மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஆடுகளம்... அனல் பறக்கும் சேவக்கட்டு



பொங்கல் படங்களில் காவலன், சிறுத்தை, ஆடுகளத்துக்கான சேவக்கட்டில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது தனுஷின் ஆடுகளம் என்பதே உண்மை. மேலும் விஜய் படத்துடன் வெளிவந்த தனுஷின் எல்லாப் படங்களுமே வெற்றிப்படங்கள் என்ற வரிசையில் ஆடுகளமும் சேர்ந்துள்ளது.

மதுரையை கதைக்களமாகக் கொண்டு தனி முத்திரை பதித்த பருத்திவீரனைத் தொடர்ந்து நிறையப் படங்கள் மதுரையை திரைக்களமாக கொண்டு வெளிவந்தன. பெரும்பாலான படங்கள் மதுரை என்றால் அடிதடி என்பது போல் வெட்டுக்குத்து கதைகளை மையமாகக் கொண்டு வந்தன... இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அதே தோரணையில் வராமல் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மக்களின் பேச்சு வழக்கை கையாண்டிருப்பது ஆறுதலான விசயம்.

சேவல் கட்டை கதையின் கருவாக எடுத்து அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். சேவல் கட்டு குறித்த சிறு விளக்கம் படத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்படுவது சுவராஸ்யத்தைக் கூட்டுகிறது.


கருப்பாக வாழ்ந்திருக்கும் தனுஷ், தனக்கென்று வைத்திருந்த கெட்டப்புக்குள் இருந்து வெளியே வந்திருக்கிறார். இதற்கு முன் புதுக்கோட்டையிலிருந்து சரவணனில் சற்று மாறுபட்டு நடித்திருப்பார். அதேபோல் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலத்தில் வித்தியாசப்பட்டிருப்பார்.

ஆடுகளத்தில் ஒட்ட வெட்டிய தலை, லேசான தாடி, கைலிக்கட்டு என நம்ம ஊரில் நாம் சுற்றும் சாதாரண கெட்டப்பில் கதை நாயகன் கருப்பாகத்தான் தெரிகிறார் கதாநாயகன் தனுஷ்.

பேட்டைக்காரராக நடித்திருக்கும் ஜெயபால்... அந்த முரட்டு மீசைக்கு மத்தியில் சாமானிய முகத்தில் திராவகம் வைத்து நடித்திருக்கிறார். அவருக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் ராதாரவி ஏற்ற இறக்கங்களுடன் பேசி திரைக்குப் பின்னாலிருந்து பேட்டைக்காரரை பெஸ்ட்காரராக்கியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அழுக்கு வேஷ்டிக் கட்டும் சட்டையில்லா கருத்த உடம்புமாக நம்ம ஊரில் நாம் தினமும் பார்க்கும் மனிதராகத் தெரிகிறார்.

பார் நடத்திக்கொண்டு பேட்டைக்காரருடன் இருக்கும் துரையாக நடித்திருக்கும் கிஷோர், தனுஷூக்காக பேசுவதாகட்டும் பின்னர் அவருடன் மோதுவதாகட்டும் குறைவில்லாமல் செய்திருக்கிறார். இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரக்கனி. இவரும் குரலால் நடித்திருக்கிறார். அப்படி ஒரு அழகான குரல்வளம்.

நாயகியாக நடித்திருக்கும் தப்ஸி பன்னு நடிப்பில் பின்னவில்லை என்றாலும் அவருக்கான பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். இவருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பில்லை. வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா... வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களான்னு நம்மளையும் கேக்க வைக்கும் அழகு. ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருவதாலோ என்னவோ அவரது முக பாவனைகளில் அதிகம் கவனம் செலுத்த இயக்குநர் தவறிவிட்டார் என்றே தெரிகிறது.

பேட்டைகாரரிடம் சேவல் சண்டையில் வெற்றிக்கனியை பறிக்க முயற்சித்து அதற்காக சித்து வேலைகள் செய்யும் காவல்துறை அதிகாரி ரத்தினசாமி, எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் தனுஷின் அம்மா, பேட்டைக்காரரின் இளம் மனைவி, படம் முழுவதும் வரும் நண்பன் என எல்லா கதாபாத்திரங்களும் தங்களுக்கான வாய்ப்பை மிகவும் அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சேவல் சண்டையெல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள்தான் இருந்தும் அது தெரியாத வண்ணம் படமாக்கியிருக்கும் விதம் அருமை. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. அதேபோல் பாடல்களில் முத்திரை பதித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 'யாத்தே... யாத்தே...', 'என் வானவில்லே...' , 'அய்யோ...' பாடல்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இயக்குநர் வெற்றி மாறன் தனது ரெண்டாவது படத்திலும் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார். அதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது படத்தில் பிரகாசிக்கும் காட்சிகளில் தெரிகிறது.

தப்ஸி லோக்கல் ரவுடியிடம் இருந்து தப்பிக்க தனுஷை காதலிப்பதாக சொல்லும் போது தனுஷ் காட்டும் முகபாவங்கள் அவருக்கு மட்டுமே உரித்தான நடிப்பு, அதன் பின்னான பாடல் அப்ளாஸ். காதலிக்கவில்லை என்று சொன்ன நாயகியிடம் பணம் பெற்றுக் கொண்டு காதலிச்சேன்னு சொன்னதுக்கு பைன் என்று சொல்லும் காட்சியும் அருமை.

சேவல் கட்டில் பேட்டைக்காரரை எதிர்த்து 'எஞ்சேவ ஜெயிக்குமுண்ணே' என்கிற போதும் கிளைமாக்ஸில் 'இவ்வளவு தூரம் வருமுன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே அறுத்துப் போட்டிருப்பேண்ணே' என்கிறபோதும் தனுஷ் ஜொலிக்கிறார்.

சேவல் கட்டில் சேவல் தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது ஏண்ணே நம்ம சேவல் தோத்துருமோன்னு அழகும் அந்த சிறுவன், தம்பி இன்னும் கொஞ்ச நேரந்தாண்டா... என்று பதட்டத்துடன் சேவலுடன் பேசும் தனுஷ் என ஆளாளுக்கு சேவச்சண்டையின் வீரியத்தை அதிகரித்திருக்கிறார்கள்.

இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிறைகளை மட்டுமே பார்ப்பது என்பது தவறு என்பதால் குறைகளையும் சொல்ல வேண்டும் அல்லவா?

சேவல்கட்டை மையமாக வைத்து சச்சின், சேவாக்கின் அதிரடிபோல் சென்று கொண்டிருக்கும் ஆடுகளம் போட்டி பொறாமை என்று திரும்பும் போது களத்தில் லெட்சுமணனும் திராவிட்டும் நிற்பதுபோல் ஆகிவிடுகிறது.

நாயகி ஆங்கிலோ இந்தியன் என்பதால் நாயகனிடம் தமிழும் இங்கிலீஸூம் கலந்து பேசுவது படத்துடன் ஒட்டாதது போல் தெரிகிறது.

எப்படித்தான் சேவக்கட்டு என்றாலும் ஜெயித்துட்டு வாடா என்று ஒரு கிழவி உயிரைப் பிடித்துக் கொண்டு இருப்பதுபோல் காட்டுவதெல்லாம் சினிமாவுக்கான மிகைப்படுத்துதலே.

தனுஷ், தப்ஸி காதல் படத்துடன் ஒட்டவே மறுக்கிறது. ஆங்கிலோ இந்தியப் பெண், படிக்கும் பெண் சாதாரண பொறுக்கி கதாபாத்திரத்தை விரும்புவதை நம்ப மறுக்கும் நமக்கு அதற்கான ஆழமான காரணத்தை சொல்லாமல் விட்டு விட்டார் இயக்குநர்.

பேட்டைக்காரரின் மனைவி மீனா கோவித்துக் கொண்டு செல்லும் போது ஏன் கிழவரின் குள்ள நரித்தனத்தை தனுஷிடன் சொல்லாமல் எங்கோ சென்றுவிடுகிறார். அந்த இடத்தில் இயக்குநர் கோட்டை விட்டதேன்?

சேவல்கள் போல் சண்டை போடும் தனுஷூம் கிஷோரும் கட்டிப் புரளும் போது தனுஷிடம் என்ன கொல்ல கத்தியோடவா வாரேன்னு கேக்கும்போது பிளாஸ்பேக்குக்கு போகும் தனுஷ் ஏன் உண்மையை சொல்லவில்லை...

இப்படி இன்னும் அடுக்கலாம்... இருந்தும் கதைக்களமும் படத்தின் முடிவும் இவற்றை மறக்கச் செய்துவிடுகின்றன என்பதே உண்மை.

மொத்தத்தில் ஆடுகளத்தில் புழுதி பறக்கிறது.

ஆடுகளம் - உள்ளூர்க்கோப்பையல்ல... உலகக்கோப்பை.

-'பரிவை' சே.குமார்.
 
Photos from Google - Thanks Google

20 எண்ணங்கள்:

ஆர்வா சொன்னது…

லேட்டா எழுதினாலும் லேட்டஸ்டா எழுதிட்டீங்க..

//சேவல்கள் போல் சண்டை போடும் தனுஷூம் கிஷோரும் கட்டிப் புரளும் போது தனுஷிடம் என்ன கொல்ல கத்தியோடவா வாரேன்னு கேக்கும்போது பிளாஸ்பேக்குக்கு போகும் தனுஷ் ஏன் உண்மையை சொல்லவில்லை...//

தனுஷுக்கு அந்த நொடியில் கிஷோரிடம் உண்மையை சொல்லவேண்டும் என்பதைவிட தன் குருவின் மீது ஏற்படும் அதிர்ச்சியே அதிகமாக இருக்கிறது என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அருமையான விமர்சனம்

Jaleela Kamal சொன்னது…

ஐ ஓசில ஒரு படம் பார்த்தாச்சு

Sriakila சொன்னது…

நல்ல விமர்சனம்!

ஆடுகளம் படத்துக்கு டிக்கெட் எடுத்தாச்சு.. உங்களுக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டுக் கிளம்ப வேண்டியதுதான்...

படம் பார்த்துட்டு வந்து சொல்றேன்.

சுசி சொன்னது…

நல்ல விமர்சனம்.

Menaga Sathia சொன்னது…

விமர்சனம் நல்லாயிருக்குங்க...

Chitra சொன்னது…

நடு நிலைமையான விமர்சனம்

செங்கோவி சொன்னது…

//ஆங்கிலோ இந்தியப் பெண், படிக்கும் பெண் சாதாரண பொறுக்கி கதாபாத்திரத்தை விரும்புவதை நம்ப மறுக்கும் நமக்கு அதற்கான ஆழமான காரணத்தை சொல்லாமல் விட்டு விட்டார் இயக்குநர்.//...ஆமாம்..முக்கியமான குறை இது...ஆனாலும் படம் வேகமாக நகருவதால் பெரிதாகத் தெரியவில்லை..நல்ல விமர்சனம்.

subhan சொன்னது…

thambi kumar ..tnks nalla vimarsanam
tnks once again
subhan

மதுரை சரவணன் சொன்னது…

//சேவல்கட்டை மையமாக வைத்து சச்சின், சேவாக்கின் அதிரடிபோல் சென்று கொண்டிருக்கும் ஆடுகளம் போட்டி பொறாமை என்று திரும்பும் போது களத்தில் லெட்சுமணனும் திராவிட்டும் நிற்பதுபோல் ஆகிவிடுகிறது.// நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

// இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரக்கனி. இவரும் குரலால் நடித்திருக்கிறார். அப்படி ஒரு அழகான குரல்வளம். //

அழகான குரல்வளம் தான்... இருப்பினும் ஒரிஜினாலிடி மிஸ்ஸிங்... முந்தய படங்களில் அவரது நிஜ வாய்சை கேட்டு பழகிவிட்டது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவிதைக்காதலன்..
உண்மைதான்... மற்ற படத்திலிருந்து வித்தியாசப்பட்டிருக்கலாம். நண்பன் சொன்னபோது மறுக்கும் மனசு காதலி சொன்னபோது மறுக்க மறுக்கிறது. பின் துரை கேட்கும் போது சொல்ல நினைக்குமே தவிர தன் இழப்புக்களுக்கு காரணமானவனை காப்பாற்ற நினைக்குமா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜலீலாக்கா...
ஓசில படம் பாக்க நாங்க கதைய சொல்லலேயே... ஹையா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஸ்ரீஅகிலா...
படம் பார்த்தாச்சா? எப்படி... பிடிச்சிருக்கா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செங்கோவி...
முக்கியமான, மிகப்பெரிய குறை அதுதான்... ஆனால் கதையோட்டத்தில் மறக்கப்படுகிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுபான் அண்ணா
உங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி.


வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரபாகர்....
உண்மைதான்... சொந்தக் குரல் என்பது வரம். அது மிஸ்ஸிங்.இருந்தும் சமுத்திரக்கனி குரல் ஒத்துப் போனதல்லவா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>மேலும் விஜய் படத்துடன் வெளிவந்த தனுஷின் எல்லாப் படங்களுமே வெற்றிப்படங்கள் என்ற வரிசையில் ஆடுகளமும் சேர்ந்துள்ளது.

ada.. ஆமாம்

vinu சொன்னது…

namma raatha ravi sir-y vuttuteengalea

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி....
உண்மைதான்.... எல்லாம் வெற்றிப் படங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வினு...
ராதாரவி குறித்த வரிகளை படிக்கவில்லையா...?
//அவருக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் ராதாரவி ஏற்ற இறக்கங்களுடன் பேசி திரைக்குப் பின்னாலிருந்து பேட்டைக்காரரை பெஸ்ட்காரராக்கியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.//
இந்த வரிகள் இருக்கும் போது எப்படி இப்படி ஒரு கேள்வி.?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.