மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 11 மே, 2025

மனசு பேசுகிறது : மயக்கும் குரலாள் மகதி

 கதி-

தொலைக்காட்சியில் நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி ஜீ-யின்'சரிகமப'. இந்நிகழ்ச்சி சிறுவர்கள், பெரியவர்கள் என மாற்றி மாற்றி நடக்கும். கடந்த ஆறு மாதமாக 'சரிகமப - லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4' நடைபெற்று, இன்று அதன் இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது. 

எனக்கு மிகவும் பிடித்த மகதிக்கான இந்தப் பதிவைச் சென்ற வாரமே எழுதியிருக்க வேண்டும். வேலை மற்றும் சூழல்களால் எழுத்து என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் இன்றுதான் எழுத முடிந்தது.


திவினேஷ், யோகஸ்ரீ, ஸ்ரீமதி, ஹேமித்ரா, அபினேஷ், மகதி ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார். தமிழகத்தின் குரல் தேடும் நிகழ்ச்சி என்ரு சொல்லிக் கொண்டு கேரளம், இலங்கை, மலேசியா என எல்லா இடத்திலும் இருந்து திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்வை நடுத்துவதுதான் இப்போதும் எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாடிக்கை. அதைத்தான் ஜீ தமிழும் செய்யும் என்றாலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் திறமையில் சளைத்தவரில்லை என்பதை ஒவ்வொரு வாரமும் நிரூபித்தார்கள். போட்டியில் இருந்து வாராவாரம் வெளியேறியவர்கள் கூட, அன்றைய தினம் அவர்கள் செய்த ஏதோ ஒரு சிறு தவறினால்தான் வெளியேறினார்களே தவிர, பாடத் தெரியாமல் அல்ல.

திறமையாய் பாடுபவர்கள் இறுதிச் சுற்றுக்கான கதவைத் தட்ட வயது ஒரு தடையில்லை என்பதை 14 வயதுக் குழந்தைகளுடன் போட்டியிட்ட ஆறு வயது புவனேஷ் நிரூபித்தான். இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இல்லை என்றாலும் இறுதிவரை களத்தில் நின்றான். அவனளவில் அதிகமான கோல்ட் ஷவர் வாங்கினான். என்னளவில் இவன் எப்படி பாடல் வரிகளை மறக்காமல் பாடுகிறான் என்ற ஆச்சர்யத்தை விதைத்தவன். அதிலும் குறிப்பாக 'பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ' பாடலை மறக்க முடியாது.

கிட்டத்தட்ட 28 பேரில் இருந்து இந்த அறுவர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார்.அவர்களுக்கு வாழ்த்துகள். 

இந்த அறுவரிடமும் தனித்தனி திறமைகள் இருக்கின்றன என்பதே உண்மை. அதுவே இவர்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஸ்ரீமதியெல்லாம் சொல்லவே வேண்டாம்... என்ன குரல் வளம்... எல்லாவிதமான பாடல்களையும் பாடும் திறமை கொண்ட பெண் இவர். இந்த அறுவரில் இத்திறமை இவருக்கு மட்டுமே உண்டு என்பதுதான் உண்மை. 

எல்லாத் தொலைக்காட்சிகளும் தங்களின் டி.ஆர்.பிக்காகவே வறுமையில் வாழுபவர்களை - குழந்தைகள் நிகழ்ச்சி / பெரியவர்கள் நிகழ்ச்சி என்ற வேறுபாடு இல்லாமல் - பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை. அதை ஜீ தமிழ் எப்போதும் மிகச் சிறப்பாகவே செய்து கொள்ளும். அப்படி அவரகள் பயன்படுத்திக் கொண்ட பிள்ளைகள் என்றால் அது யோகஸ்ரீயும் திவினேஷும் என்பதை அடித்துச் சொல்லலாம். இவர்களை வைத்து நாம் எப்படி நமது கல்லாவைக் நிரப்பிக் கொள்ளலாம், வாராவாரம் டி.ஆர்.பியை எப்படி உயர்த்திக் கொள்ளலாம் என்பதை தெளிவாக, திட்டமிட்டு மிகச் சிறப்பாகவே செய்தார்கள்... செய்து கொண்டார்கள். யோகஸ்ரீயின் காது குத்துவரை டி.ஆர்.பிக்கானதுதான் என்பதைச் சொன்னால் யோகஸ்ரீயை பிடிக்கவில்லை அதான் அப்படிச் சொல்றேன்னு சிலர் வந்து நிற்பார்கள் என்றாலும் அதுதான் நிதர்சனம்.

இன்றைய தமிழக நிலை இதுதான்...பிடித்தவரை, அதாவது அவர்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றிப் பேசினால் கூட்டமாய் வந்து ஆஹா... ஓஹோ என்பார்கள். அதே நமக்குப் பிடித்தவரை, அதாவது அவர்களுக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிப் பேசினால் அவனா... இவனுக்கு நீ சிங்கி அடிப்பதால் இன்று முதல் நீ சங்கி ஆவாய் என்பார்கள். கேட்டால் கல் தோன்றி என ஆரம்பித்து, விருமாண்டியில பசுபதி 'திருமலை நாயக்கர் காலத்துக்கு...' என ஆரம்பிப்பது போல தங்கள் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒரே பக்கமாய் சாய்ந்து பேசுபவனை நம்பலாம், சந்தர்பத்துக்குத் தகுந்தவாறு பேசும் இவர்களைத்தான் சுத்தமாக நம்பக் கூடாது... அது நட்பாக இருந்தாலும். இங்கே யோகஸ்ரீயோ திவினேஷோ எனக்குப் பிரச்சினை இல்லை, என்னால் அவர்களோ அவர்களால் நானோ வாழவில்லை. அவர்களை வைத்துக் கல்லாக் கட்டும் தொலைக்காட்சியைப் பற்றித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதைச் சொல்லும்போது இவரைப் பகடையாக வைத்திருக்கிறார்கள் என்றால் நீ இதற்கு எதிரானவன் என வந்து விடுவார்கள் இல்லையேல் சாதியையும் மதத்தையும் சாக்கில் கட்டி எடுத்துக் கொண்டு வருவார்கள்.

சரி நாம மகதி பக்கம் போவோம்.


இப்போது தேர்வாகியிருக்கும் ஆறு பேரில் எனக்கு ஆரம்பம் முதல் மிகுந்த விருப்பம் மகதி மீதுதான். அதை என் நட்பு வட்டங்களில் எல்லாம் சொல்வதுண்டு. அந்தக் குழந்தையைப் பார்க்கும் போது என்னமோ நம்ம வீட்டுப் பிள்ளையை, மகளைப் பார்ப்பது போல் இருக்கும். மகதி பாட வந்ததும் என்னை அறியாமல் ஒரு புன்னகை பூக்கும்... இறுதிப் போட்டிக்குத் தேர்வான நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னை அறியாமல் சப்தம் எழுப்பி கை தட்டியதும் அறை நண்பர்கள் என்னாச்சு எனக் கேட்க, நம்ம புள்ள ஒண்ணு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டாள் என்றேன். இதைப் பெருமைக்காகவோ, எல்லாரும் வியக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. அந்தக் குழந்தை மீது அத்தனை பிரியம் எனக்கு.

தொலைக்காட்சி, கார்ப்பரேட், நிகழ்வுக்கு வரும் சிறப்பு விருந்தினர் என எல்லாருடைய பார்வையும் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் திவினேஷ், யோகஸ்ரீ பக்கம்தான் இருக்கும். ஒருவேளை இது தொலைக்காட்சியின் வேலையாகக் கூட இருக்கலாம். ஸ்ரீமதி தனது குரலில் ஆயிரம் மாற்றங்கள் செய்து பாடினாலும் கூட, வருபவர்கள் யோகஸ்ரீ, திவினேஷ் தாண்டி யாரையும் பாராட்டி விடுவதில்லை. விதிவிலக்காக சிலர் பாராட்டுவது உண்டு என்றாலும் அங்கு கூட திவினேஷோ, யோகஸ்ரீயோதான் முதலில் இருப்பார்கள். அவர்களின் பின்னே தான் மற்றவர்களுக்குப் பாரட்டு. இதில் விதிவிலக்கு புவனேஷ்... ஏன்னா அவனுக்கு வயசு ஆறு. அவனைவிட இரண்டு மூன்று வயது பெரியவள்தான் மகதி. எந்த வெளிச்சமும் படாமல், தொலைக்காட்சி டி.ஆர்.பிக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அல்லது பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கான குடும்பநிலை காரணமாக தன் திறமையால் இந்த இடத்தை அடைந்திருக்கிறாள்.

எஸ்.பி.பி. சரண் எப்போதும் 'எனக்கு ரொம்பப் பிடித்தவள்' என மகதியைச் சொல்வார்கள். அவருக்கு மட்டுமா பலருக்குப் பிடித்தவள் அவள். பாட ஆரம்பிக்கும் போது நிற்கும் நிலையில் இருந்து ஆடாமல் அசையாமல் பாடி முடிக்கும்வரை நிற்பாள். எதைப் பற்றியும் யோசிக்காமல் மிக அருமையாக பாடி முடிப்பவள் மகதி. அந்தச் சின்ன உடம்புக்குள் எத்தனை அழகான குரல் என்று வியக்க வைப்பாள். மகதிக்கும் திவினேஷ்க்கும் புன்னகை கூட ரேசனில்தான் வெளிவரும்.

இந்நிகழ்வுக்கான தேர்வு நிகழ்வில் சின்னத்தாயவள் பாடி எல்லோரையும் வியக்க வைத்தவள் மகதி... அதன் பின் அந்த அற்புதமான குரலில் எத்தனை எத்தனை பாடல்கள். நீங்க என் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுங்கள்... அல்லது பாய்ச்சாமல் உங்களுக்கான வரவுகள் மீது வரிந்து வரிந்து பாய்ச்சுங்கள் எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. இத்தனை பெரும் கூட்டத்தில் என் மீதும் என் குரல் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அதை வைத்து இறுதி வரை பயணிப்பேன் என்பதை ஆரம்ப நாட்களிலேயே சொல்லாமல் சொல்லிவிட்டாள்.


'சின்னத்தாயவள்' பாடி நடுவர்கள் உள்பட அனைவரையும் அழ வைத்து இந்தப் போட்டிக்குத் தேர்வானவள், இறுதிப் போட்டிக்குச் செல்லும் ஆறாவது நபராய் தேர்வானபோது தனது வைக்கப்பட்ட பூக்கிரீடத்தை புவனேஷ்க்கு வைத்து மகிழ்ந்தவள்... அந்த இடத்தில் சகோதரியாய், தாயாய் உயர்ந்து நின்றவள். இந்த வயதில் இத்தனை பேரண்பை வைத்திருக்கும் மகதியை யாருக்குத்தான் பிடிக்காது. 

திவினேஷ் தெய்வக்குரலோன்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் அவனுக்குப் பழைய பாடல்கள் அருமையாகப் பாட வரும் என்பதாலேயே வெறும் பழைய பாடல்களாகவே கொடுத்தார்கள். அவனிடமும் புதிய பாடல்களை மெலோடி, குத்துப் பாடல்களைக் கொடுத்திருந்தால் அவன் இன்னும் ஜொலித்திருப்பான், ஏனோ அவனை அந்த வட்டத்தை விட்டு வெளியே வராமல் பார்த்துக் கொண்டார்கள். அதேபோல் யோகஸ்ரீ, உனக்கு சுசிலாம்மா குரல் அப்படியே பொருந்துது எனச் சொல்லிச் சொல்லியே பெரும்பாலும் அவரின் பாடல்களாகவே பாட வைத்தார்கள். ஸ்ரீமதி மட்டுமே எல்லா விதமான பாடல்களையும் எடுத்துப் பாடி தன்னை, தனது தனித் தன்மையை நிரூபித்தார். அபினேஷ் அவனுக்கு எப்படியான பாடல்கள் அருமையாகப் பாட வருமோ அவற்றை எல்லாம் எடுத்துப் பாடினான். இதற்குள் மட்டுமே பாடமுடியும் என்பதாய் அவன் நிற்கவில்லை என்பது மகிழ்ச்சியே. ஹேமித்ராவும் எல்லா வகையான பாடல்களையும் பாடினார். ஹேமித்ராவின் தமிழ் அழகு. 

இவர்கள் எல்லாரும் அருமையாக, அழகாகப் பாடினாலும் மகதி ஏனோ மனதுக்குள் நிறைந்து நிற்கிறாள்... அந்த அருமையான குரலும், அலட்டாத நிலையும், எங்கோ பார்த்து எல்லோரையும் ஈர்க்கும் கண்ணுமாய்... நம் குழந்தையாய் மனசுக்குள் நிறைகிறாள்.

தன் குழந்தையின் திறமையால் அவர் மீதான மீடியா வெளிச்சங்களும், பிரபலங்களின் வாழ்த்துக்களும் பெற்றோரை என்ன செய்யும் என்பதை யோகஸ்ரீயின் அப்பாவை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். கஷ்டப்பட்டவர் மகளால் கஷ்டம் நீங்கியிருக்கிறார் என்பது என்னளவில் மிகுந்த மகிழ்ச்சி. அவர்கள் இன்னும் நல்ல நிலையை அடைய வேண்டும் எனபது என் பிரார்த்தனையும் கூட. ஆனால் இந்த ஆறு மாதத்தில் அவரின் உருவத்தில் எத்தனை மாற்றம்..? அதே போல் நடவடிக்கைகளில்... அய்யய்யோ அது ரொம்ப அதிகம். அவரைக் கேமராக் கண்கள் காட்டும் போதெல்லாம் ஏனோ கடுப்புத்தான் வரும். 

இதைச் சொன்னால் நம்மைக் கடிக்க கல் தோன்றி மண் தோன்றா காலத்து மனிதர்கள் தயாராய் நிற்பார்கள், இவர்கள் யாரை வேண்டுமென்றாலும் கடிப்பார்கள்... அடிப்பார்கள்... கேவலமாய் எழுதுவார்கள் ஆனால் மற்றவர்கள் பேசும்போது கொடியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள், அது சமாதானக் கொடியல்ல... சாதீயக் கொடி. யோகஸ்ரீயை இந்நிகழ்வுக்குக் கூட்டி வந்த பள்ளி ஆசிரியையை அவராவது மறக்காமல் இருந்தால் நல்லது. வாழ்வில் எப்போதும் நம்மை ஏற்றி விட்ட ஏணியைத் தள்ளி விடாமல் இருந்தால் நமது வெற்றிப்பாதை என்றென்றும் தொடரும்.


மீடியாக்களும், சமூக வலைத்தளங்களும், சினிமா பிரபலங்களும் கவனிக்காத குழந்தை மகதி, தனது மயக்கும் குரலால் சரண் உள்ளிட்ட பெரும்பாலானோரைக் கவர்ந்து வைத்திருக்கிறாள். அவளின் குரலுக்கும் வயதுக்கும் நானும் ரசிகனே.

நேற்றைய நிகழ்ச்சியில் சைந்தவியின் கரங்களில் இருந்து 'Mesmerizing Voice' - மயக்கும் குரல் - என்னும் கேடயத்தைப் பெற்றிருக்கிறாள். இந்தக் குரல் எப்போதும் தொடரட்டும். இன்றைய இறுதிப் போட்டியில் யார் வெற்றியாளர் என்பது முன் முடிவாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. மகதிக்கான வெற்றி வாய்ப்பு என்பது எட்டிப் பிடிக்க முடியாத இடத்தில்தான் என்றாலும் சரிகமப அவளுக்கான இடத்தை நோக்கி நகர, மிக அருமையான களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.

வெற்றி தோல்விகளைக் கடந்து வாழ்வில், மிகச் சிறந்த பாடகியாக வெற்றி பெற்று வா மகளே...

வாழ்த்துகள்.

-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இந்தக் காலத்தில் குழந்தைகள் யாவரும் மிகுந்த திறமை உடையவர்களாக இருக்கிறார்கள்.  மிக அருமையாக பாடி மனதை மயக்குகிறார்கள்.  இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்கள் திறமைகளை வெளிக்கொணர வைக்க உதவுகிறது.

கோமதி அரசு சொன்னது…

நீங்கள் சொன்னது சரியே.
மிக அருமையாக பாடினாள் மகதி.இறுதி சுற்றில் அவள் பாடிய இரண்டு பாடல்களும் மிக அருமை.

ஸ்ரீமதி அவளும் நல்ல பாடகி, அவள் எடுத்து கொண்ட அனைத்து பாடல்களும் சவாலான பாடல்கள். திறமைக்கு பரிசு உண்டு. சினிமாவில் பாட போகிறாள் குழந்தை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார், தொலைக்காட்சிப் பெட்டி வீட்டில் இல்லை என்பதால் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் கம்ப்யூட்டரில்தான் பார்க்கிறேன். நீங்க சொல்லியிருக்கும் ஜீ தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். இப்ப எல்லாம் திறமையான குழந்தைகள் பலரும் வெளிச்சத்திற்கு வருகிறார்கள். முன்பெல்லாம் திறமை இருந்தும் வெளியில் தெரியாமல் போனது போலல்லாமல்....திறமை இருந்தும் வளர்த்துக் கொள்ள முடியாமல் போனது போல இல்லாம, இப்ப இப்படியான நிகழ்ச்சிகள் பல இருப்பதால் திறமை வெளிச்சத்துக்கு வருது. திறமை இருக்கும் குழந்தைகளும் கவனிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்.

பார்க்கிறேன் நீங்க சொல்லியிருக்கும் நிகழ்ச்சியை. யுட்யூபில் கிடைக்காது என்று நினைக்கிறேன். ஜீ டீவி தளத்துக்குப் போகணுமோ அங்கும் பழைய வீடியீக்கள்தான் இருக்கும்னு நினைக்கிறேன். புதுசான் கட்டணம் கேட்கும் என்று தோன்றுகிறது.

கீதா