மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நீ...!




ஒரு கவிதை சொல்லு
தோளில் சாய்ந்து
காது கடித்து
சிணுங்கலாய் கேட்டாள்...

"நீ...!"
என்றதும் ....
உனக்கு எப்பவும்
குறும்புதான் என்று
காது திருகி
சிரித்தவள்...

நான் கேட்டது
கவிதையை என்றாள்...

மீண்டும் "நீ..!" என்றவன்
கவிதை சொல்லச்
சொன்னபோது
உன் முகம் மொட்டாய்...

கவிதை சொன்னதும்
உன் முகம்
மலர்ந்த பூவாய்...

நீ... நீதான்
என் கவிதை என்றதும்
கவிதையின் பரிசாய்
 ஈர இதழ்கள்...!

-"பரிவை" சே.குமார்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திரத் தியாகி மாவீரன் பாஷ்யம்


இந்திய சுதந்திர தினம் என்பது கொடியேற்றி இனிப்பு வழங்கும் நாள் என்றும் நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டிகளும் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒரு சினிமாவுமாக கழியும் விடுமுறை நாள் என்றும் மட்டுமே இன்றைய சூழலில் வந்து செல்கிறது. இதற்குப் பின்னால் தியாகிகள் என்ற பட்டத்துடன் பிரபலமான சிலரும் பிரபலமாகாமல் சுதந்திரப் போராட்டத்தில் அடி வாங்கி... மிதி வாங்கி... சிறைப்பட்டு இன்றும் தியாகி பென்சன் கிடைக்காமல் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது சுதந்திர நாடு எனக்கு எல்லாச் சுதந்திரமும் இருக்கு என்று வெற்றுப்பந்தா காட்டிக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரனுடன் வேலித் தகராறு, வெட்டிப் பேச்சு என கழிக்கிறோமே தவிர சுதந்திர தினத்தில் எத்தனை பேர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை கொடுத்த மாவிரர்களாம் நம் முன்னோர்களை நினைக்கிறோம் சொல்லுங்கள்.

பாஷ்யம் என்கிற ஆர்யா - இவரும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். 1932-ம் வருடம் தமிழக தலைமைச் செயலகமாக செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த 140 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, நமது தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர்.

1907-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள சேரங்குளம் என்னும் ஊரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த தேசபக்தர் ஏ.ரங்கசாமி அய்யங்காரின் உறவினர் ஆவார். மன்னார்குடியில் படித்துக் கொண்டிருந்த பாஷ்யம், தனது 11வது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் காரணத்தால் வெள்ளையர் மீது தணியாத கோபம் கொண்டு சுதந்திர போராட்ட கருவறைக்குள் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகங்களை படித்தாரோ இல்லையோ தேசபக்தி நூல்களை அதிகம் படிக்கலானார், அவர் தேடிப் படித்த புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை லஜபதிராயின் 'துரதிஷ்ட இந்தியா', விவேகானந்தரின் சொற்பொழிவுகள், அரவிந்தர் வரலாறு, வ.வே.சு. அய்யர் வரலாறு, வீர சாவர்கரின் '2857- இந்திய சுதந்திரப் போர்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இங்கிலாந்திலிருந்து சைமன் குழு இந்தியா வந்தபோது காங்கிரஸ் மற்றும் இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் விடுத்த அழைப்பின் பேரில் நாடெங்கும் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போகச்சொல்லி போராட்டங்கள் வெடித்தன. சைமன் குழு திருச்சி வந்தபோது தேசியக் கல்லூரி மாணவர்கள் பாஷ்யம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் முடிந்து கல்லூரி திரும்பிய மாணவர்களுக்கு இரண்டு ரூபாய் அபராதமும் தலைமை தாங்கிய பாஷ்யத்துக்கு ஐந்து ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் பணம் கட்டியபோதும் பாஷ்யம் கட்ட மறுத்தார். பின்னர் கல்லூரி முதல்வர் திரு.சாரநாதன் அவருக்கான ஐந்து ரூபாய் அபராதத் தொகையை கட்டியதால் அது தனது தேசபக்திக்கு இழுக்கு என்று கல்லூரியை விட்டு வெளியேறினார்.

தேசிய விடுதலையே தனது உயிர் மூச்சு என தீவிரம் காட்டிய பாஷ்யம், அய்யலூர் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பஞ்சந்தாங்கிப் பள்ளத்தாக்கில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். இதற்காக மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பரான திரு. முத்துக் குமாரசாமிப் பிள்ளையின் தொடர்பின் மூலம் துப்பாக்கிகள் வாங்கிக் கொண்டார். 'யுனிவர்சிட்டி டிரைனிங் கோர்' படையினால நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் பின் தனது நண்பர்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். புதுவை விடுதலை வீரர் திரு வ. சுப்பையா அவர்களை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். காளி படத்துன் முன் ரத்தக் கையெழுத்து இட்டு உறுதிமொழி எடுத்து புரட்சி அமைப்புகளுடன் இணைந்தார். 

நாட்டு விடுதலைக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு இருந்த பாஷ்யம், சிதம்பரத்தில் நடராஜர் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த கவர்னர் மார்ஷ் பாங்ஸ் என்பவரை சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயன்று முடியாமல் போனதை தனது நண்பரான தஞ்சை கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருந்திய போது அவரை இது போன்ற காரியத்தில் இனி ஈடுபடாதே என்று கடிந்து கொண்டதுடன் மகாத்மாவை பின்பற்றும்படி அறிவுரை கூறினார்.

விடுதலைப் போராட்டத்துக்கு பணம் தேவைப்பட்டதால் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மதுரை இம்பீரியல் வங்கியில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டார். நண்பர்கள் அவசரப்பட்டு செயலில் இறங்கி மாட்டிக் கொண்டனர். போலீஸாரின் சித்திரவதை தாங்கமுடியாமல் பாஷ்யத்தை காட்டிக் கொடுத்ததால் கைது செய்து இரண்டு மாதம் சித்திரவதை செய்து ஆதாரம் இல்லையென விடுதலை செய்யப்பட்ட போதிலும் சதிகாரக் கேடி என்ற பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

சென்னையில் தனது சகோதரர் வீட்டில் தங்கி இருந்த போது போலீஸ் கண்காணிப்பையும் மீறி கதர் ஆடை அணிந்து அந்நியத்துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தபடி கதர் துணிகளை விற்பனை செய்தார். இதனால் கோபம் கொண்ட கடைக்காரர்கள் வெற்றிலை எச்சிலை இவர் மீது துப்பினர். மேலும் சிகரெட் துண்டுகளை நெருப்புடன் வீசினர். இதேபோல் ஐஸ்ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட போது கள்ளுக்கடைக்காரர் இவர் மீது கள்ளுப் பானையைப் போட்டு உடைத்தார். 

சென்னை வந்த இந்துஸ்தான் சேவாதளத் தலைவர் டாக்டர் ஹார்டிகார் தனது சேவாதளத் தொண்டராக சேர்த்துக் கொண்டார். தனது தொண்டர்களுக்கு பகல்கோட் என்ற இடத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அப்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன எனவே தனது சேவாதளத்தை கலைத்த ஹார்டிகார் தொண்டர்களை போராட்டத்தை தொடரும்படி கூறி அவர் அவர் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திரதினமாக கொண்டாடும்படி பண்டித நேரு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தனக்காக விடுத்த அழைப்பாக எண்ணி தானே ஜனவரி 25 மாலை 7 மணியளவில் பெரிய தேசியக் கொடியொன்றை தயாரித்து அதன் நடுவில் மையினால் ராட்டை வரைந்து அதன் கீழ் இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது என்று எழுதி எடுத்துக் கொண்டு சுப்பிரமணிய சிவாவின் மருமகனும் தனது நண்பருமான வேணுகோபாலை அழைத்துக் கொண்டு சினிமா பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு காவலர் உடையில் கோட்டையின் தென்புற வாயில் வழியாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார், கலங்கரை விளக்க ஒளிபடும் நேரத்தில் தன்னை கம்பத்தில் மறைத்துக் கொண்டு ஏறி யூனியன் ஜாஜ் என்ற ஆங்கிலேயரின் கொடியை இறக்கிவிட்டு தான் மறைத்துக் கொண்டு வந்த இந்திய தேசியக் கொடியை ஏறிவிட்டு தப்பியோடிவிட்டார். காலையில் பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடியை பார்த்த ராணுவத்தினர் பதட்டமடைந்து கவர்னருக்கு செய்தி அனுப்பினர். இதனைச் செய்தவரை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அரசாங்க ஆவணங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் காற்றை சுவாசிக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்த பாஷ்யம், 1942ல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கிய போது துப்பாக்கிகளை கடத்துதல், தண்டவாளங்களை தகர்த்தல், பாலங்களை வெடி வைத்து தகர்த்தல் என எல்லாக் காரியங்களிலும் ஈடுபட்டார். மேலும் அவர் கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர் ஹைதர்கான், சி.எஸ்.சுப்பிரமணியன், புதுவை சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார்.

சிறந்த ஓவியரான பாஷ்யம் அரசியல் கருத்துப் படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், புத்தகங்களுக்கான முகப்புப் படங்கள் என பல்வகை ஓவியங்களை ஆர்யா என்ற புனைப் பெயரில் வரைந்து வந்தார். இவர் வரைந்த மகாகவி பாரதியின் படம் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் வளைய வருகிறது. 1945ல் முழு நேர ஓவியரான  பாஷ்யம். "யுனைடெட் ஆர்ட்ஸ்" என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். காந்தி, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். காந்தியின் உருவச்சிலையையும் இவர் வடித்துள்ளார்.
 
தனது வாழ்நாள் முழுவதையும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அர்ப்பணித்த பாஷ்யம் போன்ற எத்தனையோ தியாகிகளின் தேசியப் பற்றுத்தான் இன்று நம்மை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்துள்ளது. தியாகிகளை நினைவில் நிறுத்தி சுதந்திரத் திருநாளை சிறப்பாய் கொண்டாடுவோம்.


குண்டு துளைக்காத காரில் வந்து 
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று
சுதந்திரக் கொடியை சுதந்திரமில்லாமல்
ஏற்றும் தலைவர்களும்...
குடிக்க கஞ்சியும் உடுக்கத் துணியும் இன்றி
சுதந்திரமாக வாழும் மக்களும்

நிறைந்த எங்கள் சுதந்திர இந்தியாவின்
கடைக்கோடி இந்தியனுக்கும்
என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். 

ஜெய் ஹிந்த்..!

திரு.பாஷ்யம் குறித்த செய்திகளை படிக்க உதவிய தமிழ் விக்கிபீடியா மற்றும் சில தளங்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஒரு கவிதை... ஒரு விருது...

 முத்தம்


கொடுங்கல் வாங்கலில்
எப்போதுமே பிரச்சினைதான்...
கொடுக்க மறுக்கும்
காதலி..!
வாங்கத் துடிக்கும்
காதலன்..!
இடையில் உலர்ந்து
கொண்டிருந்தது
ஒரு முத்தம்..!

****************************************************
விருது

இந்த முறை விருது கொடுத்திருப்பவர் மதிப்பிற்குரிய
ஐயா. திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.  
விருது கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

விருது கொடுத்த ஐயா

திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்


ஆசியுடன் பெற்ற விருது



நன்றி... நன்றி.. நன்றி...
 
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 24 ஜூலை, 2012

சிறு பூக்கள்..!




சாமிக்குப் படையலாய்
கறியும் சாராயமும்...
கும்பிட்ட மனங்களுக்கு
படையலே சாமியாய்..!

*************************

தவளைகள் தாலாட்டும்
மழை இரவு...
உறங்காமல் தவிக்கும்
உன் நினைவுகள்..!

*************************

சாம்பலாய் உதிர்ந்தது
இதயப் பந்து...
உதட்டில் உக்கிரமாய்
சிரித்தது சிகரெட் நெருப்பு..!

*************************

சப்பரத்தில் சாமி
அனாதையாய்...
மல்லுக்கு நிற்கிறது
சாதி ஆரவாரமாய்..!

*************************

தழுவிய காற்று
சங்கடப்பட்டது...
மொட்டையாய் மரம்..!

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 10 ஜூலை, 2012

விவசாயியின் வேதனை



வாய்க்கா வரப்பு பாக்கயிலே
வயிரெல்லாம் எரியுதடா..!
கருவ மண்டிக் கிடக்கிறது
காண மனசு சகிக்கலைடா..!

நீர் நிறையும் கண்மாயும்
வறண்டு போய் கிடக்குதடா..!
வானம் பார்த்த பூமி இப்போ
வனமாகிப் போச்சுதடா..!

மடை திறந்து தண்ணி
பாய்ச்ச மனசு நினைக்குதடா..!
சறுக்கை உடைப்படச்ச காலம்
கரையேறிப் போயாச்சுடா..!

களையெடுப்பு கதிரறுப்பு
காண விருப்பமடா..!
உரம் போட்டு மருந்தடிக்க
உள்ளம் மறுகுதடா..!

நெல் குவிந்த களத்து மேடு
கரைஞ்சுதான் போச்சுடா..!
வைக்கோல்போர் இருந்த இடம்
கருவைக்கு வீடாச்சுடா..!

நெல் சுமக்கும் குதிரெல்லாம்
காற்றைச் சுமக்குதடா..!
நெல் அவிக்கும் அண்டாவும்
பரணில் தூங்குதடா..!

புண்ணாக்குத் தண்ணி சுமந்த
தொட்டி குப்புறக் கிடக்குதடா..!
கோழிகள் குலவிய கூடும்
வெறுமையை சுமக்குதடா..!

உழவுக்கு காளைமாடு...
பாலுக்கு பசுவமாடு...
எப்போதும் ரெண்டெருமை...
விளையாடும் வெள்ளாடு...
எல்லாம் வளர்த்த கசாலை
இடிந்து போய் நிக்குதடா..!

எங்கயும் போகாம
இங்கயே இருக்கமடா..!
எங்க ஊரு எங்க மண்ணு
எங்களுக்கு உலகமடா..!

எங்களுக்கும் எம்எல்ஏ...
எம்பி எல்லாம் இருக்காங்கடா...
கண்ணுலதான் காணவில்லை
களவாணிப் பயலுகளை..!

முன்ன மழையால விவசாயம்
அழிஞ்சப்போ வருவாங்கடா..!
கண் துடைப்பு காசையும்
எங்களுக்குத் தருவாங்கடா..!

இப்ப இங்க விளையவில்லை
அதனால அவங்க வரலையடா..!
எப்போ ஓட்டுத் தேவையோ
அப்போ ஓடி வருவாங்கடா..!

விளஞ்ச பூமி வெடிப்பு போல
விரிஞ்சு கிடக்கு எங்க நெஞ்சம்..!
வெடிப்பு இனி மாறாது...
வேதனையும் சொல்லித் தீராது..!

-'பரிவை' சே.குமார்.

படம் வழங்கிய கூகிளுக்கு நன்றி.

செவ்வாய், 3 ஜூலை, 2012

அதீதத்தில் "தங்க விழுதுகள்" - சிறுகதை

“என்னப்பா ஆகுற காரியத்தப் பாக்க வேண்டியதுதானே… அதுதான் வர வேண்டிய சொந்த பந்தமெல்லாம் வந்தாச்சில்ல… அப்புறம் என்ன… ஏம்ப்பா… சொர்ண… நீ என்ன சொல்றே…” என்றபடி சொர்ணம் அருகில் வந்தார் சுதர்சனம்

“செய்ய வேண்டிய காரியத்தை செஞ்சுதானே ஆகணும்… பயலுககிட்ட கேளுங்க வேற யாரும் வரவேண்டியது இருக்கான்னு…” அருகில் நின்ற சின்னையாவிடம் “ஏப்பா… வெளிய நிக்கிற குமரேசனக் கூப்பிடு…” என்றார்.

குமரேசன் சோகம் தாங்கிய முகத்துடன் அவர் அருகில் வந்து “என்ன மாமா…” என்றான்.

“என்ன மாப்ளே… யாரும் வரணுமா… நேரமாகுதுல்ல ஆக வேண்டியதப் பாத்தாத்தானே இருட்டுறதுக்குள்ள முடிக்க முடியும்…”

“பாக்கலாம் மாமா… யாரும் வரவேண்டியதில்லை…”

“சின்னவன் எங்கே…?”

“வெளியிலதான் இருக்கான்…”

“அவன கூப்பிடு”

“நீங்கதானே கூப்பிடுங்க… நா அவங்கிட்ட பேசுறதில்ல மாமா…”

“ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தன் பேசாம இருந்தா எப்படிப்பா… மறுபடியுமா பொறக்கப் போறீங்க…”

“மாமா… அவங்கிட்ட பேச என்ன இருக்கு… நானும்தான் மாசாமாசம் பணம் அனுப்புறேன்… கேட்டா ஒண்ணுமே கொடுக்கலைம்பான்… நீங்களே அவங்கிட்ட கேட்டுட்டு ஆக வேண்டியதப் பாருங்க…”

“சரி அதெல்லாம் இப்ப எதுக்கு… அதை பேச நேரம் காலம் இருக்குப்பா…” என்றவர் வெளியே வந்து கதிரேசனிடம் “என்ன கதிரேசா… உனக்கும யாரும் வரவேண்டியது இருக்கா… இல்ல ஆக வேண்டியதைப் பாக்கலாமா…”

“பாக்கலாம் மாமா… அதுக்கு முன்னாடி கொஞ்சம் பைசல் பண்ணிக்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்…”

“உனக்கு என்னப்பா பைசல் பண்ணனும்?”

“இங்க பாருங்க ஆத்தாவுக்கு இம்புட்டு நாளா நாந்தான் பாத்தேன்… மூத்தவன் சல்லிக்காசு தரலை…”

“சரிப்பா… அதுக்கு என்ன இப்போ… அதை பேசுறதுக்கு இது நேரமில்லைப்பா… எதா இருந்தாலும் காரியம் முடிஞ்சதும் நாலு பேரு உக்காந்து பேசலாம்ப்பா…”

“இல்ல மாமா… இதுவரைக்கும் ஆத்தா எப்படியிருக்கான்னு கூட கேக்காதவன் இன்னைக்கு வந்துக்கிட்டு வாடிப்பட்டி மேளத்த வச்சி பேரெடுத்துட்டுப் போகலாமுன்னு பாக்கிறான்… இப்பவே அவனையும் வச்சி எல்லாத்தையும் பேசிடுறது நல்லது… எம்பொண்டாட்டி மூத்தரம் பீயெல்லாம் அள்ளி குளிப்பாட்டி பாத்துக்கிட்டா இன்னைக்கு மூத்தவ பவுசா வந்து தலமாட்டுல உக்காந்து அழுவுறா… எல்லாரும் பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க…”

“அவந்தான் பாக்கலை… உன்னய பெத்த மாதிரித்தானே அவனையும் பெத்தா… பெத்தவங்களுக்கு பாக்க எல்லாரும் கொடுப்பினை இருப்பதில்லை… அதுக்கு நீ சந்தோசப்படணும்ப்பா… சரி வா… நீர்மாலை எடுக்கப் போகணும்… காரியம் முடிஞ்சதும் நானே எல்லாத்தையும் பேசி சரி பண்ணுறேன்…”

“இல்ல மாமா… நாளைக்கி பேசலாம்ப்பான்னு சொல்லுவீங்க… வேல முடிஞ்சா எல்லாரும் போயிருவீங்க… எனக்கு இப்பவே பேசணும்…”

“என்னப்பா நீ… இங்க பாரு நாலு சனம் வந்திருக்கயில வரவு செலவப் பத்தி பேசினா யாருக்கு அசிங்கம்… உங்க ரெண்டு பேருக்கும் அசிங்கமாத் தெரியலைன்னாலும் பெத்த உசிரு ரெண்டுக்கும் அசிங்கமில்லையா… பெத்தவ பொயிட்டா… உங்கப்பன உசிடரோட கொல்லுற மாதிரி இல்லையா… நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.”

அவர் அப்படி சொன்னதும் கதிரேசன் ஒன்றும் சொல்லாமல் அவருடன் சென்றான்.

ல்லாம் முடிந்து மூன்றாவது நாள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு எல்லாரும் சாப்பிட்டு சென்றதும் சொர்ணத்துடன் சில சொந்தங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெற்றிலை காம்பைக் கிள்ளியபடி வந்த சுதர்சனம், “ஏம்ப்பா சொர்ணம், கதிரேசன் ஏதோ பைசல் பண்ணனுங்கிறான்…”

“என்னவாம் அவனுக்கு…” என்றார் நெற்றியை சுருக்கியபடி.

“உங்க ரெண்டு பேருக்கும் அவந்தான் இதுவரைக்கும் நல்லது கெட்டது பாத்திருக்கான்…”

“ஆமா… பெத்தவங்களுக்குத்தானே பாத்தான்…”

“ஆமா… ஆமா… இல்லேன்னு சொல்லலை… ஆத்தவோட நகையெல்லாம் அவனுக்கு வேணுங்கிறான்”

“….”

“என்னப்பா ஒண்ணும் பேசமாட்டேங்கிறே…?”

“அவரு என்ன சொல்றது. ஆத்தாவோட நகையை ரெண்டு பங்கா வைக்கணும்” என்றான் குமரேசன்.

“பாத்ததெல்லாம் நானு… பங்கு போட வந்திட்டிட்டாரு… பங்கு போட…” கோபமாக வார்த்தைகளை விட்டான் கதிரேசன்.

“நானும்தான் மாசா மாசம் பணம் அனுப்பியிருக்கேன்… இப்ப ரெண்டு நாளா எம்புட்டு செலவு தெரியுமா?”

“இப்ப பாத்தது ரெண்டு பேருக்கும் பாதி பாதிதானே… அதை கணக்குப் பண்ணி வாங்கிட்டுப் போயிடுவேயில்ல… அப்புறம் என்ன…”

“ஏம்ப்பா என்னது… பாசத்தை வெல பேசிக்கிட்டு… அதுக்கு சண்டை வேற போட்டுக்கிட்டு… உக்காருங்கடா… ” கோபமாக கத்திய சுதர்சனம், “இங்க பாரு சொர்ணம்… உம்பொண்டாட்டி நகையை நீயே ஒங்காலத்துக்கும் வச்சிக்க… நீ யாருக்கு கொடுக்கணுமின்னு நினைக்கிறியோ… அவங்களுக்கு கொடுத்துக்க… இப்ப இருக்க சூழ்நிலையில இதுதான் நல்லது”

“வேணாம் சொர்ணம்… அவ கிடந்த கஷ்டப்படும் போது போய் சேரக்கூடாதான்னு நானே சத்தம் போட்டிருக்கேன். ஆனா இன்னைக்கு அவ இல்லாத உலகத்துல நா தனிச்சிருக்கணுமேன்னு நினைக்கும் போது… இப்ப நடக்கிறதைப் பார்க்கும் போதும் பேசாம அவ கூட போயிருக்கலாமோன்னு தோணுது. இதையெல்லாம் பாக்க வேண்டியது இல்லாம போயிருக்குமே…” பேசமுடியாமல் துண்டால் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.

“சரி விடு… அவனுகளுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்… நாந்தான் பாப்பேன்… இல்ல நாந்தான் பாப்பேன்னு பாசத்தை பங்கு போட்டுக்கிட்டாங்கன்னா சந்தோஷப்படலாம்… சரி விடு… என்ன பண்ணலாம் அதை சொல்லு…”

“இதுல நா சொல்றதுக்கு என்ன இருக்கு… பொம்பளப்புள்ளைக்கு இனி இவங்க எதுவும் செய்ய மாட்டாங்க… அதனால அதுகிட்ட எதாவது ஒரு தங்கத்தை கொடுத்திடுப்பா”

“அதெப்படி முடியும்… அதுக்கெல்லாம் கொடுக்க முடியாது… நாளக்கி அவரு வாங்கி வச்சிருக்க கடனை அவ அடைக்க வருவளா… நாங்கதானே அடைக்கணும் ரெண்டு பங்கா மட்டும் வையிங்க மாமா” குமரேசன் வேகமாக பேசினான்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்… எங்க ஆத்தாவுட்டு நகையின்னு ஒண்ணு கொடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க… என்னத்தை செஞ்சிட்டிங்க…” என்று கத்தியவள், “ஒரு நகை கொடுக்க மனசில்ல… இவனுகளோட என்ன உறவு வேண்டிக்கிடக்கு… இனி இவனுக கூட எனக்கு ஒட்டும் இல்ல… உறவும் இல்ல… நா இப்பவே போறேன்” என்று கிளம்ப… பார்த்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை, “ஏய் இருக்க பிரச்சினை பத்ததுன்னு நீ வேற… சும்மா கத்தாம உள்ள போ…”

“ஆமா… இப்ப நா என்ன சொல்லிப்புட்டேன்…”

“போடின்னா… போ… நாலு பேர் பேசிக்கிட்டு இருக்கும் போது வாய்க்கு வாய் பேசிக்கிட்டு… நீங்க பேசுங்க சித்தப்பா…”

“குமரேசா… நான் சொல்றதை கேளு… உனக்கு பசங்கதான்… சின்னவனுக்கு ரெண்டு பொம்பளப்புள்ளங்க இருக்கு… அதுக அப்பத்தாவுட்டு தங்கமுன்னு போட்டுட்டுப் போகட்டுமே… சின்னவங்கிட்ட செயினை கொடுப்போம்… அப்புறம் பொம்பளப்புள்ள… அதுக்கு இனி உங்க அப்பனாலயும் ஒண்ணும் செய்ய முடியாது… நீங்களும் இனி செய்வீங்கன்னு சொல்ல முடியாது அதனால அதுக்கிட்ட காப்பை கொடுக்கலாம்… ஆத்தாவிட்டு தங்கமுன்னு பொம்பளப்புள்ளக்கி கல்யாணம் பண்ணும் போது போடுமில்ல… உனக்கு மோதிரத்தை வச்சிக்க… என்ன குமரேசா…”

“அதுவும் எதுக்கு… அதையும் சின்னவனுக்கே கொடுங்க… நாங்க இனி நல்லது கெட்டது எதுக்கும் வரலை… ” கோபமானான் குமரேசன்.

“ஏய் என்னப்பா நீயி… இன்னும் ஒரு முடிவுக்கு வரலை… கேட்டதுக்கே இம்புட்டு கோபப்படுறே…”

“மாமா நா… ஆத்தாவுக்கு பாத்ததுக்காக நகையை கேக்கலை… அவன் பாக்கலையேங்கிற கோவத்துலதான் கேட்டேன்… அவங்கிட்டே கொடுத்திருங்க… எனக்கு வேண்டாம்” திடீரென கதிரேசன் நல்லவனாக மாறினான்.

“இல்லப்பா… பஞ்சாயத்துன்னு வந்திட்டா மூணு பேருக்கும்தான் கொடுக்கணும்… நீ காப்ப வச்சிக்க… பெரியவன் செயின எடுத்துக்கட்டும்… அக்காவுக்கு அந்த ரெண்டு மோதிரத்தையும் கொடுத்திடுங்க… என்ன சொர்ணம் நாங்க சொல்றது சரிதானே…”

சொர்ணம் பதில் சொல்லாமல் சிரித்தார்.

“என்னப்பா ஒண்ணும் சொல்லாம சிரிக்கிறே?”

“இல்ல… அவ இழுத்துக்கிட்டு கெடந்தப்போ இதுவரை பாத்த சின்னவன் பால ஊத்தியும் உயிரு போகலை… நா… பேரப்பய… எல்லாரும் ஊத்தியாச்சு…ம்… பாவி மனுசி போகமாட்டேனுட்டா… அப்ப நீதான் சொன்னே பெரியவனை நெனச்சுக்கிட்டே இருக்கு போல… அவன் பேரை சொல்லி ஊத்துங்கன்னு… அப்புறம் சின்னவன் நான் குமரேசன் வந்திருக்கேந்தான்னு….” பேசமுடியாமல் அடைத்த அழுகையை அடக்கிக் கொண்டு “வந்திருக்கேந்தான்னு ஊத்துனதும்தான் அந்த மூச்சி நின்னுச்சு… பாவி மனுசி பாசத்தை வச்சிக்கிட்டு தவிச்சா… ஆனா இதுக தங்கத்தைத்தானே பாக்குதுக… சுதர்சனம் அப்படியே என்னய மூணு பங்கா வக்கிறாகளா இல்ல யாராவது ஒருத்தர் எடுத்துக்கிறாங்களான்னு கேட்டு சொல்லுப்பா… அவ இல்லாத உலகத்துல அவதிப்படணுங்கிறது என் தலையெழுத்து… மகராசி கஷ்டப்பட்டாலும் நான் இருந்தேன் பாக்க… இப்ப எனக்கு இனி யாரு இருக்கா… கஷ்டப்படணுங்கிறது எந்தலையெழுத்து… அதை மாத்த முடியாதே…” உடைந்து அழுதார்.

பஞ்சாயத்து பேசியவர்கள் எல்லாரும் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தனர். அவரது வாரிசுகள் வாயடைத்துப் போயி நின்றனர்.

*************************

குறிப்பு : இந்தக் கதை ஜூலை-01 அதீதம் இதழில் வெளியாகி இருக்கிறது. எனது கதையை வெளியிட உதவிய  திருமதி.ராமலக்ஷ்மி அக்கா அவர்களுக்கும் நண்பர். எல்.கே உள்ளிட்ட அதீதம் குழுவினருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

அதீதத்தில் படிக்க... "தங்க விழுதுகள்" 

உங்கள் கருத்துக்களை இங்கும், மறவாமல் அதீதத்திலும் பதியுங்கள் உறவுகளே... கருத்துக்களே எனது ஆக்கங்களை செப்பனிடும் கருவி.

-’பரிவை’ சே.குமார்.

Thanks ----  Google (PHOTO)