மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 7 செப்டம்பர், 2017

தரமணி - தரமான மணியா?

Image result for தரமணி

ரமணி...

தமிழ்ச் சினிமாவில் இப்படி ஒரு படம் எடுப்பது என்பதே அபூர்வம். அவர் சொல்ல வந்ததைச் சொன்னாரா... தொட்டுச் சென்றாரா... இது சரிதானா... என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்துவதை விட்டுவிட்டு இப்படியான ஒரு படத்தை எடுத்திருக்கிறாரே என்று பாராட்டக்கூடச் செய்யலாம்... ஆனால் அடுத்தவனைப் பாராட்டுவது என்பது நமக்கு ரொம்பச் சிரமமான விஷயம் இல்லையா... தமிழ்ச் சினிமா உலக மக்கள் கூட புளூ சட்டை போல் இப்படி எடுக்கலாமா..? இது தகுமா..? பெண் தண்ணியடிக்கலாமா..? என ஆளாளுக்கு ஏகப்பட்ட கேள்விகளை விமர்சனமாக முன்னிருத்தினார்கள். தங்கர்பச்சன் படம் நல்லாயிருக்கு என்று சொல்லப்போக அவரையும் போட்டு ஆளாளுக்கு காய்ச்சி எடுத்தார்கள். நல்லாயிருக்கு நல்லாயில்லை என்பதைப் பற்றி நிறையப் பேர் நிறையப் பேசியிருக்கிறார்கள். எனக்குப் படம் பிடித்திருந்தது அவ்வளவே.

பீப் பாடல் பாடிய சிம்புவுக்கு எதிராக பொங்கி எழுந்த மகளிர் அமைப்புக்கள் முக்கியமான விஷயங்களுக்குப் பொங்கவில்லை என்றாலும் சினிமாவில் ஏதேனும் கிடைத்தால் அதைப் பிடித்துக் கொண்டு தொங்கு தொங்கு என்று தொங்குவார்கள் என்பதை ராம் மட்டுமல்ல நாமும் அறிந்திருக்கிறோம். சகோதரி வளர்மதி, கக்கூஸ் பட இயக்குநர் இவர்கள் மீதெல்லாம் பொய் வழக்குகள் பாய்ந்தபோது பொங்குவதற்குப் பதில் பதுங்கியவர்கள் இவர்கள் என்பதை நாம் அறிவோமே. ஏன் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்தும் 'நீட்'டால் மருத்துவம் படிக்க முடியாது போய் விட்டதே என தன்னையே மாய்த்துக் கொண்ட அனிதாவுக்காக இவர்கள் பொங்கவில்லையே... இவர்களுக்கு ஆதாயமும் விளம்பரமும் கிடைத்தால் மட்டுமே வீதிக்கு வருவார்கள். இதை எழுதும்போது நேற்று பெண் போலீசிடம் தவறாக நடந்து கொண்டு போலீஸூக்கு எதிராக பொங்கியிருக்கிறார்கள். எல்லாம் சுய விளம்பத்துக்குத்தான் என்பதை நாடே அறிந்திருக்கும் போது ராம் அறியமாட்டாரா..? அதனால் தன் நாயகியை எங்கே தமிழ்ப் பெண்ணாக அடையாளம் காட்டினால் தமிழகத்தில் மகளிர் அமைப்புக்கள் மல்லுக்கு நிற்பார்களோ என்ற பயத்தில் ஆங்கிலோ இந்தியன் ஆக்கிவிட்டார்... இதிலேயே இந்த கலாச்சாரம், பண்பாடெல்லாம் காணாமல் போய்விடுகிறது அல்லவா..? கலாச்சார பாதுகாவலர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறதல்லவா..?

அப்படியிருக்க நாம் களப்போராளிகளிடம் போய் என்ன அவ குடிக்கிறா... தம் அடிக்கிறா... குட்டைப் பாவாடை போடுறா... செக்ஸ் வச்சிக்கிறா... பீப்புக்கே அம்புட்டு சவுண்ட் விட்டீங்க அப்ப இதுக்கு எவ்வளவு கூவணும் என்று கேட்டோமேயானால் ஆமா எதுக்கு கூவணும்... எல்லாம் செய்யுறாதான் அதுக்கென்ன பண்ணனும்... அவ ஆங்கிலோ இந்தியன் அப்படித்தான் இருப்பா என்ற அபத்தமான பதில் வரும். காரணம் அவர்கள் அப்படித்தான் என்ற பார்வை... அவர்களுக்குள்ளும் பெண்மை, தாய்மை எல்லாம் இருக்கும் என்பதைப் பற்றி நாம் யோசிப்பதில்லை.  தமிழ்ப் பெண்கள் மது, சிகரெட் எல்லாம் தொடுவதில்லையா என்ன... லிவிங்க் டூகெதர் என்பதெல்லாம் நம் தமிழகத்திற்குள் வரவில்லையா..? எப்போவோ எல்லாம் வந்தாச்சு.. பள்ளிக்கூடப் பெண்ணொருத்தி தண்ணியடித்து விட்டு நடுவீதியில் ஆட்டம் போடவில்லையா..? இதையெல்லாம் இணையம் இப்போது சுட்டிக்காட்ட ஆரம்பித்திருந்தாலும் இன்னும் வெளியில் தெரியாமல் பல விஷயங்கள் இலைமறை காயாக மறைந்து இருக்கிறது... அதை வெளிக்காட்ட விரும்பாமல் நாம் இன்னும் கலாச்சார பண்பாட்டுப் போர்வையை போர்த்தியே வைத்திருக்கிறோம்... இதெல்லாம் யோசித்து ராம், ஆல்தியா (ஆண்ட்ரியா) என்ற கதாபாத்திரத்தை ஆங்கிலோ இந்தியன் ஆக்கிவிட்டிருக்கிறார்.

தனித்திருக்கும் ஒரு பெண்... அதுவும் திருமணமாகி கணவனைப் பிரிந்து குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்... அவள் எங்கிருந்தாலும் இந்தச் சமூகம் அவளை எப்படிப் பார்க்கும் என்பது நாம் அறிந்ததுதான்.  தனித்திருக்கும் பெண் என்றில்லை இதுதான் காரணம் இதற்காகத்தான் இறந்தாள் என்று தெரிந்திருந்தாலும் கள்ளக்காதல் அதான் இறந்துவிட்டாள் என்று கூசாமல் சொல்லும் உலகம் இது. அப்படியிருக்க, அவள் சந்திக்கும் ஆண்களெல்லாம் படுக்கையை பகிர்ந்து கொள்ளத்தான் நினைக்கிறார்கள். அவளால் மிரட்டப்படும் போது எனக்கு குழந்தை இருக்கு... குடும்பம் இருக்குன்னு புலம்புறாங்க... அப்ப அவளுக்கு குழந்தையில்லையா... குடும்பம் இல்லையா... சேர்ந்து குடித்து, சிரித்துப் பேசும் தனித்துவாழும் பெண், தன்னை ஒழுக்க சீலியாக காட்டிக் கொள்ளவில்லை என்றபோது அவள் எதற்கும் தயாரானவள் என தீர்மானிக்கதானே செய்கிறது இந்தச் சமூகம்.

கணவன் மீதுள்ள குறையை மறைத்து தானே காரணம் என விலகி வாழும் பெண்ணை பெத்தவளே 'பிட்ச்' என்று சொல்வது சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது.  அதுவும் யாருக்காக அவள் வாழ வேண்டும் என்று நினைக்கிறாளோ அந்த பச்சைக் குழந்தையிடமே உன்னோட அம்மா ஒரு 'பிட்ச்' எனச் சொல்வது என்பது வேதனைக்குரியது.  அம்மாவிடம் இருந்து விலகி இருக்க நினைப்பவளுக்கு துணையாகிறான் ஒரு மழைநாளில் சந்தித்து நட்பான, வேலை வெட்டியில்லாத எம்.ஏ., பட்டாதாரி. இந்தப் பெண்கள் அழுக்கு உடையுடன் தாடியும் மீசையுமாக இருப்பவன் மீது காதல் கொள்வது என்பது தமிழ் சினிமாவில் எப்போதுதான் நிறுத்தப்படுமோ தெரியவில்லை.

நாயகன் பிரபுநாத் (வசந்த் ரவி)... தான் காதலித்த பெண் சௌம்யா (அஞ்சலி) கலாச்சார பாண்பாடு சூழலில் சரோஜாதேவியாகவும் அஞ்சலிதேவியாக இருந்தவள், இவனிடம் பணம் பெற்று அமெரிக்கா சென்றதும் மர்லின் மன்றோவாக மாறுவதை விரும்பவில்லை... அவளைக் கேள்வியால் துளைக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் அவளோ இவனை விடுத்து வேறு வாழ்க்கை தேடிச் செல்கிறாள். அதன்பின்தான் ஆல்தியாவுடன் சந்திப்பு, ஒரு கட்டத்தில் தரமணி இரயில் நிலையக் காவலராக வரும் அழகம்பெருமாளிடம் நீங்க மட்டும் நல்ல பொண்ணாக் கட்டுவீங்க நாங்க மட்டும் சென்னைப் பொண்ணு அதுவும் ஒரு பையனோட இருக்கவளைக் கட்டணுமோ என்று கேட்கும் போதே நாயகனின் குணம் இன்னும் அப்படித்தான் இருக்கு என்பதை அறிய முடிகிறது. அப்படியிருக்க மாடர்ன் டிரஸ் போடாதே என்று காதலியிடம் சொல்பவன், முட்டி தெரிய உடையணியும் ஆல்தியாவுடன் ஓட்டிக் கொள்வது முரண்.

ஆல்தியா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஆண்கள் எல்லாமே மோசமானவர்களாகவும் பிரபுநாத் பணம் சம்பாதிக்க தேர்ந்தெடுக்கும் வழியில் பெண்களை மோசமானவர்களாகவும் சித்தரிப்பது சினிமாத்தனம் என்றே சொல்ல வேண்டும். அதேபோல் சிங்கம்பெருமாளின் மனைவி மீது முக்கால்வாசிப் படம் வரை பெயரை வைத்தே நம் முன்னே மரியாதையாக நிறுத்திவிட்டு அவரும் இப்படியானவர்தான் என்று காட்டுவது ஏற்புடையதல்ல, இருப்பினும் அதன் பின்னான காட்சியில் சிங்கம்பெருமாளின் புரிதலான பேச்சு அவள் செய்தது சரியாகக் கூட இருக்கலாமோ என்று யோசிக்க வைக்கிறது. 'அவன் கூட படுத்தியா...', 'அவன் உன்னை எதுக்கு கூப்பிட்டான்...','நீ பிட்ச்தாண்டி' என்றெல்லாம் சண்டை பிடிக்கும் பிரபுநாத், ஒரு நீண்ட சண்டைக்குப் பின் ஆல்தியாவால் துரத்தப்பட, அந்தச சமயத்தில் வாழ்க்கை நொந்து திரும்பும் முன்னாள் காதலி அவனை அழைக்க, தனக்குத் தர வேண்டிய பணத்துக்காக அவளை படுக்கைக்கு அழைக்கிறான்... அதன்பின் பணமும் பெறுகிறான். பின்னான நாட்களில் அவனின் பாதை அப்படியே பயணிக்கிறது... பெண்களின் போன் நம்பரைத் திருடி, அவர்களுடன் பேசி... அதன் பின் போட்டோவை வைத்து மிரட்டி பணம், நகைகளைப் பறிக்கிறான். இரயில் நிலையக் காவலர் மற்றும் இன்ஸ்பெக்டரின் மனைவிகளுடான நிகழ்வுக்குப் பின் நடக்கும் நிகழ்ச்சிகள் பிரபுநாத்தின் பயணத்தை தவறான பாதையில் இருந்து மீண்டும் சரியான பாதைக்கு மாற காரணிகளாகின்றன. 

தன்னை 'பிட்ச்' என்று சொன்ன தாயை உதறி விட்டு வெளியே வந்தவள், அதே பிள்ளை முன் தன்னை அதே வார்த்தையால் திட்டி, சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்படவனை, வெளியேறிய பின்னும் போனில் அதே வார்த்தைகளால் கொல்பவனை எந்த ஒரு பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள். ஆனால் இங்கு ஆல்தியா  மீண்டும் அவனை ஏற்றுக் கொள்வதென்பது சுபம் போடும் சினிமாத்தனம்... இதுதானே எப்படிப் புரட்சி செய்தாலும் இறுதியில் தமிழ்சினிமா கொண்டாடும் வழக்கம்... இல்லையா...?

இதே ஆல்தியா, கை நிறைய சம்பாதிப்பவள்... தன் மேனேஜர், இரவில் தன்னிடம் தகராறு செய்யும் இளைஞர்கள் எனப் பலரை தூக்கி வீசிவிட்டு தன்னம்பிக்கையோடு மகனுக்காக வாழ்பவள்... தன்னைக் கேவலமாக நடத்தி... வக்கிரமாகப் பேசி... தாலி கட்டாது குடித்தனம் நடத்திச் சென்றவனை மீண்டும் தன்னோட சேர்க்காமல் வாழ்ந்திருந்தால் 'ஆல்தியா ஈஸ் கிரேட்டு'ன்னு சத்தமாச் சொல்லலாம். மற்ற விஷயங்களில் ஆங்கிலோ இந்தியனாக இருக்கும் அவள், அவன் விஷயத்தில் மட்டும் தனக்கும்  தன் பிள்ளைக்கும் ஆண் துணை வேண்டுமென பத்தாம்பசலியாக யோசிக்கும் சாதாரண தமிழ்ப்பெண்ணாக  மாறிவிடுவதால் ஏனோ கிரேட்டுன்னு சொல்ல மனம் வரவில்லை... அவளும் வாழத்தெரியாத சராசரியே என்றுதான் தோன்றுகிறது.

ஆல்தியாவாக வாழும் ஆண்ட்ரியாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஆண்ட்ரியாவின் அழகான நடிப்பைப் பார்க்கணும்ன்னா இந்தப் படமே போதும்... அவ்வளவு பாந்தமான நடிப்பு... அவர் இதைவிட நல்லா நடிச்ச படங்களும் இருக்கு... அதுக்காக விஸ்வரூபம் பாருங்கன்னு சொல்லமாட்டேன்.... முடிஞ்சா மலையாளத்துல பஹத்பாசிலோட ஆண்ட்ரியா நடிச்ச முதல் படம்... 'அன்னாவும் ரசூலும்' பாருங்க... அப்புறம் நீங்களும் ஆண்ட்ரியா... ஆண்ட்ரியான்னு சொன்னாலும் சொல்லுவீங்க.

வசந்த் ரவிக்கு முதல் படம் மாதிரி தெரியவில்லை... தேர்ந்த நடிப்பு... ஆண்ட்ரியாவின் மகனாக வரும் சிறுவன், சிங்கம்பெருமாள். அஞ்சலி, இன்ஸ்பெக்டராக வரும் படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், அவரின் மனைவியாக வரும் பெண் என எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடும் படத்தில் இடையிடையே இயக்குநர் ராம்  டுவிட்டரில் கீச்சுக்கள், முகநூலில் ஸ்டேட்டஸ் போடுவது போல் பேசுவது விவேகம் படத்தில் அஜீத்தைப் பற்றி வில்லனும் வில்லனைப் பற்றி அஜீத்தும் பேசிக் கொள்(ல்)வது போல் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. தான் திருடிய பணத்தால்தான் அந்த முஸ்லீம் பெரியவர் இறந்தார் என்று எண்ணி படம் முழுவதும் வருந்தித் திரியும் பிரபுநாத், நாகூரில் இருக்கும் அவர் இல்லம் சென்று கொடுக்கும்போது ஆயிரம், ஐநூறு செல்லாதுன்னு சொன்னதை வைத்து ஒரு நக்கல்... கிளாசிக். உலகமயமாக்களால் மனித மனத்தில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது தரமணி.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் மிகவும் அருமை. நாகூர் தர்ஹாவின் பின்னணியில் பாடப்படும் பாடல் அருமை... நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளைக் கேட்கும் போது ஒரு அழகிய கவிஞனை காலம் கொண்டு சென்று விட்டதே என்ற வருத்தம் ஏற்படுகிறது.

Image result for தரமணி

சொல்ல மறந்துட்டேனே... ரொம்பப் பேர் படத்தைக் காய்ச்சி ஊத்துனாங்க... விவேகம் அளவுக்கு ஊத்தலைன்னாலும் முடிஞ்சளவுக்கு ஊத்தினாங்க... எங்க அறை நண்பர் ஒருவர் படம் பார்த்ததும் படம் எப்படி என்றேன்... இதெல்லாம் ஒரு படமா... எவனெவன் கருத்துச் சொல்றதுன்னு இல்லையா... இவனையெல்லாம் யார் கருத்துச் சொல்லச் சொன்னா... என்று ஏகமாய்க் கடுப்படித்தார். என்னடா இவருக்கு ராம் மேல இம்புட்டுக் கோபம் என்று யோசித்தேன். படம் பார்க்கும் போதுதான் தெரிந்தது ஆயிரம் ஐநூறு மேட்டருன்னு... அதனாலதான் அவருக்கு அம்புட்டுக்கு கோபம்... ஏன்னா அவரு தீவிர........ ஆமா... ஆமா... முழுசாச் சொன்னா சண்டைக்கு வந்துருவாங்க... 

இயக்குநர் ராமுக்காக இல்லைன்னாலும் ஆல்தியாவுக்காக பாருங்கள்... கண்டிப்பாக வித்தியாசமான முயற்சியின்னு பாராட்டுவீங்க...

 நிறைய உறுத்துதல்கள் இருந்தாலும் தரமணி தரமான மணியாய்...

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

தமிழில் பேர் சொல்லும்படி, பாராட்டும்படி கணிசமாக படங்கள் வரத் தொடங்கி விட்டன போலும்.

ஜோதிஜி சொன்னது…

நீண்ட நாளைக்குப் பிறகு திரையரங்கம் சென்று பார்த்து பாதியில் கிளம்பி வந்து விட்டேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம். பெரும்பாலும் படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை குமார்.... இணையத்தில் பார்க்கும் பொறுமையும் இல்லை!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தரமணி திரைப்படத்தைப் பார்க்கத் தூண்டிய பதிவு. நுட்பமாக பகிர்ந்துள்ள விதம் மிகவும் அருமை.

vimalanperali சொன்னது…

அவசியம் படம் பார்க்க வேண்டும்,
படத்தைப்பார்க்க தூண்டிவிட்ட விமர்சனம்/

M0HAM3D சொன்னது…

அருமை நண்பரே