மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 4 நவம்பர், 2017

சினிமா : மேயாத சண்டே

வேலைக்குப் போறோம்... அறைக்குத் திரும்புகிறோம்... வீட்டுக்குப் பேசுறோம்... சமைக்கிறோம்... சாப்பிடுறோம்... படுத்து எழுந்து மீண்டும் வேலைக்குப் போறோம் இப்படியான வாழ்க்கை என்பது வாங்கி வந்த மோசமான வரம் என்பதை அனுபவிப்பவர்கள் மட்டுமே உணர முடியும்.

என்னைப் போன்றோருக்கு எழுத்தும் வாசிப்பும் கைகொடுப்பதால் கொஞ்சம் பரவாயில்லை.... மனைவியிடம் புலம்புவதைத் தவிர்த்து மக்களிடமும் புலம்ப முடிகிறது...:) என் அறை நண்பர்களை நினைத்துப் பார்ப்பேன்... ஊருக்குப் பேசிவிட்டு படம் பார்த்தே விடுமுறைகளைக் கழிக்கும் இந்த வாழ்க்கைக்கு அவர்கள் எப்போதோ பழகி விட்டார்கள். வெறென்ன செய்ய முடியும்../ வெளிநாட்டு வாழ்க்கையில் கணிப்பொறியும் செல்போனுமே இங்கு கண்கண்ட முருகனும் முனீஸ்வரனுமாய்...

நான் உள்பட எல்லாருக்குமே சினிமாதான் இங்கு மிக முக்கிய பொழுது போக்கு... சென்ற வார இறுதி நிகழ்வு போல் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே இதில் இருந்து விலகியிருக்க முடியும். நேற்று மாலை ஷார்ஜாவின் ஸ்டாலில் பேச்சுக்கேட்க அண்ணன்கள் சுபானும் கனவுப்பிரியனும் அழைப்பு விடுத்தார்கள். போகும் எண்ணமில்லாததால் செல்லவில்லை.

முன்பு சொந்தங்கள் சொந்தங்களாய் இருந்தபோது விடுமுறை தினங்கள் எல்லாம் சுற்றோ சுற்று என்று சுற்றினோம்.யுஏஇ-யில் இருக்கும் கடற்கரையெல்லாம் குளித்து மகிழ்ந்தோம். இப்போ எல்லாம் மாறியாச்சு... அறைக்குள் ரொட்டீனாய் நிகழும் நிகழ்வில் எப்படியும் படம் பார்ப்பது என்பதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த இரண்டு பதிவுகள் எழுத்து குறித்தான பகிர்வாய் மலர்ந்ததில் அதிகம் பேர் வாசித்திருக்கிறார்கள். போன பதிவு பிரதிலிபி போட்டி குறித்தான பதிவுதான்... சாதாரண சுண்டலைக் கொடுப்பதை விட வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்துக் கொடுத்தால் சுவை கூடும் என்பதால் நண்பரின் பேச்சையும் இணைத்தேன். அதனால் பலர் நான் வருத்த நிலையில் இருப்பதாய் நினைத்து விட்டார்கள். வருத்தமெல்லாம் எழுத்தில் இல்லை.

இராய. செல்லப்பா ஐயா அவர்கள் என் எழுத்து குறித்துச் சொன்ன கருத்து எப்படியோ காணாமல் போய்விட்டது. பெரும் பெரும் பத்திகளாய் எழுதுவது வாசிப்பவர்களை அயற்சிக்குள்ளாக்கும் என்று சொல்லியிருந்தார். நானும் யோசித்ததுண்டு என்றாலும் இதுவரை அதைச் செய்யவில்லை. இனிமேல் எழுதும் பதிவுகளில் பத்தியைச் சின்னதாக்க வேண்டும். இதில் முயற்சித்திருக்கிறேன்... :)

இரண்டு பதிவுகள் இறுக்கமாய் அமைந்து விட்டபடியால் இந்தப் பதிவு பார்த்த சினிமாக்கள் குறித்து மட்டுமே. நிறைய உலக சினிமாக்கள் பார்த்தாலும் அது குறித்து எழுதும் அறிவு இல்லாத காரணத்தால் உள்ளூர் சினிமாக்கல் பற்றிய கிறுக்கலே இது.

குறிப்பாக புதுப்படங்களை தரமானதாய் தமிழ்க்கண், தமிழ்யோகி, தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்கள் கொடுக்க, அதுவும் மெர்சலை நம்மூரில் முதல் காட்சி ஓடும் முன்னரே நல்ல தரத்தில் கொடுத்தார்கள்... இங்கு இணைய வேகமும் சிறப்பு என்பதால் படம் பார்ப்பதில் சிரமமிருப்பதில்லை.
Image result for மேயாத மான்
மேயாத மான் - மெர்சல் என்ற மாஸ் நாயகனின் படத்துடன் வந்த சாதாரணமான படம் இது. தமிழிசைகளில் அரசாட்சியில் மெர்சல் ஹிட் அடிக்க, மேயாத மான் மேயாதமானாகவே... இதற்கிடையில் க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் கதை வேறு சென்னையில் ஒருநாள் - 2ஆம் பாகமாய் விறுவிறுப்புக் களம் அமைக்க, இரண்டுக்கும் இடையில் மாட்டிய மான்... மிக நல்ல படம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..? 

காதல் தோல்வி... சாவு வரை அழைத்துச் செல்ல கெட்டபொண்ணுடா அவன்னு சொல்லி, அவளை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் தண்ணியின் அணைப்பில் புலம்புபவனாய் நாயகன். இந்தக் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கானது... வைபவ் நிறைவாய் செய்திருந்தாலும் பல இடங்களில் அவர் காட்சியோடு ஒட்டவில்லை. வி.சேயாக இருந்திருந்தால் அடி தூள்தான்.

நாயகி ப்ரியா பவானி சங்கர் செம... நடிப்பிலும். அவருக்கு இப்போ கார்த்தி, விஜய் சேதுபதி என வரிசையாய் படங்கள்... நாயகனின் நண்பன் ரொம்ப அருமையாக நடித்திருக்கிறார். தங்கையாக வரும் பெண் அசத்தல்... ஒரு குத்தாட்டத்தில் கலக்கி எடுத்திருப்பார். பாடல்கள் நன்று.

மேயாத மான் நம் மனதை ஆனந்தமாய் மேயும்.
Image result for Deepti Sati
புள்ளிக்காரன் ஸ்டாரா (PULLIKKARAN STARAA) - மம்முட்டி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வரும் ஆசிரியர். அவர் பிறந்ததும் தூக்கிக் கொண்டு வரும் நர்சின் மார்பின் மீது கை பட, இவன் பெரிய பெண் பித்தனாவான் என திருவாய் மலர்கிறார். அதன் தொடர்சியாக எதார்த்தமாக நடக்கும் எல்லாமே நர்ஸ் சொன்னதாய் அமைய, பட்டப்பெயரும் வர, வயசாகியும் பெண்களுக்கு இவர் மீது பற்று வராத காரணத்தால் திருமணமாகவில்லை.

திருமணமாகி விவாகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆசிரியையும்... மம்முட்டியோடு பள்ளியில் கூடப் படித்த, ஆங்கிலமே அறியாத அந்தப் பள்ளியில் பிரசண்ட் சார் என ஆங்கிலம் பேசிய, இவர் காதல் வயப்பட்டு (அதாவது அஞ்சாப்பு, ஆறாப்புல) நண்பன் மூலம் காதலைச் சொல்ல, அவரோ லவ் இருக்கான்னு கேட்டதற்கு 'மே பி' என்க, தவறான புரிதலால் காதல் கை கூடாத வருமானமான ஆஷா சரத்தும், காதலனுடன் ஓட நினைத்து இரயில் ஏறி, காதலன் பாதியில் காணாமல் போக, தற்கொலை செய்து கொள்ள முயன்று, தன்னால் காப்பாற்றி அழைத்து வரப்பட்ட இளம்பெண் தீப்தியும் அவர் வாழ்வில் என்ன மாற்றத்தை உண்டு பண்ணினார்கள் என்பதே கதை.

மம்முட்டியின் காதல் ஆஷா மீதா... தீப்தி மீதா... என்பதையும் அவர்கள் வாழ்வின் நிகழ்வுகளை சுபமாக்க அவர் என்ன முயற்சிகள் மேற்கொண்டார் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.. பள்ளி, ஆசிரியர்கள் பயிற்சி, நண்பன், பக்கத்து வீட்டுப் பெரிசு, வாட்ஸ்மேனுடன் அடிக்கும் லூட்டி, எல்லாத்துக்கும் சொல்லும் கதை என படம் நகர்கிறது.

மோசமான வசனங்கள்... குடும்பத்துடன் பார்க்க முடியாது... என் நண்பன் குடும்பத்துடன் போயிட்டு பாதியில வந்துட்டான் என்றெல்லாம் அறை நண்பரான மலையாளி சொன்னார். அப்படி ஒண்ணும் ஆபாச வசனங்கள் இல்லை. தமிழ் படங்களில் பார்க்காத வசனமா...? நாம் குடும்பத்தோடு பார்த்து கை தட்டி சிரிக்க வில்லையா...? சந்தானம் படங்களில் பேசுவதை விடவா...?

கொஞ்சூண்டு வசனத்துக்கே குடும்பத்துடன் பார்க்க முடியாது என்றால் தமிழ் படங்களை எல்லாம் சுத்தமாகவே பார்க்க முடியாது.  ஆஷா சொல்ல வேண்டியதில்லை.... நடிப்பு ராட்சஸி என்பதை அறிவோம்... தற்போது ஆஷா இல்லாத படமே இல்லை என்பதாய் ஆகிவிட்டது மலையாள சினிமா. இளம் நாயகியாய் வரும் தீப்தியும் நடிப்பில் சோடை போகவில்லை.... அழகி.

மம்முட்டியை பிடிக்கும் என்றால் தைரியமாகப் பார்க்கலாம். எனக்குப் பிடித்திருந்தது.
Related image
தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும் (THONDIMUTHALUM DRIKSAKSHIYUM ) - காதல் கணவனுடன் பேருந்தில் செல்லும் நாயகியின் தாலிச் செயினைத் திருடி விழுங்கிவிடும் திருடனைப் பிடித்து போலீசில் ஒப்படைக்க, அதன் பின் காவல் நிலையத்தில் நடக்கும் கதையே இது.

காதல் ஜோடியான சூரஜ் வெஞ்சிரமோடும் நிமிஷாவும் தங்கள் வாழ்வைத் தொடங்க காசர்கோடு போகும் போது நிகழும் செயின் பறிப்பே கதையின் முக்கியக் களம். அந்தச் சங்கிலியை எடுக்கவில்லை என திருடனான பஹத் பாசில் சாதிக்க, அவனை அடித்துத் துவைத்துப் பார்த்து ஸ்கேன் செய்து வயிற்றில் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

விழுங்கிய செயினை எடுக்க அவனுக்கு சாப்பாடும் தண்ணியும் கொடுத்து வெளிய இருக்க வைத்து தேடுகிறார்கள். ஊரில் பிள்ளைகள் எதையாவது விழுங்கிவிட்டால் மறுநாள் வெளிய போகும் போது வந்துவிட்டதா எனப் பார்ப்பார்களே அப்படி.

அப்படி வெளிய இருக்கச் செல்லும் ஒருநாளில் தப்பியோட, அவனை விரட்டும் போலீசால் பிடிக்க முடியாமல் போக, காவல் நிலையம் அல்லோலப்படுகிறது. போலீசாரெல்லாம் பிடிக்க முடியாத பஹத்தை நகையைப் பறிகொடுத்த சூரஜ் பிடிக்க போலீஸ் பிடித்ததாய் மார்தட்டுகிறது.

இதற்கிடையே நாயகனுக்கும் நாயகிக்கும் அலைச்சலுடன் செலவும்... கேஸ் ராப்பரி கேஸாக மாறி போலீசின் சோடனையுடன் நீதிமன்றம் செல்ல இருக்கிறது. திருடன் என்ன செய்தான்...? நகை என்ன ஆனது...? என்பதை ஒரு நிஜ காவல் நிலையத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பது போல் எடுத்திருப்பது சிறப்பு.

நிமிஷாவுக்கு முதல் படம்... தேர்ந்த நடிப்பு... சூரஜை மிகச் சிறந்த காமெடியனாகப் பார்த்த நமக்கு ரொம்ப அமைதியாய்... தாலிச் செயினுக்காக அலையும் மனிதனாய் பார்க்கும் போது அட போட வைக்கிறார்.

எஸ்.ஐ. ஆக வருபவர் சிறப்பு... எஸ்.ஐ. உள்பட நடித்திருந்த காவலர்களில் 90% பேர் உண்மையான காவலர்களே என்பதால் அவர்கள் நடிப்பதாய் தெரியவில்லை... உண்மையான ஒரு காவல் நிலைய நிகழ்வுகளாகவே பார்க்க முடிகிறது.

எல்லாரும் ஆஹா... ஓஹோ என்று சொன்ன படம்தான் என்றாலும் மிக மெதுவாய் நகரும் படம் சில நேரங்களில் அலுப்புத் தட்டுகிறது. மற்றபடி படம் பார்க்கலாம்... ஒரு சின்ன கதையை மலையாள இயக்குநர்கள் எப்படி சிறப்பான திரைக்கதையாக மாற்றுகிறார்கள் என்பதை கண்டு வியந்தும் போகலாம்.

நான் பஹத்தின் படங்களின் ரசிகன் என்றாலும் இந்த இயக்குநரின் செருப்புப் போட மாட்டேன் என்று சொன்ன மகேஷிண்டே பிரதிகாரத்தை விட இது மாற்றுக் குறைவுதான்.

செமப்படம்ன்னு ஆளாளுக்கு பில்டப் கொடுத்தாங்க... நம்ம பாலுமகேந்திராவின் வீடு படத்தை இப்பப் பார்த்தா என்ன பீல் ஆவோமோ அப்படித்தான் டிராமாத்தனமான மெல்ல நகழும் காட்சிகள். பஹத்தின் மற்ற படங்களைவிட இது ஒன்றும் மேலானதாக தெரியவில்லை என்றாலும் சூரஜின் தேர்ந்த நடிப்புக்காகப் பாருங்கள். கண்டிப்பாக சூரஜ், நிமிஷா, பஹத், அந்த எஸ்.ஐ எல்லாரும் உங்களைக் கவர்வார்கள்.
Related image
ண்டே ஹாலிடே (SUNDAY HOLIDAY) - கையில் கதையை வைத்துக் கொண்டு இயக்குநரிடம் கதை சொல்ல அலையும் கல்லூரி ஆசிரியரான சீனிவாசன், பிரபல இயக்குநர் லால் ஜோசை விடாது விரட்டிப் பிடித்து சொல்லும் கதையே படமாய் விரிகிறது. இதில் ஆஷா சரத் டாக்டராய்...

தன்னைக் காதலித்து நல்ல மாப்பிள்ளை வந்த போது சம்மதித்து காதலை கசக்கி எறியும் சுருதி ராமச்சந்திரனை மறக்க, தோல்வியில் இருந்து மீள, நாயகன் ஆசிப் அலியை வேறு ஊருக்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார் அவனின் அப்பா. அங்கு அவன் சந்திக்கும் சேல்ஸ் பெண்ணான அபர்ணா பாலமுரளியுடன் ஆரம்பத்தில் பிரச்சினையாகி பின்னர் நல்ல நண்பனாகிறான்.

அவளைப் பற்றி ஒவ்வொன்றாக அறிந்து காதல் வயப்பட்டாலும் அவன் சொல்லவில்லை. அதேபோல் அவளுக்குள்ளும். அவனுடன் இருக்கும் நண்பர்களின் லூட்டிகள்... வில்லனைப் போல் முதலில் மோதும் பக்கத்து வீட்டுக்காரன் பின்னர் மிக நல்லவனாய் நட்பாய்... அதேபோல் அவள் தங்கியிருக்கும் வீட்டாரின் அன்பு... அவர்களின் பதின்ம வயதுப் பையனின் காமப்பார்வை... அபர்ணாவை திருமணம் செய்து கொள் எனப் பின்னாலேயே திரியும் காண்ட்ராக்டர்  என படம் விரிகிறது.

கிளைமேக்ஸ் காட்சியில் தான் வேறு ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டாலும் அவன் தன் நினைவாகவே இருப்பான்... இருக்க வேண்டும் என நினைக்கும் ஸ்ருதி போன்றவர்களுக்கு செமையாக் கொடுக்கிறார்கள்.

இதையெல்லாம் விட சீனிவாசனின் கதையை தானே படமெடுப்பதாக லால் ஜோஸ் சொல்ல, கதை கேட்கவே முடியாது எனச் சொன்ன இயக்குநரை எப்படி அந்த மாதிரி ஒரு இடத்தில் வைத்துப் பிடித்துக் கதை சொன்னார் என்ற சஸ்பென்சையும் உடைக்கிறார்கள்.

படம் போரடிக்காமல் நகர்கிறது.
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முதல் படம் தவிர மற்றதெல்லாம் புதுசு...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மலையாளப் படங்கள் பார்த்தாச்சு, மேயாத மான் வரவில்லை எங்கள் ஊரில். எல்லா படங்களும் ஒகே தான் என்று சொல்லலாம். வேறு சொல்ல ஒன்றுமில்லை. உங்கள் விமர்சனம் நன்று

துளசிதரன்

KILLERGEE Devakottai சொன்னது…

எழுத்தே எனக்கு சுவாசம்.
இனியும் இப்படித்தான் காரணம் எழுத்து என்னை ஆசுவாசப்படுத்துகிறது, ஆறுதல் தருகிறது.

Angel சொன்னது…

முந்தி நீங்க சொல்லி சில படங்கள் பார்த்தேன் ப்ரேமம் சார்லி அப்புறம் சில எல்லாமே சூப்பர்ப் ..பார்க்கிறேன் இவற்றையும் நெட்டில் தேடி .
எழுத்து எழுதுவது ஒரு சந்தோஷம் தொடர்ந்து எழுதுங்கள்

ஸ்ரீராம். சொன்னது…

மலையாளப் படங்கள் பார்ப்பதில்லை. மேயாத மான் உட்பட மற்ற படங்களையும் பார்க்கும் ஆசை இல்லை. இப்போதைக்கு 'அவள்' நல்ல ப்ரிண்டுக்காக வெயிட்டிங்!

G.M Balasubramaniam சொன்னது…

நானெல்லம் சினிமா பார்த்து மாதங்களாகிறது

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்கள் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது நண்பரே
நன்றி
தம +1

Unknown சொன்னது…

படங்கள் அதிகம் பார்ப்பதில்லை!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படம் பார்ப்பது ரொம்பவே அரிது. உங்கள் விமர்சனம் நன்று.

பூ விழி சொன்னது…

என்ன இதனை படங்களை பற்றி விமர்சனம் ஒரே நாளில்
அதிகம் படம் பார்க்க நேரம் அமைவதில்லை நல்ல இருக்குனு சொன்னா பார்ப்பேன் 'மேயாதமான்' பார்க்கிறேன் மலையாள படம் பார்ப்பேன் கதை இருக்கும்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இரண்டு பதிவுகள் இறுக்கமாக அமைந்துவிட்டதால் இப்பதிவு என்ற சொற்றொடரைப் படித்தபோது எனக்கு நேரு, தன் மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதியது நினைவிற்கு வந்தது. தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பொருளில் எழுதிவரும்போது போரடித்துவிடும் என்பதற்காக வேறு தலைப்பினை எடுத்துக்கொண்டு மகளுக்கு நேரு கடிதம் எழுதுவார். வாசகனுக்கு அவ்வகையான நடை விறுவிறுப்பைத் தந்துவிடும். அவ்வுணர்வினை இங்கு கண்டேன்.

Yarlpavanan சொன்னது…

சிறந்த கண்ணோட்டம்
நான்
படம் பார்ப்பதே குறைவு