மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 ஜூன், 2019

மனசின் பக்கம்: கிறுக்கிய கதைகளில் கொஞ்சம்

ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த மாதம் சில கதைகள் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் இரண்டு கதைகள் போட்டிகளுக்கு அனுப்ப எழுதி அனுப்பியும் வைத்தாச்சு.

சில கதைகளை கிராமப் பின்னணி தவிர்த்து எழுதி பார்த்தேன். பரவாயில்லையின்னு தான் தோணுது... ஆனாலும் நாம கிராமப் பின்னணி கதைக்குத்தான் லாயக்கு என்பதையும் உணரமுடிகிறது.

முழுக்கதையும் இங்கு பகிர்வதில்லை என்பதால் இங்கு கதைகளில் கொஞ்சமே கொஞ்சமாய் ... எல்லாக் கதைகளையும் இங்கு பகிரவில்லை... பகிர்ந்ததில் எந்தக் கதை உங்களை கவரும் விதத்தில் இருக்கு...  எது நல்லாயிருக்காதுன்னு தோணுதுன்னு சொல்லுங்க.

'தஸ்ரின்' என்றொரு கதை (இங்கு பகிரப்படவில்லை) தினமணி ரம்ஜான் சிறப்பு மலருக்கு அனுப்பினேன். கதை தெரிவானதா  இல்லையா தெரியலை. யாரேனும் அந்த மலர் வாங்கி இருந்தால் பார்த்து சொல்லுங்க.

இனி கதைகளில் சில பாராக்கள்...


குடிகாரன்

சாமிநாதனின் 'வேலவா' துணிக்கடை வாசலில் சரிந்த நிலையில் அமர்ந்திருந்தான் அவன்.

வயசு முப்பதைந்துக்குள்தான் இருக்கும் அவனுக்கு.... தாடியும் மீசையும் லேசாக நரைத்திருந்தது.

சட்டை, பேண்ட் எல்லாம் மண்ணில் விழுந்து புரண்டதில் கலர் மாறியிருந்தது.

தலைமுடி எண்ணையைப் பார்த்து மாதங்கள் ஆகியிருக்கலாம்.

உடம்பில் சில காயத்தின் தழும்புகள் இருந்தன.

சுப்பிரமணி கடையின் முன் சைக்கிளை நிறுத்தியபோது ஏறிட்டுப் பார்த்துவிட்டு தலை குனிந்து கொண்டான் அவன்.

அவன் நகர்ந்தால்தான் கடை ஷட்டரைத் தூக்க முடியும்.

"ஏய்... ஏம்ப்பா... அங்கிட்டுப் போய் உட்காரு..." மிரட்டுவது போல் சொன்னான் சுப்பிரமணி.

ஏறிட்டுப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டான்.

"ஏய்... இங்கேரு... உன்னைத்தான் சொல்றேன்.... நகண்டு உக்காருப்பா... கடை திறக்கணும்..." சற்றே கோபமாய்ச் சொன்னான் சுப்பிரமணி.

செண்பா 

பக்கத்தில் அமர்ந்து 'சாரி' என்றான்.

தலை தூக்கி அவனைப் பார்த்தாள். கண்ணீரில் குளித்த கண் சிவந்திருந்தது.

அவளின் உதடு துடித்தது.

"ஏய்... ப்ளீஸ்.." என்றான் கெஞ்சலாய்.

அவனை முறைத்தவள் சேலைத் தலைப்பால் முகம் துடைத்தாள்.

உதட்டில் ஒரு காயம்... ரத்தத்தை வெளியேற்றியிருந்தது.

அது காய்ந்து போயிருந்தது.

அவன் கையால் உதடு தொட்டான்... தட்டி விட்டாள்.

"அதான் சாரின்னு சொல்றேனுல்ல..." மெல்லப் பேசினான்.

விரக்தியாய்ச் சிரித்தாள்.

"இது நடந்திருக்கக் கூடாது... பட்... தவறுதலா.." மெல்ல இழுத்தான்.

"தவறுதலா...? அதெப்படி எல்லாம் நடத்திட்டு... சாரியும்... தவறுதலா நடந்திருச்சுன்னும் சொல்ல முடியுது இந்த ஆண்களால்..." கோபமாய்க் கேட்டாள்.

நாகர்

கம்மாய்க்கரையை நோக்கிப் போனபோது ஆளாளுக்கு ஒவ்வொரு காராஞ்செடிக்குப் பின்னால் அமர்ந்து வெளிய இருந்தது ஞாபகத்தில் ஆடியது. காராஞ்செடிகள் இன்னும் இருந்தன... அமரத்தான் இடமில்லாது முட்கள் மண்டிக்கிடந்தது.

கம்மாய்க்கரை ஏறினால் ஒரே கருவை மரங்கள்... பாதையே இல்லை... மாடுகள் நுழைந்து சென்று கருவைக்காய் பொறக்கித் தின்ன பாதை மட்டுமே வழியாய், முள் உடம்பில் கிழிக்க அந்த வழியாக  நாகரின் ஒரம்பா மரம் நோக்கி நடந்தேன். 

அருகே செல்லச் செல்ல ஆட்கள் இந்தப்பக்கம் வருவதேயில்லை என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. மாட்டெருக்களைத் தவிர மனிதக் கழிவுகள் எதுவும் இல்லாதிருந்தது. கண்மாய்க்குள் அமர்ந்து குடித்துவிட்டு யாரோ தூக்கிப் போட்டிருந்த சரக்குப் பாட்டிலொன்று சிதறிக் கிடக்க, அதனருகே கரையான் அரித்த சிகரெட் பாக்கெட் ஒன்றும் கிடந்தது.

நரி ஒன்று செத்து அழுகிப் போய் எலும்புகள் தெரியக் கிடந்தது. அதன் நாற்றம் காற்றோடு கலந்திருந்தது.

சில பாம்புச் சட்டைகள் கிடந்தன. பாம்புகள் நிறைய இருக்கலாம். 

நான் படிக்கும் காலத்தில் நின்ற சாய்ந்த பூவரசமரம் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் மஞ்சநெத்தி ஒன்று நின்று கொண்டிருந்தது... ஆனால் அந்தப் பூவரசு மட்டுமில்லாமல் அவளும் என் மனதுக்குள் வந்தாள். அவள்...ஆம்... பெத்து மாமா மகள் லதாவும் ஞாபகத்தில் வந்தாள். 

வீடு

"ஏம்ப்பா... ஊருக்கு வந்தாப்போனா ஒரு வீடு வேணாமாப்பா..." மெல்லக் கேட்டார் சின்ராசு.

"இப்பவே அங்கிட்டு வர்றதில்லை... ஏதோ நல்லது கெட்டதுக்குத்தான் வந்துட்டு ஓடியாறோம்... அங்க வந்து தங்குற அளவுக்கு வசதி வாய்ப்பு எதுவும் இல்லையில்ல... பிள்ளைகளுக்கு எல்லாம் நகரத்து வாழ்க்கை பழகிப் போச்சு... இனி அதுக அங்க வந்து தங்குங்களா என்ன.. ஏசியில்லாம உங்க பேரம்பேத்திக தூங்க மாட்டாங்க சித்தப்பா... இனி யாரு சித்தப்பா வரப்போறா... மராமத்துப் பாத்து வைக்கிற அளவுக்கு அந்த வீட்டுல என்ன இருக்கு... உங்க மருமக அப்பாதான் கடல் மாதிரி வீடு கட்டி, சென்ட்ரல் ஏசி போட்டு வச்சிருக்காரே... அதுக்கும் நம்மூருக்கும் எவ்வளவு தூரம்..? பசங்க அங்க தங்குறதைத்தான் விரும்புவாங்க.... அங்கிட்டுத் தங்கிட்டு ஊர்ல வந்து சொந்தபந்தத்தைப் பாத்துட்டு வந்தாப் பத்தாதா..."

"இல்லப்பா... இருந்தாலும்... அண்ணன் வாழ்ந்த வீடு... நாங்க பொறந்த வீடு... அந்த ஞாபகார்த்தத்துக்காச்சும்..." இழுத்தார்.

"ஞாபகமா வச்சி... என்ன பண்ண... அட ஏஞ்சித்தப்பா... அப்பா இருக்கும் போதே சுவரெல்லாம் பெயர்ந்து விழுந்துச்சு.. இப்பவே உத்தரம், கைமரமெல்லாம் கரையான் அரிச்சிருக்கப் போவுது... பூட்டுத் தொறவா இருந்தாலும் பரவாயில்லை... அப்பா சாவுக்கு அப்புறமா பூட்டிகத்தானே கிடக்கு..."

"ஏய்... அப்படிச் சொல்லாதேப்பா... எல்லாம் வைரம் பாஞ்ச மரங்க... அவ்வளவு சீக்கிரத்துல கரையான் புடிச்சிடாது... அதுபோக ஒந்தம்பி பொண்டாட்டி அப்பப்ப தொறந்து கூட்டி அள்ளிட்டுத்தான் வருது... பூட்டுத் தொறப்பா இல்லைன்னு சொல்லாதே.... நாங்க பாத்துக்கிட்டுத்தான் இருக்கோம்... என்ன ஒட்டடை அடிக்காம கை மரமெல்லாம் ஒட்டடை படந்து கிடக்குதாம்.. ஒரு ஆளு விட்டியன்னா... சுத்தம் பண்ணப் போறான்..."

வசந்தி

வசந்தியின் இறப்புச் செய்தியோடுதான் அன்றைய பொழுது விடிந்தது.

என்னால் அந்தச் செய்தியை சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை.

மரணமடையக் கூடிய வயதொன்றும் இல்லை அவளுக்கு என்பது மனசுக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டேயிருந்தது.

எனக்கும் அவளுக்கும் ஒரு சில வயது வித்தியாசம்தான். ...

மூன்று மாதத்திற்கு முன்னர்தான் நான் அம்பதைத் தொட்டிருந்தேன்.

அம்பது வயதுக்குள் அவளுக்குச் சாவு.

ஏற்க முடியவில்லைதான் என்றாலும் இருபத்தஞ்சி வயதில் கூட அட்டாக்கில் சாகின்ற காலமாகிவிட்டதே.

யாருக்கு எப்போன்னு யாருக்குத் தெரியும்.

விதி வந்தால் போக வேண்டியதுதானே...

அவள் பிறந்த வீட்டில் எல்லாரும் கூடியிருந்தோம்.

'என் மகளை அள்ளிக் கொடுத்துட்டேனே... என்ன செய்வேன்.." புலம்பினார் எழுபத்தைந்து வயதைக் கடந்த சீனிச்சாமி.

'நாம்பெத்த சீமையே...' எனக் கதறினாள் வசந்தியின் தாய்.

பார்க்க பரிதாபமாக இருந்தது. இழப்புக்களைச் சுமக்கும் முதுமைகளின் வலியை சொல்லில் கடத்திவிட முடியாதுதானே.

ஊரே அழுதது.... அழுகைச் சத்தம் ஊரை தாண்டிக் கேட்கக் கூடும்.

"என்னாச்சுன்னு ஏதாச்சும் தெரியுமா...?" மெல்லக் கேட்டேன் அவளின் அண்ணனிடம்.

வீராப்பு

"வாங்க சித்தப்பா... என்ன கருக்கல்ல வந்திருக்கீக... ஏ... ராஜாத்தி சித்தப்பாவுக்கு காப்பி போடு..."

"காப்பியெல்லாம் வேணாந்தா.... இப்பத்தான் குடிச்சிட்டு வாரேன்... ஏஞ் செலுவம்... எங்காதுக்கு அரசபுரசலா ஒரு சேதி வந்திருக்கு... ஓனக்கு எதுவுந் தெரியுமா...?"

"என்ன சேதி சித்தப்பா..?"

"எல்லாப் பக்கமும் பேசுறாய்ங்க... நீ தெரியாதுங்கிறே... எங்க ஒம்மவன்..."

"ம்.... அதுவா...? தெரியிஞ் சித்தப்பா... என்ன செய்யச் சொல்லுறீய..?"

"அப்ப ஒத்துக்கிறியா...? ஏழு பங்காளிக்குன்னு ஒரு மொற இருக்குடா... நாளாப்பின்ன ஊரு, நாட்டுக் கூட்டத்துல நம்மளுக்கு மதிப்பிருக்குமா..?"

"என்ன பண்ண சித்தப்பா... சொல்லிப் பாத்தாச்சி... அடிச்சிப் பாத்தாச்சி... செத்துருவேன்னு மிரட்டுறான்... என்னய என்ன செய்யச் சொல்லுறீய...."

"என்ன செய்யச் சொல்லுறீய... என்ன செய்யச் சொல்லுறீயன்னா... நீயே கட்டி வப்பே போல..."

"இந்தாங்க மாமா காப்பி..." என காபியை நீட்டியவளிடம் "அதான் வாணாமுன்னு சொன்னேனுல்ல... ஏம் போட்டே... செரி குடுத்தா...." என்றபடி வாங்கிக் கொண்டார்.

"அவுகளும் சொல்லிப் பாத்தாச்சு... அடிச்சி மெரட்டியெல்லாம் பாத்துட்டாக... அவளத்தான் கட்டுவேன்... இல்லேன்னா ரெண்டு பேரும் வெசத்தக் குடிச்சிட்டு செத்துப் போவோமுன்னு மிரட்டுறான்.... இதுக்கா பெத்து வளத்தோம்... என்ன செய்யுறதுன்னு தெரியல மாமா..." சேலை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டாள். கண்ணீர் தாரைதாரையாக கன்னத்தில் ஓடியது.

மூத்தவள்

"உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே வராதா..?" வந்ததும் வராததுமாக நிலைப்படியைப் பிடித்தபடி கத்தினான் ஆறுமுகம். பதில் சொல்லாது உக்கார்ந்திருந்தார் மூர்த்தி.

மகனின் சத்தம் கேட்டு அடுப்படியில் இருந்து ஈரக்கையை முந்தானையில் துடைத்தபடி வந்த லெட்சுமி, "ஏய் எதுக்குடா வாசல்ல நின்னு கத்துறே... எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள வந்து பேசு" என்றாள் சத்தமாக.

"வாசல்ல நின்னு கத்துறதால உங்க கவுரவம் கொறஞ்சி போகுதாக்கும்... ஏங்கத்துறேன்னு என்னையக் கேக்குறியே... என்ன பண்ணுனாருன்னு அவரைக் கேட்டியா... நீ எப்படிக் கேப்பே... மேயுற மாட்டைக் கெடுக்குற நக்குற மாடு மாதிரி அந்தாளைக் கெடுக்குறதே நீதானே... எதையும் கேட்டுக்காதே..." நின்ற நிலையில் இருந்து மாறாமல் கத்தினான்.

தெருவில் ஒரு சில தலைகள் தன் வீட்டையே பார்ப்பதைப் பார்த்த லெட்சுமி 'இங்க என்ன ஆடுதுன்னு பாக்குறாளுக' என்று முணங்கியபடி "அப்பா... நான் நக்குற மாடாவே இருக்கேன்... நீ முதல்ல உள்ள வா.. வாசல்ல நின்னு கத்தாம"

"எங்கிட்ட கத்து... அவருக்கிட்ட எதுவும் கேக்காதே..." என்றபடி உள்ளே வந்தான் ஆறுமுகம்.

"அவரு என்ன பண்ணுறாரு... எங்கே போறாருன்னு எனக்கென்ன தெரியும்... நீயும் அடியுமில்லாம முடியுமில்லாமப் பேசுறே..."

-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

அருமையான கதைகள். தங்கள் பாணியில், அழகான எழுத்து நடையில், கிராம மண்வாசனை வீசும் கதை கருவில் அனைத்துமே படிக்க நன்றாக உள்ளது.எதையென்று எடுத்துச் சொல்வது? "வீடு" கதையில் நினைவு பொக்கிஷங்களை இழக்க இயலாத சித்தப்பாவும், நாகரீக பாதை மாறி வர விருப்பமில்லாத மகனுமாக மேற்கொண்டு எவரின் விருப்பங்கள் நிறைவேறப் போகிறது என்று எதிர்பார்ப்புமாக, வெகு நன்றாக செல்கிறது. போட்டிகளில், வெற்றி பெற வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லணுமா என்ன?!!!!!! அத்தனையும் ஒவ்வொரு வகையில் அருமை. ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம் எந்பது போல் சொல்லிவிட்டன சாம்பிள் வரிகள்!!!

அசத்துங்க குமார். நீங்கள் மிக மிகத் திறமையான ஒரு ப்ரொஃபஷனல் எழுத்துக்குச் சொந்தமானவர். அதுவும் நுண்ணிய உணர்வுகள், விவரணங்கள் என்று!!!

வாழ்த்துகள் குமார்.

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

மாதிரித்துளிகள் கவர்கின்றன.

Anuprem சொன்னது…

ஒவ்வொன்றும் ஒரு விதம் ...அருமை

வீடு கதை அதிகம் ஈர்க்கிறது ..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் அருமை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

Nanjil Siva சொன்னது…

அருமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கதைகளின் சில வரிகள்..... முழுவதுமாக வாசிக்கத் தூண்டுகின்றன.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அக்கா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா

நன்றி அக்கா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி சகோதரி

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அய்யா

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி நண்பரே

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

வாழ்த்துகள்!

தினமணி ஈகைப் பெருநாள் மலரில் தங்கள் சிறுகதை வரவில்லை.
நண்பர் மலர்மதியும் கேட்டார். அவர் கதையும் வரவில்லை.
நானும் அனுப்பினேன்.
அதுவும் வரவில்லை.