மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 ஜனவரி, 2018

மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்

ந்தப் பதிவு 'சிவகாமி ஏமாற்றப்பட்டாளா?' என்ற கட்டுரை அகலுக்கு எழுதுவதற்கு முன்னர் எழுதியது. சில நாட்களாகவே எதிலும் ஒட்டுதல் இல்லை... வலைப்பக்கம் அதிகம் வரவில்லை... யாருக்கும் கருத்து இடவில்லை... எதுவும் எழுதவில்லை... சில கதைகள் எழுத நினைத்து எதிலும் நாட்டமின்றி... என்னவென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையில்தான் மனசு இருந்தது.

இன்னும் அப்படித்தான் நகர்கிறது... இந்த வெளிநாட்டு வாழ்க்கை மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.

இன்று காலை கணிப்பொறியில் பலவற்றை அழித்தபோது இந்தக் கட்டுரையும் அதில் வர, வாசித்துப் பார்த்து 'அட... எழுதியதை மறந்து விட்டோமோ' என்று நினைத்த போது சரி வலைப்பூவில் பதியலாமே... நாமும் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது பதியும் பதிவு மூலமாவது வலை உறவுகளுக்குச் சொல்வேமே என இங்கு பகிர்ந்தாச்சு.

அப்புறம் விஷால் பிறந்த தினத்துக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அவன் சார்பாகவும் நன்றி. உங்கள் வாழ்த்து அவனை நல்லவனாய் வளர்க்கட்டும்.

இனி கட்டுரைக்குள்....

Image result for சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் என் மனதில் முன்னணியில் நிற்பவர்கள் பரஞ்சோதியும் மாமல்லன் என்ற நரசிம்மவர்மப் பல்லவனும்தான்.

முரடனாக இருப்பதாலும் கல்வி அறிவு இல்லாததாலும் தன் மகளைக் கட்டிக் கொடுக்க மாமன் ஒத்துக்கொள்ளமாட்டான் என்பதால் கல்வி பயில சோழ தேசத்தின் திருச்செங்காட்டாங்குடியில் இருந்து காஞ்சிக்கு வரும் பரஞ்சோதி, காலத்தின் கோலத்தால் மகேந்திரவர்ம பல்லவரின் அன்புக்குப் பாத்திரமாகி அவரின் நேசத்துக்குரிய படைத்தலைவனாகி, பின்னாளில் பல்லவ இளவரசனான மாமல்லனின் நண்பனாகவும் சேனாதிபதியுமாகி  இரண்டாம் புலிகேசியை வென்ற போரில் முக்கியமானவராகிறார்.

மாமல்லனோ அப்பாவின் மீது அதீத பாசம் கொண்ட இளவரசனாய் இருந்து... தன்னை அப்பா போர்க்களத்துக்குப் போக விடமாட்டேங்கிறாரே... அரண்மனையில் பெண்களுடன் இருக்கச் சொல்லிவிட்டாரே என்று மனசுக்குள் குமைந்து கிடப்பவர், சேனாதிபதியாய் பரஞ்சோதி வந்த பின்னர் துர்வநீசனை எதிர்த்து படையுடன் போகச் சொல்லி மன்னரின் ஆணை வந்த பின் வெறி கொண்ட வேங்கையாய் பயணித்து...  தன் தந்தையின் சாவுக்கு காரணமான... சிவகாமியை தூக்கிச் சென்ற இரண்டாம் புலிகேசியை வாதாபியில் போய் வென்று வாதாபி கொண்டான் என்ற பட்டப் பெயர் பெறுகிறார்.

பரஞ்சோதி தன்னந்தனியாக கிளம்பி வரும்போது அவர் பின்னே பயணித்த மனசு, அவர் சிறையில் அடைபட்ட போது அவரோடு அடைபட்டு... விந்தியமலைக்கு குதிரையில் புறப்படும் போது அவருடன் பயணப்பட்டு... புலிகேசியிடம் ஓலையுடன் மாட்டிக் கொள்ளும் போது மாட்டி... பின்னர் மகேந்திரவர்மரிடம் படைத் தலைவனாகும் போது அந்த படைத் தலைவனோடு பயணப்பட்ட மனசு...  போரை வெறுத்து சிவபக்தராய் அவர் மாறும் வரை அவர் பின்னே தொடர்கிறதா..? என்ற கேள்வி எழும்போது என்னைப் பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது.

ஏன் தொடரவில்லை... தம்பி கலியுகம் தினேஷ் கூட பரஞ்சோதி பின்னே பயணித்தேன் என்று சொன்னானே... பின் ஏன் நம் மனம் பயணிக்கவில்லை...?

பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் பின்னால் பயணித்த மனசு... உடையாரில் இராஜராஜசோழன் பின்னால் பயணித்த மனசு... சாண்டில்யனின் நாவல்களில் பெரும்பாலும் கதை நாயகர்களுடன் பயணித்த மனசு... இதில் மட்டும் ஏன் நாயகனான பரஞ்சோதி பின்னே பயணிக்கவில்லை... என்று யோசித்தால்... அந்த யோசனையின் பின்னே மாமல்லன். ஆம் மாமல்லனேதான்.

சிவகாமியைக் காதலிக்கிற... அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத... இளவரசன் மாமல்லன்... ஒரு சாதாரண காதலனாக, அப்பாவின் மீது நேசம் கொண்டவராக இருக்கும் வரை தமிழ்ப்பட நாயகன் போலத்தான் தெரிகிறார். ஆதர்ஷ நாயகனாக இல்லை.  எப்போது துர்விநீசனை புறமுதுகிட்டு ஓடச் செய்கிறாரோ... காஞ்சிக் கோட்டை பாதுகாப்பில் அவரின் திறமையை இரண்டாம் புலிகேசி வியந்து நோக்குகிறானோ அப்போது அதுவரை பரஞ்சோதி பின்னே பயணித்த மனசு மெல்ல மெல்ல மாமல்லன் பின்னே பயணிக்க ஆரம்பிக்கிறது.

ஒருவர் காதலியின் சபதத்துக்காக ஒரு அரசனை வெற்றி கொள்ள ஒன்பதாண்டுகள் படை பலத்தை திரட்டி, இங்கிருந்து வாதாபி நோக்கிச் சென்று தன் தோழனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியின் திறமையைப் பயன்படுத்தி வெற்றி பெறுகிறான் என்றால் எப்படிப்பட்ட வைராக்கியமான மனசு அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. 

அப்படி நினைத்தாலும்... தன் தந்தை சொன்னார் என்பதற்காக காதலியைக் காப்பாற்ற படையெடுத்துச் செல்வதாக கதையின் போக்கில் இருந்தாலும் தன் தந்தையின் மரணத்துக்கு காரணமாய் இருந்தவனை வெல்ல வேண்டும் என்ற வெறியே அவருக்குள் உண்மையில் இருந்திருக்க வேண்டும். அந்த வெறி கொடுத்த வேகம்தான் வாதாபி வரை செல்லச் சொல்லியிருக்கிறது. காதல் இரண்டாம்பட்சம்தான் என்பதே என் எண்ணம். அதுவும் சிவகாமி கதாபாத்திரம் என்பது நாவலின் சுவை கூட்டத்தான் இல்லையா...

மல்லர்களை வென்று மாமல்லன் என்ற பட்டப்பெயர் பெற்றிருந்த போதிலும் தன் தந்தையின் ஆணைப்படி துர்விநீசனை வென்று தன் வெற்றித் தீபத்தை ஏற்றி வைத்த மாமல்லர் வாதாபியை தீக்கிரையிட்டு அங்கு தன் சிங்கக் கொடியை பறக்க விட்டதில் தீபத்தை மேலும் அழகாக எறிய வைத்து தன் வாழ்நாளில் தோல்வியே காணாத இந்திய மன்னர்கள் 12 பேரில் ஒருவராய் திகழ்ந்திருக்கிறார். நரசிம்மவர்ம பல்லவனைப் பற்றி செய்திகள் அறியும் விதமாக தேடியபோது கிடைத்த விபரம் இது. இராஜராஜன், ராஜேந்திரன் போல் இவரின் வீரமும்தான் எத்தகையது என்ற வியப்பு நமக்குள் ஏற்படுகிறது.

தான் கட்டிக் கொள்ள நினைத்த திருவெண்காடு நங்கையை மகேந்திரரின் ஆசியுடன் திருமணம் செய்து கொள்கிறார் பரஞ்சோதி, ஆனால் மாமல்லனோ உயிருக்கு உயிராய் காதலித்த நாட்டிய மங்கை... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி, வாதாபிச் சிறையில்  இருக்கும் போது தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல் பாண்டிய இளவரசி வனமாதேவியை மணமுடிக்கிறார். இந்த இடத்தில் மாமல்லனைவிட பரஞ்சோதி உயர்ந்து நிற்கிறார்.

வாதாபி நோக்கிச் செல்லும் போது மாமல்லருடன் பலர் இருந்தாலும் மாமல்லரின் புத்தி சாதூர்யமும் பரஞ்சோதியின் திறமையும் சேர்ந்தே வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை மாமல்லருக்குப் பெற்றுத் தருகிறது. இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும். தமிழர்கள் வீரத்திலும் தீரத்திலும் நிகரில்லாதவர்கள் என்பதை பறைசாற்றும் வெற்றியாகும். காஞ்சிக்கு தேடி வந்து வெல்ல முடியாமல் நட்பு போற்றி, கேவலமாக நடந்து கொண்ட புலிகேசியை அவன் தலைநகரில் வைத்துச் சாய்த்து வெற்றி கொள்ள எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் பரஞ்சோதியுடன் பயணிக்கும் மனசு பின்னர் மாமல்லருடன் பயணித்து வாதாபி நோக்கிச் செல்லும் போது இருவருடனும் பயணிக்கிறது,

வாதாபி போருடன் சிவனடியாராகிவிடும் பரஞ்சோதி பின்னாளில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக, சிறுதொண்டராக மாறும் போது நம் மனதில் நிறைந்து நிற்கிறார் என்றாலும் மாமல்லர் தன் வீரத்தாலும் திறமையாலும் அவரோடு இணைந்தே நம்முள் நிற்கிறார்.

மொத்தத்தில் மாமல்லர் பாதி, பரஞ்சோதி பாதியாய் பயணித்து இருவரோடும் கதையின் முடிவில் இணைய வைக்கிறது கல்கியின் எழுத்து.

****

பிரதிலிபி போட்டியில் இருக்கும் கட்டுரை வாசிக்க 'இங்கு' சொடுக்குங்கள்.

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல ஒப்பீடு. சிவகாமியின் சபதம் கதையின் தொடர்ச்சியாய் இந்தக் கதை என்று ஒன்றை புத்தகக் கண்காட்சியில் பார்த்த நினைவு. கைலாசம் அவர்களோ, அனுஷா வெங்கடேஷோ... இருவரில் ஒருவர் எழுதியது...

iramuthusamy@gmail.com சொன்னது…

Good Analysis.