மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 15 ஜனவரி, 2013

மாட்டுப் பொங்கல்..!


 கருக்கலிலே எழுந்திருச்சு
காளைகளை குளிப்பாட்டி
புது கயிறுயும் மணியுமிட்டு
காவித் துண்டும் கட்டி
மஞ்சள் பொட்டோடு
காவியும் கலந்து இட்டு
கரும்பும் கிழங்கும்
அதனூடே பொங்கத்தாலி
கொஞ்சம் வைத்துக்கட்டி
ஊர் கூடி ஒன்றாக
கருப்பர் கோவில் வாசலிலே
பொங்கல் வைத்து
'பொங்கலோ பொங்கல்'
என சந்தோஷமாய்
திட்டிக்குழி சுத்தி வந்து
மாட்டுக்கெல்லாம்
பொங்கல் கொடுத்து
கேலிகாரர்களுக்கும்
பொங்கல் தீட்டி உற்சாகமாய்
கொண்டாடும் கிராமத்து
மாட்டுப் பொங்கல்
நெஞ்சுக்குள்ளே இனிக்கிறது
சர்க்கரைப் பொங்கலென...




                                                என் கிராமத்து மக்களுக்கும்
                                           நண்பர்களுக்கும் உறவுகளுக்கும்
                                          மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்


                                                                                                                                  -'பரிவை' சே.குமார்.

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்..!





வயலெல்லாம் வெளஞ்சு நிக்க
களத்து மேடு காத்துக் கிடக்க
களம் நிறையும் நெல்லுக்காக
காத்திருக்கும் வேளையிலே...

வாசலிலே கோலமிட்டு
வண்ணங்கள் அதில் கொடுத்து
இரும்பு அடுப்பினிலே
இனிய பொங்கல் வைக்க...

புதுப்பானையில் கோலமிட்டு
மஞ்சள் கொத்து அதில் கட்டி
சுத்தமான பசும்பாலோடு
புத்தரிசிப் பால் கலந்து வைத்து...

பொங்கி வரும் வேளையிலே
சந்தோஷம் பொங்கவே
பச்சரிசி வெல்லமிட்டு
பக்குவமாய் பொங்கல் வைத்து...

குடும்பத்தோடு உறவுகளும்
கூடிக் களித்திடவே...
இந்நாளை நமக்களித்த
தை மகளுக்கு நன்றி சொல்வோம்...

பொங்கலோ பொங்கலென
கூடியே சொல்லிடுவோம்...
மங்களமாய் நம் வாழ்வு
மகிழ்ந்தே சிறக்கட்டும்...

              அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

                                                                                                                         -'பரிவை' சே.குமார்.

Thanks--- Photo from Google

புதன், 9 ஜனவரி, 2013

விதிவிலக்கா, எதற்காக? (தினமணி - தலையங்கம்)

 திரைப்படத் துறைக்கு சேவை வரி கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் அனைவரும் திங்கள்கிழமை (ஜனவரி 7) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இது வெறும் அடையாள உண்ணாவிரதம் மட்டுமே. மத்திய அரசு தங்கள் கோரிக்கையை ஏற்காவிடில் மேலும் சில போராட்ட உத்திகளில் திரையுலகம் ஈடுபடக்கூடும்.

 திரையுலகின் நூற்றாண்டு தொடக்க விழா ஆண்டாகிய 2012-இல் திரையுலகம் மீது வரிகளை விதிக்க மாட்டோம் என்று 2012 மார்ச் முதல் வாரத்தில், அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி கூறினார். பட்ஜெட்டில் சேவை வரி 12.36% ஆக உயர்த்தப்பட்டபோது, சேவை வரிப் பட்டியலில் திரையிடுவோர், விநியோகஸ்தர்களுக்கு விலக்கு அளித்ததற்காக அப்போது திரையுலகம் அவருக்கு நன்றியும் தெரிவித்தது.

  ஆனால், மத்திய அரசு ஜூன் மாதம் வெளியிட்ட சில சுற்றறிக்கைகள், சேவை என்றால் என்ன என்று வகைப்படுத்தியது. இதில் திரைத்துறை கலைஞர்கள் இடம்பெறும் கட்டாயம் ஏற்பட்டது. இப்போது இந்த சேவை வரியை எதிர்த்துத் திரையுலகினர், சின்னத்திரைக் கலைஞர்கள் அனைவரும் களம் இறங்கியுள்ளனர்.

  நடிகர்கள் மட்டுமின்றி கேமராமேன், எடிட்டிங் செய்பவர், ஒலிப்பதிவு செய்யும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் தங்கள் வருமானத்தில் 12.36% சேவை வரி செலுத்த வேண்டும். ஒரு தயாரிப்பாளர் பட விநியோகஸ்தர்களுக்கு படத்தைத் திரையிடும் உரிமையை வழங்குவதால் (காப்பிரைட்) கிடைக்கும் பணத்துக்கு மட்டும் சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  இத்தகைய சேவை வரி விதிப்பினால், ஒரு படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் பெறும்  நடிகர், ரூ. 12.36 லட்சம் சேவை வரி கட்ட வேண்டும். ஆனால், அந்த நடிகர் இந்த சேவை வரியை படத் தயாரிப்பாளரே செலுத்த நிர்பந்திப்பார் என்றும் இத்தகைய நடைமுறையால் கருப்புப் பணம்தான் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

  இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "இப்படி வரி போட்டால் கருப்புப் பணம்தான் அதிகமாகும். கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால்தான் அரசுக்கு அதிகப் பணம் கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.

  இத்தகைய வரிவிதிப்பை மத்திய அரசு கொண்டுவரக் காரணம், இன்று இந்தியத் திரையுலகம் மற்றும் சின்னத்திரையுலகம் அடைந்துள்ள மாற்றமும், இத்தொழிலில் உருவாகியுள்ள புதிய நடைமுறைகளும்தான்.

  இன்றைய திரையுலகம் வெறும் திரையரங்குடன் நிற்கவில்லை. திரையரங்குகள் மூலம் அரசுக்கு வரும் கேளிக்கை வரி மிகமிக சொற்பம். தற்போது 600 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் ஒவ்வொரு வீடும் ஹோம் தியேட்டராக மாறிவிட்டது. 3ஜி தொழில்நுட்பம் மேலும் பரவலாகும்போது, செல்போனில், டேப்லெட்டில் திரைப்படம் அல்லது சின்னத்திரை சீரியல்களைப் பார்க்க முடியும். ஆகவே சேவை என்பதன் பொருளை மத்திய அரசு விரித்துக்கொண்டே போகிறது.

  ஓராண்டில் சுமார் 1,000 திரைப்படங்களும் 9,000 சீரியல்களும் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒலிப்பதிவு, பாடல்பதிவு, ஸ்டுடியோ எல்லாமும் மிகச் சிறிய அளவில், ஒரு வீட்டுக்குள் இருந்தாலே போதும் என்ற அளவுக்கு கணினித் தொழில்நுட்பம் எல்லைகளைச் சுருக்கியுள்ளது.

  அதுமட்டுமல்ல, இந்தியாவில் செலவு குறைவு என்ற காரணத்தால், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் சில அனிமேஷன் படங்களும், எடிட்டிங் பணிகளும் இந்தியாவுக்கு அயல்பணி ஒப்பந்தமாக வருவது அதிகரித்துள்ளது.

  மேலும், திரைப்பட காட்சித் தொகுப்புகளை, பாடல்களை, அல்லது படம் முழுவதையும் தனியார் தொலைக்காட்சிகள் பயன்படுத்திக்கொள்ள, ஒளிபரப்பு உரிமைகளை வழங்குவதிலும் புதிய நடைமுறைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு படம் முடியும் முன்பாகவே இந்த உரிமைப் பரிமாற்றம் நடந்துவிடுகிறது. வெளிநாட்டுப் படங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு, நேரடியாக தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

  "விஸ்வரூபம்' போன்று, ஒரு படத்தை நேரடியாக, டி.டி.எச் மூலம் வெளியிடலாம் என்கின்ற அளவுக்கு தொழில்நுட்பம் விரிந்துள்ள நிலையில், திரை மற்றும் சின்னத்திரை சேவை வகைப்பாட்டில் தானே சிக்கிக்கொள்கிறது.

  இந்த வரி விதிப்பினால், தயாரிப்புச் செலவு கூடும், இந்தச் செலவு கடைசியாக மக்கள் மீதுதான் வந்து விழும் என்று சொல்கிறார்கள். இந்த வாதம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருக்கலாம். திரையரங்குகளைத் தேடி வந்து பார்க்கும் மக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட இந்த நாளில் இந்த வாதம் பொருந்தாது.

  பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு, அவர்களது சேவை வரியை அவர்களே கட்டினாலே போதும், தயாரிப்புச் செலவு பெரிதும் குறைந்துவிடும்.

  திரைப்படம் என்பது திரைத்துறையோடு நின்றுவிடும் நிலைமை இன்றில்லை. திரையரங்குகள் என்பதைத் தாண்டி, தனியார் தொலைக்காட்சிச் சேனல்களுடன் தொடர்புடைய தொழிலாக திரைத்துறை மாறிவிட்டது. திரைத்துறைக்கு சேவை வரி விலக்கு அளிப்பதன் பெரும்பயன் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத்தான் மறைமுகமாகப் போய்ச் சேரும்.

 நடிக, நடிகையரும், திரையுலக ஊழியர்களும் மாதச் சம்பளம் பெறுபவர்கள் அல்ல. ஒப்பந்தப் பணியாளர்கள். ஒப்பந்தம் என்றாலே அதற்கு சேவைவரி உண்டு. சிகையலங்காரம், அழகுக் கலை வல்லுநர்கள் போன்றவர்களுக்கே சேவை வரி உண்டு எனும்போது, லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் பெறும் திரைப்படத் துறையினருக்கு எதற்காக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று புரியவில்லை.

 வழக்கில் ஆஜராவதற்கு நாளொன்றுக்கு லட்சத்துக்கும் மேல் சம்பளம் பெறும் வழக்குரைஞர்களை மட்டும் வழக்குரைஞரான நிதியமைச்சர் ஏன் சேவை வரி வரம்பில் சேர்க்காமல் விட்டு வைத்திருக்கிறார்? அவர்களுக்கு ஏன் விதிவிலக்கு என்கிற கேள்வியையும் இந்த நேரத்தில் எழுப்பத் தோன்றுகிறதே...

08/01/2013
'பரிவை' சே.குமார் 

சனி, 5 ஜனவரி, 2013

நித்திய சந்தோஷம்...



நானாகி இருந்த மனசுக்குள்
நாம் என்று அமர்ந்தவள் நீ..!
வாழ்க்கைப் போராட்டத்தில்
அச்சாணியாய் அமைந்தவள் நீ..!
வேதனைகளையும் கோபங்களையும்
புன்னகையால் புறந்தள்ளுபவள் நீ..!
வேசமில்லா பாசமும் நேசமும்
வெள்ளந்தியாய் கொடுப்பவள் நீ..!
இன்பமும் துன்பமும் இணைந்த
வாழ்க்கையில் சுமைதாங்கியாய் நீ..!
ஆணில் பாதி பெண் என்பதை மாற்றி
என்னுள் எல்லாமும் ஆனவள் நீ..!
காதலியாய் என்னுள் நிறைந்து
தாயாய் எனக்காய் வாழும்
என்னவளே... என்னுயிரே...
இந்தநாள் மட்டுமல்ல இனிவரும்
நாட்களெல்லாம் இனிமை நிறையட்டும்..!
வலிகள் எல்லாம் வடிந்துபோய்
வசந்தகாலம் மலரட்டும்..!
சந்தோஷங்கள் உன் வசமாகட்டும்..!

************************************************

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் உயிருக்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 
உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் சந்தோஷத்தை கொடுக்கட்டும்...

பிரியமுடன் வாழ்த்தும்...

சே.குமார்
ஸ்ருதி குமார்
விஷால் குமார்

திங்கள், 31 டிசம்பர், 2012

2012.... 2013



கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றில்
நல்லவற்றை எடுத்துக் கொண்டும்...
கெட்டவற்றை விரட்டி விட்டும்
புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைப்போம்....

இயற்கையின் வழியான அழிவுகளை
தடுக்க நம்மால் இயலாது...
இயன்றவரை நல்லதே நினைப்போம்...
நல்லதே செய்வோம்...

தில்லி சகோதரிக்கு நிகழ்ந்த
கொடுமைக்காக வெட்கப்படுவோம்...
வேதனையோடு இனி இதுபோல்
நடக்கவிட மாட்டோம் என
சபதம் செய்வோம்...

அரக்க குணத்தையும்
அராஜக செயல்களையும்
அடியோடு ஒழிப்போம்...
நம் சத்தியம் காப்போம்...

சாதி மத சண்டைகள்...
தண்ணீர் பிரச்சினைகள்...
பாலியல் வன்முறைகள்...
அரசியல் அக்கிரமங்கள்

அனைத்தும் ஒழித்து
அமைதியான வாழ்வை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்...
பிறக்கும் புத்தாண்டு 2013....


போய் வா இரண்டாயிரத்துப் பனிரெண்டே...
வருக வருக இரண்டாயிரத்துப் பதிமூன்றே...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...



கீழே இருக்கும் லிங்க் நண்பர் ஸ்டார்ஜன் அவர்கள் அனுப்பியது. இதை கிளிக்கி நீங்களும் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்...



புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
'பரிவை' சே.குமார்

திங்கள், 24 டிசம்பர், 2012

சச்சின் என்னும் சகாப்தம்..!


கிரிக்கெட் என்றால் நினைவில் வரும் பெயர் சச்சின்... சச்சின் மட்டுமே.... இந்தியாவில் மட்டுமல்ல.... உலக அளவில் கிரிக்கெட் அறிந்தவர்கள் உச்சரிக்கும் பெயர் சச்சின்.

கிரிக்கெட்டில் எத்தனை எத்தனையோ வீரர்கள் உலகெங்கும் இருந்தாலும் எல்லாரும் விரும்பும் வீர்ராக, களத்தில் சிங்கமாக திகழ்ந்த வீரர் சச்சின். எப்படிப்பட்ட வீரர் பந்து போட்டாலும் விளாசக் கூடிய திறமை படைத்தவர் சச்சின். 

படிக்கும் காலத்தில் சச்சினின் தீவிர ரசிகனாக இருந்தவன் நான். இன்றும் சச்சின் ஆட்டம் என்றால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பார்க்கக் கூடியவன்தான். எந்தப் பத்திரிக்கையில் சச்சின் போட்டோ வந்தாலும் அதை எடுத்து வைக்கும் அளவுக்கு சச்சின் பைத்தியம் பிடித்தவர்களில் நானும் ஒருவன்.

சாதனைகளுக்காகவே பிறந்தவன் சச்சின்... கிரிக்கெட்டில் அவர் படைத்திருகும் சாதனைகள்தான் எத்தனை... எத்தனை...  அத்தனையும் எட்ட முடியாத சாதனைகள்தான்... அவரது சாதனைகளை தகர்க்க இன்னுமொரு சச்சின் பிறந்து வரவேண்டும் என்பதே உண்மை.

ஆடுகளத்தில் அவர் நின்றால் எதிர் அணிக்கு கிலி பிடித்துக் கொள்ளும் என்பதே உண்மை. சச்சினிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரை அவுட் ஆக்கிவிட்டு அவருக்கு முன் கத்திக் கொண்டு ஓடினாலோ குதித்து அவரை பார்த்து கிண்டல் பண்ணினாலோ மைதானத்துக்குள் அவர் எதுவும் பேசமாட்டார். ஆனால் அடுத்த போட்டியில் அவரை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்.

ஜிம்பாப்வேயின் ஒலாங்கோ சில போட்டிகளில் சச்சினை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கிவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்தார். ஒலங்கா என்றாலே சச்சினுக்கு உதறல் எடுக்கும் என்ற விமர்சனமெல்லாம் வர ஆரம்பித்தது. ஒரு போட்டியில் பந்து வீச வந்த ஒலங்கோவின் பந்து ஆறுக்கும் நாலுக்கும் இடையில் மாட்டி சின்னாபின்னமாகியது. நான்கு ஓவர் போட்டவர் சச்சின் அவுட்டான பின்னர்தான் வந்தார். 

ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வார்னேயின் பந்தை சச்சின் விளாசியதை வார்னே இன்னும் மறக்கவில்லை. இலங்கையின் முரளிதரன் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம் ஆனால் சச்சின் அவருக்கு சிம்ம சொப்பனம்.

தான் அவுட் என்று தெரிந்தால் நடுவர் சொல்லும் முன்னரே வெளியேறும் சொற்ப வீரர்களில் சச்சினும் ஒருவர். ரன் குவிப்பில் சச்சினுக்கு நிகர் சச்சினே... 

ஜாம்பவான் சச்சின் சாதனைகள் பல புரிந்த போது தூக்கி வைத்து கொண்டாடிய பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவர் சில போட்டிகளில் விளையாடாத போது விமர்சிக்க ஆரம்பித்தனர். நேற்று கூட ஒரு தமிழ் பத்திரிக்கையில் வழியாக ஓய்வை அறிவித்தார் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. என்ன கொடுமை பாருங்கள். எத்தனை கேவலமான செய்திகள், கமெண்டுகள்... இவ்வளவுக்கும் சாதனை நாயகன் சச்சின் எந்த கருத்தும் சொல்லவில்லை. மௌனத்தையே பதிலாக அளித்தார். 

அவரின் இந்த முடிவு அவரது சொந்த முடிவாக இருந்தாலும் கேலிகளும் கிண்டல்களும்தான் ஒரு மாவீரனை இப்படி ஒரு முடிவெடுக்க வைத்துள்ளது என்பதே உண்மை. இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எப்படிப்பட்டவரும் கடைசியில் அசிங்கப்பட்டு கேவலப்பட்டுத்தான் வெளியே போவார்கள். இதற்கு உதாரணங்களாக கங்குலி, திராவிட், லெட்சுமணன்  என அடுக்கிக் கொண்டே போகலாம். அசிங்கங்கள் அரங்கேற பிள்ளையார் சுழி போடப்பட்ட போதே சச்சின் அசிங்கப்பட்டு போகக்கூடாது என்று கடவுளை வேண்டிய கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.

சச்சினின் ஓய்வுக்குப் பிறகு அவர் 50வது சதத்தை பூர்த்தி செய்திருக்கலாம். இப்போது ஓய்வு எடுத்திருக்க வேண்டாம் என்று ஆளாளுக்குப் பேசுகிறார்கள். முன்பு வெளியேறு என்று சொன்ன நாக்கு இன்று ஏன் வெளியேறினாய் என்கிறது. ஆமாம் நரம்பில்லாத நாக்குத்தானே எப்படியும் பேசும். திடீரென ஓய்வை அறிவித்து எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் சச்சின்.

சச்சின் இல்லாத இந்திய அணியில் இனி என்ன ஆகும் என்பதை பாகிஸ்தானுடனான ஒருதினப் போட்டியில் தெரிந்துவிடும். சச்சின் இல்லாதது உலக அணிகளுக்கு கொஞ்சம் அல்ல அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க சச்சின் விலகியிருக்கிறார். தொடர்ந்து சொதப்பும் சிலர் இன்னும் அணிக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சச்சினுக்குப் பிறகு தோனியில் தலையும் உருள ஆரம்பித்திருக்கிறது. நடப்பவைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

சச்சின் கிரிக்கெட் என்னும் மதத்தின் கடவுள்... அவர் ஓய்வு அறிவித்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காமல்தான் இருப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே....

சச்சினின் ஓய்வுக்காலம் குடும்பத்தாருடன் சந்தோஷமாகவும் மனதுக்கு நிறைவாகவும் அமையட்டும்.

-'பரிவை' சே.குமார்.