மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 23 நவம்பர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் : 5

முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் வாசிக்க... 1   2   3  4

ன்னைக் கவர்ந்த பாடல்கள் எழுதி ரொம்ப நாளாச்சு... சில விழாக்கள்... சில புத்தகங்கள் என எழுதியதால் பாடல்கள் குறித்தான தொடரைத் தொடர முடியாமல் போனது. கடவுள் வணக்கம் எல்லாம் முடித்து விட்டோமல்லவா... அடுத்தது... சினிமாதானே என்றால் இல்லை... அதற்கு முன் எல்லாரையும் ஆட வைக்கும் மண்ணின் இசையான நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

பாடல்களுக்குள் போகும்முன் நம் இசையுடன்...


நாட்டுப்புறப் பாடலோ அல்லது இசையோ ஆடாதவரையும் ஆட வைக்கும் தன்மை கொண்டவை... அது திருவிழாவுக்கு என்றாலும் திரும்பாத விழாவுக்கு என்றாலும் இசையில் மாற்றமிருக்குமே ஒழிய ஆட்டம் போட வைப்பதில் இருந்து எப்போதும் மாறாது... 'தாயே கருமாரி...' என வாசித்து அடிக்கும் போதும் ஆடுவோம்.... 'மக்க கலங்குதப்பா...'ன்னு சாவு வீட்டில் வாசித்து அடிக்கும் போதும் ஆடுவோம். நாட்டுப்புற இசை எப்போதும் ஆட்டம் கொடுக்கும் இசைதான்.

அப்படியே பறவை முனியம்மாவின் குரலில் கிராமியப் பாடலைக் கேட்கலாமே...


உருமியும் மேளமும் நாகஸ்வரமும் பம்பையும் தப்பும் கொடுக்கும் இசைக்கு ஈடு வேறு எதிலும் இல்லை. இன்னும் கிராமியப் பாடல்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுபவை இந்த இசைக் கருவிகள்தான். கரகாட்டம் ஆடுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடட்டும்... ஆனால் கரகாட்டம் ஆரம்பிக்கும் முன் பத்து நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை இசைக் கலைஞர்களின் வாசிப்பு கூட்டத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வரும்... அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் இசையாய் அது அமையும். அதேபோல்தான் கூத்துக்களில் பின்பாட்டுக் குழுவின் இசை, பின்பாட்டுப் பாடுபவர் பாடலைக் கொலையாக் கொண்டாலும் அந்த டோலக், மிருதங்கம் என எல்லாமே அடித்து ஆடும்.


பெரும்பாலும் கிராமியப் பாடல்கள் யாரோ எழுதியதாய் இருக்கும்... கிராமியப்பாடல் பாடும் எல்லாருமே ஒரே பாடலைப் பாடுவார்கள் என்றாலும் ஒரு சில பாடல் இவர் பாடினால்தான் நல்லாயிருக்கும் என்ற பிம்பத்தை உண்டாக்கிவிடும்... அதை மற்றொருவர் பாடும் போது அது பல நேரங்களில் ஓட்டுவதில்லை. தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய 'அங்கே இடி முழங்குது' பாடலை பலர் பல மேடைகளில் பாடினாலும் திருவிழாக்களில் தேக்கம்பட்டியாரின் குரலில் பெரிய பெரிய ஸ்பீக்கர்களில் அங்கே இடி முழங்குது எனப் பாடும் போது பலருக்குள் கருப்பன் பாய்ந்தோடி இறங்கி நிற்பான்.

விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணனின் பாடல்கள் ஆட்டம் போட வைக்கக் கூடியவை... அதுவும் மெதுவாக ஆரம்பித்து... மெல்ல வேகமெடுத்து.... வேகமாய் முடியும் பாடல்கள் நிறையப் பாடுவார். சினிமாவில் இவர் பாடிய 'தோசைக்கடை ஓரத்துல தோசை ஒண்ணாங்க...' பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பாடல் என்றால் இவருக்கு என தனி மதிப்பைக் கொடுத்த பாடல் என்றால் அது...
ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஒர ஒரமா
பத்திரக்காளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையன பேச்சியத்தல மாரியம்மல
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாபண்ணைக்கு அழகு பூபூத்து
ஆத்தா வராலாம் பூஞ்சோலைக்கு...

இன்னும் அழகான அருமையான பாடல்களை எல்லாம் பாடினார் டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பார்க்கும் போது கணவன் மனைவி இருவருமே தள்ளாத வயதில் இருப்பது போல் எழுந்து நிற்பதில் கூட சிரமப்பட்டதைக் காண முடிந்தது. இன்று அவர்களின் பாடல்களைப் பலர் பல மேடைகளில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களின் குரலுக்கு இருக்கும் ஈர்ப்புத் தனிதான்.

அடுத்து 'ராஜாத்தி உன்னையெண்ணி' பாடலை பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க விட்ட புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி இணை... இந்தாளு எந்த ஒரு பாடல் என்றாலும் அதை ரசிக்கும்படி பாடக்கூடிய திறமை மிக்கவர். எத்தனை எத்தனை பாடல்களைப் பாடியிருக்கிறார்கள் இந்த இணை.
மஞ்ச செவ்வந்திப் பூவாம்
மன்னார்குடி பூத்த பூவாம்
மன்னார்குடிக்குப் போயி வந்தேன்
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன்.


இவர்களைப் போலவே தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், பறவை முனியம்மா, சிங்கம்புணரி தங்கராசு, கோட்டைச்சாமி ஆறுமுகம் இப்படி நிறையப் பேர் கிராமியப் பாடல்களில் ஒரு காலத்தில் கோலோச்சியிருந்தார்கள். இவர்களுக்குப் பின்னே வந்த புதியவர்கள் எல்லாம் மெல்ல சினிமாவுக்குள் நுழைய ஆரம்பித்து விட்டார்கள்.

அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் 'நாக்க முக்க...' பாடிய சின்னப்பொண்ணு. இப்ப பெரும்பாலான செல்போன்களில் 'கண்ணான கண்ணே...' ரிங்டோனாக இருப்பது போல் சில வருடங்களுக்கு முன் எந்தப் போன் அடித்தாலும் 'மரிக்கொழுந்தே... மல்லிகைப்பூவே...'தான். அந்தளவு அவரின் இந்தப் பாடல் மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தது.

இவரின் பாடல்கள் எல்லாமே கேட்கப் பிடிக்கும் என்றாலும் மகள் அம்மாவுக்கு எழுதும் கடிதம் போன்ற வரிகளை சின்னுப்பொண்ணு பாடும் போது அந்த வரிகளை உணர முடியும்.

ஏதோ நானும் இருக்கிறன்,
உருபிடியா படிக்கிறன்.....
யாரும் இல்ல நமக்கு,
நீ எப்படி இருபன்னு நினைக்கிறன் ..
யாரும் இல்ல நமக்கு,
நீ எப்படி இருபன்னு நினைக்கிறன் ..
அன்பு உள்ளம் கொண்ட அம்மாவுக்கு,
மகள் எழுதும் கடிதம்...


ஆந்தகுடி இளையராஜாவின் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்... அவரின் பாடல்களில் என்னை ரொம்பக் கவர்ந்த பாடல் 'அத்தமக உன்னை நினச்சி...' இதில் வரிகள் எல்லாம் நல்லாயிருக்கும்... இந்தப் பாடல்கள் எல்லாம் ஆல்பத்தில் இருப்பதால் ஆல்பத்துக்கான இசையிருக்கும். இதே பாடலை மேடையில் பாடும்போது கிராமிய இசைகளுடன் கேட்பதற்கு அருமையாக இருக்கும்.

அத்தமக உன்னை நினைச்சு
அழகு கவிதை ஒண்ணு வடிச்சேன்...
அத்தனையும் மற ந்துபுட்டேன்
அடியே உன்னைப் பார்த்ததுமே...


எங்க ஊர் பக்கம் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி என்றால் அது சேவியர்தான்... இவரிடம் இருந்துதான் இளையராஜாவெல்லாம் வெளியில் வந்திருக்கிறார். இவர் குழுவில் இளையராஜா பாடிக் கேட்டிருக்கிறேன். அருமையான ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவார்.


முத்துச்சிற்பி சிம்மக்குரலோன் என வள்ளிதிருமண நாடகத்தில் பெயர் எடுத்திருப்பவர்... எல்லாப் பாடல்களையும் அருமையாகப் பாடக்கூடியவர். இவரின் முதல் ஆல்பத்தில் ஒரு பாடல்... என்னை ரொம்பவே கவர்ந்த பாடல்... அது குறித்து தனிப்பதிவே எழுதினேன்.

பொறுபுள்ள பூவழகி...
சத்தநேரம் பேசிக்கிறேன்...
பொழுதும் போகவில்லை...
உன்னைத்தான் யோசிக்கிறேன்...


இயக்குநர் செல்ல. தங்கையாவின் இசைக்குழுவில் நல்ல நல்ல பாடல்களாய் பாடியிருக்கிறார்கள்... அதில் அபிராமி பாடியிருக்கும் 'ஏரி நன்னாக்கு' பாடல் அழகு... அதைப் பாடியிருக்கும் அபிராமியின் அபிநயங்களும் அழகு. இந்தப் பாடலைப் பலர் பாடியிருந்தாலும் ஏனோ அபிராமியின் குரலுக்குத்தான் அப்படியே பொருந்தி வருகிறது... எங்க தேவகோட்டைப் பக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் சொல்லவில்லை... இளையராஜா, முத்துச் சிற்பி என எல்லாருமே நம்ம பக்கத்து ஊராளுகதான்.

 ஏரி நன்னாங்கு ஏரிதான்டா மாமா..
எலந்தப்பழ தோப்புத்தான்டா...
ஏறி நல்லா உலுப்பட்டுமா மாமா..
பழத்தை நல்லாப் பறிக்கட்டுமா...


கிராமியப் பாடல்களில் மிகவும் பிரசித்திபெற்ற பாடல்கள் என்றால் 'சட்டி முட்டி கழுவவில்லை... சமையல் வேலை பார்க்கவில்லை...' என்ற பாடல்தான் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் பாடலாய்... இதை கரகாட்டத்தில் அதிகம் பாடுவார்கள். இதே பாடலின் மெட்டில் நிறையப் பாடல்கள் வந்தாச்சு... அதேபோல் 'சின்னஞ் சிறுசெல்லாம் சிகரெட்டு குடிக்குது... சித்தப்பன்மாருக்கிட்ட சிகரெட்டுக் கேக்குது'ன்னு நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் என எத்தனையோ பேர் பாடியிருந்தாலும் பறவை முனியம்மாவின் குரல்தான் நமக்கு ஞாபகத்தில் வரும்.

கிராமியப் பாடல்கள் பாடும் பெண்கள் வரிசையில் மாரியம்மாளும் குறிப்பிடத்தக்கவராய் இருக்கிறார். இவரின் பாடல்களும் கேட்டுத்தாளம் போட வைக்கும்... அவரின் பாடலில் ஒன்று... ரசிக்க.


இன்றைய நாட்டுப்புறப் பாடகர்கள் எல்லாருமே முன்னத்தி ஏர்கள் பாடி வைத்ததைத்தான் மேடையில் பாடுகிறார்கள்... இவர்கள் எழுதி இசையமைத்துப் பாடுவதென்பது எப்போதேனும் நிகழலாம்... எப்போதும் இவர்களுக்குப் பாடல் எழுத ஒருவர் இருக்கிறார்... அல்லது முன்னே எழுதி வைத்து விட்டுச் சென்ற பாடல்களை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். பறவை முனியம்மா பாடிய பல பாடல்கள் கோனார் என்பவர் எழுதியவையே... இன்றைய இளைஞர்களுக்கு பாடல் எழுத பலர் இருக்கிறார்கள்.

நல்ல நல்ல வரிகளுடன் பாடல்கள் வருவது இனிமைதான்... நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை ஒரு சிலரே செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்களின்  பார்வை எல்லாம் சினிமாப் பக்கமே இருக்கிறது. இவர்களின் குரல் வளத்துக்கான பாடல்கள் சில அமைவதுடன் அடுத்தகட்ட நகர்வுக்கான திட்டமிடல் சரியாக இல்லாமல் போகிறதா... அல்லது கிராமத்துப் பாடல் பாடுறவன் என்ற மனநிலை கொண்டவர்களால் வாய்ப்புக்கள் கிடைக்காமல் போகிறதா என்று தெரியாமலேயே காணாமல் போய் விடுகிறார்கள்... ஒரு சிலரைத் தவிர பலர் நிலை இதுதான்.

எல்லாரையும் சொல்லிட்டு நம்ம பக்கத்து கொல்லங்குடி கருப்பாயி பாட்டுப் போடலைன்னா எப்படி... அதனால போட்டுடுவோம்.


இப்ப நிறைய இளைஞர்கள் ஆந்தகுடி இளையராஜா, மதுரை சந்திரன். கொல்லங்குடி கருப்பாயி பேரன், நாரதர் முத்துச்சிற்பி, செந்தில்கணேஷ் இப்படி நிறையப் பேர் வந்தாச்சு... குரல் வளம் இருக்கு இவர்களிடம்... கவுண்டமணி, செந்திலுக்கு நகைச்சுவை எழுதிக் கொடுத்தவரைப் போல இவர்களுக்குப் பாடல் எழுத ஒருவர் இருக்கிறார்.... அந்தப் பாடல்களைப் பாடி ஆல்பம் வெளியிடுகிறார்கள்... வெளிநாடுகளுக்குப் போகிறார்கள்... இவர்களின் வளர்ச்சியை விஜய் டிவி சூப்பர் சிங்கர் மேடைக்கும். கலக்கப்போவது யாரு மேடைக்கும் பயன்படுத்தி, இவர்களையே வெற்றியாளர்களாகவும் ஆக்கித் தன் வருமானத்தையும் டிஆர்பியையும் பெருக்கிக் கொள்கிறது. இவர்களும் சினிமா என்னும் கனவுலகுக்குள் போகவே இந்த முயற்சிகளில் இறங்குகிறார்கள்.

மதுரை சந்திரனின் குரலில்...

மங்கம்மா சாலை மலைமேல
மதுரைக்குப் போறேன் வழி மேல...


அப்படியே இதையும் கேளுங்க... உங்களுக்குப் பிடிக்கும்.


இந்தப் பதிவு துள்ளலுடன் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்... ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே... எங்க மண்ணுக்கும் நாட்டுப்புற இசைக்கும் அதிகப் பிணைப்பு உண்டு... இப்ப வந்திருக்கும் பலர் தேவகோட்டை, காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்... சரி சரி... பெருமை பேசலை... விடுங்க... வுடுங்க... வுடுங்க....

அடுத்த பதிவு முதல் சினிமா பாடல்களுடன்...

பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

kowsy சொன்னது…

சிறப்பு வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான பாடல்கள்