மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 10 மார்ச், 2017

சுமையா - ஒரு பார்வை

த்து நாளைக்கு முன் அண்ணன் கனவுப்பிரியன் அவர்களின் 'சுமையா' சிறுகதைத் தொகுப்பு கையில் கிடைத்தது அதுவும் இரவு உணவுடன் புதிய நண்பர்களின் சந்திப்புச் சங்கமத்தில் கிடைத்த விவரத்தை சந்திப்பு நிகழ்ந்த அன்றே முகநூலில் பகிர்ந்திருந்தேன். 'சுமையா' அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. தன் முதல் தொகுப்பான 'கூழாங்கற்கள்' மூலமாக சிறுகதைகளில் மருத்துவக் குறிப்புகள், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் செய்திகளை இணைத்து எழுதி முத்திரை பதித்திருந்தார். அதே முத்திரையை இதிலும் தொடர்ந்திருக்கிறார்.

Image may contain: 1 person, text

மொத்தம் 21 கதைகள்... ஒவ்வொரு கதைக்குள் அறிவியலோ, வரலாறு, மருத்துவமோ... ஏதோ ஒன்று ஊடுருவிப் பேசும். இந்த 21 கதைகளையும் அச்சில் ஏறுமுன்னர் வாசித்தவர்களில் அடியேனும் ஒருவன். அழுகாச்சி கதைகள் எனக்குப் பிடிக்காது என்று சொல்லும் அண்ணாச்சியின் கதைகளை வாசித்து அவரிடம் கருத்தைப் பகிர்ந்து கொண்டவன் எழுதும் பெரும்பாலான கதைகள் இறுதியில் அழ வைத்ததாக நட்புக்கள் சொல்லக் கேள்வி. எழுத்தில் எனக்கும் அவருக்கும் மிகப்பெரிய முரண்... ஆனால் நட்பில் இருவருக்கும் இடையில் எந்த முரணும் இல்லை. 

'ஆவுளியா' என்ற கதையின் பெயர்தான் முதலில் தொகுப்புக்கான பெயராய் வந்தது... அட்டை தயாராகி அவருக்கு வர, அதை எனக்கு அனுப்பி பார்க்கச் சொன்னவர், பிறகு என்னுடன் போனில் பேசும்போது ரத்னவேல் ஐயா 'சுமையா'ன்னு வைக்கலாம்ன்னு சொல்றாங்க... அது இதைவிட நல்லாயிருக்கும்ல்ல என்றார். மிகச் சிறந்த நாவலுக்கான கதை அது என்பதைவிட பெயரளவில் விரைவில் மனசுக்குள் அமர்ந்து கொள்ளும் என்பதால் ரத்தினவேல் ஐயா அதைத் தலைப்பாக்கச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது... ஆவுளியாவும் வித்தியாசமான கதைதான். மன்னார் வளைகுடாவில் பவளப்பாறை, கடல் பாசி, என வித்தியாசமாய் நகரும் கதைதான் என்றாலும் பெயரளவில் நம்மை ஈர்ப்பது 'சுமையா' என்பதால் நானும் அருமையான பெயர் அண்ணா, ஐயா சொன்னது போல் அதையே வையுங்க என்றேன். 'ஆவுளியா'... 'சுமையா'வாக மாறி புத்தகமாகி விட்டது.

கதைகளை ஆரம்பிக்கும் விதமும் அது பயணித்து முடியும் விதமும் இருவேறு முனைகளில்... இது எல்லாருக்கும் எளிதில் அமைந்துவிடாது. இதுதான் இவரின் கதைகளை வித்தியாசமான பாதையில் நகர்த்துகிறது. கதையின் போக்கில் இடையில் எதாவது ஒரு முக்கிய சமாச்சாரம் உயிர்ப் பெறும்... சில கதைகளில் இந்த முக்கிய சமாச்சாரம் அதிகமாகும் போது சிலருக்குப் பிடிப்பதில்லை... அதைச் சிலரில் தங்கள் விமர்சனத்தில் வைப்பதையும் வாசித்திருக்கிறேன். கருத்துக்கள் சொல்வதில் எல்லாரும் ஒத்துப் போக வேண்டுமென்பதில்லை அல்லவா? அவரவர் பார்வையில் அவரவர் கருத்து... அதைத் தவறென்று சொல்வதற்கில்லை... எந்த எழுத்துமே எதிர்மறை விமர்ச்சனங்களைப் பெறும்போதுதான் எழுத்தாளன் தன்னை பட்டை தீட்டிக் கொள்ள முடியும். எதிர்மறை இல்லாத போது தானே என்ற அகங்காரம் சில பிரபல எழுத்தாளர்களைப் போல் மனதுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும்.

சிறுகதைக்கான ஓட்டமின்றி... டாக்குமெண்டரி போல் இருப்பதாகச் சொல்லிவிடுகிறார்கள். தனது எழுத்தில் தான் கொண்டு வர நினைக்கும் செய்தி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் அவரின் கதைகள் நம் தளங்களில் இருந்து வேறு ஒரு தளத்தில்... அதன் ஓடுபாதையும் நம்மில் இருந்து அதிக தூரத்தில்... கண்டிப்பாக காலத்தால் பேசப்படும் கதைகளாக அமையும் என்பது நிச்சயம். கொடுக்கும் செய்தி கதையின் சுவையைச் சாப்பிடாமல் அவரால் நிச்சயமாக கொடுக்க முடிகிறது என்று சொல்லலாம். 

சுமையா ஒரு நாவலுக்கான கதை என்று சொன்னேன் அல்லவா... ஆம் இந்தியா - பாகிஸ்தானுக்குள் பயணிக்கும் கதை, நிறைய அரசியலையும் அறியாத தகவல்களையும் சொல்கிறது. சுமையா மட்டுமின்றி இதிலிருக்கும் இன்னும் சில கதைகளை விரிக்கலாம். தற்போது வேறொரு நாவலின் வேலையில் இருப்பதால் அதன் பின்னர் எப்படியும் இவற்றையும் நாவலாய் விரிப்பார் என்று நம்பலாம். 

தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகளான 'நேற்றைய ஈரம்', 'நம்பி கோவில் பாறைகள்', 'மார்கோபோலோ மர்கயா போல', 'அன்னக்காடி', 'ஜெனியின் டைரிக்குறிப்புகள்','மண்ணெண்ண குடிச்சான்','கடல் குதிரை','நீ வந்தது விதியானால்','ரசவாதம்','சூது கவ்வும்', 'தற்கொலைப் பறவைகள்','அது ஒரு மழைக்காலம்','எட்டாவது அதிசயம்','ஷாஹிர்க்கா தட்டுக் கடை','வியாதிகளின் மிச்சம்','மரியா ப்ளோரன்ஷா','துணிக்கடை அண்ணாச்சி','அன்று சிந்திய ரத்தம்','பரிமளம் பெரிய மனுஷியாயிட்டா' என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

இந்த 21 கதைகளையும் குறைந்தது மூன்று முறை வாசித்திருப்பேன். எனக்கு எல்லாக் கதைகளும் பிடித்திருந்தன என்றாலும் எனக்கும் ஒரு வருத்தம் உண்டு. அது... பௌர்ணமி இரவில் லைலாவைத் தேடிச் சென்றவர், அதை விடுத்து கதையின் பின்னே போய்விட, அவரின் பின்னே லைலாவைக் காண ஓடிக் கொண்டிருந்த எனக்கு முடிவில் ஏமாற்றமே... அந்தக் கதை அப்படியே முடியட்டும். லைலாவைப் பற்றி விரிவாய் அவர் எழுத வேண்டும் என்பதே என் வேண்டுகோள். சிறுகதை ஆசிரியர் நாவலாசிரியராய் களம் இறங்கியிருக்கிறார்... அதிலும் வெற்றி பெறட்டும்.

'சுமையா'வை வாசிப்பது ஒரு சுகானுபவம்.

சுமையா - நூல் வனம் வெளியீடு
விலை - ரூ.160 /-
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

G.M Balasubramaniam சொன்னது…

கிடைக்கும் புத்தகத் தொகுப்புகளை வாசித்துக் கருத்திடும் விதம் ரசிக்க வைக்கிறது நானும் என் சிறு கதைத் தொகுப்பும் உங்கள் விமரிசனத்துக்கு ஆளானவர்கள்தானே .தொடரட்டும் விமரிசனங்கள் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம்ம விமர்சனம்...

கனவுப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

கறந்த பசுவின் பாலில் அதன் உடல் தன்மைக்கேற்ப ஒரு இளம் சூடு அந்த பாத்திரம் முழுதும் பரவி நிற்கும் .அதுபோலத்தான் அச்சேறும் முன் ஒரு கதை தொகுப்பை வாசிப்பது என்பது .அந்த அற்புதமான மரியாதைக்கு கடனாக 21 கதைகளையும் மூன்று முறை வாசித்து, உள்வாங்கி மதிப்புரை எழுதுவதன் மூலமாக கனவுப்பிரியனின் நன்றியை பெற்று விட்டீர்கள் .அழகிய நூல் மதிப்புரை.வாழ்க வளமுடன் .

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான மதிப்புரை. நூலைப் படிக்கும் ஆவலை உண்டாக்கிவிட்டது இப்பதிவு.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம்
கனவுப் பிரியன்அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

விமர்சனம் நன்று குமார்!! வாழ்த்துகள் இருவருக்கும்!

Unknown சொன்னது…

தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

Unknown சொன்னது…

Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

Unknown சொன்னது…

நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

Unknown சொன்னது…

வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

அ.மு. நெருடா சொன்னது…

அருமையான விமர்சனம். நன்றி