மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 5 பிப்ரவரி, 2018

அம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)

Related image

தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்கின் உபயோகிப்பது எப்படி என்பதைக் கூடச் சொல்லிக் கொடுக்கத் தயங்கும் பெற்றோரும் உண்டு. இன்றைய இணையம் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க யோசிப்பதைச் சொல்லிக் கொடுப்பதுடன் வேண்டாத விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து விடுகின்றன. அதுவே வயசுக் கோளாறில் வழி தவற வழி வகுக்கிறது.

லெட்சுமி குறும்படத்தில் இயந்திரத்தனமான வாழ்வில் இருந்து ஒரே ஒரு முறை ரசித்து வாழக்கூடிய வாழ்க்கைக்கு மாறுவாள் பாரதியார் பாடலுடன்... அது சொல்லிக் கொடுத்தது தவறான பாதை என்றாலும் முகநூலில் லெட்சுமி, ஆண்டாளைவிட அதிகம் ஆட்சி செய்ததை வைத்து அனைவரும் அறிவோம். அதே இயக்குநர் பதின்ம வயதில் செய்யும் தவறையும் தாயின் பரிதவிப்பையும் படமாக்கி சபாஷ் பெறுகிறார்.

இருவரும் உடலளவில் இணைதலே காதல் என்று நினைக்கும் பள்ளிக் குழந்தைகளின் எண்ணத்தால் நிகழும் பின் விளைவால் யாருக்குப் பாதிப்பு என்பதைச் சொல்லுக் கதை இது.

தன் மகளுக்கு எய்ட்ஸ் என்றதும் வீட்டை விட்டு விரட்டும் பெற்றோரை அருவியில் பார்த்தோம். இதில் தவறு செய்தால் அடித்து விரட்டுவதால் என்னாகப் போகிறது அரவணைத்துத் திருத்தி அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று சொல்கிறார்கள். ஒருமுறை பட்டுத் திருந்தினால் மறுபடியும் தவறு செய்யமாட்டார்கள் என்று சொல்வார்களே. அப்படிப் பட்டுத் திருந்தியவள் சிறகை விரிக்கும் கதை இது.

பத்தாவது படிக்கும் அம்மு (அனிகா), தன்னுடன் ஹாக்கி விளையாடும் ஹரி என்பவனுடன் ஏற்பட்ட பழக்கத்தில், காதல் என்றால் அது இதுதான் என தன் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்கிறாள்.  இது அம்மாவிடம் பின்னால் சொல்லப்படும் கதை.

விளையாடும் போது மயங்கி விழும் அம்மு, தன் சக தோழியிடம் உனக்கு நாள் தள்ளிப்போயிருக்கா என்று கேட்க, ஒரு நாள் ரெண்டு நாள் தள்ளிப் போயிருக்கு என்று சொல்கிறாள். இவளோ பதினைந்து நாள் தள்ளிப் போயிருக்கா..? எனத் திரும்பக் கேட்கும் போதே படம் பயணிக்கும் பாதையை அறிய முடிகிறது.

அம்மாவிடம் 'நான் கர்ப்பமா இருக்கேன் போலம்மா' எனச் சொல்லுமிடத்தில் இதயத்துடிப்பு அதிகமாகலாம் உங்களுக்கும் ஒரு பதின்ம வயதுப் பெண் இருக்கும் பட்சத்தில்.

அழுது அரற்றும் அம்மா (கனி கஸ்தூரி) அடித்துத் துவைத்து யாரடி அவன் என்று கேட்கிறாள். தன்னுடன் ஹாக்கி கிளாஸிற்கு வரும் ஹரி என்கிறாள். இந்த வயசுல உனக்கு... எங்களைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா... என்றெல்லாம் சராசரி அம்மாவாய் கேள்வி கேட்கிறாள். மகளோ தவறென்று அழுகிறாள். இது தவறென்பது இன்றைய நிலையில் அக்குழந்தைக்குத் தெரியாதா..?

கண்டிப்பான கணவனுக்குத் தெரியாமல் மகளின் கற்பத்தை மறைத்து வைக்கப் போராடுவதும் மகளை நினைத்து தனிமையில் அழுவதுமாய் பெத்த மனசு பாடாய்ப்படுகிறது. மகளோ அம்மா நான்தாம்மா தப்புப் பண்ணினேன்... நீ அழாதேம்மா... நீ அழுறதை என்னால பாக்க முடியலை எனப் புலம்புகிறாள். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து மருகித் தவிக்கிறாள். கணவன் வேலைக்குப் போய் விட்டு இரவு தாமதாமாக வீட்டுக்கு வருவதே முடங்கிக் கிடப்பதில் பிரச்சினைக்கு இடமில்லாமல் போகிறது.

அம்மாவின் அழுகையைப் போக்க, நீ என்ன சொன்னாலும் செய்யிறேன்மா என்று சொல்லப் போக, அம்மாவோ செத்துடு என்று சொல்லிச் செல்கிறாள். இரவில் மகள் கையை பிளேடால் அறுத்துக் கொள்வது போல் கனவு வர, பதறித் துடித்து எழுந்து ஓடிப் போய் மகளின் கட்டிலில் பார்த்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவளருகில் படுத்து நான் இருக்கேன் அம்மு என அணைத்துக் கொள்கிறாள்.

தன் மகளிடம் அவன் மட்டுதானா.. வேறு யாரும் இருந்தார்களா...? உன்னோட பிரண்ட்ஸ் யாரும் இருந்தாங்களா...? யார்க்கிட்டயும் சொன்னியா..? வீடியோ போட்டோ எடுத்தீங்களா..? அவன் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லியிருப்பானா...? என்று விசாரிக்கும் இடத்தில் ஒரு தாயின் தவிப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது.

அதேபோல் ஹரியைப் பார்த்து அம்மு இப்போ கர்ப்பமா இருக்கா என்று சொல்லி, உன்னை அறையணும்ன்னு வந்தேன் அறைஞ்சி என்னாகப் போகுது என்று கோபத்தைக் காட்டி அவனிடம் பேசிச் செல்லும் இடத்தில் ஒரு தாயின் வேதனையுடன் கோபமும் நம்முள்ளும்.

கணவனுக்குத் தெரியாமல் மகளை மருத்துவமனை கூட்டிச் செல்ல அவள் படும் பாடும், அம்மா இந்த குழந்தையை நாம வளப்போம்மா என்று சொல்லும் மகளிடம் வாழ்வின் நிதர்சனத்தை எடுத்துச் சொல்வதும், சின்ன வயதில் குழந்தை பெற்றால் என்ன நிலை என்பதை அம்மு பார்த்துத் தெரிந்து கொள்வதுடன் இந்த குழந்தை வேண்டாம்மா என்று சொல்வதும் குறும்படமாக இல்லாமல் வாழ்க்கைப் பாடமாக.

மகளின் மீது அதீத வெறுப்பில் 'செத்துப் போ' என்றும் அதே மகளின் மீதான அதீத பாசத்தில் 'ரொம்ப வலிக்காம' என மருத்துவரிடமும் சொல்லுமிடத்தில் அம்மா என்பவள் இப்படிப்பட்டவள்தான் என்பதை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளிக் கூடத்தில் இறக்கிவிட்டு 'வீட்டுக்குள்ள முடங்கிக் கிடந்தது போதும்... தப்ப ரெண்டு பேரும்தானே பண்ணுனீங்க... அவனைப் பாரு எதுவுமே நடக்காதது போல இருக்கான்... நீ மட்டும் எதுக்கு முடங்கிக் கிடக்கணும்... நீ இனி தப்புப் பண்ண மாட்டேன்னு அம்மாவுக்குத் தெரியும்... போ...' எனச் சொல்லுமிடத்தில் அம்மா ஜொலிக்க, அம்மு சிறகடித்துப் பறக்கிறாள்.

தவறு செய்து விட்டு 'சாரி' சொன்னால் எல்லாம் சரியாகிவிடும் என்பது ஆண்களின் குணம் என்பதை ஹரியும் காட்டுகிறான். எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்... சாரி சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு விளையாடப் போய் விடுகிறான். அவனுக்கு ஒரு குழந்தையின் வாழ்வில் விளையாண்டதும் விளையாட்டாய்த்தான்....

யார் ஹரி என்று கேட்கும் அம்மா, அவனைத் தேடி மைதானத்துக்கே செல்வதும், அவளைப் பார்த்ததும் அவன் ஓடி வருவதும் இடறல். கோழி வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டு மகளைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனை செல்வதாய்க் காட்டுவதும் இரவில் திரும்புவதும் கணவனுக்குத் தெரியாமல் போகுமா...? சின்னச் சின்ன தவறுகள் செய்தல் இயற்கைதானே.

அம்முவைப் பார்த்ததும் எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற யோசனை எழ, தீவிர யோசிப்பில் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜீத்தின் மகளாய் வருமே... அதே பாப்பாதான். செம நடிப்பு... அம்முவாய்... தவறு என்பதை அறியாமல் தவறு செய்துவிட்டு தவிக்கும் குழந்தையாய்... செம நடிப்பு.

அம்மாவாக வருபவரும் அம்முவை மிஞ்சும் நடிப்பில்... இவரும் மாடலிங்கிலும் நடிப்புத் துறையிலும் கலக்குபவர்தான். கேரளா கபே படத்தில் கலக்கலாய் நடித்திருப்பார். ஒரு தாயின் தவிப்பை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அழகி பட நந்திதாவை நினைவு படுத்தும் முகமும் நடிப்பும்.

இது போல் நடக்குமா...? எந்தத் தாய் ஊரைக் கூட்டாமல் தன் தவிப்பை தனக்குள் அடக்கி வைப்பாள்...? என்றெல்லாம் யோசிக்காமல் இதுபோல் நடந்தால் நல்லாயிருக்குமே என யோசிப்போமேயானால் 'மா' போற்றுதலுக்குரிய படம்.

அருமையான இயக்கம்... நேர்த்தியான வசனங்கள்... பார்ப்பவரை காட்சிகளோடு கட்டிப் போடும் இசை... மொத்ததில் எல்லாமே அருமை... படமும் கூட...

கௌதம் வாசுதேவமேனன் தயாரித்திருக்கிறார். ஷார்ஜன்(Sarjan) இயக்கியிருக்கிறார்.

எல்லா அம்மாக்களும்... அம்மாக்கள் மட்டுமல்ல... அப்பாக்களும்... ஏன் பெண் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம்.

படம் பார்த்ததும் எழுதணும்ன்னு தோணுச்சு... ராத்திரியே எழுதியாச்சு.

மா... படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

படம் காண இங்கு சொடுக்குங்கள்.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

ஒன்றும் சொல்வதற்கில்லை..

Menaga Sathia சொன்னது…

அருமையான விமர்சனம்,நானும் பார்த்தேன் போன வாரத்தில் இந்த படத்தை.....

Angel சொன்னது…

விமர்சனம் நல்லா இருக்கு .பார்த்துவிட்டு சொல்கிறேன் ..
இங்கே வெளிநாடுகளில் 11 வயது ஆகும்போது பள்ளிக்கூடங்களிலேயே கற்றுக்கொடுத்துவிடுவார்கள் .இப்போ அதையும் 8 வயதிலேயே சொல்லித்தர ஆலோசனை இருக்காம் ...நமக்குத்தான் அசோ குழந்தைகளுக்கு இது தேவையா இளம் வயதில் என்று தோன்றும் .ஆனால் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லதே .எல்லா குழந்தைகளும் தங்களை பாதுகாத்தஹுக்கொள்வது நல்லது .
சில வருடம் முன் மகள் பள்ளியில் கருக்கலைப்பு தேவை தேவையில்லை சரி தவறு என்ற தலைப்பில் debate நடந்தது அதில் அனைத்திலும் பெண்ணின் விருப்பம்தான் முக்கியம் விருப்பமில்லாமல் ஒரு குழந்தை யாரையோ கயவனால் ஒரு அப்பாவி பெண்ணுக்கு கொடுக்கப்பட்டால் (ரேப் விக்டிம் ) அப்போ அந்த கருவை கலைப்பதில் தவறில்லைன்னு பிள்ளைகளின் கருத்தை நான் பதிவாகி இருந்தேன் .ஒருவர் கன்னாபின்னானு திட்டு எனக்கு :) .

ஓவொரு தாய்க்கும் தானே தெரியும் மகளின் வேதனையும் அதன் வலியும் .பார்த்துவிட்டு கருத்தை மீண்டும் இங்கே கூறுகிறேன்

Angel சொன்னது…

பார்த்துவிட்டேன் .ஒரு தாயின் பரிதவிப்பு ஒன்றும் அறியாத அந்த குழந்தை /நாமளே வளர்ப்போமான்னு //கேட்கும் காட்சி
ஒரு குழந்தையின் வரவு சந்தோஷத்தை தருவதாக அமையனும் என்ற தாயின் பதில் எல்லாம் செம கலக்கல் .கண்டிப்பாக ஒவ்வொரு அம்மாவும் பதின்மத்தில் இருக்கும் பிள்ளைகளும் பார்க்கவேண்டியபடம் ..படத்தில் வந்த புரணி காட்சியும் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியஒன்று :) ஒரு கடையில் வாங்கிய பொருள் எப்படி அதுக்குள்ள காற்றுவழியே gossip பரவியிருக்கு பாருங்க :) நமக்கு தெரியாத புலப்படாத cctv க்கள் எங்கும் இருக்கு :)

ஸ்ரீராம். சொன்னது…

படத்தைவிட விமர்சனம் சொல்லும் செய்திகள் நல்லாயிருக்கே....

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துத் தெரிவித்த உறவுகளுக்கு நன்றி.

சுபா ரவீந்திரன் சொன்னது…

படத்தின் விமர்சனம் அருமையாக இருக்கு...வேதனையாகவும்...

iramuthusamy@gmail.com சொன்னது…

சிறப்பான விமர்சனம்.