மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 22 செப்டம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள்: 3 . புலவர் அருள்சாமி

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் என்னால் மறக்க முடியாத... மறக்க நினைக்காத மனிதர்களைப் பற்றி பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் மூன்றாவது பகிர இருப்பது எங்கள் அருள்சாமி ஐயாவைப் பற்றிய சில நினைவுகள்.

அருள்சாமி ஐயாவும் சவரிமுத்து ஐயாவைப் போல நான் படிக்கும் போது  தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் பணியாற்றியவர்தான். அப்போது எனக்கு அவர் வகுப்பு எதுவும் எடுக்கவில்லை. அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. பள்ளியில் திங்கட்கிழமை நடைபெறும் பிரேயரின் போது வாரம் ஒரு ஆசிரியர் பேசுவார்கள். அதில் ஐயாவின் பேச்சென்றால் மாணவர்கள் மிகவும் சந்தோஷமாகக் கேட்டு ரசிப்பார்கள். அந்தளவுக்கு நகைச்சுவையுடன் கருத்துக்கள் செறிந்து இருக்கும்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இணைந்த போதுதான் ஐயாவும் பழக்கமானார். பெரும்பாலும் ஐயா யாருடனும் விரைவில் பேச மாட்டார். ஆனால் மேடையில் பேசினால் எல்லோரையும் ரசிக்க வைப்பார். அப்படித்தான் நாங்களும் ஐயாவுக்கு ரசிகரானோம். பின்னர் மாதாந்திர கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம் 'என்னய்யா... இன்னைக்கு நீங்க என்ன வாசிக்கிறீங்க கதையா? கவிதையா?' என்று கேட்பார். 'இல்லைய்யா... ஒண்ணும் வாசிக்கலை...' என்று சொன்னால் 'என்ன பிள்ளைகள் சின்னப்பிள்ளைங்க நீங்க வாசிச்சு நாங்க ரசிக்கணும்.. எப்பவும் நாங்கதான் வாசிக்கணுமா?' என்று கேட்டுச் சிரிப்பார்.

பழனி ஐயா வீடு எங்கள் வீடு போல் எப்போதும் அங்குதான் குடியிருப்போம்.  எப்போதும் ஐயா வீட்டில் பத்துப் பேருக்குக் குறையாமல் இருப்போம். சவரிமுத்து ஐயா வீட்டிற்கு எப்படியும் வாரத்தில் ஒரு நாளாவது நானும் முருகனும் போய்விடுவோம். ஆனால் அருள்சாமி ஐயா வீடு தேவகோட்டையின் கடைசிப் பகுதியில் இருந்தது. ரொம்பத்தூரம் போக வேண்டும் என்பதால் பெரும்பாலும் செல்வதில்லை. முருகன் தாமரை, சுபமங்களா, செம்மலர் ஏஜென்ஸியை பழனி ஐயாவிடம் இருந்து வாங்கினான். எனவே புத்தகங்கள் வந்ததும் ஒரு நாள் மாலை இருவரும் சைக்கிளில் தேவகோட்டையையே சுற்றி வருவோம். அப்படிப் போகும் போதுதான் தேனம்மை ஊரணி தாண்டி ஐயா வீடு செல்வோம். 

எங்களைப் பார்த்ததும் 'வாங்கய்யா... என்ன புத்தகம் வந்திருக்கா? அப்பத்தானே எங்க வீட்டுப் பக்கம் வருவீங்க?' என்றபடி வரவேற்பார். 'இல்லய்யா அப்படியே பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம்' என முருகன் சிரித்தபடி சொன்னதும் 'ஆமாய்யா நீங்களும் அப்படியே பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்துட்டாலும்... சும்மா எதுக்குய்யா கதை விட்டுக்கிட்டு... உங்களுக்கு சவரிமுத்து ஐயா வீடும் பழனி ஐயா வீடும் மட்டும்தான் தெரியும்' என்பார். 'அப்படியெல்லாம் இல்லைய்யா...' என்றதும் 'சரி... சரி... உள்ள வாங்க எதாவது சாப்பிட்டுப் போகலாம்' என்று அழைத்து சோபாவில் அமர வைப்பார்.

வீட்டில் இருக்கும் போட்டாக்களை எல்லாம் காண்பித்து இது எங்க அக்கா, அங்க இருக்காக... இது அவுக... இது இவுக என அவரது குடும்பக் கதை எல்லாம் சொல்லி முடிப்பார். அதற்குள் அம்மா காபியோ, கூல்டிரிங்க்ஸோ கொண்டு வந்து கொடுப்பார். ஒவ்வொரு முறையும் எதாவது குடும்பக் கதை ஒன்று ஐயாவால் அம்மா வருவதற்குள் சொல்லி முடிக்கப்படும். அம்மாவோ அதிகம் பேசமாட்டார். வாங்கப்பா என்பதோடு சரி. குடித்து முடித்ததும் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வர்றோம் ஐயா என்று கிளம்பும் போது 'வர்றதுதான் வாறீங்க ஒரு மத்தியானவேளையில் வந்தால் சாப்பிட்டுப் போகலாம்தானே... ஒரு நா.. ஒரு வாயி சாப்பாடு கூட சாப்பிடாம... இப்படி ஓடியாந்துட்டு ஓடுறீக...' என்று சொல்லிச் சிரிப்பார். 'நம்ம வீட்ல சாப்பிடுறதுக்கு என்னய்யா... இப்ப உக்காந்தா சாப்பாடு போட மாட்டீங்களா?' என்று முருகன் சொல்லவும் 'உனக்கு பேசவா சொல்லித் தரணும்... நீ பேசிச் சமாளிச்சிருவே... அவன் சிரிச்சே சமாளிச்சிருவான்... நல்ல செட்டுய்யா ரெண்டு பேரும்... ஆனா ஒண்ணுய்யா கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் இதே பாசத்தோட இருக்கணும்ய்யா' என்று சொல்லி வாசல்வரை வந்து வழியனுப்பி வைப்பார்.

ஒரே ஒருமுறை இருவரும் ஐயா வீட்டில் மதியம் சாப்பிட்ட நியாபகம் இருக்கிறது. செம்மலர், தாமரையில் எல்லாம் வரிகளை விடாது படித்து அடிக்கோடிட்டு அது குறித்து சிலாகித்துப் பேசுவார். பாரதி விழாவின் போது நாங்கள் வேலை செய்தால் தானும் வந்து அதில் இணைந்து கொள்வார். பெரும்பாலும் ஐயாக்களுடனான ஜாலியான பொழுதுகளில் அருள்சாமி ஐயா மெதுவாக சவரிமுத்து ஐயாவின் செல்லப்பிள்ளைகள் என்று சீண்ட ஆரம்பிப்பார், சவரிமுத்து ஐயாவோ பிள்ளைகள் எல்லோருக்கும் எல்லோருக்கும் செல்லம்தான்...  இதில் பிரித்துப் பார்க்க என்னய்யா இருக்கு என்று சிரித்துவிட்டு என்ன இருந்தாலும் இருக்க பிள்ளைகள்ல இந்த ரெண்டு பிள்ளைகளும் பேராசிரியரோட (பழனி ஐயா) பிள்ளைகள் அல்லவா என்று மேலும் கூடுதலாக இவர்கள் என் பிள்ளைகள் என்பதைவிட பேராசிரியரின் பிள்ளைகள் என்பதுதான் பொருத்தம் என்பது போல சொல்லி பழனி ஐயா முகத்தைப் பார்ப்பார். ஆனால் அவரோ எப்போதும் போல் வெண்தாடிக்குள் சாந்தமாய்ச் சிரிப்பார். அந்தச் சிரிப்பில் எல்லாப் பிள்ளைகளும் என்பிள்ளைகளே என்று சொல்வதாய் நமக்குத் தோன்றும்.

கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருக்கும் வரை அருள்சாமி ஐயாவுடனான தொடர்பு இருந்தது. பின்னர் சென்னை, அபுதாபி என்று வாழ்க்கைப் பயணம் தொடர்ந்த போது ஐயாவுடனான நெருக்கம் குறைந்தது. 'குமார் இப்போ எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?' என சில முறை முருகனிடம் கேட்டிருக்கிறார். நான் செல்லும் போதெல்லாம் அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்து நினைத்து பார்க்காமல் திரும்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் அன்புக்குரிய அருள்சாமி ஐயா, தமிழாசிரியர் என்றாலும் ஆங்கிலப் புலமை அதிகம். நிறையப் படிப்பார்... நிறைய எழுதுவார். புத்தகங்கள் எல்லாம் போட்டிருக்கிறார். அதிகம் பேச மாட்டார் என்றாலும் நெருக்கமாகி விட்டோம் என்றால் அவருடன் நிறைய விஷயங்கள் குறித்து அதிகம் பேசலாம்... அதனால் அவருடன் பேசுவது என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். எல்லாருக்கும் பிடித்த அருள்சாமி ஐயா கடவுள் அருளால் சந்தோஷமாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஐயாவின் அன்பில் கொஞ்சக் காலம் வாழ்ந்தவன் என்ற சந்தோஷத்தோடு எப்போதும் அவரின் ஆசிகளை வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்த பதிவில் எனது பேராசிரியர் கே.வி.சுப்பிரமணியன் (கே.வி.எஸ்) அவர்களைப் பற்றி பார்ப்போம்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…


தங்களின் அருள்சாமி ஐயா அவர்களுக்கு எமது வந்தனங்கள் நண்பரே...

Kasthuri Rengan சொன்னது…

சின்னப்பசங்க நீங்க படித்து நாங்க ரசிக்கனும்...

சொன்னவரின் பெரியமனுசத்தனம் மெச்சத்தக்கது ...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருள்சாமி போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 2

மகேந்திரன் சொன்னது…

உங்கள் பதிவின் மூலம் பெருந்தகையின் அறிமுகம் எங்களுக்கும்....

J.Jeyaseelan சொன்னது…

இனிய மனிதரின் நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி சார்....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறுவயதில் பழகிய ஆசிரியர்- மாணவர் உறவு என்றுமே மறக்காது! நினைவுகூர்ந்தமை சிறப்பு! நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆசிரியர்கள் பற்றிய உங்கள் நினைவலைகள்...... நன்று.

தொடர்கிறேன்.

முனைவர் தமிழ்முடியரசன் சொன்னது…

நேற்றுதான் அவரோடு வெகுநேரம் உரையாடி மகிழ்ந்து வந்தேன்.. தங்களுடன் பேச இயலுமா? 9842589571