந்த வலைப்பூவின் மூலமாகவும் முகப்புத்தகத்தின் மூலமாகவும் எனக்கு கிடைத்திருக்கும் உறவுகளான உங்கள் முகம் தெரியாவிட்டாலும் அந்த பாசமிக்க மனம் எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் நட்பு என்றும் தொடர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


**********

டந்த பதினைந்து நாட்களாக பொக்காலி அம்மா வந்து தனிமையில் கஷ்டப்பட்ட போது மனைவி குழந்தைகளின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிந்தது. அடுப்புக்கிட்ட போகக்கூடாது என்று அம்மாவும் மனைவியும் ஊரில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தாலும் அறை நண்பர்கள் சிறு உதவிகள் செய்தாலும் அம்மை வந்த உடம்போடு நானே கஞ்சி வைத்து குடித்த நாட்கள் மறக்கமுடியாதவை. இந்தக் கஷ்டம் என் எதிரிக்கு கூட வரக்கூடாது என்றுதான் வேண்டினேன்.  அதிகமாக அம்மை வராமல் போனதால் கொஞ்சம் கஷ்டம் குறைந்தது. இப்போ நான் எழுந்து வியாழன் அன்றுதான் வேலைக்குப் போனேன். நேற்று மனைவிக்கு டெங்கு காய்ச்சல் வந்து மதுரையில் மருத்துவமனையில் வைத்து பார்த்து வருகிறார்கள். மாமா வீடு மதுரை என்பதாலும் தற்போது வைத்திருக்கும் மருத்துவமனை மாமா கடைக்குப் பக்கத்தில் இருப்பதாலும் யார் பார்ப்பது என்ற கவலையில்லை. மாமாவின் நண்பரான மருத்துவரும் பரிசோதனைகள் செய்து இது ஆரம்பநிலைதான் பயப்பட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். நேற்றுக் காலையில் அழுதபடி பேசிய மனைவியிடம் மாலையில் பேசும் போது சற்று நல்ல மனநிலையில் பேசினார். மனசுக்கு இதமாக இருந்தது.

**********

ம்மை வந்திருந்த போது எனக்காக வருந்தி அழுதது மனைவி, குழந்தைகள் மற்றும் எங்கள் ஊரில் இருக்கும் மாரி அம்மன் கோவிலில் தினமும் தண்ணீர் ஊற்றி தீபம் ஏற்றி கும்பிட்ட என் அம்மா ஆகியோர்தான். ஒரு சிலரைத் தவிர மற்ற உறவுகள் எல்லாம் இங்கிருப்பவர்களையும் சேர்த்து போன் பண்ணினால் வந்து விடும் என்று நினைத்தார்கள் போல முதல் இரண்டு மூன்று நாட்கள் போனே பண்ணவில்லை. அப்புறம்தான் போன் பண்ணினார்கள். ஆனால் முகம் தெரியாமல் பாசம் கொண்ட உறவுகள் எல்லாம் எப்படியிருக்கு என்று தினமும் மின்னஞ்சல் மற்றும் முகநூல் வழியாக கேட்டுக் கொண்டே இருந்தார்கள். உண்மையில் இந்த அன்புக்கு நிகர் ஏதும் இல்லை. உங்களது இந்த அன்புதான் எனக்கு ஆறுதலாக இருந்தது என்றால் மிகையில்லை.

**********

டந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கு காருக்குள் பார்க்காமல் விட்டுச் சென்ற குழந்தைகள் இறந்த செய்தியை பத்திரிக்கையில் பார்த்தபோது  அவர்களது பெற்றோர்களின் அலட்சியம் மிகவும் வருத்தப்பட வைத்தது. ஆம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்கு சென்று குழந்தையை காணோம் என்று தேடி கடைசியில் காரில் வந்து திறந்து பார்த்தபோது தூங்கிய குழந்தையை தூக்காமல் காருக்குள் விட்டு விட்டு கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு கதவை சாற்றியதால் மூச்சடைத்து இறந்த நிலையில் கண்டு அழுதிருக்கிறார்கள். அழுது என்ன பயன்... இளமொட்டு கருகிவிட்டதே. இதே போல் மூன்று நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தது... என்ன கொடுமை பாருங்கள்.

**********



சிவகாசி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ உதவிக்கு பணம் இருந்தும் மனம் இல்லாதவர்கள் யாரும் செய்ய முன்வராததை மலையாள நடிகர் மம்முட்டி செய்திருக்கிறார். அவரின் இந்தச் செயலுக்காக அவர் நல்லாயிருக்கணும் என்று சொல்வதில் தப்பேயில்லை. இங்க கோடிகளை சம்பளமாக வாங்கும் நம்ம நடிகர்கள் முடியாமல் கிடந்தால் மொட்டை அடிக்கிறோம், வேல் போடுறோம், அவர்களின் படங்களுக்கு பால் அபிஷேகம் பண்றோம். அவர்களும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன் என்று அறிக்கை விடுகிறார்கள். அம்புட்டுத்தான் அதன் பிறகு அடுத்த படத்துக்கான வேலைக்குப் போய் விடுகிறார்கள். தமிழர்களே இனிமேலாவது நடிக, நடிகைகள் மேல் இருக்கும் அதீத பாசத்தைக் குறைத்துக் கொண்டு குடும்பத்தைப் பாருங்கள். உங்களுக்காக வருந்த உங்கள் குடும்பமும் நட்பும் மட்டுமே... நீங்கள் தலைவா என்று சாஷ்டாங்கமாக தொழும் நடிகர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

**********

மிழகத்தில் பேருந்து விபத்து என்பது வெகு சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் நடந்த விபத்தில் 9 பேருக்கு மேல் இறந்தார்கள். அதில் எனது நண்பரின் தம்பியும் ஒருவர். திருமணமாகி 9 மாதங்கள் ஆன நிலையில் மனைவியை ஆடிக்கு அம்மா வீட்டில் விட்டிருந்தவர் கூட்டிக் கொண்டு திரும்பி வர, பேருந்தில் இடமில்லாததால் மனைவியை பின்புறம் அமர வைத்துவிட்டு அவர் முன்புறம் அமர்ந்திருக்கிறார். விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. காயங்களுடன் தப்பிய அவரின் மனைவி, கணவன் இறந்தது அறியாமல் தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வேதனையான விஷயம்தானே... இதை எனக்கு மிக நெருக்கமான ஒருவர் சொன்னபோது துடித்துப் போனேன். விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

**********

என்னையும் வலையில் எழுத வைத்து என் எழுத்துக்களை உங்கள் பின்னூட்டம் என்னும் உந்து சக்தியால் மெருகேற்றி வரும் என் சொந்தங்களுக்கு இந்த 200வது பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

நன்றி பதிவுலக சொந்தங்களே...


-'பரிவை' சே.குமார்.

புதன், 5 செப்டம்பர், 2012

பங்காளிச் சண்டை




நமக்குள் சண்டை
ஆரம்பித்தது
உனக்கு நினைவில்
இருக்கிறதா சகோதரனே...

சிறுவயதில் உன்
ரப்பரை எடுத்த
என்னை மூர்க்கமாய்
அடித்தாயே
அதுதான் முதல்விதை...

தொடர்ந்த நாட்களில்
தொட்டதெற்கெல்லாம்
நமக்குள் மல்லுக்கட்டு...

நமக்குள் சந்தோஷ
தருணங்களை விட
நாம் சண்டையிட்ட
தருணங்களே அதிகம்...

ஏனோ தெரியவில்லை
ஒரே வயிற்றில்
ஜனித்த போதும்
நமக்குள் குரோதம்...

பல நாட்கள்
பாரா முகமாகவும்
பேசா ஊமையாகவும்
கழிந்து விட்டன...

அன்று விழுந்த விதை
இன்று விருட்சமாய்...

அன்றைய சண்டையின் போது
அதட்டவும் அடக்கவும்
அருகில் அம்மா அப்பா...

இன்று நமக்குள்ளான
பூமிச் சண்டை
தீர்க்க பூமியில்
இல்லை அவர்கள்...!

-'பரிவை' சே.குமார்.

Thanks : Photo from Google.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நீ...!




ஒரு கவிதை சொல்லு
தோளில் சாய்ந்து
காது கடித்து
சிணுங்கலாய் கேட்டாள்...

"நீ...!"
என்றதும் ....
உனக்கு எப்பவும்
குறும்புதான் என்று
காது திருகி
சிரித்தவள்...

நான் கேட்டது
கவிதையை என்றாள்...

மீண்டும் "நீ..!" என்றவன்
கவிதை சொல்லச்
சொன்னபோது
உன் முகம் மொட்டாய்...

கவிதை சொன்னதும்
உன் முகம்
மலர்ந்த பூவாய்...

நீ... நீதான்
என் கவிதை என்றதும்
கவிதையின் பரிசாய்
 ஈர இதழ்கள்...!

-"பரிவை" சே.குமார்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திரத் தியாகி மாவீரன் பாஷ்யம்


இந்திய சுதந்திர தினம் என்பது கொடியேற்றி இனிப்பு வழங்கும் நாள் என்றும் நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டிகளும் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒரு சினிமாவுமாக கழியும் விடுமுறை நாள் என்றும் மட்டுமே இன்றைய சூழலில் வந்து செல்கிறது. இதற்குப் பின்னால் தியாகிகள் என்ற பட்டத்துடன் பிரபலமான சிலரும் பிரபலமாகாமல் சுதந்திரப் போராட்டத்தில் அடி வாங்கி... மிதி வாங்கி... சிறைப்பட்டு இன்றும் தியாகி பென்சன் கிடைக்காமல் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது சுதந்திர நாடு எனக்கு எல்லாச் சுதந்திரமும் இருக்கு என்று வெற்றுப்பந்தா காட்டிக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரனுடன் வேலித் தகராறு, வெட்டிப் பேச்சு என கழிக்கிறோமே தவிர சுதந்திர தினத்தில் எத்தனை பேர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை கொடுத்த மாவிரர்களாம் நம் முன்னோர்களை நினைக்கிறோம் சொல்லுங்கள்.

பாஷ்யம் என்கிற ஆர்யா - இவரும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். 1932-ம் வருடம் தமிழக தலைமைச் செயலகமாக செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த 140 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, நமது தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர்.

1907-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள சேரங்குளம் என்னும் ஊரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த தேசபக்தர் ஏ.ரங்கசாமி அய்யங்காரின் உறவினர் ஆவார். மன்னார்குடியில் படித்துக் கொண்டிருந்த பாஷ்யம், தனது 11வது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் காரணத்தால் வெள்ளையர் மீது தணியாத கோபம் கொண்டு சுதந்திர போராட்ட கருவறைக்குள் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகங்களை படித்தாரோ இல்லையோ தேசபக்தி நூல்களை அதிகம் படிக்கலானார், அவர் தேடிப் படித்த புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை லஜபதிராயின் 'துரதிஷ்ட இந்தியா', விவேகானந்தரின் சொற்பொழிவுகள், அரவிந்தர் வரலாறு, வ.வே.சு. அய்யர் வரலாறு, வீர சாவர்கரின் '2857- இந்திய சுதந்திரப் போர்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இங்கிலாந்திலிருந்து சைமன் குழு இந்தியா வந்தபோது காங்கிரஸ் மற்றும் இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் விடுத்த அழைப்பின் பேரில் நாடெங்கும் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போகச்சொல்லி போராட்டங்கள் வெடித்தன. சைமன் குழு திருச்சி வந்தபோது தேசியக் கல்லூரி மாணவர்கள் பாஷ்யம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் முடிந்து கல்லூரி திரும்பிய மாணவர்களுக்கு இரண்டு ரூபாய் அபராதமும் தலைமை தாங்கிய பாஷ்யத்துக்கு ஐந்து ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் பணம் கட்டியபோதும் பாஷ்யம் கட்ட மறுத்தார். பின்னர் கல்லூரி முதல்வர் திரு.சாரநாதன் அவருக்கான ஐந்து ரூபாய் அபராதத் தொகையை கட்டியதால் அது தனது தேசபக்திக்கு இழுக்கு என்று கல்லூரியை விட்டு வெளியேறினார்.

தேசிய விடுதலையே தனது உயிர் மூச்சு என தீவிரம் காட்டிய பாஷ்யம், அய்யலூர் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பஞ்சந்தாங்கிப் பள்ளத்தாக்கில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். இதற்காக மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பரான திரு. முத்துக் குமாரசாமிப் பிள்ளையின் தொடர்பின் மூலம் துப்பாக்கிகள் வாங்கிக் கொண்டார். 'யுனிவர்சிட்டி டிரைனிங் கோர்' படையினால நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் பின் தனது நண்பர்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். புதுவை விடுதலை வீரர் திரு வ. சுப்பையா அவர்களை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். காளி படத்துன் முன் ரத்தக் கையெழுத்து இட்டு உறுதிமொழி எடுத்து புரட்சி அமைப்புகளுடன் இணைந்தார். 

நாட்டு விடுதலைக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு இருந்த பாஷ்யம், சிதம்பரத்தில் நடராஜர் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த கவர்னர் மார்ஷ் பாங்ஸ் என்பவரை சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயன்று முடியாமல் போனதை தனது நண்பரான தஞ்சை கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருந்திய போது அவரை இது போன்ற காரியத்தில் இனி ஈடுபடாதே என்று கடிந்து கொண்டதுடன் மகாத்மாவை பின்பற்றும்படி அறிவுரை கூறினார்.

விடுதலைப் போராட்டத்துக்கு பணம் தேவைப்பட்டதால் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மதுரை இம்பீரியல் வங்கியில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டார். நண்பர்கள் அவசரப்பட்டு செயலில் இறங்கி மாட்டிக் கொண்டனர். போலீஸாரின் சித்திரவதை தாங்கமுடியாமல் பாஷ்யத்தை காட்டிக் கொடுத்ததால் கைது செய்து இரண்டு மாதம் சித்திரவதை செய்து ஆதாரம் இல்லையென விடுதலை செய்யப்பட்ட போதிலும் சதிகாரக் கேடி என்ற பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

சென்னையில் தனது சகோதரர் வீட்டில் தங்கி இருந்த போது போலீஸ் கண்காணிப்பையும் மீறி கதர் ஆடை அணிந்து அந்நியத்துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தபடி கதர் துணிகளை விற்பனை செய்தார். இதனால் கோபம் கொண்ட கடைக்காரர்கள் வெற்றிலை எச்சிலை இவர் மீது துப்பினர். மேலும் சிகரெட் துண்டுகளை நெருப்புடன் வீசினர். இதேபோல் ஐஸ்ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட போது கள்ளுக்கடைக்காரர் இவர் மீது கள்ளுப் பானையைப் போட்டு உடைத்தார். 

சென்னை வந்த இந்துஸ்தான் சேவாதளத் தலைவர் டாக்டர் ஹார்டிகார் தனது சேவாதளத் தொண்டராக சேர்த்துக் கொண்டார். தனது தொண்டர்களுக்கு பகல்கோட் என்ற இடத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அப்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன எனவே தனது சேவாதளத்தை கலைத்த ஹார்டிகார் தொண்டர்களை போராட்டத்தை தொடரும்படி கூறி அவர் அவர் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திரதினமாக கொண்டாடும்படி பண்டித நேரு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தனக்காக விடுத்த அழைப்பாக எண்ணி தானே ஜனவரி 25 மாலை 7 மணியளவில் பெரிய தேசியக் கொடியொன்றை தயாரித்து அதன் நடுவில் மையினால் ராட்டை வரைந்து அதன் கீழ் இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது என்று எழுதி எடுத்துக் கொண்டு சுப்பிரமணிய சிவாவின் மருமகனும் தனது நண்பருமான வேணுகோபாலை அழைத்துக் கொண்டு சினிமா பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு காவலர் உடையில் கோட்டையின் தென்புற வாயில் வழியாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார், கலங்கரை விளக்க ஒளிபடும் நேரத்தில் தன்னை கம்பத்தில் மறைத்துக் கொண்டு ஏறி யூனியன் ஜாஜ் என்ற ஆங்கிலேயரின் கொடியை இறக்கிவிட்டு தான் மறைத்துக் கொண்டு வந்த இந்திய தேசியக் கொடியை ஏறிவிட்டு தப்பியோடிவிட்டார். காலையில் பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடியை பார்த்த ராணுவத்தினர் பதட்டமடைந்து கவர்னருக்கு செய்தி அனுப்பினர். இதனைச் செய்தவரை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அரசாங்க ஆவணங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் காற்றை சுவாசிக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்த பாஷ்யம், 1942ல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கிய போது துப்பாக்கிகளை கடத்துதல், தண்டவாளங்களை தகர்த்தல், பாலங்களை வெடி வைத்து தகர்த்தல் என எல்லாக் காரியங்களிலும் ஈடுபட்டார். மேலும் அவர் கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர் ஹைதர்கான், சி.எஸ்.சுப்பிரமணியன், புதுவை சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார்.

சிறந்த ஓவியரான பாஷ்யம் அரசியல் கருத்துப் படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், புத்தகங்களுக்கான முகப்புப் படங்கள் என பல்வகை ஓவியங்களை ஆர்யா என்ற புனைப் பெயரில் வரைந்து வந்தார். இவர் வரைந்த மகாகவி பாரதியின் படம் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் வளைய வருகிறது. 1945ல் முழு நேர ஓவியரான  பாஷ்யம். "யுனைடெட் ஆர்ட்ஸ்" என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். காந்தி, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். காந்தியின் உருவச்சிலையையும் இவர் வடித்துள்ளார்.
 
தனது வாழ்நாள் முழுவதையும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அர்ப்பணித்த பாஷ்யம் போன்ற எத்தனையோ தியாகிகளின் தேசியப் பற்றுத்தான் இன்று நம்மை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்துள்ளது. தியாகிகளை நினைவில் நிறுத்தி சுதந்திரத் திருநாளை சிறப்பாய் கொண்டாடுவோம்.


குண்டு துளைக்காத காரில் வந்து 
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று
சுதந்திரக் கொடியை சுதந்திரமில்லாமல்
ஏற்றும் தலைவர்களும்...
குடிக்க கஞ்சியும் உடுக்கத் துணியும் இன்றி
சுதந்திரமாக வாழும் மக்களும்

நிறைந்த எங்கள் சுதந்திர இந்தியாவின்
கடைக்கோடி இந்தியனுக்கும்
என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். 

ஜெய் ஹிந்த்..!

திரு.பாஷ்யம் குறித்த செய்திகளை படிக்க உதவிய தமிழ் விக்கிபீடியா மற்றும் சில தளங்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஒரு கவிதை... ஒரு விருது...

 முத்தம்


கொடுங்கல் வாங்கலில்
எப்போதுமே பிரச்சினைதான்...
கொடுக்க மறுக்கும்
காதலி..!
வாங்கத் துடிக்கும்
காதலன்..!
இடையில் உலர்ந்து
கொண்டிருந்தது
ஒரு முத்தம்..!

****************************************************
விருது

இந்த முறை விருது கொடுத்திருப்பவர் மதிப்பிற்குரிய
ஐயா. திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.  
விருது கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

விருது கொடுத்த ஐயா

திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்


ஆசியுடன் பெற்ற விருது



நன்றி... நன்றி.. நன்றி...
 
-'பரிவை' சே.குமார்