மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

மனசு பேசுகிறது : 2017 - 2018

2017 - ஆம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் கொடுத்து விடவில்லை.   நினைத்தது எதுவும் நடந்து விடவும் இல்லை நடந்து எதுவும் நினைவில் வைக்கும்படியும் இல்லை.

ஆண்டின் ஆரம்பமே விரிசலைக் கொடுத்தது. கஷ்டத்தின் இறுதி வரைக்கும் கொண்டு சென்று நிறுத்தி வைத்து நகர்ந்து செல்கிறது. கடந்து செல்ல வைக்குமா இல்லை இன்னும் இதிலேயே நிறுத்தி வைக்குமா வர இருக்கும் ஆண்டு என்பது தெரியவில்லை.

வருடத்தின் ஆரம்பத்தில் அறை மாற்றம்... இப்போது சிறிய அறை என்றாலும் மனதளவில் நிம்மதியாய்.

எழுத்தில் எதையும் சாதித்து விடவில்லை. எங்கள் பிளாக்கில் இரண்டு முறை கதை எழுதும் வாய்ப்பை ஸ்ரீராம் அண்ணா கொடுத்தார். 

பிரதிலிபி போட்டிகளுக்கு எழுதிய கதைகள், கட்டுரைகள் வாசகர் பார்வையில் சிறப்பான இடத்தைப் பிடித்தன என்றாலும் பரிசுக்குறிய கதைகளாக முன்னிற்கவில்லை. இன்னும் எழுத்தில் பட்டை தீட்ட வேண்டும் என்பதையே அது காட்டியது.

தினமணிக் கதிரில் சிறுகதை வெளியானது.

அபுதாபியில் இருக்கும் கனவுப்பிரியன், பிரபு கங்காதரன், சுபஹான் பாய் என சில உறவுகளுடன் ஊர் சுற்றி கொஞ்சம் இலக்கியம் பேசி, நிறைய புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தோம்.

உடல் நிலையில் சில பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

அலுவலகத்தில் நடப்பு புராஜெக்ட் முள் மீது நடப்பது போலத்தான் இருக்கிறது. 2018-ல் இந்தப் புராஜெக்டின் நிலை என்னாகும் என்பதே கேள்விக்குறியாய்த்தான் இருக்கிறது.

நிறைய எழுத வேண்டும் என நினைத்தும் மனசு சந்தோஷமில்லாத நிலையில் எழுதாமலே விட்டவை அதிகமாய்.

நிறைய தமிழ், மலையாள சினிமாக்களைப் பார்த்தேன். 

குடந்தை சரவணன் அண்ணாவின் 'திருமண ஒத்திகை'க்கு அணிந்துரை எழுதிக் கொடுத்தேன்.

அதிகமில்லை என்றாலும் கொஞ்சமாவது வாசித்தேன்.

முத்துநிலவன் ஐயா சிறுகதை எழுத்தாளனாய் என்னைச்  சொல்லியிருந்தார்.

அகல் 2017 விருதுகளில் சிறுகதை ஆசிரியனாய்... கிராமத்து எழுத்துக்கு சொந்தக்காரனாய் எனக்கும் விருது கொடுத்திருக்கிறார் அதன் ஆசிரியர் சத்யா.

பாக்யா மக்கள் மனசு பகுதியில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து நாலைந்து மணி நேரம் இலக்கியம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

கடந்து இரண்டு மாதமாக மரண எண்ணத்தை அதிகம் விதைத்த பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த வருடம் நண்பர்களின் தளங்களை வாசித்தாலும் கருத்து இட முடியாத நிலை. என் கணிப்பொறி இன்னும் அப்படியே... 

எழுத்தை புத்தகமாக்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த வருடங்களைப் போல் குளத்தில் போட்ட கல்லாய்த்தான் கிடக்கிறது.

கடன்களில் இருந்து மீண்டு விடுவோம் என்பது கனவாகவே இருக்கிறது. இதுவே நிறைய பிரச்சினைகளின் ஆணி வேராய் நிற்கிறது.

உறவுகள் அருகிருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு என்றாலும் உறவுகள் உதாசீனப்படுத்துவதும் நம்மிடம் சொல்லாமலே காரியங்கள் செய்வதும் இன்னும் தொடர்வது வேதனை அளிக்கிறது. கிட்டப் போனாலும் எட்டியே வைக்கும் உறவுகள் என்று மாறுவார்கள்.

வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு... அடித்துத் துவைத்து... காயப்போட்டு... காயும் முன்னே நகர்ந்து செல்லும் 2017-ன் பின்னே மெல்ல வந்து கொண்டிருக்கும் 2018 என்னைக் காயவைத்து அழகு பார்க்குமா அல்லது மீண்டும் துவைத்துக் காயப்போடுமா என்பது தெரியவில்லை.

மனசு இணைய மின்னிதழ் தொடங்கும் ஆசை ஒன்று எழுந்து மீண்டும் அடங்கியிருக்கிறது. 2018 அதை ஆரம்பித்து வைக்கிறதா என்று பார்க்கலாம் 

2018 வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்காவிட்டாலும் கடனில் இருந்து மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்ற ஆசையோடும் அடியெடுத்து வைக்கிறேன்.




2017 - ல் சில நட்புக்கள் குறித்து...

தினமும் பதிவு என்ற முறையில் கலக்கலாய் வலைப்பூவை நடத்தி வரும் ஸ்ரீராம் அண்ணனுக்குப் பூங்கொத்து.

எத்தனை வேலை இருந்தாலும் அவ்வப்போது சிறப்பான பதிவுகளுடன் வலம் வரும் கரந்தை ஜெயக்குமார் ஐயாவுக்குப் பூங்கொத்து.

அதிகம் எழுதவில்லை என்றாலும் கருத்துக்களில் அதிகம் எழுதி ஊக்குவிக்கும் துளசி அண்ணா கீதா அக்காவுக்குப் பூங்கொத்து.

தன் பாணியில் எப்பவும் போல் அடித்து ஆடும் கில்லர்ஜி அண்ணனுக்குப் பூங்கொத்து.

பயணக் கட்டுரைகளில் புகைப்படங்களால் நம்மைக் கவரும் வெங்கட் நாகராஜ் அண்ணனுக்குப் பூங்கொத்து.

கவிதைகளில் கதை பேசும் மீரா செல்வக்குமார் அண்ணனுக்குப் பூங்கொத்து.

கலக்கலாய் பதிவெழுதித் தள்ளும் தேனம்மை அக்காவுக்குப் பூங்கொத்து.

ஆன்மீகக் கட்டுரைகள் என்றால் எங்க துரை செல்வராஜூ ஐயாதான்... அவருக்கும் பூங்கொத்து.

இவர்கள் தவிர்த்து என்னை வாசிக்கும் நான் வாசிக்கும் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அன்பின் பூங்கொத்தும்.

அனைவரின் வாழ்வையும் சிறக்க வைக்கட்டும் 2018.

2018-ஐ வரவேற்போம்.
-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வரும் வருடம் உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நல்லதாகவே அமையட்டும்....

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

என்னையும் பதிவில் குறிப்பிட்டிருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

யுவராணி தமிழரசன் சொன்னது…

பிரச்சனை எதுவாகினும் நம்மை நன்மையை, நல்ல வாழ்க்கையை நோக்கி தாமதித்தாலும் பொறுமையோடு நகர்த்தக்கூடிய ஒரே விஷயம் நம்பிக்கை... அதை என்றும் இழந்துவிடாதீர்கள் அண்ணா.. உங்கள் நம்பிக்கை போல் அனைத்தையும் நீங்கள் 2018 ஆம் ஆண்டில் அடைய வாழ்த்துக்கள்.. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மனோ சாமிநாதன் சொன்னது…

2018ல் தங்கள் பிரச்சினைகள், அயற்சி குறைந்து, உடல் நலம் முழுமையாக தேறி, கனவுகள் அனைத்தும் இனிதாய் நிறைவேற இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.உங்கள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து, உடல் மற்றும் உள நலன் எல்லாம் நன்றாய் ஆகி, தங்களின் எழுத்துகள் மீண்டும் வலம் வந்து கனவுகள் எல்லாம் நிறைவேறிடவும், தங்களின் மனைவியின் உடல் நலனும் தேறி குழந்தைகளும் எல்லோரு மகிழ்வுடன் வாழ்ந்திட உங்களுக்கும் எங்களுக்கும் மனதிற்குகந்த அந்த அழகு முருகனின் அருளுடன் கூடிய புத்தாண்டு வாழ்த்துகள்!

எங்களையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி குமார்...துளசி ஊரில் இருப்பதால் அவரால் பதிவுகள் வாசிக்க இயலவில்லை. எல்லோருக்கும் வாழ்த்துகள் சொல்லச் சொல்லியிருந்தார்...

கீதா

Angel சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .வரப்போகும் ஆண்டு நன்மையை எல்லா வளங்களையும் தர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

ஸ்ரீராம். சொன்னது…

இந்த வருடமும் அவ்வப்போது உங்கள் கதைகளை வெளியிடும் சந்தர்ப்பத்தை எங்களுக்குக் கொடுங்கள் குமார்.

உங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இளமதி சொன்னது…

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!

எல்லாம் நலமாக வளமாக மகிழ்வு நிறைய என் வாழ்த்துக்கள்!
நம்பிக்கைதானே வாழ்க்கை. அது எப்பொழுதும் உடனிருக்க
நிகழ்வுகள் சிறந்திடும். வெற்றியைத் தரும்.

வாழ்த்துக்கள் சகோ!

துரை செல்வராஜூ சொன்னது…

நலம் பெருகட்டும்..
நன்மைகளும் சூழட்டும்..

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

G.M Balasubramaniam சொன்னது…

எதிலும் திருப்தி அடைவதில்லை மனித மனம் இன்னும் .....இன்னும் ...இன்னும்தான்

ராமலக்ஷ்மி சொன்னது…

வருகிற ஆண்டு உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து கனவுகள் மெய்ப்படட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

பூ விழி சொன்னது…

இனிய புத்தாண்டாய் வரும் ஆண்டு தங்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடைய வாழ்த்துக்கள்

சாரதா சமையல் சொன்னது…

தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Anuprem சொன்னது…

இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இந்த ஆண்டு உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் என்று நம்புவோம். நேர்மறை எண்ணங்கள் நம் திட்டங்களுக்கு அடித்தளமாக அமையட்டும். நம்பிக்கை தளரவேண்டாம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

iramuthusamy@gmail.com சொன்னது…

பரிவை சே.குமார் அவர்களுக்கு வணக்கம்

நான் முத்துசாமி. சென்னை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

இன்று தங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். அமீரகம் பற்றிய சுவாரஸ்யமான பதிவுகளை விரும்பிப் படித்தேன். என் பதிவுகளையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

https://agharam.wordpress.com

முடிந்தால் வருகைதர வேண்டுகிறேன்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வந்த இப்புத்தாண்டு தங்கள் வாழ்வின் பிரச்சனைகளை அகற்றி, சந்தோஷங்களை அளித்து,ஆரோக்கியமாக வாழ வழி வகுத்து தங்கள் கனவுகளையும் வெகு விரைவில் நனவாக்கித் தரவேண்டுமென ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

நன்றியுடன்
கமலாஹரிஹரன்