மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 15)

முந்தைய பகுதிகள் : 


பதினான்காவது பகுதியின் இறுதியில்...

"ம்... குமரேசனுக்கிட்ட பேசிடுறேன்... நீ மணிக்கு அடிச்சிப் பாரு...."

"சரித்தான்..."

யிருக்குப் போராடும் சூழலில் கந்தசாமி அறைக்குள் கிடக்க, காளியம்மாளோ தெய்வங்களை வேண்டியபடி நாற்காலியிலும்... சுந்தரியும் கண்ணீரோடு அவளருகேயும்... மணி மனம் முழுக்க பாரத்துடன் பஸ்ஸிலும்..., குமரேசன் வீட்டுக்கும் வாசலுக்குமாக நடந்துக்கிட்டும்... கண்மணி தலையணையை கண்ணீரால் நனைத்துக் கொண்டும்... உறக்கமின்றி விழித்திருக்க, அந்த இரவு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது விடியலை நோக்கி...

இனி...

சியூவில் கந்தசாமி வைக்கப்பட்டிருந்ததால் யாரும் பார்க்க அனுமதியில்லை... காளியம்மாளும் சுந்தரியும் மருத்துவரைப் பார்க்க வருபவர்கள் அமரும் நாற்காலியில் அமர்ந்து சற்று கண் அயர்வதும் பின்னர் விழிப்பதுமாக இருந்தனர். ஊரில் இருந்து வந்த சிலர் காலையில் வருகிறோம் என்று கிளம்பிவிட, கண்ணதாசன், அழகப்பனுடன் ராசும் இன்னும் சிலரும் அங்கேயே இருந்தார்கள். இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 5 மணி சங்கு அலறி ஓய்ந்த போது மணி வேக வேகமாக நடந்து வந்து சேர்ந்தான்.

"வாண்ணே..." என்றான் கண்ணதாசன்.

"வா மணி... எதுக்கு நைட்டுல விழுந்து வாறே... காலையில வர வேண்டியதுதானே...?" என்றார் அழகப்பன்.

"காலையில கெளம்பி வந்து சேர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்... அத்தான் அப்பா எப்படியிருக்காங்க..?" 

"நைட்டு ஐசியூக்குள்ள கொண்டு போனாங்க... இதுவரைக்கும் ஒண்ணும் தெரியலை... டாக்டர் வந்து பாத்துத்தான் சொல்லணும்.."

"பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லையே...?"

"நைட்டு பயமுறுத்துனாரு... இப்ப நார்மலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்... உள்ள உங்கம்மாவும், அக்காவும் இருக்காக.... போ... போயி பாத்துட்டு வந்து வண்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயி வெளிய தெருவ பொயிட்டு குளிச்சிட்டு வா... பஸ்ல வந்த அலுப்பு இருக்கும்.."

"சரித்தான்..." என்றபடி உள்ளே சென்றான்.

"அம்மா..." அழைக்கும் போதே அழுகை வந்தது.

"ம... மணி... அப்பா சாஞ்சு கெடக்காருடா..." வெடித்து அழுதாள் காளியம்மாள்.

"அம்மா... அழுகாதே... இது ஆசுபத்ரி..." என அவளைக் கடிந்து கொண்ட சுந்தரி அழுகையை அடக்கிப் பார்த்து தோற்றாள்.

இருவரும் மணியைக் கட்டிப்பிடித்து அழ, 'அம்மா... இது ஆஸ்பத்திரி... சத்தமா அழுது கட்டிப்புரள வீடு இல்லை... நோயாளிங்க இருக்காங்க... அழுகையை நிறுத்துங்க..." 

என்று கத்தினாள் அவர்களைக் கடந்து சென்ற நர்ஸ்.

"அப்பா... நல்லாத்தான் இருந்தாரு.... திடீர்ன்னு நெஞ்சுவலி வந்திருச்சுப்பா... கண்ணதாசனைக் கூப்பிட்டா ஊரே கூடிருச்சு..." கண்ணீரோடு சொன்னாள்.

"அவருக்கென்னம்மா... நல்லா இருப்பாரு... எம்புட்டுச் செலவானாலும் அவரை நாங்க காப்பாத்திருவோம்மா... கவலைப்படாதே..." என்றான் கண்ணீரோடு.

"ஆமா... சித்ரா வரலையா?"

"மகா இருக்காளேம்மா... அவளை பாத்துக்க ஆளு... இன்னைக்கு காலேசுக்கு அனுப்பிட்டு வருவா...?"

"ம்..."

"என்ன ம் போடுறே... இதே அவ அப்பனா இருந்தா மகாவுக்கு காலேசுக்கு லீவு போட்டுட்டு ராத்திரியோட ராத்திரியா வந்திருக்க மாட்டா..." சுந்தரி பற்ற வைத்தாள்.

"அக்கா.... அன் டைத்துல கிளம்பி வந்திருக்கேன்... இந்தப் பனியில நைட் டிராவல்ல அவங்களை இழுத்துக்கிட்டு வரமுடியுமா என்ன? சும்மா எல்லாத்துக்கும் குத்தி விட்டு வேடிக்கை பாக்கதே..."

"இப்ப என்ன சொல்லிட்டேன்னு உனக்கு இம்புட்டுக் கோபம் வருது..." சத்தமாகக் கேட்டாள். அவள் போட்ட சத்தம் வெளியே கேட்க, அழகப்பன் வேகமாக உள்ளே வந்தார்.

"என்ன... என்ன பிரச்சினை?" கோபமாகக் கேட்டார்.

"ஒண்ணுமில்ல அத்தான்.."

"என்ன சுந்தரி... வீட்ல மாதிரி இங்கயும் வந்து கத்திக்கிட்டு இருக்கே?"

"ஆமா நா பேசுறதுதான் குத்தம்... சித்ரா வரலையான்னு அம்மா கேட்டுச்சு... அதுக்கு ராத்திரியில கிளம்பி வந்தேன்... அதான் கூட்டியாரலைன்னு சொன்னான்... அதுக்கு..." 

பேச்சை நிறுத்தி அவரைப் பார்த்தாள்.

"அதுக்கு நீ என்ன சொன்னே...?"

"அவ அப்பான்னா போயிருப்பான்னு சொன்னேன்... இது குத்தமா?"

"ஏன்டி... நைட் டிராவல்ல ஏன் வந்தாய்ன்னு அவனை நான் திட்டுறேன்... நீ பொம்பளப் புள்ளைகளை இழுத்துக்கிட்டு வரலைன்னு கேக்குறே... வெளங்கித்தான் பேசுறியா... வயசுக்கு வந்த பிள்ளையை இருட்டு ஏமத்துல அழைச்சிக்கிட்டு போறது நல்லாவா இருக்கும்... சும்மா எதாச்சும் பேசாதே... மணி இந்தா வண்டிச்சாவி.... வீட்டுச் சாவி கண்ணகிக்கிட்ட இருக்காம்... போயி குளிச்சிக் கிளிச்சிட்டு வா... அதுக்குள்ள நாங்க டாக்டருக்கிட்ட விவரம் கேட்டுக்கிறோம்..."

"சரித்தான்.... இந்தாங்க.... இதுல ஐயாயிரம் இருக்கு... வச்சிக்கங்க... பிரண்டுக்கிட்ட பணம் போட்டு விடச் சொல்லியிருக்கேன்... அப்புறம் எடுத்துக்கலாம்..."

"ஏப்பா... பணத்துக்கு இப்ப என்ன அவசரம்... நீயி வச்சிக்க.... அப்பறம் பாத்துக்கலாம்... போ... போயி குளிச்சிட்டு வா..."

"கண்ண மச்சான்... குமரேசன் போனடிச்சானா?"

"இல்லத்தான்.... வந்துக்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன்..."

"அடிச்சிப் பாருங்க... என்னோட மொபைல்ல சார்ஜ் போயிருச்சு... எனக்கு எதுவும் டிரைப் பண்ணுனானோ என்னவோ தெரியலை...."

"சரித்தான்...." என்றபடி குமரேசனுக்கு போனடித்தான்.

"குமரேசா..."

"ம்... சொல்லுண்ணே..."

"கெளம்பிட்டியா..."

"வந்துக்கிட்டு இருக்கேண்ணே.... என்னண்ணே ஏதும் பிரச்சினையா?" பதட்டமானான்.

"ஏய் அதெல்லாம் இல்ல... அத்தான் போன் பண்ணிப் பாக்கச் சொன்னாங்க அதான்... மெதுவா வா..."

"அத்தானுக்கு அடிச்சேன் எடுக்கலை... உங்களுக்கு அடிச்சா பிஸியா இருந்துச்சு... ஆமா டாக்டர் எதுவும் சொன்னாரா?"

"இல்லப்பா... இனிமேத்தான் வருவாரு..."

"சரிண்ணே... அண்ண வந்துருச்சா...?"

"ம்... இப்பத்தான் வந்துச்சு... வீட்ல போயி குளிச்சிட்டு வான்னு அத்தான் போகச் சொல்லிட்டாங்க...."

"சரிண்ணே..."

"என்ன டாக்டர்... இப்ப அவருக்கு எப்படியிருக்கு...?" - கேட்டது அழகப்பன்.

"இப்ப பரவாயில்லை... நான் கூட நைட் வந்தப்போ அவரைப் பார்த்து பயந்துட்டேன்... ட்ரிப் ஏறிக்கிட்டு இருக்கு... மத்தியானம் வெளிய கொண்டாந்திரலாம்... இன்னைக்குப் பாத்துக்கிட்டு நாளைக்கி கூட்டிக்கிட்டுப் போகலாம்..."

"சரிங்க..."

"அப்புறம் இது பர்ஸ்ட் அட்டாக்... அடுத்து வராமல் இருக்கணுமின்னா உணவுக் கட்டுப்பாடு... அலைச்சலைக் கொறச்சிக்கணும்..."

"சரிங்க..."

"கண்ண மச்சான்... நீங்க இருங்க... உங்க வண்டியைக் கொடுங்க... நானும் உங்கக்காவும் வீடு வரைக்கும் பொயிட்டு வாறோம்... மணி வந்தா இருக்கச் சொல்லிட்டி அந்த வண்டியில அயித்தையைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் பொயிட்டு வாங்க..." என்றார் அழகப்பன்.

"சரித்தான்... இந்தாங்க..." என்று கண்ணதாசன் சாவியைக் கொடுக்கும் போது அவனின் செல்போன் அழைத்தது.

"என்ன குமரேசன் கூப்பிடுறான்... இப்பத்தானே பேசினான்... இந்தாங்கத்தான் உங்ககிட்ட பேசவாத்தான் இருக்கும்" எனக் கொடுக்க அழகப்பன் வாங்கி "என்னப்பா... சொல்லு..." என்றார்.

"அத்தான்... பஸ் ஆக்சிடெண்ட் ஆயிருச்சு..." எதிர்முனையில் பதட்டமாய்ச் சொன்னான் குமரேசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

வழக்கம்போல் நடை அருமை நண்பரே தமிழ் மணம் 2

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பின்னூட்டமிட இயலாவிட்டாலும் எல்லாப் பகுதிகளையும் ஒன்று விடாமல் வாசித்து வருகிறேன். அருமையான நடையில் அசத்தலான எழுத்து. தொடருங்கள்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

சொல்ல வேண்டியதில்லை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தொடர்கிறேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே!

தொடரின் நகர்வை வழக்கம் போல் சிறப்பாக நகர்த்திச் செல்கிறீர்கள்..! பட்ட காலிலேயே படும் எனபார்கள். அதுபோல் பேருந்து விபத்து என்று முடித்திருப்பது அதிர்ச்சியாய் உள்ளது. அருமையான நடையுடன் ௬டிய கதையை தொடருங்கள்! நாங்களும் தொடர்கிறோம்..!

இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வழக்கம் போல அருமையான நடை போடுகின்றது தொடர்! இப்ப சஸ்பென்ஸ் வேற வைச்சு முடிச்சுருக்கீங்க! அறிய காத்திருக்கின்றோம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.