மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

கிராமத்து நினைவுகள் : தமிழ் வருடப் பிறப்பு


ன்றைக்கு தமிழ் வருடப் பிறப்பு என்பது சித்திரை மாதமா அல்லது தை மாதமா என்று குழப்பான சூழலில் இருந்தாலும் தமிழ் வருடம் பிறக்கும் தினமான சித்திரை - 1 ஆம் தேதியையே நாம் தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

சித்திரை ஒன்றாம் தேதி என்றாலே நல் ஏர் கட்டுதல் என்பதுதான் கிராமத்து வாழ்வின் சிறப்பு. நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் காளை மாடுகள் இருக்கும். அதிகாலையில் எழுந்து கலப்பையையும் (ஏர்) நுகத்தடியையும் கழுவி திருநீறு, குங்குமம் இட்டு வைத்துவிட்டு காளை மாடுகளைக் குளிப்பாட்டி குங்குமம் வைத்து உழவுக்கு தயார்ப் பண்ணி வைப்போம். மாட்டின் முகத்தில் மாங்காய் போன்று குங்குமம வைத்து கருப்புக் கயிரைப் பின்னி அதில் மணி கோர்த்து இரண்டு கொம்புகளையும் சேர்த்து நெற்றியில் விழுமாறு கட்டி அழகு படுத்தி வைப்போம்.

அப்பா காலண்டரில் நல்ல நேரம் பார்த்து நெல்லெடுத்து அத்துடன் பூ, பழம் பாலெல்லாம் வைத்து வீட்டில் சாமி கும்பிட்டு வீட்டு வாசலில் இருக்கும் எங்கள் ஊர் மாரியம்மனை 'தாயி இந்த வருடம் வெளச்சல் நல்லாயிருக்கணும்' என்று வணங்கி எங்களையும் கும்பிடச் செய்து ஏரைத் தூக்கிக் கொண்டு முன்னே செல்ல மாட்டைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பின்னே செல்வோம். வயலுக்குச் சென்று சனி மூலையில் ஏரைக்கட்டி அப்பா இரண்டு மூன்று சால் உழுவார். பின்னர் விதை நெல்லைத் தூவி விட்டு தண்ணீர், பாலெல்லாம் ஊற்றி ஊது பத்தி சூடம் பற்ற வைத்து பூ போட்டு சாமி கும்பிட்டு வீட்டுக்குத் திரும்புவோம்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் எல்லா வீடுகளிலும் காளை மாடுகள் இல்லாமல் போய்விட்டது. டிராக்டர்களைக் கொண்டு மணிக்கணக்கு வைத்து உழுகும் காலம் வந்து விட்டது. எங்கள் ஊரில் விதைப்பு என்பது இந்தச் சமயத்தில்தான் அறிமுகமானது. அதுவரை நாற்றுப்பாவி நடவு முறைதான் இருந்தது. டிராக்டர் உழவு வந்ததும் ஒரு முறைதான் உழ முடியும், அடுத்தவர் வயலில் பயிர் இருந்தால் உழவு செய்ய முடியாது என்பதால் ஊரே விதைப்பு முறைக்கு மாறியது.

அப்போதைய சித்திரை நல்லேர் என்பது மண்வெட்டியோ களைக்கொட்டோ வைத்து கொத்திவிட்டு விதை போடுவதுதான். கால ஓட்டத்தில் கலப்பைகள் எல்லாம் கசாலைகளில் பரணிலோ அல்லது சுவற்று ஓரங்களிலோ கேட்பாரற்றுக் கிடக்க, அன்றைய தினம் இவற்றின் செயல்பாட்டோடு முடிவுக்கு வந்துவிடும். காலை எழுந்ததும் மண்வெட்டியை அடிபைப்பில் கொண்டு போய் கழுவி குங்குமம் எல்லாம் வைத்து நெல், தண்ணீர். சூடம். ஊதுபத்தி எடுத்து தயாராக வைத்திருப்போம். நல்ல நேரம் பார்த்துக் கிளம்பி மாரியம்மனிடம் முறையிட்டு வயலுக்குச் செல்வோம்.

காய்ந்து போய் கிடக்கும் வயலின் சனி மூலையில் மண்வெட்டியால் கொத்திவிட்டு நெல்லைப் போட்டு தண்ணீர் ஊற்றி சாமி கும்பிட்டு வருவோம். அன்று மதியம் சைவச் சாப்பாடு பாயாசத்துடன் அருமையான அம்மா கைச்சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டுவோம். இதற்கு இடையே வைகாசி மாதம் வரும் எங்க ஊர் மாரியம்மன் கோவில் செவ்வாய்க்கான கூட்டம் நடைபெறும்.

அன்றிரவு தேவகோட்டையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க சைக்கிளில் கிளம்பி விடுவோம்... இரவு முழுவதும் சுற்று சுற்றென்று சுற்றி ஒரு நிகழ்ச்சியை உருப்படியாகப் பார்ப்பதில்லை. எல்லா நிகழ்ச்சிகளையும் ஊறுகாய் போல் தொட்டு சுற்றி ஆட்டம் போட்டு நடக்கும் அடிதடிகளை எல்லாம் தள்ளி நின்று பார்த்து திரும்புவோம்.

நாளை சித்திரை மாதம் பிறப்பு.... ஜய வருடம் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்... என் அன்பிற்குரிய அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

vanathy சொன்னது…

Happy Tamil New Year. Sweet memories. It won't come back again.

Unknown சொன்னது…

ஹும்...அதெல்லாம் அந்த காலமா போச்சே !
த ம 3

ராமலக்ஷ்மி சொன்னது…

இனிய நினைவுகள்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஸ்ரீராம். சொன்னது…

"ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை..."

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma.4

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!..

r.v.saravanan சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் குமார்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,குமார்!///ஹூம்..........அது அந்தக் காலம்!

கார்த்திக் சரவணன் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான நினைவுகள்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமையான நினைவுகள்.... எல்லாம் இயந்திரமயமாகிவிட்டதே. இப்போது இந்த விழாக்கள் நடைபெறுகிறதா எங்கேனும்... சந்தேகம் தான்.

மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.