மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)

Image result for godha malayalam movie images

நாம இன்னமும் கொலையும் கொள்ளையும் வைத்துத்தான் அதிகமாகப் படமெடுத்துக் கொண்டிருக்கிறோம்... கேட்டா மாஸ் அப்படின்னு ஒரு வார்த்தையைச் சொல்லிடுறோம்... மாஸ்... மாஸ்ன்னு சொல்லி மரண அடி வாங்கிய படங்கள் வந்தாலும் மாஸ் வட்டத்துக்குள் இருந்து நாம் வரப்போவதில்லை. அவ்வப்போது சிலர் நல்ல கதைகளுடன் வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் அவர்கள் ஜொலிக்கும் விதமாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஓட விடுவதுமில்லை... நாம் பார்க்க விரும்புவதும் இல்லை. புளூ சட்டைகள் கூட மாஸ் படங்களுக்குத்தான் அடித்துப் பிடித்து விமர்சனம் செய்கிறார்கள். அதுவும் எதிர்மறை விமர்சனங்களால் தங்கள் சேனலுக்கு மவுசு கூடும் என்ற எதிர்பார்ப்பில் படத்தை விடுத்து நாயகர்களை நையாண்டி செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் புகழ் பெற்ற புரபஸர் ஷெர்லியைத் தேடி மலையாளக் கரைக்குப்  போய் ஆளாளுக்கு பேட்டி எடுப்பார்கள். நம் பிரச்சினைகளுக்காக பிள்ளைகள் களம் இறங்கினால் கூட கண்டு கொள்ளாமல் தர்மயுத்தத்தின் தலைமகன்களுக்கு சாமரம் வீசுவார்கள்.  

மலையாளத்தின் நல்ல படங்களின் கதைகளை இங்கு கொண்டு வந்து ஏகத்துக்கும் நாயகர் புகழ்பாடி அந்தப் படத்தின் சிறப்புத் தன்மையை சீரழித்து விடுவதைப் பார்க்கும்போது அந்தக் கதைகளை அங்கே விட்டு விடுதல் நலம் என்றே தோன்றுகிறது. மலையாளத்தில் ஒரு சின்ன விஷயத்தை வைத்து மிகச் சிறந்த படங்களை எடுத்து விடுகிறார்கள் அப்படித்தான் செருப்பு போடுவதில்லை என்பதை வைத்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தை எடுத்தார்கள். நம்மால் அப்படி எல்லாம் படமெடுக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார் என கோதா (மல்யுத்தம்) என்ற படம் பார்த்தேன். இந்த படம் குறித்து ஒரு இணையதள வீடியோ விமர்சகர் விமர்சனம் செய்திருந்ததையும் பார்த்தேன். அவர் இது தங்கல் படத்தின் காப்பிதான் என்பது போல் சொல்லியிருப்பார்.  ஒரு படம் குறித்து விமர்சிக்கும் முன்னர் அது எப்போது எடுக்க ஆரம்பித்தார்கள். அது இதோட காப்பிதானா என்று பார்த்துச் சொல்வதே சிறந்தது என்பதை அவரின் இந்த விமர்சனம் காட்டியது. காரணம் என்னவெனில் இந்தப் படம் தங்கலுக்கு முன்னர் எடுக்கப்பட்டு ஒரு சில பிரச்சினைகளால் விஜய் சேதுபதியின் புரியாத புதிர் போல கிடப்பில் கிடந்து வெளியிடப்பட்ட படம். புரியாத புதிர் கூட ஒரு முக்கியப் பிரச்சினையை மையமாக்கிய கதைதான் என்றாலும் அப்போதே வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதே என் எண்ணம். கோதாவின் கதை தங்கல், சுல்தான் போன்று இருந்தாலும் அவற்றில் இருந்து மாறுபட்ட மற்றொரு வெர்ஷன் என்று சொல்லலாம்... அதற்காக அதன் காப்பி என்பது போல் சொல்வது சரியல்லவே.

மலையாளத்தில் கோதா என்பது தமிழில் மல்யுத்தம், இந்தியில் குஸ்தி என்பது  தானே... மல்யுத்தத்தில் உலகப் புகழ் பெற நினைக்கும் ஒரு பஞ்சாபிப் பெண்... அவளின் ஆசையை  ஊக்குவிக்கும் அவளின் தந்தை சிறுவயது முதலே அதற்கான பயிற்சி கொடுத்து போட்டிகளில் களமிறக்கி வருகிறார். அவரின் மறைவுக்குப் பின் அவளின் அண்ணன் ரூபத்தில் பிரச்சினை வருகிறது. பொட்டப்புள்ள படிச்சாப் போதும் விளையாட்டெல்லாம் வேண்டாம் எனச் சொல்லி அவளை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தச் சொல்கிறான். போட்டிகளுக்கு போகக்கூடாது என்பது அவனது கட்டளை... அதுவே அவனது சாசனம்... அட இது பாகுபலி பாதிப்புங்க... இன்னைக்கு விஷால் அழகாக படம் வரையும் அவங்க சித்தியைக் கூட்டியாந்து வீட்டில் பெரிதாக பாகுபலி படம் வரையணும்ன்னு சொன்னான். நான் பாகுபலியில அனுஷ்காவா இல்ல பிரபாஸாடான்னு கேட்டதும் ராஜமாதா சிவகாமின்னு சொல்லிட்டு நான் உங்கம்மாவைச் சொல்லலை என்றான் மெதுவாக. அந்தப் பாதிப்புல இங்க எழுதும்போது சாசனம்ன்னு வந்திருச்சு.


பஞ்சாபி பெண்ணின் ஆசையில் அண்ணனால் மண் விழுவது போல் கேரளத்தில் ஒரு அப்பனின் ஆசையில் மண்ணள்ளிப் போடுகிறான் மகன். ஆம் அப்பாவும் அவர் வயதொத்தவர்களும் அந்தக் கிராமத்தில் தங்களின் வயசுக்காலத்தில் குஸ்தியில் (கோதா) ஜொலித்தவர்கள்... அவர்களுக்கு தங்கள் ஊரில் ஒரு சிறந்த  வீரனைத் தயார் செய்ய நினைக்கிறார்கள். சிறு வயதில் குஸ்தியில் கோப்பைகளை வெல்லும் மகன் அதன் பின் அதைத் துறந்து நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் பக்கம் போய் விடுகிறான். இவர்கள் குஸ்தி நடத்திய மைதானம் அந்த இளைஞர்களின் கிரிக்கெட் விளையாடும் இடமாக இருப்பது பிடிக்காமல் பிரச்சினை பண்ணுகிறார்கள். அந்த இடத்துக்காக தனிப்பட்ட முறையில் மற்றொருவரின் வழக்கும் இருக்கு. 

தறுதலையாக திரியும், ஏதோ படிக்கும் மகனை மிரட்டி பஞ்சாபில் இருக்கும் கல்லூரிக்கு அனுப்பி விடுகிறார். அங்குதான் நாயகியும் படிக்கிறாள். இருவருக்கும் மோதலாகி, பின் சில நாட்களில் நட்பாக மாற அவளுடன் பஞ்சாபி கல்யாணம் பார்க்கப் போகிறான். அப்போது தனக்கு அவசரமாக திருமண ஏற்பாடு நடப்பதாகச் சொல்கிறாள். திருமண வீட்டில் இருக்கும் போது அருகில் தான் நேசிக்கும் மல்யுத்தம் நடக்க இருப்பதை அறிந்து அந்த இடத்துக்கு அவள் செல்ல, இவனும் போக, அங்கு போலீஸ்காரனான அண்ணன் வந்து அவளை விளையாட விடாது தடுக்க, அவனை இவன் தாக்க.... அப்புறம் என்ன பஞ்சாபி போலீஸ் அடியில் இருந்து தப்பிக்க படிப்பை பாதியில் விட்டு ஊருக்கு வந்துவிடுகிறான். திருமணம் செய்துகொள்ள விரும்பாத நாயகியும் சில நாளில் வீட்டுக்குத் தெரியாமல் அவனைத் தேடி கேரளா வந்து சேர்கிறாள்.

அதன் பின் அவளிடம் இருக்கும் திறமை நாயகனின் அப்பாவுக்குத் தெரியவர, அவளுக்குப் பயிற்சி அளித்து உள்ளூர் போட்டிகளில் ஜெயிக்க வைக்கிறார். தில்லிக்காரியான ஒரு மல்யுத்த வீராங்கனைக்கும் இவளுக்கும் ஆரம்பத்திலேயே வாய்க்கால் தகராறுன்னு காட்டிடுறாங்க... அந்தக் கிராமத்து மக்கள் எல்லாம் நாயகி மேல் வைத்திருக்கும் அன்பால் நேஷனல் லெவல் போட்டியில் கேரளா சார்பாக கலந்து கொள்பவள் பஞ்சாபிக்காரி என்று டில்லியால் போட்டுக் கொடுக்கப்பட, விளையாட முடியாமல் போகிறது. தங்கம் வெல்லும் தில்லி வாய்க்கால் தகராறை இன்னும் தீவிரமாக்கி நாயகியை வம்புக்கு இழுக்கிறது. இதன் பின் திறமையிருக்கவங்க ஜெயிச்சிக் காமிங்கன்னு  இருவருக்கும் இடையில் கேரளாவில் நாயகனின் அப்பனின் கனவு மைதானத்தில்  போட்டி என்று முடிவாகிறது. போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது... தில்லிக்காரியும் வருகிறாள்... நாயகியின் அண்ணனும் வருகிறான்... தன் கனவில் நாயகி வெற்றி பெற்றாளா...? நாயகியை விரும்புவதாய் சொல்லி அவள் என்னோட கனவு மல்யுத்தம் மட்டுமே... காதலுக்கெல்லாம் இடமில்லை என்று சொல்ல, மீண்டும் மல்யுத்தத்தில் நாயகன் இறங்கினானா...? காதலில் ஜெயித்தானா...? என்பதை மிக அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பஷில் ஜோசப்.

Image result for godha malayalam movie images

நாயகியை மையப்படுத்தி நகரும் கதைக்களம் என்பதால் நாயகியின் நடிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாயகியாக வாமிகா, இவர் செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடித்தவராம். அதில் எப்படி நடித்தார் என்பது தெரியாது. நான் அந்தப்படம் பார்க்கவில்லை.... இதில் அடித்து ஆடியிருப்பார்... இறுதிச் சுற்று படத்தில் ரித்திகா சிங் நடித்தது போல் மிகச் சிறப்பாக காட்சிக்கு காட்சி கலக்கியிருக்கிறார். நாயகன் டொவினோ தாமஸ் தனக்கான இடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அவரின் அப்பாவாக, மல்யுத்தத்தை உயிராக நினைக்கும் கேப்டனாக ரெஞ்சி பணிக்கர் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். கிராமத்து நண்பர்களாக வரும் அஜூ வர்கீஸ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பு. பஞ்சாபில் நாயகனின் நண்பனாக, தமிழன் முத்துப் பாண்டியாக பாலசரவணன், கொஞ்ச நேரமே என்றாலும் தமிழ் நகைச்சுவையில் கலக்கியிருப்பார். 

கோதா ஒரு வித்தியாசமான படம்.... ரசித்துப் பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

Anuprem சொன்னது…

அருமை...பார்க்க தூண்டுகிறது உங்க விமர்சனம்....

துரை செல்வராஜூ சொன்னது…

மிகுந்த ரசனையுடன் விமர்சனம் செய்திருக்கின்றீர்கள்..

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் விமர்சனம் எங்களையும் படம் பார்க்கத் தூண்டுகிறது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
நன்றி நண்பரே

மனோ சாமிநாதன் சொன்னது…

அருமையான விமர்சனம்!!

G.M Balasubramaniam சொன்னது…

ஒரு கலத்தில் மலையாளப்படம் என்றாலேயே சர்ரியலிஸ்டிக் என்னும் பெயர் பெற்றிருந்தது மேஜர் ரவியின் காந்தஹார் படத்தின் ப்ரிவியூவுக்கு அவர் அழைப்பின் பேரில் சென்றதுதான் கடைசியாக பார்த்த மலையாளப் படம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

துளசி: நான் பார்த்துவிட்டேன். அருமையான படம். பிடித்திருந்தது. உங்கள் விமர்சனமும் பிடித்திருந்தது.