மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 2 நவம்பர், 2017

மனசு பேசுகிறது : எழுத்தாளனாமே அப்படின்னா...

குடும்பம், வேலை என தராசின் இரண்டு பக்கங்களிலும் அழுத்தமான மனநிலையில் இருக்கும் மனசுக்குள் எழுத்து எப்படி உருப்பெறும் சொல்லுங்கள். இதை எழுதலாம் அதை எழுதலாம் என நினைப்பதுடன் சரி... எழுதும் மனநிலை இல்லாமல் எப்படி எழுதுவது..?. என்னைப் பொறுத்தவரை  கதையை இப்படி நகர்த்த வேண்டும் என ஆரம்பித்து அந்தப் பாதையில் பயணிக்காமல் மாற்றுப் பாதையில் பயணித்து எங்கோ ஒரிடத்தில்தான் கொண்டு போய் முடிப்பேன்... இது எப்போதும் நிகழும் நிகழ்வுதான்... இந்த மாதிரி ஒரு கதை எழுதணும்... அப்படி ஒரு கதை எழுதணும் என யோசித்து ஒன்றாத மனநிலையால்  தொலைத்த எண்ணங்கள் ஏராளம்... அதுவும் தற்போதைய சூழலில் இன்னும் அதிகமாய்... முன்பெல்லாம் தினம் ஒரு பதிவு மலரும்... கதையோ... கவிதையோ... கட்டுரையோ ஏதோ ஒன்று. இப்போது அந்த நிலையில் அதிக மாற்றம்... கதைகளைத் தளத்தில் பகிர்வதில்லை... போட்டிகள், இணைய இதழ்களிலுக்கு எழுதியவை மட்டுமே அவ்வப்போது பகிரப்படுகிறது. ஸ்ரீராம் அண்ணாவின் அன்புக்காக அவர் தளத்தில் எழுதியிருக்கிறேன். அப்புறம் கவிதை எழுதுவதை வெகுவாகக் குறைத்தாச்சு... படித்ததை... பார்த்ததை... கேட்டதை... ரசித்ததை வைத்து எப்போதேனும் ஏதாவது ஒன்றை எழுதி பதிவிட முடிகிறது. சினிமா குறித்து எழுதும் போது ஹிட்ஸ் அதிகம் கிடைத்தாலும் பார்க்கும் நண்பர்கள் அது என்னவோ தவறு போல் சொல்கிறார்கள், ஒரு சினிமாப் பகிர்வு டாஷ்போர்டில் தூங்குகிறது. எது எப்படியோ தினம் துடித்த மனசு தற்போது மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறையேனும் துடிக்கிறது என்பதே சந்தோஷம்தானே.

இரண்டு நாள் ஓய்வில்லாத வேலைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை வேலை இல்லாமல் இருந்த காரணத்தால் சென்ற சனிக்கிழமை ஆரம்பித்து பாதியில் நிறுத்திய அலமேலு என்ற கதையை எழுதி முடிக்கலாம் என விட்டதில் இருந்து தொடர்ந்தேன். கதாபாத்திரம் பேசுவதை மட்டும் முழுக்க முழுக்க எங்க பக்கத்து பேச்சு வழக்கில் வைக்காமல் பொதுவான பேச்சு வழக்கையும் கலந்தும் எழுதி பெரும்பாலும் என் பார்வையாய் வருவதைப் பொதுவான வழக்கில் வைத்தும்தான்  கதைகளை எழுதுவது வழக்கம். அலமேலு பாதி பயணிக்கும் போது முழுக்க முழுக்க நம்ம பக்கத்துப் பேச்சு வழக்கில் எழுதினால் என்ன எனத் தோன்ற முதலில் இருந்து வாசித்துப் பொது வார்த்தைகளைத் தேடித்தேடி வட்டார வழக்குக்கு மாற்றினேன்... 'தேவகோட்டைக்குப் போனேன்' என்பதை 'தேவட்டைக்குப் போனே' என்றுதான் சொல்வார்கள். செல்வத்தை... செலுவம், பதினொரு மணி பயினோரு மணி, பத்து மணி பஸ் என்பதை இந்த பத்துமணிக் காரு போயிருச்சா என்பதுதான் வழக்கு. அப்படியே மாத்தி, கதையை நகர்த்தி எழுதி முடித்தேன். 

சனிக்கிழமை எழுத நினைத்து அமர்ந்தபோது அவன் அவளைச் சந்திப்பதில் முடிக்க எண்ணமிருந்தது... நேற்றைய கதையின் போக்கில் கோபமும் அதன் பின்னான 'மசுரு.. மட்டை' என்ற நல்ல(?) சொல்லாடல்களும் வந்து விழ... கிராமங்களில் நடக்கும் சண்டை பார்த்து ரசித்தவர்களுக்குத் தெரியும் இந்த வார்த்தைகள் எல்லாம் வசமாய் விளையாடும் அழகு. வட்டார வழக்கில் எழுதும்பட்சத்தில் ஒரே ஒரு பிரச்சினைதான்... நாம் கெட்ட வார்த்தை என்று தூரத்தில் நிறுத்தும் வார்த்தைகள் சர்வ சாதாரணமாக நாவில் விளையாடும். அதை எழுத்தில் கொண்டு வரும் போது என்ன இம்புட்டுக் கேவலமா எழுதியிருக்கான்னு தோணும். அதனால் நிறைய '*' போட வேண்டிவரும். பிரபல எழுத்தாளர்கள் என்றால் அதை அப்படியே எழுதலாம்... தப்பில்லை. சில நாட்களுக்கு முன்னர் நண்பர் நாடோடி இலக்கியன் எழுதிய வட்டார மொழியிலான கதை படித்தேன்... அவர் அடிக்கடி எழுதுவதுண்டு. இதில் '*' அதிகம் பயன்படுத்தியிருந்தாலும் கதையின் போக்கு ரொம்ப அடர்த்தியாய்... அருமையாய். இந்த '*' பிரச்சினையால் மற்ற வார்த்தைகளைத் தவிர்த்து 'மசுரு...' மட்டும் பயன்படுத்தி ரொம்ப மென்மையாச் சண்டை போட வச்சேன். அது போக அந்தக் கதையில் சேலையைத் தூக்கிக் கட்டிக்கிட்டு, தலையை அள்ளி முடிஞ்சிக்கிட்டு வாழ்க்கை வரலாறை அள்ளி வீசும் கிராமத்துப் பெண்கள் சண்டையில்லை. தனக்கு வேண்டிய ஒன்று கிடைக்காமல் கோபத்தில் வார்த்தையை விடுவதும் பின் நட்பாய் குழைவதுமாய் இரு மூக்குப்பொடி மனிதர்களின் சண்டைதான். இங்கு மலையாளிகள் எதுக்கெடுத்தாலும் 'மயிரான்' என்றுதான் சொல்லுவார்கள். எனவே முட்டை சைவம் என்பது போல் 'மசுரு' என்பது கெட்டவார்த்தை அல்ல என்பதே எண்ணம். கதையின் போக்கில் நாயகன் நாயகியைச் சந்திக்கணுமான்னு சிந்திச்சு... அந்தச் சிந்தனையை மெல்ல இறக்கி முடிவுக்கு வந்துட்டேன். ஆனா பாருங்க... தலைப்பு 'அலமேலு', கதையில் ஒரு இடத்துல கூட இந்த வார்த்தை வரலை. அப்ப அலமேலு இன்னொரு கதையாக மலர வாய்ப்பிருக்குன்னு வச்சிக்கங்களேன்.

நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களான்னு... அறைக்கு வந்த ஒரு நண்பர் கேட்டார்...  இங்க கதையெல்லாம் என்பதை என்னவோ எல்லாத்தையும் எழுதிக் கிழிக்கிற மாதிரி கதையும் கூட எழுதுவீங்களான்னு அவர் ஆச்சர்யப்பட்டதாய்தான் நான் எடுத்துக் கொண்டேன். ஆனால் 'நீ எல்லாம் கதை எழுதுறியா..? வெளங்கிடும்' என்பதாய்க்கூட அவரின் அந்த எல்லாம் இருந்திருக்கலாம். அவரின் கேள்விக்கு பதிலாய் நானும் எழுத்தாளன்தான் என்ற நினைப்போடு வெண்புரவியில் ஏறி வானம் நோக்கிப் பறந்து மீண்டும் இறங்கி புன்னகையோடு 'ம்... எழுதுவேன்' என்றேன். மனசுக்குள் நானும் ரவுடிதான் என்ற எகத்தாளத்தோடு... இன்னைக்கு முகநூலில் எத்தனை பட்டங்களுடன் ஒரு கவிதை எழுதிய கவிஞனெல்லாம் சுத்துறான்... நாம கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து இன்று வரை கதையின்னு ஒண்ணக் கிறுக்கிக்கிட்டுத்தானே இருக்கோம். எழுதுவேன்னு சொல்றதுல என்ன வந்துடப் போகுது. 

சில பேர் சின்னப் பிள்ளையா இருக்கும் போது அவங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க... ரேஷன் அரிசிதான் சாப்பாடா இருந்திருக்கும்... பல வேலை பட்டினி கூட இருந்திருக்கலாம்... ஆனா இப்ப வசதி, வாய்ப்புன்னு அவங்க வாழ்க்கை மாறியிருக்கும். மத்தவங்ககிட்ட பேசும்போது ரேஷன் அரிசியை நானெல்லாம் பாத்ததுகூட இல்லை... அப்பவே ஸ்பூன்லதான் சாப்பிடுவோம் என்றெல்லாம் அள்ளி விடுவதைப் பார்த்திருப்போம்... நான் ஒருசிலர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன்... அவர்கள் மற்றவர்களிடம் அள்ளி விடுவதையும் கேட்டிருக்கிறேன். நானெல்லாம் ரேசன் அரிசியும்... கேப்பைக் கூழும் சாப்பிட்டு வளர்ந்தவன்தான்... பத்தாவது படிக்கும் போதுதான் மின்சாரம் வந்தது... பதினொன்னு போகயில பிபிஎல் பிளாக் அண்ட் ஒயிட் வந்தது. அதற்கு முன்னர் எல்லாம் வெள்ளி ஒளியும் ஒலியும், ஞாயிறு சினிமா சித்தப்பா வீட்டில்தான். பலகாரம் செய்யும் தினத்திலும் எனக்கு கஞ்சிதான் வேணும். அம்மா எனக்காகவே கஞ்சி வைத்திருக்கும். அதான் இன்னமும் கஞ்சியில் மட்டுமே மனம் லயிக்கிறது. விடுமுறை தினங்களில் எருமை மாட்டின் பின்னே 'நரை', 'கிடேரி', 'வெள்ளச்சி'-ன்னு கம்மாத் தண்ணிக்குள்ள விரட்டிக்கிட்டு திரிஞ்சவன்தான். இப்படித்தான் வாழ்ந்தோம் என்பதை மறைப்பதில் என்ன இருக்கிறது... பின்னாடி திரும்பி வந்த பாதையைப் பார்த்து இதுதான் நான் வந்த பாதை என்று சொல்வதில்தான் பெருமை அதிகம் எனக்கு... அதனால் நான் எப்பவும் எதையும் மறப்பதுமில்லை... மறப்பதுமில்லை. இது எதுக்கு சம்பந்தமில்லாமன்னு யோசிக்கலாம்... நல்லா எழுதுற பல பேர் 'நானா... ஏய் எனக்கு எழுத வராது...' என்று மழுப்புவதையும் ஒரு கதை எழுதிவிட்டு மற்றவர்களுக்கு அப்படி எழுது இப்படி எழுதுன்னு டிப்ஸ் கொடுப்பவர்களையும் பார்த்திருக்கிறோம்தானே... அதான் எடுத்துக் கொண்ட பொருளை விடுத்து என் கதைகள் பயணிப்பது போல களம் மாறிட்டேன். சரி மறுபடிக்கும் ஆரம்பித்த பொருளின் களத்துக்குள் புகுவோம்.

நான் எழுதுவேன் என்றதும் அடுத்த கேள்வி 'எப்படியான கதைகள் எழுதுவீங்க...?' என வந்தது. எப்படியான கதைகள் என்றால் சொல்வதற்குத் தெரியவில்லை என்றதும் 'சிலர் அறிவியல்... சிலர் அரசியல்... சிலர் காதல்... சிலர் குடும்பம்... சிலர் அறியாத தகவல்... என ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கும்... இதில் உங்கள் பாதை எது..?' என்றார். நமக்கு இலக்கியம், இலக்கணம், அறிவியல், அரசியல் எல்லாம் தெரியாது... காதல் தெரியும், குடும்ப கஷ்டங்கங்கள் தெரியும்... அவ்வளவே. அறிந்த தகவலை வைத்தே கதை எழுத முடியல... இதில் அறியாத தகவல்களா... ம்ஹூம்... எதாவது கிறுக்குவேன்... வாழ்க்கை கதைகளாக எழுத எண்ணம்... ஆனா அதற்குள்ளும் முழுசாப் போகலை... மொத்தத்துல இன்னும் முழுதாக கதை எழுதத் தெரியாத அரைவேக்காடுதான் நான் என்றதும்... 'எப்பவுமே எழுத்தில் ஒரு தனித்துவம் இருக்கணும்... உங்க எழுத்துன்னா இதைப் பேசும்ன்னு தெரியணும்' என்று அவர் சொன்னதும் நான் சற்றே சப்தமாகச் சிரிக்க, 'ஏன் சிரிக்கிறீங்க..?' என்றார். ஒண்ணுமில்ல... நேற்று இரவு சரவணன் அண்ணன் ஒரு பதிவு முகநூலில் போட்டார்.... அதில் கணேஷ்பாலா அண்ணா வந்து தனித்துவம்ன்னா என்னன்னு கேட்டிருந்தார். அதுக்கு நாங்கள்ல்லாம் ஜாலியா கருத்துப் போட்டோம்... அந்தத் தனித்துவத்தை உங்க தனித்துவம் ஞாபகப்படுத்திருச்சு என்றேன் சிரிப்புடன். 'உங்களுக்கு கேலி கிண்டல் சகஜம் போல... நண்பர் கதை எழுதுவீங்கன்னு சொன்னார்... அதான் உங்களுக்குன்னு ஒரு நடை இருந்தா நல்லாயிருக்கும்ன்னு சொன்னேன்... தப்பா எடுத்துக்காதீங்க...' என்றார். அட எதுக்குங்க தப்பா எடுக்கணும் என்றபடி,  என்னோட நடை எப்பவுமே வேகமாகவும் இருக்காது... மெதுவாகவும் இருக்காது... ஆனா எம்புட்டுத் தூரம் வேணுமின்னாலும் நடப்பேங்க... பழனிக்கே நடந்து போயிருக்கேங்க என்று சிரிக்காமல் சொல்லவும் 'ராசா.... நீ கதை எழுது... கவிதை எழுது... எது வேணுமின்னாலும் எழுது... எனக்கென்ன வந்துச்சு...' என்பது போல் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்தவர், 'எல்லாப் பயலுக்கும் பெரிய எழுத்தாளன் என்ற நினைப்பு' என்று தனக்குள் சொல்வது போல் சொல்லிச் செல்ல, மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமாச் சொல்லிட்டீங்க என்றதும் 'அவனா நீயி'ன்னு என்னை ஒரு பார்வை பார்த்துட்டு நண்பரின் கட்டிலில் அமர்ந்தார் என் பக்கம் திரும்பாமலே. ஆனாலும் அவரு எல்லாப் பயலுக்கும்ன்னு சத்தியமா யாரைச் சொன்னாருன்னு தெரியலை.

இப்பல்லாம் எழுத முடியாத மனநிலைதான் என்றாலும் என் கணிப்பொறிக்கு ஏதோ ஒரு சீக்கு வந்தாச்சு.... கருத்து இட முடிவதில்லை... பதிவை கூகுள் பிளசில் இணைக்க முடிவதில்லை... 'ள்' அடித்தால் 'ல்' வருவதும் 'ன்' போட்டால் 'ண்' வருவதும் 'ண்' வேண்டுமென்ற போது வராமல் அழிச்சாட்டியம் பண்ணுவதுமாய் ரொம்பத் தொல்லை பண்ணுது. முகநூல் அரட்டையில் நட்புக்கள் என்னடா இவன் தப்புத்தப்பா டைப் பண்ணுறான்னு நினைக்கலாம்... இதெல்லாம் கணிப்பொறியில் எழுத்துக்கள் மாறி மாறி வந்து கடுப்படிப்பதால் ஏற்படுவதுதான்... அப்படியிருந்தும் அலுவலகத்தில் கொஞ்சம் வேலை குறையும் போது சிலரையேனும் வாசித்து கருத்து இட்டு வருகிறேன். அதற்கும் இனி பிரச்சினைதான்... ஆமாம் இனி வரும் வாரங்கள் வேலைப்பளூ கூடுதலாகத்தான் இருக்கும். இன்னும் ஆறு மாதத்தில் 90% வேலை முடிக்க வேண்டும். 21 மாத புராஜெக்ட்... 15 மாசமா 10% பணிதான் முடிச்சிருக்காங்க... இனி எல்லாத்தையும் மொத்தமாக நம்ம தலையில் இறக்குவாங்க... கடுமையா வேலை பாக்கணும். சம்பளத்தை மூணு வருசமா அப்படியே வச்சிருக்கியேடான்னு நேற்று லெபனானில் இருந்து வந்திருந்த புராஜெக்ட் டைரக்டர்கிட்ட டைரக்ட்டாக் கேட்டா, அவன் கேரளாவில் இருந்து வந்து இறங்கிய 15 பேர் கொடுத்த தெம்பில் இருந்தா இரு இல்லாட்டி போங்கிற மாதிரி... இப்ப குறைந்த சம்பளத்துக்கு ஆள் கிடைக்குது. இப்ப சம்பளத்தைக் கூட்ட சாத்தியமில்லைன்னு சிரிக்கிறான். மாலை ஊருக்குக் கிளம்பும் போது பொயிட்டு வாரேன்னு சொல்லிச் சிரித்தான். எனக்கு சிரிப்பு வரலை.

அலுவலகத்தில் வலை வாசிப்பு என்பது என்னைப் பொறுத்தவரை சட்ட விரோதமானதே என்றாலும் தொடர்பு நீடிக்க கருத்து இட்டு வந்தேன். இனி வரும் நாட்களில்  சட்டத்துக்கு உட்பட்டுக்கூட  வாசிக்க இயலாது. மின்னிதழ்களுக்கும் தற்போது பத்திரிக்கைகளும் அனுப்பி வந்தாலும் போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தேன்... குறிப்பாக இணையத்தில் நடத்தப்படும் போட்டிகள். அதேபோல எல்லாப் போட்டிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பினாலும் பிரதிலிபி போட்டிகளில் ஒரு சில காரணங்களால் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தேன். கதை கதையாம் போட்டிக்கு கூட நினைவூட்டல் மின்னஞ்சல்கள் வந்த காரணத்தாலும் தேர்வு முறையில் மாற்றம் செய்திருந்ததாலும் இறுதி நாளில்தான் அனுப்பி வைத்தேன். அதன் முடிவுகள் ஏதோ காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. முடிவு வரும் வரை அந்தக் கதையை எங்கும் பகிர முடியாது என்றாலும் நண்பர் ஒருவர் குறும்படமாக எடுக்க அந்தக் கதையை கேட்டிருக்கிறார். முடிவு தெரிந்ததும் தருகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். திரைக்கதை அவர் எழுதிக் கொள்வதாய்ச் சொல்லியிருக்கிறார். இப்போது பிரதிலிபியின் ஓடி விளையாடு பாப்பா போட்டிக்கும் எழுதும் எண்ணம் இல்லை.... இருப்பினும் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்வதாய் களம் அமைக்க வேண்டும் என்பதாலும் நினைவூட்டல் மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருந்ததாலும் முன்னதைப் போலவே இறுதி நாளில் எழுதி அனுப்பினேன்... அத்துடன் ஒரு கட்டுரையும் சேர்த்து எழுதி அனுப்பினேன். இப்ப கட்டுரைகள் எழுத ஆர்வம் இருக்கிறது... முன்பு அகல் மின்னிதழில் குழலியின் தேவன் என பொன்னியின் செல்வன் பாதிப்பில் எழுத, அதன்பின் தொடர்ந்து அகலில்  நாலைந்து கட்டுரைகள் மனதுக்கு நிறைவாய் எழுதியிருக்கிறேன் என்பதால் இந்த கட்டுரையும் மனநிறைவாய் எழுதியிருப்பதாகவே நம்புகிறேன். வாசிப்பவர்கள்தான் சொல்லணும் அதன் வாசனையை.

பிரதிலிபி போட்டியில் இருக்கும் 'தலைவாழை' சிறுகதையையும் 'பதின்மம் காப்போம்' கட்டுரையையும் வாசித்து தங்கள் கருத்தை இங்கு சொல்லுங்கள். என் கதைகளின் களங்களில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் மாற்றிக் கொள்ள இது வசதியாக இருக்கும்.

-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

ஜீவன்சிவம் சொன்னது…

அருமை நன்றி.



KILLERGEE Devakottai சொன்னது…

பிறர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் எழுதுவது நமது மனத்திருப்திக்காக.... இதுவே எனது கொள்கை நண்பரே...

நிஷா சொன்னது…

சொல்பவர்கள் சொல்லட்டும், வெல்பவர்கள் வெல்வார்கள், நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள். கதை படிக்கின்றேன்.

துரை செல்வராஜூ சொன்னது…

ம்..சரி தான்!..

பூ விழி சொன்னது…

முட்டை சைவம் என்பது போல்.......ஹா ஹா பாவம் அந்த தோழர் திருடனுக்கு தேள் கொடியது போல் முழித்திருப்பாரா
படிக்கிறேன் ......

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்! யாரென்ன சொன்னாலும் அஞ்சாமல் உங்கள் ஆத்ம திருப்திக்காக எழுதிக் கொண்டே இருக்க்ங்கள். கதை படிக்கிறோம்.

Unknown சொன்னது…

என் கடன் எழுதுவதே என எழுதுங்கள்!குமார்!

ராஜி சொன்னது…

நீங்க எழுதுங்க சகோ. எழுதுவது உங்க திருப்திக்காக.. இதில் யார் என்ன சொன்னாலும் கேக்காதீங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
எனது கொள்கையும் அதே.. இது பிரதிலிபி போட்டிக் கதை, கட்டுரைக்காக எழுதியது. ஜாலிக்காக அவர் பேசியதையும் இணைத்தேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
என் பாதைதான் குண்டுங்குழியுமாக முட்கள் நிறைந்து இருக்கு அக்கா.... :)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
ஹா...ஹா...
நாங்க எல்லாருமே இப்படித்தான்... எங்க விஷால் கூட எங்களின் டிட்டோவாக.

சமீபத்தில் பெரியக்கா வீட்டுக்காரருக்கு முதல் அட்டாக்... இரவில் ஆரம்பித்த வலியை காலை ஏழு மணி வரை என்ன வலி என்று தெரியாமல் அக்காவிடம் சொல்லலை... ஆனால் அவர் முகத்தைப் பார்த்து அக்கா கேட்க, அப்பத்தான் நெஞ்சு எரியிறமாதிரி இருக்குன்னு சொல்லியிருக்கார். அப்ப அக்கா இப்பவே எங்களை எல்லாம் பாத்து நெஞ்செரியிதான்னு கேட்டிருக்கு.
ஹாஸ்பிடல் சென்று இப்ப வீட்டுக்கு வந்ததும் என் மனைவியிடம் சொல்லிச் சிரித்துவிட்டு சிவகாமி (அம்மா) மாதிரித்தான் ஏழும் பொறந்திருக்குன்னு சொல்லியிருக்கு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
அண்ணா... இது மற்றவர் சொல்லுக்கு அஞ்சி எழுதிய பதிவல்ல... பதிவின் சாரம்சம் பிரதிலிபி போட்டிக் களத்தில் இருக்கும் கதை, கட்டுரைக்கானது... நகைச்சுவை நிகழ்வை இணைத்து எழுதியதால் இறுக்கமாகிவிட்டது போல...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
அப்படித்தான் ஐயா எழுதுகிறேன்... நல்ல கதைகள் எழுத வேண்டும் என்பதே ஆவல்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
அக்கா இந்தப் பதிவின் சாரம்சம் பிரதிலிபி போட்டிக் களத்தில் இருக்கும் கதை, கட்டுரைக்கானது... நகைச்சுவை நிகழ்வை இணைத்து எழுதியதால் இறுக்கமாகிவிட்டது போல... நான் எப்பவுமே என் பேச்சை மட்டுமே கேட்பவன்... எழுதுகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
தம +1

G.M Balasubramaniam சொன்னது…

எழுத்தில் உண்மை தெரிய வேண்டும் அதையே நான் வலை முகப்பில் எழுதி இருக்கிறேன் ஒளிவு மறைவில்லமல் எழுத தைரியம்வேண்டும் அப்படி எழுதுவது நட்பை விரிக்கும் என்று நினைக்கிறேன் வாழ்த்துகள்

ஸ்ரீராம். சொன்னது…

டைப் பண்ணும்போது இந்தப் பிரச்னைகள் எனக்கும் அதிகமாய் வரும். சில சமயங்களில் ஸ்பேஸ் பார் தட்ட முடியாமல் ஒட்டிக்கொண்டு விடும் வார்த்தைகளை சரியான இடத்தில் பின்னர் பிரிக்க முடியாமல் போகும். கர்சர் அந்த இடத்தில் நிற்காது!

கதை என்று இல்லை, இப்போது நீங்கள் எழுதி இருக்கிறீர்களே, நீண்ட மனவோட்டம், இதட்டைப் அடிப்பது கூட சமயங்களில் அலுப்பாகிப் போகிறது!

பதிவை ரசித்தேன்.

ப்ரதிலிபி பக்கம் நான் போவதில்லை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
உண்மை ஐயா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
இந்தப் பிரச்சினைதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு.
சிறுகதை பிரதிலிபியில் இருக்கு... முடிவு தெரிந்த பின் அனுப்புகிறேன். வாசித்துச் சொல்லுங்கள் தங்கள் கருத்தை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள். எழுத்திலும் வாசிப்பிலும் உள்ள சுகத்திற்கு இணை எதுவுமே இல்லை.