கடந்த சனிக்கிழமை மாலை ஜெசிலா மேடத்தின் 'Proactive Excel Safety Consultancy' நிறுவனத்தில் கேலக்ஸியின் நான்காமாண்டு துவக்க விழா - மூன்றமாண்டு நிறைவு விழா - மிகச் சிறப்பாக, மகிழ்வாக, மன நிறைவோடு நடந்து முடிந்தது.
மாதாமாதம் நடத்தப்படும் 'கதைப்போமா' நிகழ்வுதான் இந்த முறை கேலக்ஸியின் ஆண்டு விழாவாக மலர்ந்திருக்கிறது. மிகப் பெரிய விழாவாக நடத்தாமல் மாதக் கூட்டம் போல்தான் நடத்தப்பட்டது என்றாலும் நிறைய மகிழ்வான நிகழ்வுகளை மனநிறைவோடு செய்து முடித்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
விழா எப்பவும் போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. நிகழ்வை வழக்கம்போல சகோதரர் கலைஞன் நாஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார். அவ்வப்போது அவரிடமிருந்து பாலாஜி அண்ணன் பறித்துக் கொண்டாலும், அதையும் மீறி எப்பவும் போல் நகைச்சுவையாக நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வு முடிந்த போது ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஐயா அவர்கள், 'என்னோட புத்தக வெளியீடுதான் உங்களுக்கு தொகுப்பாளராய் முதல் நிகழ்வுன்னு நினைக்கிறேன். இப்போ நீங்க சிறப்பாத் தொகுக்கிறீங்க ஆனா ரொம்ப லொள்ளு' அப்படின்னு சொன்னார். இதுவே கலைஞனுக்கு மிகப்பெரிய வாழ்த்துத்தான். இதற்கு மேல் இவரை யாரும் வாழ்த்த முடியாது. உண்மையிலேயே நிகழ்வை ரசிக்கும்படி தொகுப்பது ஒரு கலைதான், அதை நாஷ் மிகச் சிறப்பாகச் செய்கிறார்.
வரவேற்புரையை வழங்க வந்த திருமதி. ஆண்டாள் ரேவதி அவர்கள், கேலக்ஸி குறித்தும் ஐயா ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள் பற்றியும், கேலக்ஸியின் வெளியீடுகள் பற்றிப் பேசி, முக்கியமாக ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட பாரதியார் கவிதைகள் - அரபு மொழியில் - குறித்தும் சிலாகித்துப் பேசினார். கேலக்ஸி உதயமானபோது ஜின்னாஹ் ஐயா அவர்களின் 'மைவண்ணன் ராமகாவியம்' என்னும் புத்தக வெளியீட்டோடு உதயமாகி, இந்த மூன்றாண்டுகளில் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருப்பது குறித்துப் பேசி, வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
அடுத்ததாய் ஐயா ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்களின் 'இயேசு எனும் ஈஸா நபி காப்பியம்' என்னும் நூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை பாலாஜி பாஸ்கரன் அவர்கள் வெளியிட தொழில் அதிபர் அபுதாஹிர் அவர்களும், அபுல் பைஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். புத்தக வெளியீட்டுக்கு அழைக்கும் போது கலைஞன் சற்றே குழம்பி, அந்தக் குழப்பத்துக்கு காரணம் பாலாஜி அண்ணன்தான் என்பதையும் சொல்லிவிட்டார்.
ஏற்புரை வழங்க அழைக்கப்பட்ட ஐயா ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள், எவ்வளவு நேரம் பேசணும் எனக் கேட்டு, பதினைந்து நிமிடம் வரையும் பேசலாம் எனச் சொன்னதற்கு எனக்கு அவ்வளவு நேரமெல்லாம் தேவையில்லை எட்டு நிமிடங்கள் போதுமானது எனச் சொல்லி, பாலாஜி அண்ணனை 'மகனே' என்று அழைத்து தனது உரையை ஆரம்பித்தார். கேலக்ஸி கொடுத்த, மகிழ்வான, மனநிறைவானவற்றில் இதுவும் ஒன்று. நான் இதுவரையில் 35 நூல்கள் எழுதியிருக்கிறேன், அதில் 30 நூலாக்கம் பெற்றுவிட்டன. இப்போது இன்னும் இரண்டு நூலாக்கம் பெற இருக்கிறது, அவை என்னுடைய 500 குறள்கள் மற்றும் துபையைப் பற்றி நான் எழுதிய ஒரு காவியம் என்றார்.
மேலும் கேலக்ஸியில் எனது 3 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. கேலக்ஸியில் எனது முதல் நூல் - கேலக்ஸியின் முதல் வெளியீடும் கூட - 'மைவண்ணன் ராமகாவியம்' பற்றி இங்கே ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். எனது நூல்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன. சில நூல்களுக்கு இரண்டு மூன்று விருதுகள் கூட கிடைத்திருக்கின்றன. எனது 'பண்டார வன்னியன்' காவியத்துக்கு இலங்கையில் மூன்று விருதுகள் - இலங்கையின் சாகித்ய மண்டலம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வடகிழக்கு மாகானத்தின் பரிசு - கிடைத்தது. ஆனால் எனது மைவண்ணன காவியம்தான் வெளிநாடுகளிலும் பரிசு பெற்றது. ஆஸ்திரேலியா கலையிலக்கிய சங்கத்தால் அந்த ஆண்டின் சிறந்த காப்பியமாகத் தேர்வு செய்யப்பட்டு, மிகப்பெரும் தொகையை அனுப்பித் தந்தார்கள். இலங்கையில் ஞானம் என்னும் பத்திரிக்கை நடத்திய போட்டியிலும் எனக்குப் பரிசு கிடைத்தது.
அடுத்த நிகழ்வாக எனது 'உன்மத்தம்' வெளியீடு நிகழ்த்தப்பட்டது. நூலை திரு. அபுதாஹிர் அவர்கள் வெளியிட ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஐயா அவர்கள் வெளியிட, அதனை இலக்கியா ஹரீஸ் தம்பதிகளும், ஜெசிலா மேடமும் பெற்றுக் கொண்டார்கள்.
'உன்மத்தம்' எனது கலையின் மீது பித்துப் பிடித்துத் திரிவதுதான் என்று சொன்ன கலைஞன் 'எப்பவுமே உண்மையைப் பேசணும், இப்பத்தான் இவர்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்' என்று சொல்லி, அனைவரையும் சிரிக்க வைத்து பாலாஜி அண்ணனை புத்தகத்தைப் பற்றி பேச அழைத்தார்.
கேலக்ஸியில் நாங்கள் நிறைய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். குமாரின் நூல்களையும் - கேலக்ஸியில் ஐந்தாவது நூல் - வெளியிட்டிருக்கிறோம், தொடர்ந்து வெளியிடுவோம். எனக்கு இந்த எழுத்து ஏன் புடிக்கும் என்றால் அது என்னோட வாழ்க்கை, என்னோட எழுத்து. இந்த உன்மத்தங்கிறது என்னான்னா ஒரு வயதான நாடகக் கலைஞனின் வாழ்வியலைப் பேசுகிறது என்று சொல்லி, இந்த நூலை நம் நண்பர்கள் வாசித்து ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தவும் தயாராக இருக்க வேண்டும் எனச் சொன்னார்.
அதன்பிறகு எனது ஏற்புரை, இந்த நூல் எப்படி உருவானது என்பதை மட்டுமே சொன்னேன். இன்னும் விரிவாக, கேலக்ஸி குறித்தும் பேசியிருக்கலாமோ என பின்னர் யோசித்தேன். எப்போதும் நான் அதிகம் பேசுவதில்லை. உன்மத்தம் பேசட்டும், பேசப்படட்டும் அதுதானே வெற்றி.
முதலில் தேவதர்ஷினி பாலாஜி அவர்கள் வந்து வரவேற்பது போல் பேசி, கதைப்போமா கூட்டத்துக்கு நிறையப் பேர் வாங்க எனச் சொல்லிச் சென்றார். அடுத்து திலீப் அவர்கள் பேசும்போது, 'பாலாஜி அவர்களின் உழைப்பு எல்லாருக்கும் தெரியும். மென்மேலும் வளரட்டும்' என்றார். அடுத்துப் பேசிய ரமாமலர் அவர்கள், 'ஜின்னாஹ் ஐயா மற்றும் அபுதாஹிர் அவர்களை இங்கேதான் முதல் முறை சந்திக்கிறேன். கேலக்ஸிங்கிற பெயருக்கு தமிழில் பெயர் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதற்குப் பதிலாகத்தான் விண்மீன் எனக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்' என்றார்.
அடுத்துப் பேசிய அபுல்பைஸ் அவர்கள், 'சில பேரைக் கொண்டாடத் தோன்றும், அப்படித்தான் பாலாஜி அண்ணன். எல்லாரையும் சொந்தம் கொண்டாடத் தோணாது, ஆனா இவரைக் கொண்டாடத் தோணும். எல்லாருமே அவர் என்னோடுதான் நெருக்கமா இருக்கார்ன்னு நினைப்பாங்க ஆனா அவர் எல்லாருடனும் அப்படித்தான் இருப்பார்' என்றார். உடனே தொகுப்பாளர், 'ஆமா சொந்தம் கொண்டாட வேண்டியவர்தான். இன்னைக்கு என் மகன் கூட பாலாஜியைப் பார்க்கப் போகணும்... பாலாஜியைப் பார்க்கப் போகணும் என்றான் எனச் சொல்லிச் சிரிக்க வைத்தார்.
பால்கரசு அவர்கள் பேசும்போது 'இப்படி ஒரு நிகழ்வில் எனக்கும் பேச வாய்ப்புக் கொடுத்த கேலக்ஸி நிறுவனத்துக்கு நன்றி. கேலக்ஸி என்பது சகல உயிரிகளுக்குமான ஒரு அண்டம். விண்வெளி என்பது அனைத்துக்குமானது. கேலக்ஸியின் உரிமையாளர் பாலாஜி என்றாலும், இது அனைவருக்குமான நிறுவனம்' என்றார்.
இவருக்குப் பின் சிறுகதைப் போட்டி முடிவுகளின் அறிவுப்புகள் சரியாக துபை நேரம் இரவு 8 மணிக்கு கேலக்ஸி யுடியூப் வழி நேரலை என்பதால் வாழ்த்துரை நிறுத்தப்பட்டு மேடை வெற்றியாளர்களின் அறிவிப்புக்குப் போனது. நாம இங்கே வாழ்த்துரையைத் தொடர்ந்து முடிச்சிட்டு அதன் பிறகு வெற்றியாளர் மேடைக்குப் போவோம்.
இராஜாராம் பேசும் போது, 'எங்க குடும்பத்தை நாங்களே பாராட்டிக்கிற மாதிரித்தான். கேலக்ஸியின் முதல் விழா முப்பெரும் விழாவாக நடந்தது. அதில்தான் எனது முதல் பேச்சு... அந்த மேடை கொடுத்த தைரியத்தில்தான் நான் இப்ப இங்கே நிற்கிறேன். அந்தத் தைரியத்தைக் கொடுத்தது பாலாஜி அண்ணன்தான். இந்தக் கேலக்ஸிக்கான பாலாஜி அண்ணனின் உழைப்பு அசாத்தியமானது. கதைப்போமா நிகழ்வில் எல்லாரையும் பேச வைப்பவர் இவர்தான். சென்ற மாதம் முதல் புத்தகப்பூங்காவை ஆரம்பித்து எல்லாரும் வாசிக்க வேண்டும், வாசித்ததைப் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்' என்றார்.
ஒரு வழியாக ஒரு நிமிட வாழ்த்துரை முடிவுக்கு வந்தது. இப்ப நாம நேரலையில் பார்க்கத் தவறிய சிறுகதைப் போட்டி முடிவுகளைப் பார்க்கலாம். முதலில் ஆறு பரிசுகளை மட்டுமே அறிவித்திருந்தோம். கதைகளை வாசித்தபின் ஆறு பத்துப் பரிசுகளாக மாறியிருந்தது. போட்டி நடைபெற்ற விதம் குறித்து நான் பேசியபின், ஊக்கப்பரிசுகளை - அரி கார்த்திக், நான்சி கோமகன், பிரவீண் குமார் - திருமதிகள் ஆயிஷா, ஆண்டாள் ரேவதி, இலக்கியா ஆகியோர் அறிவித்தார்கள். சிறப்புப் பரிசுகளை - தசரதன், பிரியதர்ஷினி, ஸ்ரீஜா வெங்கடேஷ், பாபு கனிமகன் - திலீப், பால்கரசு, அபுல் பைஸ், அகமது சையத் ஆகியோர் அறிவித்தார்கள். மூன்றாம் பரிசை - பிரபு பாலா - இராஜாராமும், இரண்டாம் பரிசை - ஞா. கலையரசி - திருமதி. தேவதர்ஷினி பாலாஜியும் அறிவிக்க முதல் பரிசை - அறிவுச்செல்வன் - நான் அறிவித்தேன். உலகளாவிய சிறுகதைப் போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம் என்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
திருமிகு இலக்கியா ஹரீஷ் தம்பதிகள் பாலாஜி அண்ணனுக்கு அண்ணியின் மூலமாக ஒரு நினைவுப் பரிசை வழங்கினார்கள். இதுவரை கேலக்ஸி யுடியூப் சேனலில் பாலாஜி அண்ணன் தொடர்ந்து பேசிவரும் காணொளிகளின் - சிறுகதைகள், நூல் விமர்சனம், கட்டுரை- 260 முகப்புப் படங்களை வைத்து அவரின் போட்டோவை வடிவமைத்திருந்தார்கள். அதற்கான அவர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. அதைப் பார்த்த பாலாஜி அண்ணன் கண் கலங்கிவிட்டார். இதேபோல் திருமதி ரூபா பிரபுகிருஷ்ணன் அவர்களும் நினைவுப்பரிசை வழங்கினார். ரமாமலர் அவர்கள் இனிப்பு வாங்கி வந்திருந்தார்.
வாழ்த்துரையும் சிறுகதைப் போட்டியின் முடிவுகளும் நிறைவுற்ற நிலையில் முக்கிய நிகழ்வாக கேலக்ஸியின் மண்ணின் எழுத்தாளருக்கான பாண்டியன் பொற்கிழி விருது இந்த வருடம் எழுத்தாளர் தெரிசை சிவாவுக்கு வழங்கப்பட்டது. விருதினை அபுதாஹிர் அவர்கள் கொடுக்க, சிவா பெற்றுக் கொண்டார். ஜின்னாஹ் ஐயா மற்றும் ஜெசிலா மேடம் ஆகியோர் விழா மேடையில் இணைந்து கொண்டனர். 'குடும்பம் வேற ஊருக்குப் போயிருச்சு, பண முடிப்பும் வாங்கியிருக்கீங்க, ராத்திரிக்கு நாம வெளியில - ஹோட்டலுக்குத்தான் - போயிடலாம்' என நகைச்சுவையாய் சொன்னார் கலைஞன் நாஷ்.
ஜெசிலா மேடம் கேலக்ஸியின் 'விண்மீன்' என்னும் புதிய மின்னிதழை அறிமுகம் செய்து வைத்தார். இந்த மின்னிதழை ஒரு வாரத்துக்குள் தயாரிக்க வேண்டியிருந்ததால் படைப்புகள் நட்பு வட்டத்திலேயே பெறப்பட்டன. அடுத்த இதழ் முதல் உலகெங்கிலும் இருந்து படைப்புகள் அனுப்பலாம். விண்மீன் மிகச் சிறப்பாக பயணிக்கும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருப்பது மகிழ்ச்சி. பிலால் அவர்கள் விண்மீனின் அட்டைப் படத்தை ப்ரிண்ட் போட்டுக் கொடுத்து விட்டிருந்தார். இந்தப் புத்தகத்தை தனது மருத்துவப் பணிகளுக்கு இடையே மிகச் சிறப்பாக வடிவமைத்த சென்பாலன் அவர்கள் இந்தப் புத்தகம் குறித்து வாட்சப்பில் பேசி அனுப்பியிருந்தார். அது நிகழ்வில் பகிரப்பட்டது.
விரைவில் கேலக்ஸி வெளியீடாக வர இருக்கும் தெரிசை சிவாவின் 'அயலோன்' நாவலின் அட்டைப்படம் பாலாஜி அண்ணனால் வெளியிடப்பட்டது. இறுதியாக பாலாஜி அண்ணன் நன்றி உரை நிகழ்த்தினார். அதில் ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஐயா எனது அப்பா, அவரின் மனைவி எனக்கு அம்மா. இவர்கள் இருவரும் வந்திருந்து சிறப்பிப்பது எனது அப்பா, அம்மாவே வந்திருந்து வாழ்த்துவதற்கு இணையானது என்றும் இந்த நிகழ்வு சிறப்பாக நடந்ததற்கு நீங்கள் அனைவரும்தான் காரணம். இந்த நிறுவனம் பொருளீட்டும் பொருட்டு இந்த நிறுவனத்தை நான் ஆரம்பிக்கவில்லை, என்னுடைய மனநிறைவு மற்றும் என்னோட சேர்ந்து நான் பலருடன் பயணிக்க வேண்டும் என்ற பேரார்வமும்தான் காரணம். அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது நீங்களும் தொடர்ந்து பயணிப்போம் என்று பேசியிருக்கிறீர்கள் என்பதும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்று சொன்னார்.
விழாவில் ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஐயா, திரு. அபுதாஹிர், திரு. பாலாஜி பாஸ்கரன், திரு. தெரிசை சிவா மற்றும் எனக்கு நிகழ்வின் இடையே பொன்னாடை போர்த்தப்பட்டது.
இந்தப் படத்திற்காக கதை வசனம் எழுதிய இலக்கியாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எவ்வளவு அருமையான, கூர்மையான வசனங்கள். பார்க்கும் நம்மை அந்தக் கதையின் நாயகி பேசிய வார்த்தைகள் முள்ளாய் குத்தியதால்தான் அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் என்று நினைக்கிறேன். சிறப்பான படம், சிறப்பாக எடுக்கப்பட்ட, எடிட்டிங் செய்யப்பட்ட, இசை சேர்க்கப்பட்ட குறும்படங்கள் வருவது அரிது. இப்படி எல்லாமே சிறப்பாக வந்த இந்தப் படமும் இதில் சொல்லப்பட்ட விஷயமும் கூட அரிதுதான்.
கெட்டவனைக் காட்டு... பாதிக்கப்பட்டவரைக் காட்டாதே என்பதுதான் நாம் சினிமா, குறும்படங்களின எழுதப்படாத விதி. இங்கே அதை நேர் எதிராய் செய்திருக்கிறார்கள், அதுக்கு நாம் சத்தமாகச் சபாஷ் சொல்லலாம். படம் முடிந்ததும் கைதட்டல் அடங்க நேரமானது என்றால் பலரின் கண்ணீர் மறைய அதைவிட நேரமானது. அந்த இடம், அந்த நேரம் அத்தனை உணர்ச்சிகரமாக இருந்தது. ராஜாராம், பால்கரசு எல்லாம் பாலாஜி அண்ணனைக் கட்டிப் பிடித்து அழுது, முத்தமிட்டார்கள். ஜின்னாஹ் ஐயாவோ ஒருபடி மேலே போய் 'நான் உங்களை அப்பான்னு கூப்பிடலாமா பாலாஜி' என்றார். இதைவிட வேறென்ன வேண்டும்..?
ஒரு வயதான அப்பாவாக, இந்தச் சமூகத்தோட ஒத்துப் போக முடியாமல் தனது தலைமுறை அழுத்தங்களைச் சுமக்கும் அப்பாவாக, மகளுக்காக இசைந்து போகும் அப்பாவாக பாலாஜி அண்ணன் கலக்கியிருந்தார். காவல் நிலைய இறுதிக் காட்சியில் அவரின் மகளாக நடித்தவர் அடித்து ஆடியிருந்தார். சிறப்பான நடிப்பு. ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தனர். சிறப்பான படம். வாழ்த்துகள் இலக்கியா ஹரீஷ்.
இந்த 32 நிமிடப் படத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்து ஒரு ஒரு மணி நேரப் படமாக ஆக்கியிருந்தால் குறும்படம் என்பது மிகச் சிறந்த திரைப்படமாக மாறியிருக்கும்.
-பரிவை சே.குமார்.
1 எண்ணங்கள்:
விழா குறித்து மிக விரிவாக எழுதியிருக்கிறீர்கள். விழா நிகழ்ச்சிகள் சிறப்பு. உங்கள் உன்மத்தம் நாவல் வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துகளும் ,பாராட்டுகளும். மென்மேலும் உயர வாழ்த்துகள் குமார்.
கருத்துரையிடுக