மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 17 ஜூலை, 2011

மனசுக்குள் மண்வாசம்...


மண் வாசம் சுவாசிக்கும் முன்னர் சில வரிகள்...

எனது வலைப்பூவில் இன்னும் சில பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை... பலருக்கு பின்னூட்டம் இட்டாலும் சிலருக்கு இடமுடியவில்லை... குறிப்பாக 'விடிவெள்ளி' செண்பகம், தமிழ்க்காதலன், அப்பாவி தங்கமணி அக்கா என இந்த பட்டியலில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் படைப்புக்களை படித்தது பின்னூட்டம் இடும் போது பிரச்சினை வருகிறது. எனவே நட்புக்களே பின்னூட்டம் வரவில்லை என்றதும் நான் வருவதில்லை என்று என்ன வேண்டாம். உங்கள் பதிவுகளை படிக்கிறேன்... படிக்கிறேன்... படிக்கிறேன்... (இப்படி கூவ காரணம் நாம போகலையின்னு நிறையப் பேர் நம்ம பக்கம் காணுமப்பா... அதான்... இதெல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்...)

சரி மண் வாசத்துக்குள்ள போவோம்....


(மாரியம்மன் கோவில் - திருவிழா நாளில்...)


நம்ம மண்ணைப் பற்றி எழுதணுமுன்னு மலிக்கா அக்கா அன்புடன் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்காமால் இருப்பது மரியாதை இல்லை என்ற காரணத்தால் எங்கள் கிராமத்தையும் அது சார்ந்த நகரத்தையும் பற்றி எழுதியிருக்கிறேன். அதிகமெல்லாம் என்னால சொல்ல முடியாது... ஏதோ என்னால முடிந்ததை சொல்லி தொடர்பதிவு எழுதியிருக்கிறேன். அழைப்பு விடுத்த அக்காவுக்கு நன்றி.

தேவகோட்டைக் காரங்களோ, சிவகெங்கை மாவட்டத்துக்காரங்களோ (நம்ம பாரா சித்தப்பா, தேவா அண்ணா... இன்னும் நிறைய...) தவறு இருந்தால் வெளிய சொல்லி மாட்டி விட்டுறாதீங்க.

எங்கள் சிவகெங்கை மாவட்டம் வானம் பார்த்த செம்மண் பூமி, இந்தப் பூமியின் முதல் நகராட்சி என்று பெயர் பெற்ற தேவகோட்டை, அது என்னங்க தேவர்களின் கோட்டை எதுவும் இருக்கான்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. தேவி கோட்டை என்ற பெயர் மருவி தேவகோட்டை என்றாகிவிட்டது.

சரி விசயத்துக்கு வருவோம். தேவகோட்டைக்கு அருகில் 3 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்தான் எங்க ஊர்... ஒரு அழகிய சின்ன கிராமம்.... சூதுவாது அறியாத வெள்ளந்தியான மக்கள்... ( இதெல்லாம் இப்ப இல்லைங்க... எங்க அப்பா சின்ன பிள்ளையா இருக்கும் போது) ஊருக்குள் வீட்டுக்கு வீடு இருக்கும் எருமை, பசு மாடுகள், கோழிகள், ஆடுகள், நாய்கள்... (இதுவும் இப்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக... ) என ஒரு அப்பட்டமான கிராமம்.

தேவகோட்டையில் இருந்து கண்டதேவி செல்லும் சாலையில் பிரியும் கிளைச் சாலையில் பயணித்தால் கண்மாக் கரைக்கும் வயலுக்கும் இடையில் செல்லும் தார்ச்சாலையில் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரர் வரவேற்க... சற்றே தூரத்தில் வீடுகள் அணிவகுக்கும் சிறிய கிராமம்தான் எங்கள் பரியன் வயல்.

இங்கயும் நீங்க கேட்கலாம் அது என்ன பரியன் வயல்... பரியாத வயல்ன்னு... இருங்க சொல்றேன் எங்க ஊர்ல விவசாயம் நல்லா இருக்குமா... பரிஞ்சு பொதி கட்டி நிக்கிற பயிரைப் பாக்கிறப்போ கிடைக்கிற சந்தோஷம் இருக்கே அதை அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும். அப்படி விவசாயம் கொழித்ததால எங்க ஊருக்கு பரியன் வயல்ன்னு பேர் வந்ததாக முன்னோர்கள் சொல்லக் கேள்வி.

இப்ப எங்க ஊருக்கு பேர் வைக்கச் சொன்னா கருவ வயல்ன்னு வைக்கலாம்... ஆமாங்க சில வருடங்களாக விவசாயம் இல்லாத வயல்கள் இந்த முறை ஊருக்குப் போனபோது கருவ மரங்களால் சூழப்பட்டிருப்பதை பார்த்த போது மனசு வலிக்கத்தான் செய்தது....

என்ன செய்ய எங்கள் ஊர் விவசாயம் பொய்க்க இரண்டு காரணம்.. ஒன்று நாங்களெல்லாம் வாழ்க்கையின் பின்னால் ஓட வேண்டிய கட்டாயத்தால் பொழப்புக்காக வெளியிடங்களில் இருக்க, எங்களைப் பெற்றோர் மட்டுமே ஊருக்குள் இருப்பது... ரெண்டாவது எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் தாழையூர் பெரிய நாயகி அம்மன் கோவில் மாடுகள் விளைந்த வயலில் அறுபடை செய்து விடுவதால் விளைந்ததை வீட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை என எங்கள் ஊர் விவசாயம் அறுபட்டுப் போய்விட்டது.


(கரகம் எடுத்தல் - முளக்கொட்டு)

இப்பல்லாம் எங்க ஊரில் எல்லோரும் கூடுவது திருவிழாக்களில் மட்டுமே. வருடம் ஒருமுறை நடக்கும் இதுமாதிரியான விழாக்கள்தான் எங்கள் கிராமத்தின் அடையாளமாய் இன்னும் இருக்கின்றன. பசுமையான வயல்கள், நீர் நிறைந்த கண்மாய்... உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள் என்றிருந்த எங்கள் ஊர் இன்று பலவீனமாக இருக்கிறது.

நாங்கள் படிக்கும் காலத்தில் ஒத்தையடிப் பாதை, அடி குழாய் தண்ணீர் என்றிருந்த எங்கள் ஊர் இன்று தார் ரோடு, ஊருக்குள் குடிநீர்த் தொட்டி, வீட்டுக்கு வீடு பைப் வசதி என்று வளர்ந்திருந்தாலும் விவசாயமிழந்த வயல்கள் போல... வறண்டு கிடக்கும் கண்மாய் போல... மக்கள் மனதிற்குள் வன்மம் குடி கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் வருத்தமான விஷயம்.ஆனால் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் ஊர் திருவிழாவில் எல்லாரும் ஒன்றாக இருந்து கொண்டாடும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது.

இந்த வருடம் ஊருக்கு வந்திருந்த போது என்னைக் காண வந்த எனது நண்பன் தமிழ்க்காதலன் விவசாயமற்ற ஊரைப் பார்த்து வருத்தப்பட்டான். ஆனால் எங்கள் ஊர் அம்மன் திருவிழாவில் கரகம் எடுப்பதும் முளக்கொட்டுவதும் அவனை ஆச்சரியப்பட வைத்ததுடன் அவனுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. (இது குறித்து தனிப்பதிவு எழுதுவதாய்ச் சொன்னான்... மறந்துட்டான் போல...)

இவ்வளவுதான் எங்கள் ஊர் பற்றிய என் பார்வை....

நண்பர்களே நீங்க வளர்ந்த... வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற உங்கள் ஊரைப் பற்றி எழுதுங்கள்... யாரையாவது நாமளும் மாட்டிவிடணுமாமே... சரி நம்ம "இதயச்சாரல்...!" தமிழ்க்காதலன், "கலியுகம்" தினேஷ், அன்புடன் ஆனந்தி மூன்று பேரை என் பங்கிற்கு களத்தில் இறக்கி விடுகிறேன்.

நன்றி... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

நேச முடிச்சு...



தன்னிடம் வெள்ளைப் பேப்பர் கேட்ட ராகவியைப் பார்த்து "என்ன அண்ணி... திடீர்ன்னு கவிதை எதுவும் எழுதப் போறீங்களா?" என்று கிண்டல் செய்தாள் வளர்மதி.

"என்னடி கிண்டலா... எனக்கு வேணும்... பேப்பர் இருக்கா... இல்லையா..."

"சரி... எதுக்குன்னு சொல்லுங்க தாரேன்..."

"அது... உங்கண்ணனுக்கு லெட்டர் எழுதி, நாளைக்கு நம்ம ராமச்சந்திரண்ணன் போகுதுல்ல அதுக்கிட்ட கொடுத்துவிடத்தான்..."

"அண்ணி... நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க... தினமும் செல்லுல பேசுறீங்க... நாங்க உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருந்தா வீதிக்கு வீதி இண்டர்நெட் சென்டர் தொறந்து வச்சிருக்கான். அங்க போயி உங்க மனசுல உள்ளதையெல்லாம் கொட்டி மெயில் அனுப்பிட்டு வரலாம். அத விட்டுட்டு லெட்டர் அது... இதுன்னு... எந்தக் காலத்துல அண்ணி இருக்கீங்க..."

அவளது கேள்விக்கு ஒற்றைச் சிரிப்பை மட்டும் பதிலாக்கி விட்டு பேப்பரை வாங்கிக் கொண்டு தனியாகப் போயி அமர்ந்தாள்.

கை வளையல்களை ஏற்றிவிட்டுக் கொண்டு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள்.

'என் அன்புள்ள அத்தானுக்கு... நலம், நலமறிய ஆவல்ன்னு ஒற்றை வரியில சொல்ல என்னால முடியலைங்க... நீங்க இங்க சுகம்... நான் அங்க சுகமான்னு சினிமா வசனமெல்லாம் எழுத வராதுங்க எனக்கு... ஆனா அங்க நீங்களும்... இங்க நானும் உதட்டுல புன்னகை பூசி வாழ்றோங்கிறது மட்டும் எனக்கு நல்லாத் தெரியுங்க...'

'அப்புறம் இங்க அத்தை, மாமா, வளரு, கணேசு எல்லாரும் நல்லாருக்காங்க. இந்த வருசம் மழை இப்பத்தான் பெய்ய ஆரம்பிச்சிருக்கு. நீங்க என்னய நினைச்சுக்கிட்டு சாப்பிடாம கெடக்காதீங்க... உடம்புக்கு ஆகாது. ஆனா எனக்கு இங்க சாப்பாடே இறங்கலைங்க... எப்ப சோறு போட்டுக்கிட்டு உக்காந்தாலும் உங்க முகம் கண்ணுக்குள்ள மட்டுமில்லங்க... போட்டுருக்க சாப்பாட்டுலயும் தெரியுதுங்க... ' அதற்குமேல் எழுதமுடியாமல் கண்களை கண்ணீர் கட்டிக் கொண்டது. சிறிது நேரம் அப்படியே அமர்ந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

'அப்பாவும் அம்மாவும் வந்துட்டுப் போனாங்க... அங்க வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு வரலாமுன்னு சொன்னாங்க... எனக்குத்தான் போக புடிக்கலை... நாம இருந்த ரூமுக்குள்ள படுக்கும் போது எதோ நீங்களும் எங்கூட இருக்க மாதிரி இருக்குங்க... அதான் போகலைங்க...'

'சரி... நம்ம லெட்சுமி கன்னு போட்டிருக்கு... இது நாலாவது கன்னுன்னு அத்தை சொன்னாங்க... பொங்கன்னுக்குட்டி... பொங்கன்னுக்குட்டியினவுடனே எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அது ஏங்க பொம்பளைப்புள்ளை பொறந்தா வெறுக்குற நாம ஆடோ மாடோ பொங்கன்னுக்குட்டி போட்ட சந்தோஷப்படுறோம்... ஆமா நமக்கு பொம்பளைப்புள்ள பொறந்த உங்கப்பாம்மா இப்படி சந்தோஷப்படுவாங்களா... நினைச்சதும் எனக்கு சிரிப்பு வந்துருச்சுங்க...' எழுதியபோது அவளையறியாமல் சிரிப்பு வந்தது.

'இன்னொன்னு எழுத மறந்துட்டேன்... நம்ம தோப்புல இருக்க மாமரம் நல்லா காச்சிருக்கு... நேத்து நம்ம வீட்டுக்கு வந்த உங்க சின்னம்மா... எதாவது விசேசமாம்மான்னு கேட்டாங்க... ஒண்ணும் சொல்லாமா இருந்துட்டேன்... அப்புறம் அவங்களா இன்னும் ரெண்டு வருசத்துக்கு பேரன் பேத்திய பாக்க முடியாதாக்குமுன்னு சொன்னாங்க... நான் என்னங்க சொல்ல முடியும் ஒரு மாசம் குடும்பம் நடத்தி... இப்ப வேண்டாம் ரெண்டு வருசமாகட்டுமுன்னு நீங்க சொன்னதை எப்படி அவங்கிட்டே சொல்வேன்... நல்லவேளை உங்க அம்மா... இப்ப என்ன அவசரம்... அவளும் சின்னப் பொண்ணுதானேன்னு சொல்லிட்டாங்க...'

'ராமச்சந்திரண்ணன் வந்ததுல இருந்து சரோஜாண்ணி ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க... ஒரு மாசமா ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாவே திரிஞ்சாங்க... அவங்களை பாக்கிறப்போல்லாம் எனக்கு உங்க ஞாபகம்தான் வந்துச்சு... நாமளும் அப்படித்தானே இருந்தோம்... ம்... எனக்கு அதை நெனைக்கிறப்போ மனசு வலிச்சு... கண்ணுல கண்ணீர் வழிய ஆரம்பிச்சிருதுங்க...'

கண்ணை தொடச்சுக்கிட்டே... ' நா ஒரு கிறுக்கச்சி சரோஜாக்கா பத்தி சொல்ல வந்துட்டு எதையோ எழுதிட்டு இருக்கேன் பாருங்க... எதையும் நெனச்சுக்காதீங்க... ரெண்டு நாளா சரோஜாக்கா முகமே சரியில்லை... பாவம் அழுதுருக்கும் போல... முகமெல்லாம் கருத்து... வீங்குனமாதிரி இருக்கு... எங்க எல்லார் தலையெழுத்தும் ஒண்ணுதான் போல... இல்லையாங்க...'

'ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் போங்க... நம்ம கணேசு என்ன பண்ணியிருக்கார் தெரியுமா... எழுத நெனைக்கிறப்போவே சிரிப்பா வருது... நம்ம மூலைவீட்டு செல்லச் சித்தப்பா இருக்காகல்ல... அவங்க மக... அதாங்க ரேவதி, அதுக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்காரு... ஆமா...மீசை மொளைக்க ஆரம்பிச்சிருச்சுல்ல... அந்தப் புள்ளை நேர அத்தைகிட்ட கொண்டாந்து கொடுத்து அழுதுட்டுப் போச்சு... தலைவர் வீட்டுக்குள்ள வந்ததும் அத்தை வெளக்குமாத்தால தாலாட்டிட்டாங்க... எனக்கும் வளருக்கும் சிரிச்சு மாளலை... இப்ப நல்ல புள்ளையாட்டம் இருக்கான்... ஆனா சிகரெட் புடிப்பான் போல தெரியுது... இதை நீங்க மனசுல வச்சுக்கங்க... கேட்டுக்கீட்டு தொலச்சிடாதீங்க... அப்புறம் நாந்தான் சொல்லிட்டேன்னு எங்கிட்ட சண்டைக்கு வந்துருவான்... சரிங்களா'

'அப்புறம் இந்த வருசம் கோயில் திருவிழா சம்பந்தமா கூட்டம் கூட்டுனாங்க... பிரச்சினை எதுவுமில்லாம நல்ல முடிவா எடுத்து இருக்காங்க... நீங்க இல்லாம எனக்கு நாளும் பொழுதும் ஓடவேயில்லங்க.. எதப் பார்த்தாலும் உங்க ஞாபகமாகவே இருக்குங்க... என்னால முடியலங்க... எதோ வாழனுங்கிறதுக்காக வாழ்றேங்க...' வழிந்த கண்ணீரை துடைத்தபடி எழுத ஆரம்பிக்க, அவளது கண்ணீர் பட்டு சில எழுத்துக்கள் சிதிலமாகின.

'இப்ப உங்களுக்கு லெட்டர் எழுதலாமுன்னு பேப்பர் கேட்டப்போ வளர்கூட இண்டர்நெட், செல்லுன்னு எத்தனையோ இருக்கிறப்போ என்னண்ணி லெட்டர் எழுதுறேன்னு பழங்காலத்துக்குப் போறீங்கன்னு கேட்டா... செல்லுல பேசும் போது நல்லா இருக்கேன்னு நானும்... நீங்களும் மாத்திமாத்தி சொல்லிக்கிட்டு போன் மேல கிஸ் கொடுக்கிறப்போ படியுற நம்ம மனச்சாயத்தை ரெண்டு பேரும்மே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம மறச்சிடுறோம்... ' சற்றே எழுத முடியாமல் அமர்ந்திருந்தாள்.

சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தாள் 'மெயில்ல டைப்பண்ணி அனுப்பினா... மெஷினாட்டம் படிச்சிட்டு உங்க மனவலிய மறச்சி எல்லாம் சரியாகுமுன்னு ஒத்த வரியில பதில் அனுப்புவீங்க... இங்க இருக்க என்னோட மனசு தெரியனுமின்னா லெட்டர்தான் சரியின்னு எனக்குப்படுது... ஏன்னா... இந்த லெட்டர்ல அங்கங்க என்னய மாதிரியே எழுத்து சிதிலமடஞ்சிருக்குல்ல... அதெல்லாம் என்னோட கண்ணீர்... ' அவளை அறியாமல் கண்ணீர்த்துளி ஒன்று அவள் எழுதிய கண்ணீரின் மீது விழுந்தது.

'இதைப் படிக்கும் போது என்னோட மனசு உங்களுக்குள்ள விசாலமா விரியுங்க... இதை நான் உங்களை கஷ்டப்படுத்த சொல்லலைங்க... எல்லா ராத்திரியும் ரெண்டு பேரோட தலகாணியும் நனையும் இந்த வாழ்க்கை உண்மையை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் சொல்கிறேன்...'

'சரிங்க... இரவுகளில் என் இளமை தகிக்கிறது.... என்னை நானே... இல்லை நம்மை நாமே எரித்துக் கொள்கிறோம் தூங்காத ராத்திரிகளில்... இந்த வாழ்க்கைதான் நமக்கான வாழ்வு என்றால் இன்னும் நானூற்றி முப்பத்தோரு நாளில் நீங்க வரும் போது எனக்குள்ள விதச்சிட்டுப் போங்க... எனது தனிமைக்கு ஆறுதலாகவாவது இருக்கும்.'

'சரிங்க... நா... எதோ கிறுக்கச்சி மாதிரி மனசுல உள்ளதெல்லாம் கொட்டியிருக்கேன். எதுவும் மனசுல வச்சுக்காதீங்க... உடம்ப பாத்துக்கங்க... வாரத்துல ஒருநா... எண்ண தேச்சுக் குளிங்க... உடம்ப பாத்துங்க... இங்க நா.. அத்தை... மாமா... வளரு... கணேசு... இப்படி எல்லாரோடவும் சந்தோஷமா இருக்கேன்... என்னயவே நெனச்சுக்கிட்டு சாப்பிடாம இருக்காதீங்க... நீங்க நல்லாயிருந்தாத்தான் நாளைக்கு நமக்கு பொறக்குற புள்ளைங்க நல்லாயிருக்கும்.'

'ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பேசுங்க... எனக்காகாக... ப்ளீஸ்... என்றும் உங்களை மட்டுமே நினைத்து வாழும் உங்கள் செல்லம்' லெட்டரை எழுதி மடித்து நிமிர்ந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்ன அண்ணி... முடிஞ்சதா... சாப்பிடலாமா...?"

"நீ... சாப்பிடு வளர்... எனக்கு இப்ப வேண்டாம்..." என்றபடி அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

**************

போட்டோவுக்கு நன்றி :  Google


குறிப்பு: எனது நண்பன் தமிழ்க்காதலன் எழுதிய கவிதையின் தலைப்பையே கதையின் தலைப்பாக அவனது அனுமதியின்றி பயன்படுத்தியிருக்கிறேன். நன்றி நண்பா.

-'பரிவை' சே.குமார்.

சனி, 2 ஜூலை, 2011

மனச் சுமை




பழைய பிலிப்ஸ் ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார் ராஜாமணி. அது கர்முர்ரென்று கத்திக் கொண்டிருந்தது. விவிதபாரதி வைத்தால் இடையில் இலங்கைத் தமிழ் வானொலியும் கலந்து பாட ஆரம்பித்தது. 'சே... என்ன ரேடியோ... ஒரு டேசனும் சரியா புடிக்கமாட்டேங்குது... கட்ட வேற போச்சு போல... சவுண்டும் கொறச்சுக் கேக்குது. நாளைக்கு நாலு கட்டை வாங்கணும்"

"சத்தியப்பா... சத்தியப்பா...அட ஏங்க..."

"என்ன... சத்த இரு... "

"வந்து சாப்டுப் போயி என்ன வேணாலும் பாருங்க... டிவி பாத்தாலும் இந்த ரேடியாவ ராத்திரி நேரத்துல கர்ரு... முர்ருன்னு கத்த விடுறதே பொழப்பாப் போச்சு... வந்து சாப்டு உங்க ரேடியாவை நோண்டுங்க..."

"ஆமா... இருட்டுனா உனக்கு தூக்கம் வந்திரும்...இரு வாரேன்"

"வந்து சாப்ட்டா நான் படுப்பேஞ்சாமி... பகல் பூராம் ஊறிக்கிட்டே திரியிறது உடம்பெல்லாம் வலிக்கிது"

"சரி... என்ன சாப்பாடு..."

"ஆமா நேரா நேரத்துக்கு வடிச்சுக் கொட்ட நான் என்ன குமரியா..? மத்தியானம் வச்ச மொச்சக் கொட்டைதான்..."

சாப்பிட்டபடி "ஆமா... சத்தி பேசுனானா..."

"ஆமா... இவரு கலக்கிட்டரு வேலை பாக்கிறாரு... இப்பத்தான் வந்தாரு... சும்மா மரத்தடியில படுத்திருக்கிற உங்களுக்குத் தெரியாம எங்கிட்ட தனியா பேசுற மாதிரி..."

"சரி ஏன் விசனப்படுறே... பெரியவ கல்யாணம் வச்சிருக்கா... என்ன பண்ணலாம்... ஏது பண்ணலாமின்னு ...அவங்கிட்ட பேசணுமில்ல..."

"ஆமா.. சொல்ல மறந்துட்டேன்...காலையில போயி சின்னவங்கிட்ட கல்யாண விசயமா பேசிட்டு வாங்க..."

"நாளைக்கா..." மெதுவாக இழுத்தார்.

"என்ன இழுக்குறிய... அவன் வேலைக்குப் போறதுக்கு முன்னால போனாத்தான் அவங்கிட்ட பேசி ஒரு முடிவெடுக்கலாம்"

"இல்ல நாளைக்கி கண்டிப்பட்டி பந்தயம்... ராமசாமி கருக்கல்ல போலாமான்னு கேட்டான்... வாரேன்னு சொல்லிட்டேன்..."

"ஆமா... பேத்தி கல்யாணத்தைவிட பந்தயந்தான் முக்கியமா?" கோபமாக வார்த்தைகள் வந்தன.

"சரி... எதுக்கு இப்ப கூவுறே... காலையில சின்னவன் வீட்டுக்குப் பொயிட்டு வாரேன்...போதுமா?" என்றபடி எழுந்து வாசலில் கிடந்த கட்டிலில் போய் அமர்ந்து புகையிலையை அதக்கியபடி மீண்டும் ரேடியோவை நோண்ட ஆரம்பித்தார்.

***

"வாங்கப்பா..."

"ம்... பேத்திக்குட்டி எங்க?"

"தூங்குறா... அம்மாவையும் கூட்டிகிட்டு வந்து இருந்துட்டுப் போகமுல்ல..."

"இல்லப்பா... அவளுக்கு நம்ம ஊரைவிட்டு எங்கயும் வந்து இருக்கிற நெனப்பே இல்ல"

"வாங்க மாமா... அத்தை நல்லா இருக்காங்களா?"

"ம்... நல்லா இருக்காம்மா... "

"ஏம்ப்பா... எதுக்கு காலையில விழுந்து வாறீங்க... எனக்குப் போன் பண்ணியிருந்தால் நாளைக்கு லீவு நான் வந்திருப்பேனே..."

"இல்லப்பா... அக்கா கல்யாணம் வச்சிருக்குல்ல... நம்ம வீட்ல நடக்கிற மொத கல்யாணம்... மாமச்சீரை நல்லா சிறப்பா செய்யணும்... அதான் என்ன செய்யிறது... ஏது செய்யிறதுன்னு பேசி முடிவு பண்ணனுமில்ல... உங்கிட்டயும் சத்திக்கிட்டயும் பேசி ஒரு முடிவுக்கு வரலாமுன்னுதான் உன்னை கருக்கல்ல பாத்துப் பேசலாமுன்னு அம்மா சொன்னுச்சு... ""

"அண்ணன் பேசுச்சாப்பா... "

"இல்ல உங்கிட்ட பேசிட்டா... அவன் இன்னைக்கு நாளைக்குப் பேசினா... விவரமா சொல்லிடலாமுல்ல..."

"சரிப்பா... "

"மாமா... மூத்தவர்கிட்ட பணம் அனுப்பச் சொல்லி எல்லா செலவையும் பாருங்க... வீடு கட்ட லோன் வாங்கிட்டாரு... மாசமான பிடிச்சது போக கிடக்கிறத வச்சு குடும்பத்தை ஓட்டவே கஷ்டமாயிருக்கு.."

"என்னம்மா சொல்றே... ரெண்டு பேரும் செய்ய வேண்டிய செலவு இது... அவன் ஒருத்தனை எப்படி சுமக்க சொல்ல முடியும்?"

"ம்... இத்தன வருசமா வெளி நாட்டுல சம்பாதிக்கிறவரு.. செஞ்சா குறஞ்சிடமாட்டாரு..."

"ஏய்... என்ன பேசுறே...? அவரு நம்மள மாதிரித்தானே இருக்காரு.... அப்பா அவ கிடக்கிறா ஆக வேண்டியதைப் பாருங்க... அண்ணங்கிட்ட பேசிட்டு எல்லாம் வாங்குங்க... எவ்வளவு ஆனாலும் பரவாயில்ல..."

"ஏங்க அவருகென்ன கொள்ளக்காச்சல்... நம்மளை மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கா பாத்து வாழ்றாரு..."

"என்னம்மா சொன்னே... நம்ம குடும்பத்துக்காக சத்தி பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல... ஒம் புருஷன் இன்னக்கி வாத்தியாரா இருக்கானா... அதுக்கு அவந்தாம்மா காரணம்"

"ஆமா பெரிய வாத்தியார் வேலை... அவர மாதிரி இவரும் வெளிநாடு போயிருந்தா நாங்களும் தோட்டம் தொறவுன்னு இருந்திருப்போம்..."

"என்ன நீ... வாய்க்கு வாய் பேசுறே.... எங்க இருந்து வந்துச்சு இந்த வாய்..."

"டேய்... அவ பேசட்டுமுடா... ஏம்மா... இத்தனை வருசம் சம்பாதிச்சு காசு பணம் இருந்தாலும் அவங்கிட்ட என்ன சந்தோஷம் இருக்கு சொல்லு... குடும்பம் பொண்டாட்டி புள்ளையின்னு இருக்க முடிஞ்சதா சொல்லு... வயசையும் வாழ்க்கையையும் தொலச்சிட்டு இன்னைக்கு பட்டமரமா நிக்கிறான்... இந்த வயசுல பொண்டாட்டிய தூக்கி கொடுத்துட்டு... புள்ளைகளுக்காக இன்னமும் வெளிநாட்டுல கிடந்து கஷ்டப்படுறான்.... வயசான காலத்துல எங்களால அந்தப் புள்ளைகளுக்குப் பாக்க முடியாதுன்னு அனாதைக மாதிரி ஆஸ்டல்ல விட்டு படிக்க வைக்கிறான்... அவனாமா நல்லா இருக்கான்..."

"அப்பா... பேசணுமின்னு பேசுறவகிட்ட எதுக்கு எல்லாம் சொல்லிக்கிட்டு... விடுங்கப்பா... நடக்க வேண்டியதைப் பாருங்க..."

"இல்லப்பா... எல்லாரு மனசிலயும் சத்தி நல்லாயிருக்கான்... பணம் காசு இருக்குங்கிற எண்ணம் மட்டும்தான் இருக்குப்பா.... உங்கக்காகூட பேச்சு வாக்குல பெரியவங்கிட்ட சொல்லி தாலிச் செயின் வாங்கிட்டு வரச்சொல்லுங்கன்னு சொல்லுறா... சின்னவ வீடு கட்ட பணம் வேணும் அண்ணங்கிட்ட கேக்கலாமுன்னு இருக்கோமுன்னு சொல்லுறா... இங்க ஒம் பொண்டாட்டி அவங்கிட்ட இருக்க பணம் எங்ககிட்ட இல்லையின்னு சொல்லுறா.. ஆனா உங்க யாரு மனசுலயும் அவன் பட்டமரமா நிக்கிறானேங்கிற எண்ணம் வரவேயில்லையே...அவன நெனச்சு வருந்த எனக்குகூட நேரமில்ல... அவனுக்காக அழுகுற ஒரு ஜீவன் உங்கம்மா மட்டுந்தான்..." என்றபோது அவரது கண்கள் கலங்கின.

"அப்பா... அவதான் எதோ பேசுறான்னா... நீங்க கண் கலங்கிக்கிட்டு..."

"இல்லப்பா... அவ கேக்கிறது தப்பில்ல... கூடப்பொறந்ததுகளே பேசும் போது வந்தவ அவ பேசுறது தப்பில்ல...விடு... சரிப்பா வாரேன்..." அவனது பதிலை எதிர்பார்க்காமல் நடக்கலானார்.

மனசு நொந்து சைக்கிளை மிதித்தவர்,'அவகிட்ட சொன்னா ரொம்ப வருந்துவா.... சொல்ல வேண்டாம்.. பயலுக சமாச்சிடுவாங்கன்னு சொல்லிடலாம்..." என்றபடி மனைவிக்குப் பிடித்த மலையாளத்தான் கடை அப்பம் வாங்கிக் கொண்டு பெரியவனை நெஞ்சில் சுமந்தபடி கனத்த மனதுடன் சைக்கிளை மிதித்தார்.
 
*****
 
குறிப்பு: இது மனசில் வரும் 150வது பதிவு. கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள் என நான் தொடராத மூன்று தளங்களில் பதிந்தவைகளுடன் சேர்த்து இது 345வது பதிவு. இதற்கு உங்கள் ஊக்கம்தான் முக்கிய காரணி என்றால் மிகையாகாது. நன்றி நட்புக்களே...!


படத்திற்கு நன்றி : மாலைமலர்

-'பரிவை' சே.குமார்.

சனி, 25 ஜூன், 2011

உலர்ந்த புன்னகை... உலராத காதல்...



காய்ந்த கண்மாய்க்குள்
காலாற நடந்த போது
தண்ணீர் தூக்கும் உன்
உருவம் கானல் நீராய்..!

பாலத்தில் படுத்து
பால் நிலா பார்த்தபோது
நிலவில் ஊடே உன்
உருவம் கலைந்த மேகமாய்...!

கோயில் சுவற்றில் வரைந்த
ஓவியங்களை வியந்து
பார்த்த கண்ணுக்குள் உன்
உருவம் வரையாத ஓவியமாய்...!

இன்னும் என்னுள்
இறக்காத உன் நினைவுகள்...
அடிக்கடி அழ வைக்கின்றன...

அழுகை ஆண்மைக்கு
அழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?

உன்னை கேட்க நினைத்து
உயிருக்குள் புதைத்தேன்...
நினைவுகளை விதையாக்கி
நித்தம் விதைக்கிறேன்...

இழந்த காதலை
இதயத்தில் சுமந்து
உலர்ந்த புன்னகையுடன்
உலகுக்காக வாழ்கிறேன்...

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 20 ஜூன், 2011

உறவுகள் சுகந்தானே...



வணக்கம். எல்லாரும் நலம்தானே..? சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. உடல் நலம் மற்றும் சில காரணங்களால் நீண்ட விடுமுறை. நலம் விசாரித்த நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உடல் நலம் தொடர்பாக ஊருக்குப் போய் வந்த நிலையில் மனம் எதிலும் நாட்டமின்றி இருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று எழுதி வந்த நான் இனி அடிக்கடி எழுதுவேன் என்று தோன்றவில்லை... அப்படி ஒரு எண்ணமும் எனக்குள் உதிக்கவில்லை. எனவே இனி இடைவெளியின் பின்னணியில் இயன்றவரை தொடருவேன். விரைவில் வருகிறேன்... எனது படைப்புடன்...



நட்புடன்,

சே.குமார்.

சனி, 9 ஏப்ரல், 2011

சுவடுகள் (நிறைவுப் பகுதி)

எல்லாரும் நல்லாயிருக்கீங்களா... கொஞ்சம் உடல் நலமின்னையும் அதிக வேலைப்பளுவும் வலைப்பூவினை வாசம் செய்ய விடாமல் தடுக்கின்றன... விரைவில் வருகிறேன்... அதுவரை மறக்காமல் இருக்க இந்தப் பதிவு... எப்பவும் போல் எல்லாரும் வாங்க... படிங்க... நான் உங்கள் வலைப்பூக்களுக்கு சில நாளில் வருகிறேன்...

சுவடுகள் முதல் பகுதி படிக்க


அதே நேரம்...

வேகமாக வந்து கொண்டிருந்தவன், கைக்குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் வண்டியின் வேகத்தைக் குறைத்து அவளருகில் வண்டியை நிறுத்தி "கவிதா..?" என்றான்.

"ஆமா நீங்க..." என்று புருவத்தை சுருக்கியவள், "யேய்... நவீன் எப்படிடா இருக்கே" என்றாள்.

"நல்லாயிருக்கேன். கல்யாணம் ஆயிடுச்சா..."

"கையில புள்ளையோட நிக்கிறேன்... கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்கிறே..."

"எங்களை எல்லாம் மறந்துட்டேயில்ல... கல்யாணத்துக்குக்கூட கூப்பிடலை... சரி... குட்டி பேரு என்ன..."

"லாவண்யா"

"லாவ்... நல்ல பேரு... சந்தோஷமாயிருக்கேல்ல..."

"சந்தோஷமா இருக்கேன்டா... அவரு இங்க கெமிக்கல் பிசினஸ் பண்றாரு... நல்ல வருமானம்... அம்பத்தூர்ல வீடு. அவரு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னாரு. அதான்டா இங்க நிக்கிறேன்."

"இப்ப வருவாரா லேட்டாகுமா?"

"இல்ல வந்துடுவாரு?... எதோ அவசரமா போற போல"

"ஒண்ணும் அவசரமில்லை... சும்மாதான்... ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?"

"என்ன..?"

"காலேசு முடிஞ்சதுக்கு அப்புறம் சந்துருவ பாத்தியா..?"

"இல்லடா... பாக்கலை..." முகம் மாறியது.

"சாரி... கேட்டதுக்கு மன்னிச்சுக்க..."

"இதுல என்ன மன்னிக்கிறதுக்கு இருக்கு... நான் காலேசுக்கு வந்த புதுசுல எனக்கு நீ லவ் லெட்டர் குடுத்தே ஞாபகம் இருக்கா?"

"ஆமா... அதுதான் ரிஜெக்ட் ஆயிடுச்சே... "

"உன்னைய ஒதுக்கி அவனை காதலிச்சேன்... பட், அவன் அந்தப் பிரச்சினையில நடந்துக்கிட்ட விதம் பிடிக்கலை. அத்தோட ரெண்டு பேரும் பிரிஞ்சதுதான் அப்புறம் பாக்கவேயில்லை"

"இருந்தாலும் அவன் மேல தப்பில்லையில்ல..."

"இல்லதான்... ஆனா மனசுக்குள்ள சில கீரல் விழுந்தாச்சு... அப்புறம் வாழ்க்கை முழுவதும் அந்தக் கீரல் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லையா? இப்ப என்ன மறந்து அவனும் சந்தோஷமா இருப்பான்ல."

"அவன் உன்னைய மறந்திருப்பான்னு எப்படி சொல்றே... அப்ப நீ அவனை மறந்துட்டியா?"

"..."

"சொல்லு... பதிலக் காணோம்..."

அவள் குனிந்த தலை நிமிர்ந்தபோது கண்களில் கண்ணீர். "சாரிடி.. நீ சொன்னதால கேட்டேன். சரி விடு... அப்பா அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா?"

"நீ கேட்டது தப்பில்லடா... எதுக்கு பேச்சை மாத்துறே.... பேசலாம்... எனக்கு அவன் ஞாபகம் வராத நாளே இல்லடா... அன்பான கணவர், அழகான குழந்தையின்னு ஆன பின்னாலயும் எம் மனசுக்குள்ள அவன் இருக்கான்டா... யாராவது சந்துருன்னு கூப்பிட்டா என்னையறியாம திரும்பி பாக்கச் சொல்லுதுடா... ஒவ்வொரு வருசமும் ஜனவரி பதினஞ்சு அவன் பேர்ல அர்ச்சனை பண்றதை இன்னும் நிப்பாட்ட முடியலைடா... அப்புறம் நான் எப்படிடா அவனை மறக்கிறது..." பொது இடம் என்பதால் வந்த அழுகையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"சாரிடி... உன்னோட உள் மனசு சோகத்தை நான் அதிகமாக்கிட்டேன்..."

"இல்லடா... இதெல்லாம் யார்கிட்டயாவது சொல்லி அழணுமின்னு ரொம்ப நாளா எனக்குள்ள இருந்துச்சு. இதே ஒரு தோழியா இருந்தா தோள்ல சாஞ்சு அழுது என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருப்பேன். நீ தோழனாயிட்டே உங்கிட்ட என் பாரத்தை எறக்கி வைக்க முடியும். இப்ப நான் அழுதா இந்த சமூகத்தோட பார்வையே வேற மாதிரி இருக்கும். அதனால வந்த அழுகைக்குகூட அணைதான் போட முடியுது."

"சரி... அவனை பாக்கணுமின்னு ஆசையிருக்கா?"

"இல்லடா... அவனை சாகுற வரைக்கும் பாக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அவங்கிட்ட என் நெனப்பு இருந்தாலும் குடும்பம் குழந்தையின்னு ஆயிட்டா கொஞ்சம் மாறுவான். அப்புறம் கால ஓட்டத்துல ரெண்டு பேருமே நினைவுகளை பொக்கிஷமாக்கி வாழ்ந்து பழகிடுவோம். நான் தினமும் தெய்வத்துக்கிட்ட வேண்டுறது என்ன தெரியுமா... சந்துருவ மட்டும் என் கண்ணில் காட்டிடாதே... நான் சாகுற வரைக்கும் அவனைப் பாக்கவே கூடாதுன்னுதான்... நானும் நம்ம நண்பர்கள் பலரை இந்த சென்னையில பாத்துட்டேன். அவனும் இங்கதான் எங்காவது இருப்பான்னு மனசுக்குள்ள ஓடுது. என் பிரார்த்தனையோ என்னவோ இன்னைக்கு வரைக்கும் பாக்கலை. இனியும் பாக்க மாட்டேன்னு நினைக்கிறேன்."

"சரிடி... எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இரு. உன் மொபைல் நம்பர் சொல்லு. நான் கால் பண்றேன். அப்புறம் ஒரு நாள் உன் ஹஸ்பண்டோட எங்க வீட்டுக்கு வா... பாத்தோம் பேசினோமுன்னு இல்லாம நம்ம நட்பு இனி தொடரட்டும்... என்ன"

"கண்டிப்பா வாரேண்டா... அப்புறம் ஒருவேளை நீ சந்துருவ சந்திக்கிற வாய்ப்பு வந்தாலும் என்னைய பத்தி சொல்லிடாதேடா... ப்ளீஸ்... அவனுக்கு நான் இங்க இருக்கது தெரிய வேண்டான்டா..."

"சத்தியமா சொல்ல மாட்டேன்... போதுமா... "

"ரொம்ப நன்றிடா... எப்ப கல்யாணம் பண்ணப்போறே?"

"கூடிய சீக்கிரம்... இப்ப என் ஆளைத்தான் பாக்கப் போறேன்..."

"நினைச்சேன் உன்னோட டிரஸிங் பாத்துதான் அவசரமான்னு கேட்டேன்... சென்னையில சேட்டு பொண்ணு எதுவும் மாட்டிருச்சா?"

"சீ... இல்லடி... நம்ம கூட படிச்ச அகிலாதான்... இப்ப இங்கதான் இருக்கா..."

"யாரு நம்ம பட்டா... ரெண்டு பேரும் வெளியில சொல்லாமலே இருந்தீங்களா... ஆனா பசங்க உன்னை கேலி பண்றதை பாத்திருக்கேன்... ஓ.கே. எஞ்சாய்... சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க..."

"சரி... கிளம்புறேன்டி... இன்னொரு நாள் பேசலாம்."

******************

அந்த பார்க் முன்பாக வண்டியை நிறுத்தினான் நவீன்,அவனுக்கு அருகில் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தாள் அகிலா.

"நீங்க சீக்கிரம் வாரவுங்க... நான் இடையில முக்கியமான பிரண்டப் பாத்தேன்... அதான் லேட், இல்லேன்னா நாந்தான் எப்பவும் போல பஸ்ட்."

"நானும் தான் பிரண்டைப் பாத்தேன்... இல்லேன்னா எப்பவே வந்திருப்பேன்... சரி வா... அப்படி யாருடி முக்கியமான பிரண்ட்"

"சொன்னா நம்பவே மாட்டே... நம்ம சந்துருவப் பாத்தேன். எங்க ஏரியாவுலதான்டா இருக்கான். இன்னைக்குத்தான் பாக்குறேன். நல்ல வேலையில இருக்கானாம். இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை... அவங்கிட்ட கவிதா நினைப்பு இருக்கு. ஆனா இல்லாத மாதிரி பேசுறான்..."

"நானும் தான் கவிதாவை..." டக்கென்று நிறுத்தினான்.

"கவிதாவை..."

"இது அந்தக் கவிதா இல்லை... காலேசுல படிக்கிறப்போ கவிதான்னு கையெழுத்துப் பிரதி நடத்துனானே சுபாகர் அவனைப் பாத்தேன்னு சொல்ல வந்தேன். சரி வா உள்ள போலாம்" என்றபடி பேச்சை மாற்றினான்.

-'பரிவை' சே.குமார்.