மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 ஏப்ரல், 2018

இப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)

சித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி. 

அகலில் வாசிக்க "இப்படியும் சிலர்"

*****

ம்மைக் கடந்து செல்லும்... நாம் கடந்து போகும்... மனிதர்களில் சிலர் அவர்களது செய்கையால் நம் மனதுக்குள் வந்து விடுவார்கள். தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி சத்யா அவர்கள் 'முகங்கள்' என்னும் தொடராய் முத்துலெட்சுமி ராகவன் அவர்களின் தளத்தில் எழுதி வருகிறார். இதையே என்னை நேசித்த மனிதர்களைப் பற்றி 'வெள்ளந்தி மனிதர்கள்' என்னும் தலைப்பில் என் தளத்தில் எழுதி வந்தேன். என்னை நேசிப்பவர்களை எழுத எழுதக் குறையாது என்றாலும் என்ன காரணத்தாலோ தொடர் பாதியில் நிற்கிறது.

வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டிருக்கும் போதும் இங்கும் அன்றாடம் நிறைய முகத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதில் சில முகங்கள் அவர்களின் செய்கையால் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் பல முகங்கள் பரிதாப முகங்களே. சமீபத்தில் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையின் சாராம்சம் வெளிநாட்டு வாழ்க்கைக்காரர் இருவரின் மனைவியர் பற்றியதாய்... இறுதியில் இரண்டு மனிதர்களும் ஒரே கட்டிட வேலை இவரை மனதை அவர் அறியாது அவர் மனதை இவர் அறியாது வேலை பார்ப்பதாய் முடியும். அதுதான் நிதர்சனம். இனி கட்டுரைக்குள் வருவோமா?

நாங்கள்... நாங்கள் என்றாலும் நானும் இன்னொரு தமிழ் நண்பரும் காலையில் பேருந்து ஏறும் இடத்தில் சற்றே கூட்டம் இருக்கும். இங்கு பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும் என ஜன்னல் வழியாக துண்டு போடுதல், குழந்தையை வீசுதல் எல்லாம் இருக்காது. அடித்துப் பிடித்து ஏறுதலும் இல்லை என்பதால் ஒவ்வொருவாராக ஏறுவார்கள். இடையில் திடீரென ஒருத்தன் வர ஆரம்பித்தான். அவன் பாகிஸ்தானி, கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கில் மதிய சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஏறுவான்.

பேருந்து வந்ததும் ஓடி படியில் நின்று கொள்வான். யாராவது அவனுக்கு முன்னே ஏற முனைந்தால் இடித்துத் தள்ளுவான். ஏறி அமர்ந்து மொபைலில் முகம் பார்த்து அதை அஷ்டகோணலாக்கி என்னென்னமோ செய்வான். அவன் இருக்குமிடத்துக்கு அருகில் அமர்பவர்கள் அவனுடன் உரசி விடாமல் இருக்க, ரோபோ போல் உட்கார்ந்து கொள்வான். அவனைப் பார்த்தாலே பேருந்தில் பயணிக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருநாள் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற போது மற்றவர்களுக்கு வந்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! இப்படியும் சிலர்.

இங்கு பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் இல்லை என்றாலும் ரோட்டைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதையில் எப்போதேனும் சிலர் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். சில நாட்கள் முன்னர் ஒருவர் என்னமோ பைபாஸ் சர்ஜரி செய்தது போல் மிகப் பெரிய பேண்டேஜ் ஒட்டி அது தெரிய, சட்டை கழட்டி விட்டு உட்கார்ந்திருந்தான். பார்க்கும் போதே கடுப்பு தான் வந்தது.

அதன் பின்னான ஒருநாள் அலுவலகம் விட்டு பேருந்தில் வந்து இறங்கி நடந்த போது ஒரு அரபிப் பெண்மணி, அரபி என்றாலும் உள்ளூர்க்காரி அல்ல வேறு நாட்டிலிருந்து வந்தவள்தான். ஓரு ஓரமாக உட்கார்ந்து முன்னே ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார். அதில் சில சில்லறைகளும் கிடந்தன. அவளருகே ரோஜா மலர் போல ஒரு பெண் குழந்தை, மூணு நாலு வயதிருக்கும்... அமர்ந்திருந்தது. அம்மா என்ன செய்கிறாள் என்பது தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணோ மகளுக்கு முத்தம் கொடுத்து அரபியில் ஏதோ சொன்னாள். உண்மையில் அவள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருக்கலாம் இருப்பினும் குழந்தையை அருகமர்த்தி பிச்சை எடுத்தது மனசுக்கு வருத்தத்தையே கொடுத்தது. இப்படியும் சிலர்.

கழிப்பறைகளை அடிக்கொரு தரம் சுத்தம் செய்ய அதற்கென பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியர்களும் (குறிப்பாக தமிழர்கள், தெலுங்கர்கள்) வந்கதேசத்தவர்களும் இந்த வேலைக்கு வருவார்கள். அவன்தான் சுத்தம் செய்கிறானே என்ற நினைப்பில் பாத்ரூமைப் பயன்படுத்துபவர்கள் அலங்கோலம் செய்து விட்டுப் போவதைப் பார்க்க வேண்டுமே... சுத்தம் செய்பவனும் மனிதன் தானே என்ற எண்ணம் ஏற்படுவதேயில்லை. அதுவும் சிலர் பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விடுவதே இல்லை. பாகிஸ்தானிகளோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலே ஏறி இருந்து... வயல்ல நாத்துப் பறிச்ச மாதிரியே போட்டு வச்சிருப்பானுங்க... இப்படியும் சிலர்.

எங்கள் அறை இருக்கும் கட்டிடத்தில் ஒரு மலையாளி ஹோட்டல். அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் அவரும் மலையாளி என்றுதான் நினைத்தேன். தினம் செல்வதால் அவருடன் பழக்கம் ஏற்பட, அவர் வேலூர்க்காரர் என்பதை அறிய முடிந்தது. ஒரு ஆள், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். மிகவும் சுறுசுறுப்பானவர். ஊருக்குப் பேத்தியைப் பார்க்கப் போறேன் என்று சொன்னபோது அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஊருக்குப் போய் திரும்பி வந்து விட்டார். இப்போது பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியும் சிலர்.

இதுவும் பேருந்து ஏறும் இடத்தில் பார்க்கும் நிகழ்வுதான். சில நாட்களாக நானும் நண்பரும் நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு பிலிப்பைனி வந்து நிற்பதும், பெண்கள் சிகரெட் விற்பனையில் இருக்க, சில ஆண்களே பெண்கள் சிகரெட்டை பிடிக்கும் போது இந்தப் பெண்ணோ ஆண்கள் சிகரெட்டை வாயில் வைத்து ஊது ஊது என்று ஊதுவாள். தள்ளி வாங்க விட்டா புகையால நம்மளைக் குளிப்பாட்டிருவா போலன்னு நண்பர் சொல்வார். அதே இடத்தில் சற்று தள்ளி ஒரு பெண்ணும் (ஆந்திரா) மூணு பசங்களும் அடிக்கும் லூட்டி இருக்கே.... அப்பப்பா எல்லாரும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். நம்ம ஊரா இருந்தா என்ன தங்கச்சி இப்பதான் லாத்துதுன்னு கொமட்டுல ரெண்டு குத்துவிடுவாங்க... இங்க எல்லாம் சகஜம்தானே... அதனால் அவங்க ஆட்டம் நிற்பதே இல்லை. இப்படியும் சிலர்.

இங்கு மலையாளியுடன் வேலை பார்த்தாலும் எகிப்துக்காரனுடன் வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமம். அவர்கள் வேலையே பார்க்கமாட்டார்கள். வேலை பார்ப்பவனை ஏறி மேய்வதும், போட்டுக் கொடுத்தலுமே அவர்கள் வேலை. அப்படிப்பட்ட கூட்டத்தில் முன்பு ஒரு நண்பருடன் வேலை செய்தேன். அவன் வேலை செய்யமாட்டான் என்றாலும் நமக்கு மிகவும் நெருக்கமாய் உதவி செய்பவனாகவும் இருந்தான். இப்போது ஒரு நண்பர் அதே போல்... மிகவும் நல்லவர்... இவர் எகிப்துக்காரரா என்று நினைக்கத் தோன்றும். இப்ப புதிதாய் ஒருத்தனும் எங்க புராஜெக்ட்டுக்கு வந்திருக்கான். இவன் நான் எகிப்துக்காரன்டா என வந்த உடனே நிரூபிச்சிட்டான். இப்படியும் சிலர்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்... பார்த்த பல மனிதர்களை. நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கதை மாந்தர்கள் இப்படி நிறைய உண்டு. தொடர்ந்து எழுதுங்கள்.....

ஸ்ரீராம். சொன்னது…

மனிதர்கள்... மனிதர்கள்....!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனுபவங்களை தொடர்கிறேன்...

G.M Balasubramaniam சொன்னது…

காணும் மனிதர்கள் எல்லோரிடமும் எழுத ஏதாவது கருப்பொருள் இருக்கும் கிடைக்கும்

iramuthusamy@gmail.com சொன்னது…

மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம். பன்னாட்டு மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் சுவாரஸ்யம்.

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு
தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
வாழ்த்துகள் நண்பரே

சிவபார்கவி சொன்னது…

Super