மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 13 ஜனவரி, 2017

சல்லிக்கட்டு நம் உரிமை


ஞ்சு விரட்டு...

எருது கட்டு...

வடமாடு...

ஏறுதழுவுதல்...

மாடுபிடி விழா...

என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமாக அழைத்தாலும் எல்லாமே ஒன்றுதான் அது ஆண்டாண்டு காலமாய் தமிழர்கள் விளையாடும் வீர விளையாட்டு. நம் மண்ணின் கலாச்சாரம்... உலகாண்ட மன்னர்கள் போற்றிக் காத்த வீர விளையாட்டு. இந்த விளையாட்டை ஒட்டுமொத்தமாக சல்லிக்கட்டு என்று சொல்லவது வழக்கு. இது நம் மாநிலத்தின் அடையாளம்... வந்தேறிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நம் மண்ணின் அவமானம். தமிழனின் கலாச்சாரம் வேண்டாமென்றால் அவன் மூலமாக வரும் வருமானம் மட்டும் வேண்டும் என்று சொல்லும் பஞ்சம் பிழைக்க வந்த பக்கத்து மாநிலத்து மனிதப் பதர்கள் எல்லாம் நம் கலாச்சாரம் அறியாது எதிர்ப்புக் குரல் கொடுப்பதுடன் கருத்துச் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

நாட்டு மாடு... அது நம் வீட்டு மனிதர்களில் ஒன்று என்பதை அதனுடன் சிறுவயதில் இருந்து பழகிய, பாசத்துடன் நேசித்த ஒருவனுக்குத்தான் தெரியும். களத்தில் மூர்க்கமாய் நின்று விளையாடும் மாட்டை ஒரு சிறு குழந்தை பிடித்து அதன் மீதேறி விளையாடுவதைப் பார்த்து ரசித்து அனுபவித்திருந்தால்தான் தெரியும். எங்கள் மாடுகள் எங்கள் குழந்தைகள் என்று ஒவ்வொரு விவசாயியும் மாடுகளுடன் உறவாடுவதை நேரில் பார்த்திருந்தால் தெரியும் மாட்டுடனான நாட்டானின் நேசம்.  தன் நாவால் முகத்தில் நக்கிக் கொடுக்கும் மாட்டின் அன்பை அனுபவித்திருந்தால்தான் தெரியும் அவர்களுடன் அவை கொண்டிக்கும் அன்பின் ஆழத்தை... குடும்பத்தில் ஒருவனாய் / ஒருத்தியாய் வளர்க்கப்படும் மாட்டோடு கொண்டுள்ள பிணைப்பை எழுத்தில் கொண்டு வருவது சாத்தியமில்லை.

சல்லிக்கட்டு வேண்டும் என்று தமிழன் உலகமெங்கும் போராடுகிறான். சல்லிக்கட்டு நடக்கக்கூடாது என பீட்டா என்றும் விலங்குகள் நலவாரியம் என்றும்  சொல்லிக்கொண்டு ஒரு மக்களின் கலாச்சாரம் என்ன, அது எப்படிப்பட்டது என்பதை அறியாமல் எங்கோ இருந்து கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கும், நம் அடையாளத்தை அழிக்க நினைக்கும் ஒரு சிலருக்கு நம்மிலும் சிலர் சொம்பு தூக்குவதுதான் வேடிக்கை... வேதனை. கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளின் கூவலுக்கு செவி மடுக்கும் அரசு ஏழைகளின் குரலை ஏறெடுத்துப் பார்க்குமா என்ன..? அவர்களுக்கு வேண்டியது பணக்காரனும் கார்ப்பரேட்டும் மட்டுமே.  வீணாப் போன விவசாயியும் அவனின் பாரம்பரியமும் அவர்களுக்கு எதுக்கு...? ஓட்டுப் போட மட்டுமே நாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்பதைவிட காசுக்கு அடிமையாகி 200, 500க்கும் நம் சுயத்தை விற்பதால்தான் இன்று நம்மை செல்லாக்காசாக மதிக்கிறார்கள். நாம் தரம் தாழ்ந்து போக அரசியல் வாதிகளும் கார்ப்பரேட் அடிமைகளும் மட்டுமல்ல காரணம்... முழு முதற்காரணம் சுயம் இழந்த நாமே.

எங்கள் பாரம்பரியத்தை, எங்கள் கலாச்சாரத்தை காக்க வேண்டும்... எங்கள் உரிமையைப் பறிக்கும் செயலுக்கு நாங்கள் ஏன் அடிபணிய வேண்டும் என நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவருமே கூறவில்லையே... நானும் போராடுவேன்... ஆனால் மத்திய அமைச்சராக இருக்கிறேன் என்கிறான் ஒருவன்... தடையை மீறி நடத்தினால் அரசைக் கலைக்க வேண்டும் என்று சொல்கிறான் மற்றொருவன்... கெடக்கிறது கெடக்கட்டும் கெழவியைத் தூக்கி மனையில வையின்னு அவன் ஆத்தாவோட தங்கச்சி... சின்ன நொம்மாவைத் முதல்வராக்குவேன்... இல்லைன்னா பிரதமராக்குவேன்... அதுவும் இல்லை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் குடியரசுத் தலைவி ஆக்குவேன்னு இன்னொருத்தன் சொல்றான். இவனுகள் எல்லாருக்கும் பதவி வெறியும் பண வெறியும்தானே ஒழிய பாரம்பரியம் இருந்தா என்ன கழுத அது தலையில இடி விழுந்தா என்னங்கிற நினைப்பு மட்டுந்தான்.

கிரண்பேடின்னு ஒரு அம்மா, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிஜேபிக்கு போயி நம்ம பாண்டிச்சேரியில கவர்னரா இருந்துக்கிட்டு பண்ற அலப்பறை தாங்க முடியலை. மாட்டை கொடுமைப் படுத்துறதை வீடியோவுலதான் பார்த்தாராம்... அதை தடை பண்ணனுமாம்.. ஆர்.ஜே.பாலாஜி நாக்கைப் புடுங்கிற மாதிரி  ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேருக்கு நேர் கேட்டான். அப்போ அந்தம்மானால பேச முடியலை. எப்படி பேசும்... நல்லது செய்யணும்ன்னு நினைக்கிறவன் போராடினா அதுக்கான காரணத்தை பயமில்லாமல் பேசுவான்... அவனால் பேச முடியும்... அது என்ன கலாச்சாரம் என்ன பாரம்பரியம் என்றெல்லாம் தெரியாமல் கைக்கூலி வேலை பார்க்கும் இந்தம்மாவெல்லாம் தமிழனின் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாய் பீட்டாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து நாட்டு மாட்டை , தமிழனின் பாரம்பரியத்தை அழிக்கணும்ன்னு தீவிரமாக இருக்கிற கருங்காலியில இதுவும் ஒன்னு... அது எப்படி பதில் சொல்லும்... கிரேட் பாலாஜி.

ஒரு பக்கம் இளைஞர்களின் எழுச்சி, மாணவர்களின் வேகம் என நம் உரிமை காக்க போராட்டக் களமாக தமிழகம் மாறுவதில் சந்தோஷம்தான்... இதே வேகம்... நம்மிடம் ஓட்டு வாங்க வரும் அரசியல் நாதாரிகளை விரட்டுவதில் இருக்கவேண்டும்... இனிமேலாவது படித்தவனாக, பண்புள்ளவனாக , நம்மில் ஒருவனாக, பாரம்பரியத்தை பாதுகாப்பவனாக தேர்ந்தெடுக்க வேண்டும். காசுக்காக நம்மை இழந்தது போதும்... அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர வேண்டும். பிழைக்க வந்து நம்மை அதட்டிப் பார்க்கும் விஷால் போன்ற விஷ ஜந்துக்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். மோசமானவனாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் சிம்பு போன்றவர்களை நாம் மதிக்காவிட்டாலும் மிதிக்காமலாவது இருக்க வேண்டும். கேரளாவில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என போஸ்டர் அடிப்பதை விட்டு விட்டு நம் இனம், நம் மொழி, நம் பாரம்பரியம், நம் விவசாயம் காக்க துணிச்சலாய் இறங்க வேண்டும். உரிமைக் குரல் உயர்ந்து ஒலிக்கும் போதுதான் ஒரு இனத்தின் பாரம்பரியம் காக்கப்படும்.


எதுக்குய்யா இம்புட்டு பொங்குறே...? வெளிநாட்டுல இருக்கே... நீ மாடு பிடிக்கப் போறியா..:? இல்ல இதுக்கு முன்னால மாடு பிடிச்சிருக்கியா...?விட்டுட்டு வேலையைப் பாருன்னு சில நண்பர்கள் சொல்லலாம்... நம் உரிமை, நம் பாரம்பரியத்தை விட்டுட்டு வேலையைப் பார்க்க மனம் விரும்பாத தமிழன் நான்... படிக்கும் காலத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் வாழ்ந்த ஒரு சாதாரண கிராமத்தான்.... வயலும் வயல் சார்ந்த இடமும் வெள்ளச்சி, நரை, கருத்தப் பசு, செவல, பில்ல, கிடேரி என எல்லாவற்றுடனும் பாசமும் நேசமுமாய் வளர்ந்தவன்... கன்றுக்குட்டியுடன் கழுத்தோடு கழுத்தைக் கட்டிக் கொண்டு, அது முகமெல்லாம் நக்கி விளையாடிய சந்தோஷத்தை அனுபவித்தவன் நான்... மாடு பிடிக்க வேண்டும் என்றில்லை அதனுடன் கல்லூரி முடிக்கும் வரை வாழ்ந்தவன் என்ற ஒன்று போதும். என் பாரம்பரியம் எனக்கான உரிமை... ஆம் நம் பாரம்பரியம் நமக்கான உரிமை... அந்த உரிமை பறிக்கப்படும் போது குரல் கொடுப்பது நம் கடமை.

-'பரிவை' சே,குமார்.

10 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அறச்சீற்றம்
(இதுதான் தமிழன்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// சுயம் இழந்த நாமே... // 100% உண்மை...

ஸ்ரீராம். சொன்னது…

என்னவோ போங்க!

நிஷா சொன்னது…

உண்மையில் ஒன்றுபடவும் அதட்டிக்கேட்கவும், உரத்துக்குரல் கொடுக்கவும்,அவசரமானதும் அத்தியாவசியமானதுமாக ஆயிரம் பிரச்சனை நம் முன் இருக்க இந்த ஜல்லிக்கட்டு எதிர்ப்பெனும் பெயரில் விதைத்த விச வித்துக்கு பலியாகிக்கொண்டிருக்கும் நம்மவர்களை நினைத்தால் தலையை எங்கே முட்டிவது எனவே தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு இருந்தாலும் இல்ல எனினும் எவனும் பட்டினி கிடக்க போவதில்லை, தமிழர் மானம், மரியாதை என இன்னும் என்ன இருக்காம். இருப்பதை கோட்டை விட்டு விட்டு இல்லாததை பிடிக்க போகும் வேலைக்கு நம்மாட்கள் நல்லா உரம் போடுவாங்க.

இந்த ஆர்ப்பாரிப்பில், எதிர்ப்பில் பத்தில் ஒரு பங்கை, தமிழ் நாட்டு முதலைமைச்சர் மர்ம மரணத்துக்கு, விவசாயிகள் பிரச்சனைக்கும் கேட்டிருந்தால் இந்த மானமும் மருவாதியும் கிடைக்காது எனவும் தமிழன் தன்மானம் தரமிறங்கும் எனவும் எவர் சொன்னார்களாம்

என்னமோ போங்க, அவரசருக்கு ஆயிரம் நியாயம்.

Kasthuri Rengan சொன்னது…

நாதாரிகளின் முன் இளைஞர்களின் வேகம் செல்லுபடியாகாது ...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எல்லாவற்றிலுமே அரசியல் புகுத்தப்பட்டு ஊடகங்களும் அதற்கு...என்னமோ போங்க.....நன்றாகவே சீரியிருக்கிறீர்கள்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

//உரிமைக் குரல் உயர்ந்து ஒலிக்கும் போதுதான் ஒரு இனத்தின் பாரம்பரியம் காக்கப்படும்.// உண்மை தான் சகோ.
மாடுகளுடன் வளரவில்லை என்றாலும் நண்பர்கள் வீடுகளில், பால்காரர் வீட்டில் என்று நீங்கள் சொல்வது போல் பார்த்திருக்கிறேன். குறை நிறைகளைப் பார்த்துத் தேவைப்பட்டால் பாதுகாப்பிற்கான மாறுதல்களை நாமே செய்து கொள்வோம்.. பீட்டா எதற்கு நாட்டாமைக்கு!

சாரதா சமையல் சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குமார் .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு குமார். எல்லாவற்றிலும் அரசியல் என்பது வேதனை தரும் விஷயம்.

Yarlpavanan சொன்னது…

இறைச்சிக்கு மாடு வெட்டுதல் தான்
மிருகவதை...
காளைகளைச் சீண்டி விளையாடும்
ஜல்லிக்கட்டு மிருகவதையா?
தமிழர் பண்பாட்டின் அடையாளமாக
ஜல்லிக்கட்டு இருக்கட்டுமே!

நண்பர் ஒருவர்
கூகிள் பிளஸ் இல் குறிப்பிட்டது போல
புகைத்தலும் மது அருந்துதலும்
உடல் நலத்திற்குக் கேடாகலாம்
என்பது போல
ஜல்லிக்கட்டு நடாத்துவதால்
காளைக்கும் காளையை அடக்க முனைவோருக்கும்
பாதிப்பு ஏற்படலாம் என
எச்சரிக்கை செய்தவாறு
ஜல்லிக்கட்டு நடாத்த அனுமதிக்கலாமே!