மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 5 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : விநாயகரும் ஆசிரியரும்...

விநாயகர் சதுர்த்தி...

கிராமத்து வாழ்க்கையில் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, கார்த்திகைக்கு இருக்கும் ஒரு பரபரப்பு... சந்தோஷம் விநாயகர் சதுர்த்தி போன்றவைகளுக்கு இருந்ததில்லை. விநாயகர் சதுர்த்தி என்பது நம்ம கலைஞரும் கலைஞர் டிவியும் சொல்வது போல் ஒரு விடுமுறை தினமே.... கண்மாயில் ஆட்டம் போடவும்... மடையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசவுமாக நிறைவடையும் ஒரு விடுமுறைநாள்... பிள்ளையார் என்பவரே எங்கள் ஊரில் இல்லாத காலம் அது.... இப்ப எங்க ஊர் அம்மன் கோவிலில் பிள்ளையார், முருகன் இருவருக்கும் சன்னதி வைத்தாச்சு. பிள்ளையார் என்பவர் வீட்டுப் பொங்கலின் போது சாணியில் அடிப்பாகம் தட்டையாக... ஒரு கூம்பு போல செய்து அதன் உச்சியில் அருகம்புல்லை வைத்து தேங்காய் உடைத்து வைத்து... வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து... கும்பிடுபவராகத்தான் இருந்தார். அவருக்கு அருகம்புல் புடுங்கப் போறதுக்கு வரும்பாருங்க கோபம்... அதுவும் தூர்தர்ஷனா இருந்த வரை கோபம் அதிகம் வருவதில்லை... சன் டிவிக்கள் வந்த பின்னர்தான் கோபம் அதிகம்... நிகழ்ச்சி போயிரும்ல்ல...

அதேபோல் பிள்ளையார் மற்றொரு இடத்தில் பிடிப்போம்.... நெல் அடித்து தூற்றும் போது அதுவரைக்கும் அடித்துக் கொண்டிருந்த காற்று சுத்தமாக நின்று போகும் அல்லது ஒரு திசையில் அல்லாது சுற்றிச் சுற்றி அடிக்கும்... 'காத்துக்காரன் செத்துப்பொயிட்டான் காத்து வா... காத்து வா'ன்னு கத்திப் பார்த்து விசில் அடித்துப் பார்த்தும் சில நேரங்கள் காற்று அம்மா மாதிரி வாய் திறக்காமல் இருந்துவிடும். உடனே அப்பா பிணையல் மாடுகள் போட்ட சாணியை எடுத்து பிள்ளையார் பிடித்து சனி மூலையில் வைக்கோல் கொஞ்சம் போட்டு அதன் மீது வைக்கச் சொல்வார்... அதன் முன்னே கொஞ்சம் நெல்லை வைத்து கடகாப் பொட்டியை வைத்து மூடி விடுவோம். பிள்ளையாருக்கு வேர்க்கணுமில்ல... என்னதான் வேர்த்தாலும் நம்ம பன்னீர் மாதிரி பிள்ளையார் பெட்டிக்குள்ள சுருண்டு உக்காந்துக்குவார்... காற்றோ அம்மா மாதிரி... பிள்ளையாரோ பன்னீர் மாதிரி... நாமதான் தலையில நெல்லைச் சுமந்துக்கிட்டும்... கையில சொளகை வைத்துக் கொண்டும்... கன்னத்தில் கையை வைத்துக் கொண்டும்... காத்துக் கொண்டிருப்போம்... அப்பவும் நாம மக்கள்தானே...

திருமணத்திற்குப் பின் பிள்ளையாராய்.... இருங்க எழுத்து மாறிடுச்சு... சொல்ல வந்ததை சொல்லிடுறேன்... பிள்ளையாரை வைத்து சாமி கும்பிட்டு குளத்தில் கரைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டாச்சு.... இப்ப வீட்டில் விநாயகர் சதுர்த்தி உண்டு. இந்த முறை இரண்டு பிள்ளையார் வாங்கணும் என்று நேற்றே மைனர் சொல்லிட்டார்... இந்த வீட்டுக்கு ஒண்ணு... கிராமத்திலிருக்கும் வீட்டுக்கு ஒண்ணு என்று... பிள்ளையாரைக் கரைப்பதில்தான் பிள்ளைக்கு எவ்வளவு சந்தோஷம்.

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


Image result for பிள்ளையார் பட்டி விநாயகர்


சிரியர் தினம்...

எத்தனை ஆசிரியர்கள்... எவ்வளவு அன்பு.... அந்த அன்பில் திளைத்ததால்தான் இன்று எழுத்து வசப்பட்டிருக்கிறது. ரொம்ப சின்னப்பயலா இருக்கான்.... இந்த வருசமும் ஒண்ணாவதுலயே போடுங்க என்ற அம்மாவின் பேச்சுக்கு 'அவனை எதுக்கு ஒண்ணாப்புல போடணும்... நல்லாப் படிக்கிறபிள்ளை... நாந்தான் ரெண்டாவதுக்கும் டீச்சர்... அவன் எங்கிட்டே இருக்கட்டும்' என்று சொல்லி அணைத்துக் கொண்ட மறைந்த ஆசிரியை... அம்மா... மரியம்மையில் தொடங்கி... கன்ணா என்றழைத்த பிச்சைக்குட்டி வாத்தியார், ராஜமாணிக்கம் வாத்தியார், பிச்சம்மை ஆசிரியை, சுப்புலெட்சுமி ஆசிரியை, பாப்பாத்தி ஆசிரியை மறைந்த சுந்தரவாத்தியார், கண்ணன் தம்பிதானேடா என்று உரிமையோடு அழைக்கும் தமிழாசிரியை விஜி, தலைமையாசிரியர் முருகன் சார் உள்ளிட்ட இன்னும் சில இதயங்களால் நிரம்பிய முருகானந்தாவில் எட்டாவது வரை படித்து முடித்த போதுதான் வெளியுலகம் கொஞ்சமேனும் தெரிய ஆரம்பித்தது.

தே பிரித்தோ வந்த போது அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா உள்ளிட்ட நிறைய அன்புள்ளங்களால் தழைத்து.... சேவுகன் அண்ணாமலைக் கல்லூரிக்குள் புகுந்து பேராசியர்கள் கே.வி.எஸ், அமல சேவியர், வெங்கடாசலம், சீனிவாசன், சேவியர், திருவடி, திண்ணப்பன், ஆறுமுக ஐயா, தேனப்பன் ஐயா, எம்.எஸ். சார், சந்திரமோகன் சார், விஜயன் சார் என எல்லாத் துறை ஆசிரியர்களுடனும் இணக்கமாகி, எங்கள் பேராசான்... ஆசிரியராய்... தந்தையாய்... என்னுள்ளே இருக்கும் எங்க பழனி இராகுலதாசன் ஐயாவின் அன்பில் நனைந்து எழுத்தாளனுக்கான பிள்ளையார் சுழி போட்டது... பத்திரிக்கைகளில் எழுதியது.... வலைப்பூ வந்தபோது இங்கும் பல ஆசிரியர்களின் அன்பில் நனைவது... நானும் கணிப்பொறி ஆசிரியனாய்.... படித்த கல்லூரியிலேயே சில காலம் ஆசிரியனாய் பணியாற்றியவன்தான்...

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

(பேராசான்.... மு.பழனி இராகுலதாசன்)


கப்பலோட்டிய தமிழனையும் அன்னை தெரசாவையும் நினைவில் நிறுத்துவோம்..

-'பரிவை' சே.குமார்.

19 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துகள்!

:)))

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கப்பலோட்டிய தமிழனையும் அன்னை தெரசாவையும் நினைவில் நிறுத்துவோம்

KILLERGEE Devakottai சொன்னது…

Super

Geetha சொன்னது…

ஓ முருகானந்தா பள்ளியில் தான் படிச்சீங்களா...சுந்தரம் வாத்தியார் என் சித்தப்பா...தான் என் அம்மாவின் தங்கையை திருமணம் செய்தவர்..அவரின் மகனைத் தான் என் மகள் திருமணம் செய்துள்ளார்.

துரை செல்வராஜூ சொன்னது…

மலரும் நினைவுகள் அழகு.. அருமை..

நல்வாழ்த்துகள்!..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகிய நினைவுகள்...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தாங்கள் கண்மணியின் சொந்தமா என்றும் வில்வம் அவர்களைத் தெரியுமா என்றும் தங்கள் தளத்தில் இணைந்த உடன் கேட்டிருந்தேன்... முருகானந்தா பள்ளியின் அனைவரோடும் இன்னும் உறவு தொடர்கிறது.

நான், சிவக்குமார், மணிமேகலை மூவரும் முருகானந்தாவில் ஒன்றாகப் படித்தோம். இன்னும் அவர்களுடன் நட்பில்...

தங்கள் மகளை சாக்ரடீசுக்கு திருமணம் செய்திருப்பதை அறிவேன் அக்கா...

கண்மணி எப்போது என் மனைவியைப் பார்த்தாலும் குமார் இங்கு வந்தால் எங்களை எல்லாம் வந்து பார்ப்பதே இல்லை என்று சொல்வதுண்டு....

விஜி டீச்சர் இப்போது விஜி அக்கா....

எல்லாருடனும் இன்னும் பழக்கம் தொடர்கிறது...

பரியன்வயல் குமார் என்றோ முருகனின் நண்பன் என்றோ சொன்னால் எல்லாருக்கும் தெரியும்.

சுந்தர ஆசிரியர் வீட்டில் இருந்து படித்த செல்வம் அவர்கள் தங்கள் தம்பியோ? அவருக்கும் என்னைத் தெரியும்.

சிநேகலதா அக்கா என் நண்பனின் சகோதரி... (முத்துவேல் அவர்களின் மனைவி)

தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

Yarlpavanan சொன்னது…


அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான பதிவு நினைவுகளாய் மலர்ந்திருக்கிறது ! விநாயகச் சதுர்த்தி நினைவுகளும் ஆசிரியர்களைக் குறித்த நினைவுகளும்...அருமை! ஒரு வாரம் ஆகிவிட்டது பதிவுகள் பார்த்து...அதான் தாமதம்...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

“பிள்ளையார் என்பவர் வீட்டுப் பொங்கலின் போது சாணியில் அடிப்பாகம் தட்டையாக... ஒரு கூம்பு போல செய்து அதன் உச்சியில் அருகம்புல்லை வைத்து..” அடடா..நானும் அனுபவித்த உணர்வே இது. அந்த அழகுப்பிள்ளையாரை இப்ப ஆகாசத்தை நிமிந்து பார்க்கறமாதிரி ஆயுதப் பிள்ளையாரா ஆக்கிட்டாங்க... பாக்க பால்வடியும் முகம் போய் பயம் வருகிறது. நிற்க அடுத்த கட்டுரையில் “எழுத்துக்குப் பிள்ளையார் சுழி” போட்ட ஆசிரியர்களை நினைத்து உருகியதும் நெஞ்சைத் தொட்டது. ஆசிரியர்களை நினைத்திருக்கும் எந்த மாணவரும் வாழ்வில் உயர்வது மட்டுமில்லை, பண்பும் பணமும் பெருகும்! நல்லாயிருங்க!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
நானும் இப்போ வெள்ளி சனி கிழமைகளில்தான் வாசிப்பது.... நேரமில்லை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வாழ்த்தை என்னை வளர்த்த, வளர்க்கும் ஆசிரியர்களின் சார்பான வாழ்த்தாய் எடுத்துக் கொள்கிறேன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.