மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 மே, 2012

'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - திரு. நெல்லை கண்ணன்

முந்தைய பதிவின் தாக்கம் : பாரதி நட்புக்காக குழுவினரை கவிதாயினி மேடையேற்றிய போது வாசித்த பெயர்கள் அனைத்தும் எனது மனதில் இல்லை... மேலும் சங்கரன் என்று அவர் சொன்னார்... ஆனால் அங்கு சங்கர் அவர்கள் வரவில்லை என்பதும் தெரியும்... எழுதும் போது அவர் அழைத்தவர்களில் பலர் வரவில்லை என்று எழுத நினைத்து மறந்துவிட்டேன். குறிப்பாக பாரதி நட்புக்காக அமைப்பின் பொதுச் செயலாளர் திருமிகு. கலீல் ரஹ்மான் அவர்கள் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை என்பதே உண்மை... எனது பதிவுகளில் அவரை விட்டுவிட்டு போட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை... என்னை எப்பொழுதும் புறக்கணிக்கிறார் என்று எனது சகோதரர் திரு. சுபஹான் அவர்களிடம் அன்புச் சண்டை போட்டிருக்கிறார். உங்களை மேடையில் பார்த்திருக்கிறேன்... பழகியது இல்லை... மறதிதான் காரணமே ஒழிய மறக்கடிக்கப்படவில்லை... உங்க பேரை மனசில் பொறிச்சாச்சு... இனி மறக்காது...என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... சார்... நேரடியாக கேட்டதற்கு நன்றி.

இனி தமிழ்கடலில் மூழ்கி சில முத்துக்களை பார்க்கலாம்...

விசாலி கண்ணதாசனின் பேச்சுக்குப் பிறகு மேடையில் திரையிடப்பட்டது. சினிமாவில் இடைவேளை போல சில மணித்துளிகள் கிடைக்க டீ,காபி,ஸ்நாக்ஸ் விற்பனை படு ஜோராக நடந்தது. திரை விலக்கப்பட, மேடை நடுவில் நாற்காலி,மேசை இடப்பட்டு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

தமிழ்கடல் என்ற அடைமொழிக்கு ஏற்ப ஆழிப் பேரலையாய் கண்ணதாசன், பாரதி, வள்ளுவன் என கலவையாய் தமிழ் மாலை தொடுத்து ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் மேடையை தன் வசப்படுத்தி பார்வையாளர்களை பஞ்சமில்லாமல் சிரிக்க வைத்தார்.

ஆரம்பத்தில் பின் வரிசையில் அமர்ந்து கேட்ட போது பேசுவது புரிந்தும் புரியாதது போல் இருந்தது. பின்னர் சற்றே முன்னோக்கி வந்து அமர்ந்தபோது அவரின் பேச்சை நன்கு கேட்க முடிந்ததோடு வாய்விட்டு சிரித்து ரசிக்க முடிந்தது.

அவர் பேச்சின் இடையே பிறருக்கு உதவுங்கள், இறைவனை நினையுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என்ற வாசகங்களை அடிக்கடி சொன்னார்.

"கடவுள் ஒரு குழந்தை பிறக்கும் போதே எல்லா ஏற்பாடும் பண்ணிடுறான்... என்ன படிப்பான், எப்படி , யாரை கல்யாணம் பண்ண வேண்டும் என்று எழுதி வச்சிடுறான்... அதை யாராலும் மாற்ற முடியாது" என்றார்.

"ஒருத்தனுக்கு உடம்பு முடியலைன்ன உடனே பெரிய ஆஸ்பத்திரியில வச்சி ஒரு வாரம் எல்லா ஊசியும் போட்டு எல்லாம் பண்ணிட்டு கடைசியில கடவுள்கிட்ட சொல்லுங்கிறான்... எங்க ஊர்க்காரப்பய அப்பாவுக்கு முடியல...பெரிய ஆஸ்பத்திரியில வச்சி பாத்துட்டு டாக்டர் ரெண்டு லட்ச ரூபாய் பில்ல கொடுத்து உங்கப்பாவை கடவுள்தான் காப்பத்தணுமின்னான். எங்க ஊர்க்காரப் பயலாச்சா, டக்குன்னு அருவாள எடுத்து நீ கடவுள்கிட்ட சொல்லு, நீ முடியாதுன்னு சொல்லியிருந்தா நாங்க அப்பவே கடவுள்கிட்ட சொல்லியிருப்பமே...அவரு உடம்புல இவ்வளவு ஊசி போட்டு, எதையும் சாப்பிடவிடாம பண்ணிட்டியேன்னு அருவாளை ஓங்கவும் அவங்க அப்பாவையும் கொடுத்து ரெண்டு லட்ச ரூபாயும் கொடுத்துட்டாங்க"

"எங்கப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தது என்ன தெரியுமா... நிறைய நல்லது செய் ... யாருக்கும் தீங்கு நினைக்காதே... இந்த பங்களாவுக்குள்ள யார் வந்தாலும் சோறு போடு... நான் பேச போறப்போ நிறையப் பேரு வருவாங்க... பையன காலேஜ்ல சேர்த்திருக்கேன் பணம் வேணுமின்னு கேப்பாங்க... எவ்வளவுன்னு கேட்டா... இருபதாயிரமுன்னு சொல்லுவாங்க... உடனே கொடுத்துடுவேன். நம்ம கூட நிறைய நல்லவங்க வருவாங்க... இதெல்லாம் தேறாதுன்னு சொல்லுவாங்க... படிக்கத்தானே பணங்கேக்கிறான்... கொடுத்தா என்ன"

"பசியின்னு வாறவன் கடவுள்ளுன்னு நினைங்க...எல்லா இடத்தில் கடவுள் கண்ணாக இருக்கிறான் என்று நினைப்பவன் தவறு செய்யவே மாட்டான் என திருவள்ளுவர் சொல்கிறார் என்றவர், இரண்டாயிர ரூபாய் ஷூவை வெளியில போட்டுட்டு பிள்ளையாரை கும்பிடப் போனவன், 'ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை...' மாப்ளே ஷூ இருக்குமா என்று பிள்ளையாரை கும்பிடவே மாட்டான். பிள்ளையார் பார்ப்பாரு... அந்த நாயை செருப்பால அடிச்சி வெளியில வெறட்டுன்னு சொல்லிடுவாரு..."

" பெத்த அம்மாவை மதிக்க மாட்டான். வீட்ல காளிய கும்பிடுவான். காளி பார்ப்பா, பெத்த தாய மதிக்க தெரியலை... மூதேவியின்னு மிதிச்சிடுவா... பெத்தவங்களை மதிக்கணும்... இப்ப முதியோர் இல்லம் எவ்வளவு கட்டியிருக்கான்யா... பய அப்பாகிட்ட சொல்லுறான்... உங்க காலத்துல இன்னும் வசதியா முதியோர் இல்லம் வந்திரும்ப்பான்னு... எனக்கு இறைவன் கொடுத்த பெரிய வரமே என் தாய், தகப்பனை கடைசிக் காலத்துல பாத்துக்கிற வாய்ப்பை கொடுத்ததுதான்"

'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...' பாடலை விளக்கும் போது "அப்பாவை, அம்மாவை நினைச்ச புள்ள... எல்லாருக்கும் உதவுன புள்ள... நெஞ்செல்லாம் நல்லதே நினைச்ச புள்ள அந்த புள்ளை அவனைப் பாக்கிற... பாத்ததும் இப்படி மாறிடுறா... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல... இதுதாய்யா கவிஞன், அடுத்த வரி போடுறான் பாரு... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... அடி சண்டாளி... சண்டாளி நீ பேசாத பேச்சு பேச்சே அல்ல... இப்ப தமிழ்நாட்டுல ஒரு நடிகைக்கிட்ட கேக்கிறாங்க... நீங்க இப்ப யார் கூட இருக்கீங்க... அவரு கூட இருக்கிறேன்... அவரு இதுக்கு முன்னாடி யார் கூட இருந்தாரு அப்படின்னு கேட்டா... அதுக்கு அவரும் ஏழெட்டுப் பேர் கூட இருந்திருக்காரு அப்படிங்கிறா... இல்வாழ்க்கை இப்படி அமையக் கூடாது. அறமும் பொருளும் சொல்லியிருந்தாலும் காமத்துப்பால்தான் 25 அதிகாரம்... காதல்ன்னா என்னன்னு என்னமா சொல்லியிருப்பாரு தெரியுமா" என்றார்.

கவிஞர் தன் காதலி இன்னொருத்தனை திருமணம் செய்து கொண்டதும் காதலன் பாடுவது போல் எழுதிய 'எங்கிருந்தாலும் வாழ்க...' பாடலை விளக்கும் போது, தன் காதலனிடம் தன் கணவனை அழைத்து வந்து காண்பிக்கிறாள்... எனக்குத் தெரிந்து படத்தின் கதையை ஒரு பாடலில் சொல்லும் திறமை செட்டியாரைத் தவிர்த்து யாராலும் முடியாது என்றார்.


(திரு.தமிழ்கடல் நெல்லை கண்ணன்)

"சிவாஜி ஒரு முறை என்னிடம் செட்டியாருக்கிட்ட பாத்து இருக்கணும்... அதுவும் செட்டியும் நாயுடுவும் (எம்.எஸ்.வி) சேர்ந்துட்டாங்க பாட்டப் போட்டு நம்மள கவுக்கப் பாப்பாங்க... நாம ஒரு படி மேல நிக்கணும். அதே மாதிரி பள்ளத்தூர் ஆச்சி, நாகேஷ் எல்லாம் நாம கொஞ்சம் அசந்தாலும் சாப்பிட்டுப்பிடுவாங்க அப்படின்னு சொன்னாரு."

"நான் சைவப்பிள்ளைமார்... நாங்க சுத்த சைவம்...ஒரு தடவை டி.ஜி.பி ஒருவர் வீட்டுக்குப் பொயிட்டேன். அந்தம்மா சிக்கன் கறி செஞ்சு சாப்பாடு போட்டுட்டாங்க... நான் சாப்பிடமாட்டேன் என்று சொன்னால் வருந்துவார்கள் என்பதால் குழம்பை மட்டும் போட்டு சாப்பிட்டு விட்டு வந்துட்டேன். அப்புறம் அந்தம்மா, அவ்ருக்கு போன் பண்ணி ஐயா சரியாவே சாப்பிடலைன்னு சொல்ல, அவரு என்ன சமைச்சீங்கன்னு கேட்க, சிக்கன்னு சொன்னதும் ஐயோ அவரு சைவமில்லன்னு சத்தம் போட்டாராம். ஒரு சில பேரு இருக்கான், நான் அதை சாப்பிடமாட்டேன்... இதை சாப்பிடமாட்டேன்னு... அப்புறம் எதுக்கு இருக்கணும்... போய் சேர வேண்டியதுதானே"

"நான் கடவுளிடம் கேட்பது என்னவென்றால் நான் இறக்கும் போது ஒரு பத்தாயிரம் பேராவது அழுக வேண்டும். எங்க ஊர்ல ஒருத்தன் இறந்த போது என் பங்காளி ஒருத்தன் அதிகமா அழுதான். ஏன்டான்னு கேட்டா நான் ஒருத்தன்தான் கடன் கொடுக்காம இருந்தேன்... நேத்துத்தான் கொடுத்தேன்னு சொன்னான்...அப்படியிருக் கூடாது."

"ஒருத்தன் தனக்காக தன் மனைவி உயிரையே கொடுப்பாள்ன்னு ஒரு சாமியார்கிட்ட சொன்னான். அந்த சாமியாரு நான் ஒரு மாத்திரை தாறேன்... போட்டுக்கிட்டு படு... செத்த மாதிரி ஆயிடுவே... அப்ப யார்... யார் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாமுன்னு சொன்னாரு... இவனும் அதே மாதிரி செய்ய... மனைவி நானும் வாறேன்னு அழுகிறா... மகனும் , மகளும் நாங்களும் வாறோமுன்னு சொல்ல, அவன தூக்கிட்டாங்க... போகும் போது கல்தூணில் இடிச்சிடுது... எழுந்துவிட்டான். சாமியார்கிட்ட போயி பாத்தீங்களா இவங்க அன்பைன்னு சொல்லியிருக்கான்... அவரு வேற மாத்திரை ஒண்ணு கொடுத்து நீ படுத்து வேடிக்கை பாருன்னு சொல்ல, அதே மாதிரி தூக்கும் போது பாத்து தூக்குங்க கல்தூணில் இடிச்சிறாமன்னு மனைவி சொல்லியிருக்கா,... அப்ப சாமி சொல்லியிருக்காரு... நீங்க உங்க உயிரக் கொடுத்தா அவரை காப்பாத்திடலாமுன்னு மனைவியிடம் சொல்ல, அவுக நேரம் முடிஞ்சி போச்சு... என்ன செய்யிறதுன்னாலாம், மகனோ அப்பா எல்லாம் அனுபவிச்சிட்டுத்தானே போயிருக்காருன்னானாம்... மகளோ ஒரு படி மேல போயி நான் வேற வீட்டுக்குப் போறவ... நான் எப்படின்னாளாம்... அவன் எழுந்து சாமியார்கூட பொயிட்டானாம்"

" கண்ணதாசா என்னை வைத்து எழுது என கவிஞனின் வீட்டு வாசலில் வார்த்தைகள் வந்து தவம் கிடக்கும்... வார்த்தைகளுக்காக அவர் காத்திருந்தது இல்லை... இப்பவும் சில கவிஞர்கள் இன்னும் திரையுலகத்தில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அடச்சிக்கிட்டு இருக்கான்"

விசாலி கண்ணதாசன் பற்றி குறிப்பிடும் போது கண்ணதாசனின் மறுபிறப்பு என்றவர், அதே நெற்றி... அதே மாறுகண், அதே பேச்சு என்றார்.

"நான் செட்டியார்களிடம் பேசும் போது சொன்னேன்... நீங்கள்லாம் பெரிய அளவுல இருந்தாலும் உலகளவுல எங்க செட்டிய மட்டும்தானேய்யா தெரியுது என்று சொல்வது உண்டு."

"ஒரு பாட்டுல 'ஏனென்று கேட்காமல் வருவான்... நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்' என்றார் கவிஞர், கவிஞருக்கு கடவுள் எங்க போவாருன்னு தெரிஞ்சிருக்கு பாருங்க... பணக்காரன் வீட்டுக்கு கடவுள் போகமாட்டாருன்னு சொல்றாரு. ஏன்னா அவன் கடவுளையும் சந்தேகப்படுவான்."

'புத்தி சிகாமணி பெத்த புள்ள...'பாட்டை பற்றி சொல்லும் போது அதில் முத்துலெட்சுமி , 'வருசம் ஒருபுள்ள பெத்தெடுத்து வயசு இருபத்தி ஆறாச்சுன்னு...' பாடுவாங்க. அப்ப கவிஞன் போட்டான் பாருங்க எம்.ஆர்.ராதா பாடுற மாதிரி ஒரு வரி, "ஆனாலும் நான் கொஞ்சி நாளாச்சின்னு...' சொல்லி சிலாகித்தார்.

"ஒரு முறை கவிஞர் இன்னும் சில தண்ணிப் பிரியர்கள் ஒரு அறையில் தங்க நான் மற்றும் சிலர் வேறு அறையில் தங்கினோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவர் அறைப்பக்கம் போனா எல்லாரும் தூங்கிட்டாங்க... செட்டியாரு மட்டும் சந்தோஷமா உலாவிக்கிட்டு இருக்காரு. காலையில அவருக்கிட்ட அண்ணே நேத்து ராத்திரி சந்தோஷமா உலாவுனீங்கன்னு சொன்னதும் முழுசும் பாத்தியான்னு கேட்டவரு, பழனியில அவனும் அப்படித்தானே இருக்கான்ன்னு சொன்னாரு... ஏன்னா முருகன் செட்டியார்ன்னு சொல்லுவாங்க..."

"செட்டியாரு பத்திரிக்கை ஒண்ணு நடத்தினாரு... அருமையான பத்திரிக்கை... நானும் ஏழு லெட்சம் கட்டி ஏஜென்ஸி எடுத்தேன்... போட்டது போட்டதுதான்... அவருகிட்ட ஒரு முறை அண்ணே ஏழு லட்சம்ன்னு சொன்னதும் என்ன நோட்டீஸ் அனுப்ப போறியா... பத்தோடு பதினொன்னுன்னு சொன்னாரு..."

"செட்டியாருக்கு உதவிய வள்ளல் சின்னப்பாதான்... செட்டியார் கஷ்டப்பட்ட போதெல்லாம் அவருக்கு உதவிகளை வாரி வாரிச் செய்தார். அவரு மாதிரி உதவிகளை யாரும் செய்ய முடியாது."

"இப்ப சினிமாவுல சோத்துக்கே வழியிருக்காது ஆனா சுவிட்சர்லாந்துல பாட்டுப் பாடுவாங்க... தமனாவெல்லாம் கிராமத்துப் பிள்ளையாய்யா... வெள்ள வெள்ளேருன்னு இருக்கு... இந்த தனுசு கொடுத்து வச்சவன்யா... ஸ்ரேயா மாமன் கூடவும் டான்ஸ் ஆடுறா... இவன் கூடவும் ஆடுறா..."

கணவன் மனைவி ஊடல், கூடல், கண்ணதாசன் சிவாஜிக்கு எழுதிய பாடல், நாகேஷை புகழ்ந்தது, எம்.ஜி.யாருக்கு எழுதிய 'மாபெரும் சபைதனில் நீ வந்தால்...',நேரு இறந்த போது எழுதிய பாடல் என கவிஞனில் கலந்து இன்னும் நிறைய விஷயங்களை சிரிப்புடன் அருமையாக பேசினார். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 4 மே, 2012

நீங்களும் வாழ்த்துங்க...


விச்சு போன்ல பாப்பாடா பேசு...

விஷால் : பாப்பா.... நல்லாக்கியா... சைக்கிள் ஓட்டியா...

ஸ்ருதி : இல்ல... டிவி பாக்குறேன்... நீ என்ன பண்றே...

விஷால் : சாப்றேன்...

ஸ்ருதி : விச்சு அப்பாக்கு ஹாப்பி வெட்டிங் டே சொன்னியா?

விஷால் : ஆப்பி பத்தேவா அப்பாக்கு...

ஸ்ருதி : இல்லடா வெட்டிங்க் டேடா...

விஷால் : ஆப்பி பத்தே... வெட்டேயா...

ஸ்ருதி : ம்... நா... மதுரயில இருந்து அப்பாட்ட பேசிட்டேன்...

விஷால் : நா...

ஸ்ருதி : நீயும் ஸ்கைப்புல அப்பாட்ட சொல்லு சரியா...

விஷால் : ம்... அம்மாக்கு...

ஸ்ருதி : அம்மாவுக்குந்தான்... போன அம்மாட்ட குடு...

விஷால் : அம்மா... பாப்பா...

ஸ்ருதி : அம்மா... ஹாப்பி வெட்டிங் டேம்மா...

விஷால் : அம்மா... கம்பூட்டர போடு அப்பாட்ட பேச...

ஸ்கைப்பில் தொடர்பு கொள்ள...

நான் : அலோ விச்சுக்குட்டி...
விச்சு : அப்பா ஆப்பி வெட்டே... ஆப்பி வெட்டே... ஆப்பி பெத்தே...

கத்திக் கொண்டே காலையில் பிள்ளையார்பட்டியில் வாங்கிய துப்பாக்கியை பிரித்துப் பார்க்கும் முயற்சியில் தீவிரமாய்...

இன்று காலை நடந்த நிகழ்ச்சி சற்றே மாறுதலாய்...

இந்த சந்தோஷம் எல்லா நாளும் தொடரட்டும்... வாழ்த்துங்கள்... வாழ்கிறோம்...


அன்புடன்

சே.குமார் - நித்யா குமார்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - விசாலி கண்ணதாசன்


வெள்ளிக்கிழமை மாலை அமீரகம் வாழ் தமிழர்களுக்கு காலத்தால் அழியாத செட்டி நாட்டுக்கவியின் பாடல்களை அழகிய தமிழுடன் அமுதாய்ப் பருகும் வாய்ப்பை அபுதாபி ‘பாரதி நட்புக்காக’ அமைப்பு வழங்கியது.

தமிழ் வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியாக அபுதாபி இண்டியன் பள்ளி கலையரங்கத்தில் கண்ணதாசனின் நினைவலைகளை பகிரும் விதமாக ‘நான் பேச நினைப்பதெல்லாம்...’ என்ற தலைப்பில் நடந்த விழாவின் தலைப்புக்கு ஏற்றார் போல் கவியரசரின் மகள் கவிதாயினி விசாலி கண்ணதாசன் மற்றும் தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் ஆகியோர் பேச நினைத்ததையெல்லாம் அதிக சிரத்தையுடன் அழகிய தமிழில் மாலையாக தொடுத்து பார்வையாளர்களை கண்ணதாசனின் கவிதைக்குள் கட்டிப் போட்டார்கள்.

விழா நடந்த அரங்கு நிறைந்த கூட்டம் இருக்குமென்று தாமதாமாக சென்ற நாங்கள் நினைத்தோம். ஆனால் கூட்டம் அதிகமில்லை. பாரதி அமைப்பினர் எதாவது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு வந்திருந்தால் அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருக்குமோ என்னமோ... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்... எல்லாம் தமிழ்... என்பது பேச்சளவில்தானே இருக்கிறது... சரி விடுங்க... விழாவுக்கு போவோம்...


விழா எப்பவும் போல் சில நடனங்களுடன் ஆரம்பமாகியது. நடனமாடியது சென்ற முறை பார்த்த அதே சிறுவர் சிறுமிகள்தான் என்று நினைக்கிறேன். சந்திரபாபு போல் ஆடிய சுட்டிப்பையன் எல்லோரையும் கவர்ந்துவிட்டான். வழக்கம்போல் இவர்களை எல்லாம் ஆட்டுவித்தவர் திருமதி. ஆஷா நாயர் அவர்கள். அருமையான நடனம் அமைத்த அவருக்கு வாழ்த்துக்கள்..

நடனத்துக்குப் பின்னர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களில் இருந்து காட்சிகள் மேடையின் அருகில் இருந்த சிறிய திரையில் ஒளிபரப்பட்டது. அதன்பின் மேடையேறிய விசாலி கண்ணதாசன், என் தந்தைக்கு நான் மூன்றாவது மனைவியின் மகள், எனது தந்தைக்கு 15 பிள்ளைகள் என்று சொல்வார்கள். என் அம்மாவுக்கு நான் மட்டும்தான் பிள்ளை என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார், நான் பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் நாட்டிற்குத்தான் போயிருக்கிறேன். அவர்களுடன் சுலபமாக பழகிவிடுவேன். அரபு நாடுகளுக்கு அதிகம் வந்ததில்லை. துபாய் என்பது தெரியும், அதிலும் துபாய் என்றால் எனக்கு ஞாபகத்தில் இருப்பது நம்பர்-5 விவேகான்ந்தர் தெருதான்.

இப்போ அரபு நாடுகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறேன். நம்ம பெண்கள் குறிப்பாக தென் இந்தியப் பெண்களுக்கு அழகு சேலைதான். அரபுப் பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் உடம்பு முழுவதும் மறைத்து கண்ணை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறமும் நம்ம கலையும் ஒருங்கே இறைவன் வழங்கியிருக்கிறான். என்ன அழகு... என்ன கம்பீரம் அதனால்தான் ஒரு கவிஞன் ‘அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே...’ என்று பாடினான் என்று பேசி, பிரியாணி சாப்பிட்டது முதல் அனைத்தையும் சொல்லி, அபுதாபி தமிழர்களுக்காக ஒரு கவிதை ஒன்றை வாசித்த கவிதாயினி, தற்போதைய அபுதாபி வெய்யிலின் தாக்கத்தை குறைக்க வந்த மழையென கவிஞரின் பாடல்களை மேற்கோள்காட்டி அரங்கத்தை தமிழ் மழையால் நனைய வைத்தார். இடையிடையே நிறைய நகைச்சுவைகள், தந்தை பற்றிய நினைவலைகள் என பார்வையாளர்களை தன் பேச்சால் கட்டிப் போட்டார். அவர் பேசியதில் சில துளிகள்...

“நம்ம ஊர் கடலைப் பார்த்த நான் இங்க உள்ள கடலையும் பார்த்தேன்... நம்ம மெரீனாவுல தண்ணி குதிச்சுக்கிட்டு ஆர்ப்பரிக்கும்.. இங்க அலையே இல்லாம அழகா இருக்கு... சொல்லப்போன ந்மம ஊர் கடல் நடிக்க வந்த புதிதில் இருந்த ஐஸ்வர்யாராய் போல ஆர்ப்பாட்டமாய்... இங்கு இருப்பதோ அம்மா ஐஸ்வர்யா போல் சாந்தமாய்... இருந்தும் ஐஸ்வர்யா... ஐஸ்வர்யாதானே...”

“இப்ப மாட்டுக்கு சினிமா நடிகைகள் பேரத்தான் வைக்கிறாங்க... ஒருத்தர் தன்னோட மாட்டை நமீதான்னு கூப்பிட்டாரு... என்ன நமீதான்னு வச்சிருக்கீங்கன்னு கேட்டா... அது கும்முன்னு கவர்ச்சியா இருக்கதால நமீதாவாம்... இதெல்லாம் பரவாயில்லை ஆவின் பால் கொடுக்கிற ஆவுக்கு நம்மாளு வச்சிருக்கிற பேரு அமலாபால்”

“எங்கப்பாவும் கலைஞர் கருணாநிதியும் ரொம்ப நெருக்கம், ஒரு தடவை அப்பாவுக்கு தேர்தல்ல நிக்க ஆசை வந்துடுச்சு., கலைஞர்கிட்ட போயி எனக்கு ஒரு தொகுதி கொடு நானும் நிக்கிறேன்னு சொல்லியிருக்காரு... என்னடா இவன் தொகுதி கொடுன்னு கேட்கிறானேன்னு நினைச்சுக்கிட்டு சரிப்பா எந்த தொகுதி வேணுமின்னு கேட்டாராம்... பாண்டிச்சேரி கொடு நான் நிக்கிறேன்னாராம்... பாண்டிச்சேரியில போயி நிக்கிறேன்னு சொன்னது நீதாய்யான்னு கலைஞர் கிணடலடித்தாராம்....”

“ஒரு தடவை எம்.எஸ்.வி. அப்பாவை பாட்டெழுதச் சொல்லி ரெண்டு மூணு நாளாகியும் அப்பா பாட்டே எழுதலையாம். அப்ப ஒருத்தரு எம்.எஸ்.விக்கிட்ட என்னங்க... கவிஞர் பாட்டே எழுதலைன்னு சொன்னதும் அவரு எழுதலைன்னா வேற ஆள வச்சி எழுதி முடிச்சிடலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. இதை அப்படியே அப்பாகிட்ட அந்தாளு சொல்லியாச்சு... உடனே அப்பா எழுதிய பாட்டுதான் ‘சொன்னது நீதானா சொல்... சொல்... என்னுயிரே’ என்ற பாடல்.”

எனக்கு திருமணம் நடந்தபோது என் தந்தையும் தாயும் இல்லை. மாங்காடு கோவிலில்தான் திருமணம் நடந்தது. அப்ப ஒரு அம்மா அப்பாவை பற்றி பேசி நீ நல்லா இருப்பேம்மா... என்று வாழ்த்தினார்கள். இது போல் எத்தனையோ உள்ளங்கள் வாழ்த்த திருமணமாகி 13 வருடமாகிவிட்ட்து. எங்கள் சந்தோஷத்தில் எந்தக் குறையும் வரவில்லை”

“நான் மேடையேறும் போது எத்தனையோ இன்னல்கள். ஒரு பொண்ணு எப்படி பேச வரலாமுன்னு எவ்வளவு இடர்பாடுகள்.... எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு விசாலி இது மாதிரி மேடைகள்ல நிக்கிறேன்னா அதுக்கு எங்கப்பாவோட ஆன்மா எனக்கு துணையா இருக்கிறதுதான் காரணம்.”

“எங்கப்பா என்னைய தனியா விட்டுட்டாரேன்னு நினைச்சேன்... ஆனா இங்க எத்தனை பிள்ளைகளை எனக்குத் துணையா விட்டுட்டுப் போயிருக்காரு...”

“இங்கே தமிழை நேசிக்கத் தெரிந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். நான் பேசும் போது சப்பதமில்லாமல் கூர்ந்து கவனித்தீர்கள். அது ஒன்றே போதும் மெல்லத் தமிழ் இனி சாகும் என்றார்கள்... ஆனால் தமிழ் எப்போதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.”

நம்ம மீசைக்கவிஞன் பாரதி பற்றி பேசாமல் தமிழ் பேச முடியுமா அவரைப் பற்றியும் பேசினார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கவிஞர் தேர்வு செய்து கொண்டிருக்கும் போது பாரதி குறித்து ஒருவர் எழுதிய ஒரு வரி ஹைக்கூ அவரைக் கவர்ந்ததால் அதை நினைவு கூர்ந்தார். அது ‘பாரதி - யானை மிதித்துக் கொன்ற முதல் சிங்கம்’ அவரை வேறு எதுவும் கேட்காமல் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களுக்கு பொருள் விளக்கம் கொடுக்க அந்தப் பாடல்கள் திரையிடப்பட்டன. அழகான தொகுப்பு... அருமையான விளக்கம்.... என எல்லாம் அழகாக இருந்தும் வந்திருந்த பார்வையாளர்களை வீடியோ எடுக்கிறேன் என்று வீடியோக்காரர்கள் இருவர் லைட்டை வைத்துக் கொண்டு படுத்தியபாடு இருக்கிறதே... அப்பப்பா... விசாலி அவர்கள் விளக்கம் கொடுத்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு திரையில் காட்சி விரியும் அப்போது இவர்கள் லைட்டை திரையிலும் ஆட்கள் மீதுமாக அடித்து பார்க்க விடாமல் செய்துவிட்டார்கள். பாடல்களை அழகாக தொகுத்து வழங்கியவர்கள் துபாய் சங்கமம் தொலைக்காட்சியாம். அருமை.... வாழ்த்துக்கள்.

குழந்தைகளுக்கு திருவாசகம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ்ப்பாடல்களை சொல்லிக் கொடுக்க்ச் சொன்னார். தமிழ்ப்பெயர் வைக்க்ச் சொன்னார். அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்த குட்டீஸை (பெயர் முத்தழகி என்று நினைக்கிறேன்) பற்றிச் சொன்னார்.

மொத்தத்தில் விசாலி கண்ணதாசன் அவர்கள் அருமையாக பேசினார்கள். தந்தையின் பாடல் வரிகளை எடுத்து கவி தொகுத்து அதை அவருக்கே உரிய பாவனையில் அழகாக வழங்கினார்கள்.

கடைசியாக பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், ஜெகன், சித்ரா, சங்கீதா, ரவி, சங்கர் உள்ளிட்ட அனைவரையும் மேடையில் ஏற்றி பார்வையாளர்களை எழுந்து நின்று அவர்களுக்கு கைதட்டி மரியாதை செலுத்தச் சொன்னார்.

மொத்தத்தில் அவரின் பேச்சு அருமையான விருந்தாக அமைந்தது. கடலளவு பேசியதில் கடுகளவை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

அடுத்த பதிவில் தமிழ்க்கடல் அவர்களின் பேச்சின் தொகுப்பு இடம் பெறும்.

-‘பரிவை’ சே.குமார்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

தவறு சரியாகுமா?


ராமசாமி செட்டியாருக்கு
எப்பவும் வரும் கோவம்
இப்பவும் வந்தது...

மூஞ்சியை இறுக்கமாக்கி...
முகத்தை சிவப்பாக்கி...
மூக்கை விடைத்து...
பல்லைக் கடித்தார்...!

'இங்க இருந்தது எங்க போச்சு...
சனியனே எங்க வச்சே..?'
கடைப் பையனை
சனியனாக்கினார்..!

அங்கும்... இங்கும் தேடினார்...
கிட்டாத கோவத்தில்
எட்டி அடிக்க முனைந்தார்
எட்டாத இடத்தில் அவன்..!

பலவாறு தேடி...
பல மொழிகள் பேசி...
அலுத்து அமர்ந்த போது
அழுதபடி அவன்..!

'எருமை ஏ... அழுவுறே...
தொலஞ்சு மட்டும் போகட்டும்
தொலச்சுப்புடுறேன் உன்னை..!'

திட்டிக் கொண்டே
நேற்றைய தினசரியை விரித்தார்...
உள்ளே சிரித்தது அது..!


யாரை திட்டமுடியும்...
வைத்தது அவராச்சே..!

தன் தவறை மறைக்க
'இனிமே கரெக்டா வைக்கணும்
வச்ச இடத்தை மறக்கப்படாது'
பையனிடம் கனிவாய் பேசினார்..!

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

வணக்கமுங்க...

எல்லாருக்கும் வணக்கம்...

பதிவு எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. பதிவுலகம் பக்கம் வரமுடியாமல் பல பிரச்சினைகள். கடந்த ஐந்து மாதத்தில் எத்தனை பிரச்சினைகள்... அப்பப்பா... எல்லாம் தாண்டியாச்சு.

முதலில் பிரச்சினைகள்...

வேலை ஆரம்பிக்க ஒரு மாதம் ஆகும் என்று ஊருக்குப் போய் மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்தது...

வீடு கட்ட பூமிபூஜை போட்டு இன்னும் வேலை ஆரம்பிக்காமல் இழுத்துக் கொண்டே போவது...

அபுதாபி வந்த அன்றே அலைனில் வேலை என இங்கு ஓடி வந்து... அறை கிடைக்காமல் பதினைந்து தினங்கள் எங்கள் பெங்களூர் சார் அறையில் தங்கியது.

அறை கிடைத்து இண்டர்நெட்டுக்கு விண்ணப்பித்து ஒரு மாதமாக இழுத்தடித்து கடந்த வாரம்தான் வந்தது. அது வரை ஊருக்கு கூட பேசமுடியாமல் தவித்தது...

ஒரு மாதம் வேலை பார்த்து 20 நாட்கள் சம்பளம் மட்டுமே வாங்கியது என எராளமான பிரச்சினைகளுக்கு மத்தியில்...

நாங்கள் வேலை பார்க்கும் AADC – யில் எகிப்து அரபியின் கீழ் பணி, அவன் படுத்தும் பாடு இன்னும் தொடரத்தான் செய்கிறது....

இப்ப சில சந்தோஷங்கள்...

எனது கருத்தப்பசு சிறுகதை வம்சி சிறுகதைப் போட்டியில் தொகுப்புக்காக தேர்தெடுக்கப்பட்டது...

கோயம்பத்தூர் கின்னஸ் கவியரங்கில் எனது கவிதையும் கலந்து கொண்டு அதற்கான சான்றிதழ் பெற்றது...

நண்பர் எல்.கே, ரமா அக்கா மற்றும் சாகம்பரி அக்கா ஆகியோர் வழங்கிய விருதுகள்....

ரமா அக்கா உள்ளிட்ட நிறைய நண்பர்கள் எனது பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியது....

எனது சிறுகதைகளை எனது கல்வித்தந்தை பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள் தொகுப்பாக கொண்டு வரவேண்டும் என்று வாங்கி படித்து தரம் பிரித்துக் கொண்டிருப்பது...

எனது குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு மேல் சந்தோஷமாக கழித்தது...

என இன்னும் சில சந்தோசங்கள் என்னுள்ளே...

மீண்டும் சில சோகங்கள்....

எனது மாமா (அம்மாவின் தம்பி) திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது.

சில தினங்களுக்கு முன்னர் எனது அக்கா, தன் மகளுடன் TVS-XL-ல் போன போது விழுந்து தலையின் பின்பக்கம் அடிபட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மதுரை மீனாட்சி மிஷனில் சிகிச்சை பெற்று, இன்று பரவாயில்லை ICU-வில் இருந்து வெளியில் கொண்டாந்தாச்சுப்பா என்று அப்பா போனில் சொன்னது என சந்தோஷங்களை எல்லாம் அழுக்கி சோகம் சூழ்ந்த மனசோடு இருக்கிறேன்.

இதனிடையில்...

நேற்று முதல் நம்ம மைந்தர் LKG போறாருங்க... எல்லாரும் அவரு நல்லா படிக்கணுமுன்னு வாழ்த்துங்க...

இனி இடைவெளி அதிகமில்லாமல் எழுத வருகிறேன்...

அதுவரை....

பிரியங்களுடன்

சே.குமார்.

புதன், 14 மார்ச், 2012

அக்னி வளையம்



 காலையில் எழும்போதே பக்கத்து வீட்டில் ராமசாமி கத்திக் கொண்டிருந்தான். இது தினமும் நடக்கும் கதைதான்... பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அவன் பேச்சுத்தான் திருப்பள்ளி எழுச்சி. விடியும் போதே அவனுக்கு எப்படி சரக்கு கிடைக்குமோ தெரியலை. ஒருவேளை ராத்திரி குடிக்கும் போது மிச்சம் வைப்பனோ... இல்லை அவனுக்காக காலையிலயே கடையை திறந்து வச்சிருவாங்களோ என்னவோ.. சரி நமக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி. பக்கத்துல வீடுக இருக்கு அதுலயும் மனுசங்க இருக்காங்கன்னு அவனுக்கு தோன்றதே இல்லை.

குடிச்சிட்டு வந்துட்டா... வந்துட்டா என்ன எப்பவும் தண்ணிதான். வாயில வந்த வார்த்தையெல்லம் பேசுவான். அவன் பொண்டாட்டி பாக்கியத்துக்கு ஊரில் உள்ளவனையெல்லாம் புருசனாக்கிப் பேசுறதுதான் அவனது வேலை. இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பன் என்பதை மறந்து தண்ணியே உலகம் என வாழும் மிருக மனிதன் அவன். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவனிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்கள். பலர் அவனைப் பார்த்தால் நரகலை மிதித்ததுபோல் ஒதுங்கிப் போவார்கள்.

அவன் பொண்டாட்டி பேருதான் பாக்கியம் ஆனால் வாக்கப்பட்டு வந்த நாள் முதலா அவள் படும்பாடு சொல்லி மாளாது. யார்க்கிட்டயாவது சிரித்துப் பேசினால் போதும் அவனை வச்சிருக்கியான்னு கேட்டு அடிப்பான். ஆரம்பத்தில் புன்னகை சுமந்து இருந்த அவள் முகம் இப்பல்லாம் எதையோ இழந்தது போல் எப்பவும் வெளிறியே இருக்கிறது. முன்பெல்லாம் அவனிடம் எதிர்த்துப் பேசி வாங்கிக் கட்டிக்கொள்வாள்.ஆனால் இப்ப ரொம்ப பழகிட்டா அவன் பேசும் போது எதுவும் பேசுவதில்லை. எருவ மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி அவ பாட்டுக்கு வேலையப் பாக்க ஆரம்பிச்சிட்டா.

ஊருல உள்ள எல்லார்கூடவும் அவனை இணைச்சுப் பேசிட்டான். ஏன் ஒருநாள் என்னையக்கூட அவ புருஷன்னு சொன்னான். கேட்டுக்கிட்டு இருந்த நான் கோபப்பட்டு அவனை அடிக்கப் போக, அந்தக் குடிகாரனப்பத்தித்தான் தெரியுமே அவன் பேசுறதை கேட்டு சண்டைக்குப் போனா நமக்குத்தான் அசிங்கமுன்னு சொல்லி என் பொண்டாட்டி தடுத்துட்டா. எல்லார்கூடவும் இணைச்சிப் பேசினாலும் மில் முதலாளி ராஜகோபால்கூட மட்டும் இணைச்சிப் பேச மாட்டான். ஏன்னா பாக்கியம் அங்கதான் வேலை பாக்குறா. அவ வேலைக்குப் போகமா பொயிட்டா செலவுக்கு எங்க போறது அதனால அவரை மட்டும் திட்டமாட்டான்.

இரண்டு வீட்டுக்கும் இடையில் இருக்கும் முள் தட்டியின் ஓரமாக முகம் கழுவியபடி மெதுவாக எட்டிப்பார்த்தேன். குழந்தைகள் இருவரும் அப்பன் பேசுவதை சட்டை செய்யாமல் பள்ளிக்கு கிளம்புவதில் குறியாக இருந்தார்கள். வாசலில் போட்டிருந்த விறகடுப்பில் பாக்கியம் எரியாத விறகை ஊதிவிட்டுக் கொண்டிருந்தாள். ராமசாமி மாட்டுத் தொட்டிலின் மேல் அமர்ந்து அவிழ்ந்த கைலியை இடுப்பில் கட்டாமல் ஒரு கையால் பிடித்துக் கொண்டு இருந்தான்.மறு கையில் பீடி புகைந்து கொண்டிருந்தது.

"கோத்தா... ஊரு... மேயுரியாடி ஊரு... அந்த பரமுப்பயகூட உனக்கு... என்னடி பேச்சு. பரதேசி முண்ட... நா... காசு கேட்டா இல்லயின்னு சொல்லிட்டு... மீனு வாக மட்டும் காசு.... காசு எப்படிடி வந்துச்சு... அந்த நாயி கொடுத்தான்னா..." நா குழற கத்தினான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

"நாங்... கேக்குறது உன்னத்தாண்டி ஏ... மசுரு மவளே... நா... வெளியில பொயிட்டா... நிறைய தெரு நாயிங்க இங்கதான் கெடக்காமே... இ...ன்னை...க்கு.... இன்னைக்கு... நா... இங்கதாண்டி இருப்பேன்... எந்த நாயி வருதுன்னு... பாக்குறேன்..." சத்தமாக கத்தினான்.

அது என்னவோ தெரியலை...தண்ணி போட்டா பேசிக்கிட்டே இருக்கச் சொல்லும் போல... அதுவும் நல்லதை மட்டும் பேசாம மோசமான வார்த்தைகளை மட்டுமே பேசச் சொல்லும் போல... ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதம். எனக்கு ஒரு நண்பர் இருக்கார். அவர் மற்ற நேரங்களில் பேசும் போது நல்லா பேசுவார்... நல்லதையே பேசுவார். ஆனா தண்ணி உள்ள பொயிட்டா அவருக்கு இங்கீலீஸ் மட்டும்தான் வரும். அதுலயும் இந்த ஆக்சுவலி படும்பாடு இருக்கே... அப்பப்பா அவரு பேசுற கொச்சைப் பேச்சுக்கு முதல் முடிவு எல்லாத்துலயும் ஆக்சுவலி போடாம பேசமாட்டாரு.

"முகம் கழுவியாச்சா... காப்பி ஆருது வாங்க..." என்ற குரல் கேட்டது. எங்க நான் பாக்குறது அவனுக்கு தெரிஞ்சு சத்தம் போட்டுடுவானோன்னு பயத்துல எம் பொண்டாட்டி கூப்பிட்டா. நான் அங்கு நடப்பதைப் பார்க்க இலகுவாக படிக்கட்டில் சாய்ந்து அமர்ந்தவாறு காபி குடிக்க ஆரம்பித்தேன்.

"எ.... என்னடி நா... எது கேட்டாலும்... நீ பேச மாட்டேங்கிறே... அவ்வளவு திமிராடி... உனக்கு... உடெம்பெல்லாம் கொழுப்பாயிருச்சிடி உனக்கு..."

"இப்ப என்ன வேணும் உனக்கு?" பாக்கியம் வாய் திறந்தாள்.

"உனக்கும்... பரமுப்பயலுக்கும்... என்னடி கூட்டு...? அதைச் சொல்லுடி..."

அவள் பதில் சொல்லாமல் இருக்கவும் " சொல்ல மாட்டேடி... சொல்ல மாட்டே... எப்படி கள்ளப் புருஷனை... காட்டிக் கொடுப்பே..." அவனாகவே சொல்லிக் கொண்டான்.

"அம்மா... நாங்க பள்ளிக்கொடத்துக்குப் போறோம்" என்றபடி மறக்காமல் தட்டை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினர். இப்ப எங்க ஊர்ல எல்லாருடைய பிள்ளைகளும் இங்கீலிஸ் மீடியத்துல படிக்குதுங்க. பாக்கியம் அப்புறம் இன்னும் சிலர் பிள்ளைகளும் பக்கத்து ஊர் பிள்ளைகள் சிலரும்தான் எங்கள் ஊர் ஆரம்பப் பள்ளியில் படிக்குதுங்க. மொத்தமே பத்துப் பதினோரு பிள்ளங்கதான் இருக்கும். அஞ்சாப்பு வரைக்கும் ஒரே வாத்தியார்தான்.

ஒரு தடவை நாங்கூட பாக்கியத்துகிட்ட ' என்ன பாக்கியம் பிள்ளைங்க படிப்பு ரொம்ப முக்கியம்... நல்ல ஸ்கூல்ல சேர்த்தா என்னனு கேட்டப்போ, அட ஏங்கண்ண நீங்க வேற... நாஞ் சம்பாரிக்கிற காசுல அந்தாளு குடிச்சது போக எதோ மிஞ்சிது அதுல அதுகளுக்கு நல்ல கஞ்சி காச்சிக் கொடுக்க முடியலை...எதோ ஒரு நேரமாவது நல்ல சாப்படு கிடைக்குதுன்னு அனுப்புறேன். அதுக தலயெழுத்து எப்படியோ அதுபடி நடக்கட்டும்ன்னு கண்கலங்க சொல்லிச்சு. அப்ப நா ஆறாப்புக்கு எங்க ஸ்கூல்ல செலவு இல்லாம படிக்க ஏற்பாடு பண்ணுறேன்னு சொன்னேன்.

"ஆமா... இவுக கலெக்கிட்டருக்குப் படிக்கிறாங்க... படிக்கிறாவளாம்... படிக்கிறாவ... ரொம்ப முக்கியம்..." அவன் கத்தலை அவர்கள் கண்டு கொள்ளாமல் கிளம்பினர். பெண் பிள்ளைகள் அப்பா மேலதான் பாசமாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் அதை அனுபவித்து இருக்கிறேன். மனசுக்குள் பாசம் இருந்தாலும் மிருகமாகிப் போன அப்பா நமக்கு தேவையில்லை என்பது போல அந்தப் பிள்ளைகள் நடந்து கொண்டது எனக்கே கஷ்டமாக இருந்தது. இந்த வயதில் அரவணைக்கும் அப்பா வேண்டும் என்று எல்லாக் குழந்தைகளும் நினைக்கும்... பாவம் அவர்கள்.

பிள்ளைகள் சென்ற சில நிமிடங்களில் பாக்கியமும் வேலைக்குக் கிளம்பினாள். " நான் வேலைக்குப் போறேன்... கஞ்சியிருக்கு... ஊத்திக்குடிச்சிட்டு இங்க இருந்தாலுந்சேரி... வெளிய போனாலுஞ்சேரி... வெளிய போனாக்க தட்டிய இழுத்துவிட்டுட்டுப் போ" என்றபடி அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினாள்.

"துத்தேரி... ஊரு மேயப் போகுது... வரட்டும்... சாயங்காலம் வச்சுக்கிறேன்..." என்றபடி அப்படியே தரையில் படுத்தான். இனி எப்ப எந்திரிக்கிறானோ அப்போ மீண்டும் அவனுக்கு சரக்கு அடிக்கணும்... சரி நம்ம கிளம்புற வேலைய பாப்போம் என்றபடி எழுந்தேன்.

"எதுக்கு தேவையில்லாத வேலை...அவன் பாத்திருந்தா இந்நேரம் நாரத்தனமா பேசியிருப்பான்" என்றாள் என் தர்மபத்தினி.

"பாவம்டி அந்தப்புள்ள.. கட்டுன நாள் முதலா இந்தக் கஷ்டத்தைதான் அனுபவிக்குது... அதுக்கும் ஆசாபாசம் இருக்காதா... என்ன. மத்த பொம்பளைகளைப் பார்க்கும் போது இப்படியெல்லாம் நாமும் இருக்கணுமின்னு நினைப்பு வருமில்லையா? அந்தப் பிள்ளைகளைப் பாரு நம்மளையும் அப்பா வண்டியில கூட்டிப்போகணும் அப்படி இப்படின்னு எண்ணம் வருமா இல்லையா... நா... அவங்கிட்ட பேசுறேன்... திருந்துறானான்னு பாப்போம்..."

"எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை... நாளக்கி உங்களுக்கு அர்ச்சனை பண்ணுவான். நம்ம வேலய பாருங்க..."

"இப்படி எல்லாரும் ஒதுங்கி ஒதுங்கிப் போறதாலதான் அவன் இவ்வளவு கேவலமா நடந்துக்கிறான்... அந்த பிள்ளங்க முகத்துக்காக நா... அவங்கிட்ட பேசுறேன்... என்ன தலைய ராவிப்புடுவானா... பாக்கலாம்..."


ன்றைய பணியில் மூழ்கியதால் ராமசாமி குறித்த எண்ணம் எனக்குள் தோன்றவேயில்லை. மாலை வரும்போதுதான் பாக்கியம் ஞாபகம் வந்தது. எப்படியும் ராமசாமிகிட்ட பேசியாகணும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆற்றங்கரையில் வந்து திரும்பும்போது ராமசாமி நடந்து போவது தெரிந்தது. அவனருகில் வண்டியை நிறுத்தி ஏறுப்பா என்றேன்.

"இல்ல... நீங்க போங்க... நா... நடந்து வாறேன்."

"அட... சும்மா ஏறுப்பா... அங்காளி பங்காளியா இருந்துக்கிட்டு... எவ்வளவு தூரம் நடப்பே... வா" என்று நான் விடாமல் வற்புறுத்த ரொம்ப பவ்யமாக ஏறினான்.

வண்டி மெதுவாக போய்க்கிட்டு இருந்தது... எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தபடி வண்டியை ஓட்டினேன். சரி ஆனது ஆகட்டும் என்ன நடந்தாலும் சரியின்னு 'ஏம்ப்பா எதாவது வேலைக்குப் போகலாமே?' மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன். அவனிடமிருந்து பதில் வரவில்லை.

"என்னப்பா... நா... கேட்டதுக்கு பதிலைக் காணோம்..."

"என்ன வேல இருக்கு?" திருப்பி அடித்தான்.

"என்னப்பா நீ... படிச்சவனாட்டம் நா படிச்சபடிப்பு வேலையில்லையின்னு சொல்லுறே... செங்கக் காலவாய், மண் அள்ளுறது, வயல் வேல... ஏன் மில் வேலை இப்படி எதாவது ஒண்ணப் பாத்த பத்தாதா..."

"...."

"ரெண்டு பொம்பளப் பிள்ளைங்களுக்கு தகப்பன் காலையில இருந்து இரவு வரை குடி கூத்தியான்னு இருந்தா குடும்பம் என்னத்துக்கு ஆகுறது..." நேரடியாக கேள்வியைத் தொடுத்ததேன்.

"அட்வைஸ் பண்ணத்தான் சும்மா போனவன வண்டியில ஏத்துனியளோ... வண்டிய நிப்பாட்டுங்க..."

"இரு... எதுக்கு இம்புட்டு கோவம்... குடியால குடி மட்டுமில்ல உன் உடம்பும்தானே கெட்டுப் போகும்... சொல்லு"

"..."

"இங்க பாரு உனக்கு பாக்கியம் மாதிரி ஒரு பொண்டாட்டி அமைஞ்சது கடவுள் கொடுத்த வரம்... அதை கெடுத்துக்காதே. உன் பிள்ளைகளை நெனச்சுப்பாரு... இன்னைக்கு இந்த வாழ்க்கை இனிக்கும்... ஆனா ரெண்டும் வயசுக்கு வந்து கல்யாணத்துக்கு காத்து நிக்கும்போது இந்த வாழ்க்கையால என்ன செய்ய முடியும் சொல்லு... பாக்கியம் பாக்குற வேலை ஒரு நேரம் கஞ்சிக்கு மட்டும்தான் உதவும். உதவாக்கரை ஆம்பளைய வச்சிக்கிட்டு அது எப்படி ரெண்டு பொட்டப்புள்ளகள கரையேத்த முடியும்... யோசிப்பா... நா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..."

"இங்க பாருங்க... எனக்குத் தெரியும் எது நல்லது எது கெட்டதுன்னு... அடுத்தவங்க சொல்லித்தான் தெரியணுமின்னு இல்ல... வண்டிய நிப்பாட்டுங்க..."

"இல்லப்பா... எதுக்கு சொல்லுறேன்னா..."

"யோவ் ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்... எனக்குத் தெரியும் உன் வேல என்னவோ அதை மட்டும் பாரு... புள்ளங்களுக்கு மட்டும் பாடம் எடு போதும் எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம்... நீ எடுத்தாலும் எனக்கு ஏறாது... எனக்கு ஏறுற ஒரே விசயம் போதை மட்டும்தான்... புரியிதா.. சொந்தக்காரன்னு பாக்கிறேன் இல்லேன்னா இந்நேரம் பொழந்திருப்பேன்... பொழந்து... ஞாயம் பொழக்க வந்துட்டாக... வண்டிய நிறுத்துய்யா..."

இதுக்கு மேல் பேசினாலும் நல்லது இல்லை... அவனை இறக்கிவிடுவதே இப்போதைக்கு நல்லது என்று வண்டியை நிறுத்தினேன். இறங்கியதும் இடுப்பில் சொருகியிருந்த பாட்டிலை எடுத்து கடகடவென்று குடித்தான். நாம நின்னா எதாவது ஏழரையை கூட்டுவான் என்பதால் கண்டு கொள்ளாதது போல் வண்டியை கிளப்பினேன்.



"என்ன வாத்தியாரே... பக்கத்து வீட்டு பரதேசிக்கு கிளாஸ் எடுத்தீங்களோ" என்றபடி அருகில் வந்தாள் என்னவள். படித்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வனை விடுத்து அவள் பக்கம் திரும்பி " ஆமா அதுக்கென்ன இப்போ?" என்றேன்.

"வெளியில இப்பதான் உங்களுக்கு கச்சேரி ஆரம்பிச்சிருக்கான். போய் பாருங்க... எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத வேலை... மனுசனுக்கு அட்வைஸ் பண்ணலாம் ஜடத்துக்குப் பண்ணலாமா... நீ கையில வச்சிருக்கிறது பீயின்னு சொன்னா இல்ல சந்தனமுன்னு மாருல தேக்கிற மூதேவி அவன்... அவனுக்கு எதுக்குங்க உபதேசமெல்லாம்.... சரி கச்சேரி களை கட்டுது... வாங்க"

வெளியில வந்ததும் அவன் பேசுவது நன்றாக கேட்டது. "என்னடி பரமு கசந்துட்டானோ பக்கத்து வீட்டுக்காரனை பிடிச்சிருக்கே... நீ சொல்லாமயா அவன் எனக்குப் புத்தி சொல்லுறான்... கோத்தா அவன தூக்கிப் போட்டு மிதிச்சிருப்பேன்... சரி வாத்தியாரா இருக்கான்னு விட்டுட்டேன்... உம்மேல அம்புட்டு கரிசனம் அவனுக்கு எப்படிடி வந்துச்சு..." அவன் எதேதோ பேச இதெல்லாம் மண்டை மண்ணுக்குள்ள போற வரை திருந்தாது என்று நினைத்துக் கொண்டேன்.

பாவம் பாக்கியம் அவள் என்ன செய்வாள்... அவளுக்கு விதிச்ச விதி இது... அனுபவித்துத்தானே ஆகணும். எனக்கு அத்ற்குமேல் அங்க நிற்கப் பிடிக்காமல் வீட்டுக்குள் சென்றேன். என்னவோ தெரியலை 'இறைவா... அந்தப் பெண்ணுக்கு நிரந்தர விடுதலை கொடுன்னு' ஊரு எல்லயில இருக்க சுடலைமாடனுக்கிட்ட வேண்டிக்கிட்டேன்.

-'பரிவை'சே.குமார்.

Thanks : image from google