மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 23 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 11. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மீண்டும் விசாரணை நடத்திய பொன்னம்பலத்தின் வற்புறுத்தலால் மதுரைக்கு செல்கிறார்கள்.
இனி...


ர்ஷிகாவின் கையில் மோதிரம் இல்லாததைப் பார்த்த பொன்னம்பலம் குற்றவாளியை நெருங்கிவிட்ட சந்தோசத்தில் மெதுவாக சுகுமாரனின் காதைக் கடித்தார். அவரும் ஏதேச்சையாக திரும்புவது போல்  தர்ஷிகாவைப் பார்த்து விரலை நோட்டமிட்டார். மோதிர விரலில் மோதிரம் அணிந்த தடம் இருக்க மோதிரம் இல்லை.

"வாங்க இன்ஸ்பெக்டர்... வாங்க சார்..." என்றபடி வருணுக்கு அருகே அமர்ந்தாள். அப்போதுதான் குளித்திருப்பால் போல சந்தன சோப்பின் வாசமும் ஷாம்பின் வாசமும் சேர்ந்து வந்தது.

“என்ன சார்... நான் வரும்போது சார் என்னமோ உங்ககிட்ட குசுகுசுன்னு சொன்னாரே... என்னவாம்...?” என சுகுமாரனைப் பார்த்துக் கேட்டாள் தர்ஷிகா.

 "அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீங்க அன்னைக்கு இருந்ததுக்கு இன்னைக்கு நிறைய மாறிட்டீங்கன்னு சொன்னார்... ஆமா கையில மோதிரம் போட்ட தடம் இருக்கு, ஆனா மோதிரத்தைக் காணோம்? எங்கயாவது மிஸ் ஆயிடுச்சா..?" அவளைப் பார்த்து எதேச்சையாகக் கேட்பது போல் கேட்டார்.

தர்ஷிகா சிரித்துக் கொண்டே, "ஏன் எங்கப்பா கொலையான அறையில் மோதிரம் எதுவும் கிடந்ததா?" எதிர்க்கேள்வி கேட்டு சிரித்தாள். 
தணிகாசலம் இறந்த அன்று பார்த்த தர்ஷிகாவா இவள் என்று அவரை யோசிக்க வைத்தது.

"இல்ல தடம் இருக்கு... சமீபத்துல மிஸ் ஆன மாதிரி தெரியுதேன்னு கேட்டேன்..."

"எம்மேல சந்தேகம்... ஓ இவரு அதைப் பார்த்துத்தான் உங்க காதைக் கடித்தாரோ...?. குளிக்கும் போது கழட்டி வச்சேன்... மேல ரூம்லதான் இருக்கு... இருங்க எடுத்துக்கிட்டு வாறேன்... உங்க சந்தேகம் போகணுமில்ல..." என்றபடி எழுந்து சென்றாள்.

“இல்லங்க பரவாயில்லை...”

“இந்தா வாரேன் சார்... எம்மேல சந்தேகம் வந்தாச்சுல்ல...” என்றபடி மீண்டும் மாடிப்படி ஏறினாள்.

அவளைப் பின்புறமாக பார்த்த சுகுமாரனுக்கு ஏனோ 'இடையில் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட இனிய தம்புராவை மீட்டிச் சென்றாள்' என்ற பாட்டு ஞாபகத்தில் வந்தது. மெதுவாக பொன்னம்பலத்திடம் திரும்பி, "என்னய்யா... இந்தக் கதை ஓர்க் அவுட் ஆகலையே..?" என்றார். 

"சே... நம்பிக்கையோட வந்தேன்... ஏமாற்றம் ஆயிருச்சு சார்..."

"என்ன இன்ஸ்பெக்டர் தர்ஷ்... மேல அப்படி ஒரு சந்தேகம்... அவ எதுக்காக கொல்லணும்... அதுவும் அப்பாவை கொல்லணுமின்னா அவ இங்கயே பண்ணியிருக்கலாமே ஏன் ஊட்டிக்குப் போகணும்... அப்பா கொலை நடந்த அந்த வாரம் புல்லாவே அவளுக்கு எக்ஸாம்... படிக்கிறதுக்காகவே வீட்டைவிட்டு அவ வெளிய கூட போகலை... ஆமா ஏதாவது தடயம் கிடைச்சதா..?" என்று வருண் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, திரும்பி வந்த தர்ஷிகா சிரித்துக் கொண்டே தனது மோதிரத்தைக் காட்டினாள். அச்சு அசலாய் பொன்னம்பலத்திடம் இருக்கும் மோதிரம். 'அப்படின்னா அது யாரோடது?' குழம்பினார் பொன்னம்பலம்.

"சாரிங்க... ஒரு சந்தேகம்... இதே மாதிரி மோதிரம் ஒண்ணு கிடைச்சது...அதான்... நாங்க வரும்போது நீங்களும் மோதிரம் இல்லாம இருக்க... மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போட்டுட்டோம்..."

"போலீஸ் புத்தி அது.." என்று சிரித்தாள்.

"என்னங்க... அப்பா செத்த கவலை அதுக்குள்ள உங்களை விட்டுப் போயிருச்சா...?"

"கவலை... ம்... அது இருக்கத்தான் செய்யுது... அதுக்காக அழுதுக்கிட்டு கிடந்து என்னாகப் போகுது... அப்பா திரும்பி வரப்போறாரா...? அம்மா உயிரோட இருக்கும் போதே இழந்துட்டு நிக்கிறோம்... நிறைய இழப்புக்களை பார்த்துப் பழகிட்டோம். அதனால இழப்புகளை ஈசியா எடுத்துக்கப் பழகிட்டோம்... இல்லேண்ணா... " என்று வருணைப் பார்த்ததும் அவர் ஆமோதிப்பதுபோல் தலையாட்டினான்.

"அடேயப்பா அன்னைக்கு அழுதுக்கிட்டு மூக்கைச் சிந்திக்கிட்டு இருந்த பொண்ணா நீங்க... இப்படியெல்லாம் பேசுவீங்களா...?" பொன்னம்பலம் ஆச்சர்யப்பட்டார்.

"நான் நல்லாப் பேசுவேன் இன்ஸ்பெக்டர்... அன்னைக்கு அப்பாவோட இழப்பு... ரொம்ப வலி தெரியுமா..? எம்மேல எம்புட்டு பாசம் தெரியுமா...? நான் செத்தா நீ அழுதுக்கிட்டு கிடக்கக் கூடாது... எதையும் துணிஞ்சு சந்திக்கிற திறமை உங்கிட்ட இருக்கு... எப்பவும் போல்டா இருக்கணுமின்னு சொல்வார்... ஹி ஈஸ் ஜெம் சார்... அவர் பணம் பணம்ன்னு போனதால அம்மா போனதாச் சொல்லுவாங்க... ஆனா அவரோட பாசத்தை அனுபவிக்கத் தெரியாம பொயிட்டாங்க சார்... அன்னைக்கி பணம் பணம்ன்னு இருந்திருக்கலாம்... ஆனா அவரோட பாசத்துக்கு முன்னால அவர் பெரிய மில்லினியர்.. உக்கார நேரமில்லாதவர்ன்னு எல்லாம் சொல்ல முடியாது... ராத்திரி எத்தனை மணிக்கு வந்தாலும் என்னோட அறைக்கு வந்து பாத்துட்டு... எனக்கு போர்த்திவிட்டு... உடம்புக்கு முடியாத நேரத்துல மருந்து தேய்ச்சி விட்டு... அதெல்லாம் போச்சு சார்.... எல்லாத்தையும் இழந்துட்டேன்..." இதுவரை சிரித்தவள் அழுக ஆரம்பித்தாள்.

"சாரிங்க... உங்க வேதனை புரியாம..."

"ஏய் தர்ஷ்... என்ன இது... விடு... நமக்கு அவ்வளவுதான் கொடுப்பினை... விடு...."

"அழுகாதீங்க..." என்றபோது வருணின் செல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் கட் பண்ணிவிட்டான். மீண்டும் அடிக்க... கட் பண்ணினான். மூன்றாவது முறை வந்த போது "ஏதோ அர்ஜெண்ட் போல... உங்களுக்கு தெரிஞ்சவங்களாத்தானே இருக்கும்... சும்மா பேசுங்க..." என்றார்.

சிரித்தவன், "இல்ல இன்ஸ்பெக்டர்... இது வாழ்க்கைத் தொந்தரவு... நான் கட்டிக்கப் போறவ... என்னைய வரச்சொல்லியிருந்தா... நீங்க வந்ததால போக முடியலை... அப்பா இறந்ததால ஒரு வாரமா எங்கிட்டும் போகலை... அதான்... அடிச்சிக்கிட்டேதான் இருப்பா..."

"ஓ... அண்ணியா... இங்க வரச்சொல்லு..." என்றாள் தர்ஷிகா.

"சும்மா இரு... காத்திருந்துட்டு போகட்டும்..."

"ஆமா அப்புறம் நீதான் அவளைத் தொங்கிக்கிட்டுக் கிடக்கணும்..." என்று சிரித்தாள்.

"சரி வருண்... எதாவது துப்புக் கிடைத்தால் சொல்றோம்... அபீசியலா வரலை... நாங்க கிளம்புறோம்..." என்றார் சுகுமாரன்.

"ஓகே சார்...." என்று எழுந்த வருண், அவர்கள் பின்னாலே வந்து காரில் ஏறப்போன சுகுமாரனிடம் மெதுவாக "சார் நீங்க எதுவோ குளூ கெடச்சித்தான் வந்திருக்கீங்க... தர்ஷோட மோதிரம் பற்றி கேட்டீங்க... மோதிரம் எதுவும் கிடைச்சதா..?”

“அப்படியெல்லாம் இல்லைங்க... அவங்க கையில தடம் கிடந்ததைப் பார்த்துக் கேட்டேன்... அவ்வளவுதான்...”

“எது எப்படியோ... மோதிரம்தான் அப்பா கொலையோட முக்கியமான தடயமா இருந்தா இதே மாதிரி மோதிரம் இன்னொருத்தர்க்கிட்டயும் இருக்கு...  நாம கொஞ்சம் பிரியா பேசினா நல்லாயிருக்கும்... நீங்க ஹோட்டல் பாண்டியன் போங்க... உங்களுக்காக அங்க ஒரு அறை புக் பண்ணச் சொல்லிடுறேன்... போயி குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க... தர்ஷ்க்கு எதுவும் தெரியவேண்டாம்... ஈவினிங் நான் வர்றேன்... பேசலாம்...” என்றான்.

(என்ன படத்தைப் பார்த்து ஏமாந்துட்டீங்களா...? இதுவும் ஒரு சஸ்பென்ஸ்தான்... இன்னும் இரண்டே இரண்டு பகுதிகளில் முடித்து விடுவோம்... அதாவது வரும் வெள்ளி / சனிக்குள்... அதுவரை... தர்ஷிகாவா / வருணா/ சிவராமனா / வேலையாட்களா/ வேறு யாருமான்னு எல்லாருமாச் சேர்ந்து யோசிப்போம்... நன்றி)

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

19 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

சூழ்நிலையால் - தொடர்ந்து வாசித்து கருத்துரைக்க இயலவில்லை..
ஏதும் தவறாகக் கொள்ளவேண்டாம்..

வாழ்க நலம்..

சென்னை பித்தன் சொன்னது…

[படிக்காமல் விட்ட பகுதிகளைப் பொறுமையாகப் படிக்கிறேன்

KILLERGEE Devakottai சொன்னது…

நன்று இந்த சந்தேக வட்டத்துக்குள் புதுசா இரண்டெழுத்தில் உள்ள ஒருவரை இழுத்து விடுவதாக கடந்தமுறை சொன்னீர்கள் மறந்து விட்டது போல.... ஒருவேளை ஸ்விஸ் ரொம்ப தூரமாக இருப்பதால்தானோ... ?

நிஷா சொன்னது…

அட்ட்ட்டாடா!
நல்லாத்தான் யோசிக்கிறிங்கப்பா!

மற்ற மோதிரம் யாரிடம் இருக்கும்? புதுது புதிதாய் சிக்கலை உருவாக்காமல் சிக்கெடுங்கப்பா! சீக்கிரம்.. யாரு ஏன் கொலை செய்திருப்பா என யோசிக்கவே முடியல்ல.. ஒரு க்ளுவும் விடல்லயே நீங்க..!

பட ஐடியா நல்லா இருக்கு. ஹாஹா

நிஷா சொன்னது…

ஆமாவாங்க! குமார் சூப்பர் ஐடியா! என்னை இழுத்து விட சொல்லும் கில்லர்ஜீ சாரை எனக்கு உதவியா இருந்து துப்பாக்கியில்தோட்டாவை போட்டு என் கையில் வைத்து அவரே தான் சுடவும் செய்தார் எனவும் கோர்த்து விடுங்க..

ஆசை. தோசை.அப்பளம். வடை. கில்லர்ஜி சார்.. நீங்க என்ன தான் சொன்னாலும் எங்க குமாரு அப்படில்லாம் இந்த அக்கா நிஜத்தில் செய்திச்சுன்னாலும் அக்கா நீ அப்படில்லாம் செய்யவே இல்ல. இல்லவே இல்லக்கா எனத்தான் சொல்லும். என்னை மாட்டியெல்லாம் வைக்காதாக்கும்.

என் தம்பிகள் படையணி ரெம்ப ஸ்ராங்குங்க.. தம்பியுடையேன் சண்டைக்கெல்லாம் அஞ்சேனாக்கும்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.
நன்றாக உள்ளது வித்தியாசமான சிந்தனையில் உதித்துள்ளது... வாழ்த்துக்கள்... த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஏதோ புதிய தகவல் இருக்கு போல....வருணிடம்...ம்ம்ம்ம் அந்த மோதிரம் அவரின் மனைவியிடமும் ஒன்று இருந்திருக்கும் என்று தோன்றுகின்றது. இல்லையென்றால் ஏதேனும் ஒன்று டூப்ளிகேட்...ஏனென்றால் தட்சிகாவின் கையிலிருந்ததை அவர்கள் செக் பண்ணவில்லையே...எது உண்மையான வைரம் என்று தெரியவில்லையே.......காத்திருக்கின்றோம்

இணையம் வந்துவிட்டது.....இனி வருகை...

Unknown சொன்னது…

கொலையாளி முன்னால் மனைவியா இருக்குமோ....

இதே போல மோதிரம் குடும்ப உறுப்பினர் கிட்ட தான இருக்க முடியும்?

கதை முடிவுக்கு வந்துருமா? ரொம்ப யோசிக்க முடியலயா குமார்.

பானுஷபானா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

நேரமின்மை காரணமாக, தொடரின் பாதியிலிருந்து இன்றுதான் படித்தேன். திடீர் புடீர் திருப்பங்கள் என்று எதிர்பாரா சம்பவங்க்கள்மூலம் கதை, சுத்து சுத்தி செல்கிறது... தொடரட்டும்...!

//அழுக ஆரம்பித்தாள்.//

அழ ஆரம்பித்தாள் - என்று போட்டிருக்கலாமோ?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
ஊரில் இருக்கும் சில நாள்கள் சந்தோஷமே முக்கியம்... தவறாக நினைக்க என்ன இருக்கிறது...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
பொறுமையாக வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க...
அடுத்த கதையில் திருத்திக்க உதவும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வேறு ஒரு கதையில் மிக நல்ல கதாபாத்திரத்தில் அக்காவின் பெயரை கொண்டு வந்துருவோம்... இதில் கொலையாளியை பிடித்து விடுவோம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நிஷா அக்கா... ரொம்ப நம்பிக்கை...
அந்த நம்பிக்கைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
க்ளூ கொடுத்தால் கதை சப்பென முடிந்து விடும் அல்லவா...?
இப்பவே அப்படித்தான் போதுதுன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இணையம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
விரைவில் முடிச்சிடுவோம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாம்..
வாசித்தமைக்கு நன்றி.
ஆமாம்.... அழ, அழுக... எங்கள் பேச்சு வழக்கில் போட்டுவிட்டேன்...
தாங்கள் சொன்னதும்தான் யோசித்தேன்...
அழ ஆரம்பித்தாள்தான் சரியானது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு சொன்னது…

கதையின் முடிவை படிக்க ஆவல்.