மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 20 பிப்ரவரி, 2017

சிறுகதை : நிழல் தேடும் உறவுகள்

பிரதிலிபி போட்டிக்கு அனுப்பிய சிறுகதை இது... வாசிப்பவர்களின் எண்ணிக்கையில் பரிசுக்குரிய கதை தேர்வு என்பதால் நம் கதையை வாசிக்க அதிக நண்பர்கள் இல்லாத காரணத்தால் 5000, 6000 வாசிப்பாளர்களைப் பெற்ற கதைகளுக்கு மத்தியில் சரியாக 1000 பேரால் வாசிக்கப்பட்டு ஐந்து நட்சத்திர வாக்கையும் பெற்று ஆறு கருத்துக்களையும் வாங்கி மனநிறைவை அளித்தது. அக் கதையை பலர் வாசித்திருப்பீர்கள்... வாசிக்காதவர்களுக்காக....

நிழல் தேடும் உறவுகள்

"ந்தக் கசாயத்தைக் கொஞ்சம் குடிச்சிட்டுப் படுங்களேன்..." கயிற்றுக் கட்டிலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த கணவன் கொம்பையாவை எழுப்பினாள் செல்லம்மா. மெல்ல போர்வை விலக்கி நோக்கியவர் "இப்ப வேணாம்... அப்புறம் குடிக்கிறேன்..." என்று மீண்டும் மூடிக் கொண்டார்.

"அட... இஞ்சருங்க... எந்திரிச்சி குடிங்க... காச்ச நெருப்பா இருக்கு... இதக்குடிச்சா காச்ச குறையிங்கிறேன்..." எனப் போர்வையை இழுத்தாள்.

"ம்ம்ம்ம்ம்ம்.... சும்மா கெடக்க விடமாட்டெ... கசாயத்தை குடிங்க... கழுத மூத்தரத்தைக் குடிங்கன்னு..." முணங்கியபடி மெல்ல எழுந்து உக்கார்ந்து அவள் நீட்டிய போகாணியை வாங்கி ஒரே மடக்கில் குடித்தார்.

"அதயும் குடிக்க வண்டியதுதானே... அதுவும் மருந்துதானாம்..." என்றபடி அவரின் கழுத்தில் கை வைத்துப் பார்த்த செல்லம்மா, "காச்ச நெருப்பா இருக்கு... பெரியவனை வரச்சொல்லி ஊசி போட்டுக்கின்னு வந்தா நல்லது... எளவெடுத்த மழ வேற நையி.. நையின்னு பேஞ்சிக்கிட்டு இருக்கு..." என்றாள்.

"ஏய் நேத்துத்தானே ஊசி போட்டுக் கொண்டாந்து விட்டுட்டுப் போனான்... பின்ன இன்னக்கிம் வான்னு சொன்னா... அவனுக்கு வேல இல்லயா... அதான் மாத்தரை இருக்குல்ல... குடிச்சிப் பாக்கலாம்... செரியாகும்..."

"ஆமா செரியாகுது செரி... சின்னவன்னா விவரமா இருப்பான்... மூத்தது ஒரு கொலு... உங்களுக்கு வெள்ளச்சாமி டாக்டருதான் செரியா வருவாரு... ஒரு ஊசி போட்டாப் போதும்... வெள்ளச்சாமிக்கிட்ட போங்கன்னு சொல்லிவிடுறேன்... அது ராமசாமிக்கிட்ட கூட்டிக்கிட்டு போயிருக்கு..."

"அட அவன ஏந்திட்டுறே இப்போ... வெள்ளச்சாமி வரமாட்டாருன்னு சொன்னாங்க... அதான் ராமசாமி நல்லாப் பாப்பாருப்பான்னு அங்ஙன கூட்டுக்கிட்டு போனான்... செரி விடு ரெண்டு பேரும் சாமிதானே... எதோ ஒரு சாமி நல்லாக்குன்னாச் செரிதானே"

"குன்னிக்கிட்டு கெடக்கும் போதும் கிண்டலு மட்டும் கொறையாது... ரெத்தத்துல ஊறுனதுல..."

"ஆமா... இவுக போட்டு வளத்தாகல்ல... மாராத்தாவோட ரத்தம்டி... அப்புடித்தான் இருக்கும்..."

"இப்ப பொறப்பப் பத்தி பேச வரலை... அதான் மாராத்தா மவனுக்குன்னு செஞ்சிச்சே... ஒரு ஆட்டுக்கல்லக் கூட தரமாட்டேன்னுதான் சொன்னுச்சு... அன்னக்கி அடிச்சிக்கிட்டு நிக்கல... செரி பழங்கத இப்பெதுக்கு... பேசி வரவா போகுது... செரி... செரி... படுங்க... மத்தியானத்துக்கு ரசம் வைக்கிறேன்..."

"இந்தா நடந்ததை பேசாதே... நாம நல்லால்லையா... இல்ல நம்ம புள்ளகுட்டி நல்லால்லையா... விட்டுட்டு வேலயப்பாரு... ரசமெல்லாம் வேணாம்... கொஞ்சமா கஞ்சி வச்சி பருப்புத் தொவைய அரச்சி வையி போதும்... காச்ச சாப்புடுற மாதிரியா இருக்கு... வாயெல்லாம் கசக்குது..."

"அதெல்லாம் நெனச்சா... வவுறு எரியுது... கட்ட மண்ணுக்குள்ள போற வரைக்கும் மறக்காது... செரி... படுங்க..."

கொம்பையா காய்ச்சல் தலைவலின்னு படுத்ததே கிடையாது... விவசாயம் பார்த்து உரமேறிப்போன உடம்பு... விவசாய டயத்துல காலையில எருமைத்தயிரும் ஊறுகாய் சேர்த்துக் கலக்கிய நீராகாரத்தை ரெண்டு சொம்பு குடிச்சிட்டு வயல் வேலைக்குப் போனாருன்னா... பதினோரு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவாரு... செல்லாயி ஊத்திக் கொடுக்கிற கஞ்சியை ரெண்டு தட்டு சாப்பிட்டுட்டு முருகன் சுருட்டை பத்த வச்சிக்கிட்டு வாசல்ல நிக்கிற வேப்பமரத்தடியில உக்காந்திருப்பார். சில நேரம் துண்ட விரிச்சி அங்கனயே சின்னத் தூக்கமும் போடுவார்... மறுபடியும் மண்வெட்டியை தூக்கிட்டு வயலுக்குப் போனா, மத்தியானச் சாப்பாட்டுக்கு மூணறை, நாலு மணிக்குத்தான் வருவார். வரும்போதே கம்மாயில குளிச்சி துண்டைக் கட்டிக்கிட்டு வேட்டியை அலசி தோள்ல போட்டுக்கிட்டுத்தான் வருவாரு... சாப்பிட்டு ஒரு தூக்கம்... ஆறு மணிக்கு காபி குடிச்சிட்டு டிவி பாக்கவும் பக்கத்து வீட்டு முத்துச்சாமி கூட நாட்டு நடப்பு பேசவுமா இருக்கவருக்கு எட்டு மணிக்கெல்லாம் சாப்பாடு வேணும்... ஒன்பது ஒன்பதரைக்கு கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வேப்ப மரத்தடியில் போட்டுத் தூங்க ஆரம்பிச்சிருவாரு.

விவசாயம் இல்லாத சமயத்துல செட்டிய வீட்டு கணக்கு வழக்கு பாக்கப் போயிருவாரு... செல்லையாவோட லாட்ஜ் வருசக் கணக்கு இவருதான் பாப்பாரு.... எதாவது வேலை பாத்துக்கிட்டே இருப்பாரு... சும்மா வீட்ல உக்காந்துக்கிட்டு ஊர்க்கதை பேசிக்கிடு இருக்கிறது அவருக்கு சுத்தமாப் பிடிக்காது... ஒண்ணுமில்லேன்னா சமையல் வேலைக்குப் போற கார்மேகம் கூட கிளம்பிடுவாரு...

கொம்பையா இந்த வயசிலும் கம்பு அருமையாச் சுத்துவாரு.... அவரு எதாவது திருவிழாவுல கம்பு சுத்துறாருன்னு கேள்விப்பட்டா சுத்துப்பட்டு ஜனமெல்லாம் கூடிரும்...அவ்வளவு லாவகமாச் சுத்துவாரு... வேட்டியை வரிஞ்சி கட்டிக்கிட்டு இடது வலதுன்னு கை மாத்தி கம்பு சுத்துற அழகே தனி. முன்னால பின்னாலன்னு கம்பு மேஜிக் காட்டும்... அவரை எதிர்த்து ஆடுறவனோட கண்ணுல விரலை விட்டு ஆட்டிருவாரு... அவரு தம்பி கருப்பனுக்கு கம்பெல்லாம் சுத்த வராது... ஆனா காவடி ஆட்டத்துல அவரை அடிச்சிக்க முடியாது. வருசா வருசம் சித்ரா பௌர்ணமிக்கு ஊரில் இருந்து குன்றக்குடிக்கு முப்பது காவடிக்கு மேல போகும்... எல்லாரும் கால் போட்டு ஆடுவாங்க.... இவங்க காவடி வருதுன்னால ரோடெல்லாம் ஜனங்க காத்திருக்கும்... நெடுக ஆட்டம்தான்... அதிலும் கருப்பன் கால் போட்டு ஆடுறது மட்டுமில்லாம... காவடியை முதுல சுத்த விடுவார்... அவ்வளவு அழகா, லாவகமா காவடி ஆடுறவங்களை இப்ப பார்ப்பது அரிதாகிவிட்டது... இந்த வயசிலும் காவடி ஆடுவார்... இப்பல்லாம் தூக்கிட்டு நடக்கிறதில்லை... ஆனா கோவிலில் இருந்து கிளம்பும் போதும் குன்றக்குடி மலை அடிவாரத்தில் ஒரு ஆட்டம் போட்டுருவார்.

கொம்பையாவுக்கு நாலு பிள்ளைங்க... நாலு பேரையும் படிக்க வச்சாரு.. இப்போ நாலு பேரும் அரசாங்க உத்தியோகத்தில்... முத்தவன் கணேசன் ஸ்டேட் பேங்க்ல இருக்கான்... அடுத்தது பிரேமா கவர்மெண்ட் ஹைஸ்கூல் டீச்சர்... சுந்தரி ஆர்ட்ஸ் காலேசுல லெக்சரர்... கண்ணன் கவர்மெண்ட் ஹையர் செகண்டரி ஸ்கூல் வாத்தியார்... ‘பிள்ளைகளை நல்லா படிக்க வச்சி கவர்மெண்ட் உத்தியோகமும் பாக்க வச்சி, மரியாதையான குடும்பங்கள்ல சம்பந்தமும் பண்ணிப்புட்டே...’ என்று யாராவது சொன்னால்... 'வேற என்ன சந்தோஷம் இருக்குங்கிறேன்... நம்ம வயல் வெளஞ்சி நின்னாத்தானே நமக்குச் சந்தோசம்... என்ன பெரிசா செஞ்சிபுட்டேன்... கவர்மெண்ட்டு ஸ்கூல்லதானே படிக்க வச்சேன்... காசு பணமா செலவு பண்ணினே... எல்லாம் அதுக மாமன மாதிரி நல்லாப் படிச்சிச்சுக... அம்புட்டுத்தான்' என்பார். அவரோட மச்சினன் குழந்தைவேலு அந்தக்காலத்துல டாக்டரேட் பண்ணுனவர்... திருச்சி பெல்லுல பெரிய பதவியில இருந்தவர். மூணு வருசத்துக்கு முன்னாலதான் திடீர் மாரடைப்புல மரணம் அடைந்தார்.

கருப்பனுக்கு நாலு பொண்ணுங்க... ரெண்டு பயலுக... சின்னவனுக்குத்தான் வாழ்க்கை சரியா அமையலை... மத்தவங்க எல்லாருமே வசதி வாய்ப்போடத்தான் இருந்தாங்க... சின்னவனைக் குறித்த கவலை கருப்பனுக்கு இருக்கோ இல்லையோ கொம்பையாவுக்கு எப்பவும் உண்டு... 'பாசக்காரப்பய அவனோட வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சு... சொன்னதைக் கேட்டிருந்தா இன்னைக்கு அவனும் நல்லாயிருந்திருப்பான்' அப்படின்னு செல்லாத்தாக்கிட்ட அடிக்கடி புலம்புவார்.

இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தவர் எழுந்து உக்காந்தார்... சில்வர் பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணியை குனிந்து எடுத்துக் குடித்தார். நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டார். கட்டிலில் இருபக்கமும் கை ஊன்றி மூச்சை உள்ளிழுத்தபடி அமர்ந்திருந்தார்.

"எந்திரிச்சிட்டீங்க... ஏ... ஒரு மாதிரி ஒக்காந்திருக்கீக... இப்ப காச்ச கொறஞ்சிருக்கா..? காபி போட்டுத் தரவா...?" எனக் கேட்டபடி அவரின் கழுத்தில் கைவைத்துப் பார்த்த செல்லம்மா. "இப்பக் கொஞ்சம் பரவாயில்ல... சூடு கொறஞ்சிருக்கு... காபிய குடிச்சிட்டு சத்த இழுத்துப் போர்த்திக்கிட்டு படுங்க... நல்லா வேர்த்தா காச்ச கொறையும்" என்றாள்.

"கொமட்டிக்கிட்டு வருது... காபி குடிக்கவா...? அதெல்லாம் வேணாம்... சத்த ஒக்காந்திருந்துட்டு படுக்குறேன்... எங்க படுத்தாலும் தூக்கம் வருதாக்கும்.... சும்மா பொரண்டு பொரண்டு படுத்துக்கிட்டு கெடக்க வேண்டியிருக்கு..."

"ஓமட்டுதா...? வாந்தி வருதா...? எந்திரிச்சிப் போயி வாசப்பக்கம் ஒக்காருங்க..."

"கொமட்டுதுன்னுதான் சொன்னேன்... வாந்தியெல்லாம் வரலை..."

"கசாயம் ஆவலையோ என்னமோ..?"

"இப்பத்தான் புதுசா குடிக்கிறேன் பாரு... சின்னப்புள்ளயில எங்காத்தா கலக்கிக் கொடுத்ததுதானே... அதெல்லாம் இல்ல... காச்ச... படுத்தே கெடக்கவும் ஒரு மாரிக்கா இருக்கு..."

"பெரியவனுக்கு போன் பண்ணி ஆட்டோ வரச்சொல்லவா..? போயி ஒரு ஊசி போட்டுக்கின்னு வந்துருவோம்..."

"இந்த மழயிலயா... சும்மாவே நம்மூருக்கு வரணுமின்னா ஆட்டோக்காரனுக ஆனவெல கேப்பானுங்க... இப்ப வரச்சொன்னா சொத்தையே எழுதிக் கேப்பானுக... அதான் மாத்தரை இருக்குல்ல... நாளக்கி போலாம்..."

"ஆமா சொத்தெழுதி கேக்குறாக... கூடக்கொறச்சித்தான் கேப்பானுக... அதுக்காக ஓடம்புக்கு பாக்காம இருக்க முடியுமா? ஒங்களுக்கு எதுனாச்சும் வந்துச்சின்னா நாந்தே கஷ்டப்படணும்... புடுங்கி எடுத்துருவிய..." என்றவள் வாசக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்துவிட்டு "ஒங்க தம்பி வாராவ..." என்றாள்.

"எதுக்கு இப்போ மழயில வாறான்..." என்றார்.

"அவருக்கிட்ட கேளுங்க எனக்கிட்ட கேட்டா..." என்றவள் குடையை மடக்கி கதவோரம் வைத்த கருப்பனைப் பார்த்து "வாங்க.. மழயில விழுந்து வாறிய..." என்றாள்.

"என்ன மொளக்கவா போறோம்...? அண்ணனுக்கு முடியலன்னு சொன்னானுவ காலயில வந்துட்டுப் போலான்னு பாத்தா மழ... பெஞ்சமின்னு இல்லாம விட்டமின்னு இல்லாம நசநசன்னு ஒரு வேல பாக்க விடுதில்லை... கரண்டுமில்ல... குர்றான்னு எம்புட்டு நேரம் ஒக்காந்திருக்கது... அதான் மழயப்பாத்தா செரி வராதுன்னு இங்கிட்டு வந்தேன்... காச்ச குறைஞ்சிருச்சா...? ஊசி போட்டும் இன்னும் நிக்கலியா..?" என்றபடி அண்ணனின் அருகில் அமர்ந்தார்.

"இப்ப பரவாயில்லப்பா... அப்ப மாதிரியா இப்ப வர்ற காச்சலெல்லாம் மூணு நாளு நாளக்கி இருக்குதுல்ல... செரியாகும்... ஒங்க அத்தாச்சி கசாயம் வச்சிக் கொடுத்தா... கொஞ்சம் பரவாயில்ல... மாத்தரை இருக்கு... மூணு நாளக்கி குடிக்கச் சொன்னானுவ... ரெண்டு வேளதானே குடிச்சிருக்கு... நாளக்கி எந்திரிச்சி வண்ணாங்குண்டுக்கு ஒரம்போட போயிறலாம்... நீ எதுக்கு மழயில வந்தே... ரொம்பத் தூரத்துலயா இருக்கே... வெட்டரிச்சதும் வந்திருக்கலாமில்ல... ஏய் காபி போடு..."

"இப்பத்தான் காபி போட்டுக் கொடுத்தா... அவளுந்தான் வாரமின்னு சொன்னா... மழயில நாந்தேன் வேண்டான்னு சொல்லிட்டேன்... மொதல்ல ஒடம்பப் பாருங்க... அப்புறம் ஒரம் போடலாம்.."

"அவ இந்த மழயிலயா..? எதுக்காம்..? அப்புறம் அவ இழுத்துக்கிட்டு படுக்கவா..? காச்ச கொறஞ்சிட்டா நானு அங்கிட்டு வரப்போறேன்... சின்னவன் போன் பண்ணினானா... என்னாச்சாம்..? சரி வருமாமா..?"

"எங்கிட்டு சரியாவுதுண்ணே... அன்னைக்கி நாம அம்புட்டுச் சொன்னோம்... அவதான் வேணுமின்னான்... செரின்னு கட்டி வச்சோம்... இப்போத்தானே அவுக சொயரூபம் தெரிஞ்சிருக்கு அவனுக்கு..."

"அதுக்காக... நம்மபுள்ளய அவனுக என்ன வேணுமின்னாலும் பேசுவானுங்களாமா..? பிடிக்கலைன்னா அத்துவிட்டுட்டு போவட்டும்... அவனுக்கு ரெண்டாங் கலியாணம் பண்ணி வப்போம்... பொண்ணா கெடைக்காது..."

"நாம பேச முடியாதுல்லண்ணே... அவன புள்ளயின்னு அந்த வீட்டுக்கு விட்டாச்சுல்ல... நம்ம கையில இருந்தா நாம எறங்கலாம்... அவனுக வீட்டோட இருக்கவனுக்கு நாம என்னத்தை போயி பேசுறது..."

"நல்லாருக்கே... நீ பேசுறது... அன்னைக்கு அவ வேணுமின்னான்... படிச்சிருக்கா... பாக்க நல்லாத்தேன் இருக்கான்னு வீட்டோட மாப்ளய இருக்கணுமின்னு சொன்னப்போ செரின்னு ஒத்துக்கிட்டு கட்டி வச்சோம்... அதுக்காக இன்னைக்கி அடிமை மாதிரி நடத்துனா... கட்டுனவ கூட ஆத்தாப்பன் பேச்சை கேக்குறான்னா இவனெதுக்கு அங்க கெடக்கான்... என்ன அப்பனாத்தா சோத்துக்கு வழியில்லாமயா கெடக்கீக... நாம ஒண்ணும் அவனுக்களுக்கு கொறச்சலா இல்லை... அவன கெளம்பி வரச்சொல்லு..."

"இல்லண்ணே... மூத்தவனுக்கிட்ட கேட்டதுக்கு அவன் இங்க வரச்சொல்லி... சொத்தப் பிரிச்சிக் கொடுப்பியளான்னு கேக்குறான்... அதான்..."

"ஓ... பெரியவுகளுக்கு பொறப்பு படுற கஷ்டந் தெரியல... சொத்து பெருசாப்போச்சு... இந்தா ஊர்ல பல பேரு வெவசாயம் பண்ணாம கருவ மண்ட விட்டுட்டானுங்க... நாளக்கி நம்ம காலத்துக்கு அப்புறம் நம்ம வயலுகளும் கருவ மண்டித்தான் கெடக்கப் போகுது... இந்த சொத்த வச்சி என்ன பண்ணப் போறானாம்.."

"...."

"இங்கேரு... புள்ளவிட்டுட்டா அத்தோட போச்சுன்னு இல்ல... அவனும் நம்ம புள்ளதான்... அவனுக்கு சொத்து சொகமெல்லாம் தேவயில்ல... ஆத்தாஅப்பனோட ஆறுதலான வார்த்தைதான் தேவ... அவன இங்கிட்டு கெளம்பி வரச்சொல்லு...  புள்ள விட்டுட்டா கடம முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிற முட்டாள்தனத்தை நம்மளப் பெத்தவங்க மாதிரி நீயும் பண்ணாத... சொத்த ஆரு கேட்டா... புள்ள போறவனுக்கு அங்க ஒரு சொகமான வாழ்க்க அமயலைன்னா வெளியில சொல்ல முடியாம மனசுக்குள்ள அடக்கி வச்சி தவிக்கணும்... அதெல்லாம் அனுபவிச்சாத்தான்டா தெரியும்...  முதல்ல அவனை இங்க வரச்சொல்லு... பேசுவோம்... அதுக்கப்புறம் ஒரு முடிவெடுப்போம்..."

"செரி... முதல்ல ஒடம்பப் பாருங்க... அப்புறம் அவனப்பத்தி யோசிக்கலாம்..."

"ஏ... இது சாதாரண காச்சதானே... அவனோட பிரச்சினதான் எனக்கு மனசுக்குள்ள எப்பவும் அறுத்துக்கிட்டே இருக்கு... எல்லாரும் நல்லா இருக்கானுவ... தெரிஞ்சி போயி அங்கன விழுந்து கஷ்டப்படுறான்... படிச்சிம் முட்டாப்பய... ஒரு மனுசனுக்கு நிம்மதியில்லன்னா பாக்குற வேலகூட சொமையாத் தெரியும்...  தெனந்தெனம் மனசு தண்ணியில கெடந்து குத்துன முள்ளு கொடுக்கிற வேதனய விட அதிகமான வேதனய அனுபவிக்கும். இதெல்லாம் ஒனக்குப் புரியாது... முதல்ல அவன இங்க வரச்சொல்லு... மத்தத நா பாத்துக்கிறேன்..." என்றவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கருப்பன் கிளம்பிச் செல்ல, ‘சொத்து பத்துன்னு பேசுறவனுகளுக்கு உறவோட நிழலைத் தேடுற மனசு தெரியாமப் போயிருதே... வேதனைக்கு மருந்தா உறவைத் தேடுற மனசு எப்படி இவர்களுக்குத் தெரியும்’ என்று நினைத்துப் பெருமூச்சு விட்டார் தன் அம்மா பிறந்த வீட்டில் ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் அங்கு பிள்ளை வந்த கொம்பையா.

மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது பெருமழையாய்....
-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

Anuprem சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Anuprem சொன்னது…

அருமை...

Nagendra Bharathi சொன்னது…

அருமை

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி சகோதரி....

துரை செல்வராஜூ சொன்னது…

நிதர்சனம்..
தேடல்கள் பல சமயங்களில் புரிந்து கொள்ளப்படுவதில்லை..

அழகான கதை..

கும்மாச்சி சொன்னது…

அருமையான நடை, வட்டாரப்பேச்சு வழக்கு, அற்புதம்.

ஸ்ரீராம். சொன்னது…

இயல்பான கிராமத்து நடையில் நல்லதொரு உணர்வுபூர்வமான படைப்பு.

கோமதி அரசு சொன்னது…

கொம்மையாவும் தத்தாக போனவர் என்பதை அவர் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.
நீங்களும் சொல்லி விட்டீர்கள்.
அருமையான கிராமத்துக் கதை.
உறவுகள் தரும் ஆறுதலான வார்த்தை பெரிய பலம்.


கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் எழுத்துக்கள்
காட்சிகளைக் கண் முன்னே ஓடவிட்டுவிட்டன
அருமையான கதை நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் ரசித்தேன்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் கிராமத்து மணம் மீண்டும் அழகான உணர்வு பூர்வமான கதை வடிவில்!!! அருமை!!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் கிராமத்து மணம் மீண்டும் அழகான உணர்வு பூர்வமான கதை வடிவில்!!! அருமை!!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கிராமத்து பாணியில் வழக்கம்போல. அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோ....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.